திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆயிரத்தவர் தலைவரையும் அவரோடு போர்வீரர்களையும் கண்டதும் பவுலை அடிப்பதை மக்கள் நிறுத்தினார்கள். ஆயிரத்தவர் தலைவர் அருகில் வந்து பவுலைப் பிடித்து இரு சங்கிலிகளால் கட்டுமாறு ஆணை பிறப்பித்தார்; பின்பு 'இவன் யார்? என்ன செய்தான்?' என்று வினவினார். கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கூச்சலிட்டனர். அமளி மிகுதியால் உறுதியாய் எதுவும் தெரிந்துகொள்ள முடியாதவராய் ஆயிரத்தவர் தலைவர் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்." - திருத்தூதர் பணிகள் 21:32-34

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

பவுல் எருசலேமுக்குச் செல்லுதல்[தொகு]


1 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து கப்பல் ஏறி
நேராகக் கோசு தீவு வந்தடைந்தோம்.
மறுநாள் நாங்கள் ரோதுக்கும் அங்கிருந்து பத்தாராவுக்கும் சென்றோம்.
2 அங்கு பெனிசிய நாட்டுக்குச் செல்லும் கப்பலொன்றைக் கண்டு,
அதில் ஏறிப் பயணம் செய்தோம்.
3 வழியில் சைப்பிரசு தென்பட்டது.
அங்கே போகாமல் அதன் இடப் புறமாக, சிரியா சென்று
பின், தீர் நகரை அடைந்தோம்.
அங்கே கப்பலிலுள்ள சரக்கு இறக்கப்பட்டது.
4 அங்குச் சில சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களோடு ஏழு நாள் தங்கினோம்.
அவர்கள் தூய ஆவியால் தூண்டப்பட்டு,
பவுலிடம் எருசலேம் செல்லக் கப்பலேற வேண்டாமெனக் கூறினர்.
5 அந்த நாள்கள் முடிந்தபின் நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.
அவர்கள் அனைவரும் மனைவி மக்களோடு
நகரின் எல்லை வரை எங்களை வழி அனுப்பி வைக்குமாறு வந்தார்கள்.
கடற்கரையில் நாங்கள் முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டினோம்.
6 பின் ஒருவரிடமொருவர் பிரியா விடை பெற்றுக் கொண்டு கப்பலில் ஏறினோம்.
அவர்கள் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
7 நாங்கள் தீர் நகரிலிருந்து எங்கள் கடல் பயணத்தைத் தொடர்ந்து
தாலமாய் வந்தடைந்தோம்.
அங்குள்ள சகோதரர் சகோதரிகளை வாழ்த்தி ஒரு நாள் அவர்களுடன் தங்கியிருந்தோம்.
8 மறுநாள் நாங்கள் புறப்பட்டுச் செசரியா வந்தோம்.
நற்செய்தி அறிவிப்பவரான பிலிப்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தங்கினோம்.
அவர் திருத்தொண்டர் எழுவருள் ஒருவர்.
9 அவருக்குத் திருமணமாகா நான்கு பெண் மக்கள் இருந்தனர்.
அவர்கள் இறைவாக்குரைத்து வந்தார்கள்.
10 நாங்கள் பல நாள்கள் அங்குத் தங்கியிருந்தோம்.
அப்போது அகபு என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் ஒருவர் யூதேயாவிலிருந்து வந்தார்.
11 அவர் எங்களிடம் வந்து பவுலின் இடைக் கச்சையை எடுத்து
தம் கைகளையும் கால்களையும் கட்டிக் கொண்டு,
"இந்தக் கச்சைக்குரியவரை எருசலேமில் யூதர்கள்
இவ்வாறு கட்டிப் பிற இனத்தாரிடம் ஒப்புவித்தார்கள்.
தூய ஆவியார்தாமே இப்படிக் கூறுகிறார்" என்றார்.
12 இவற்றைக் கேட்டதும் நாங்களும் அவ்விடத்தாரும்
பவுலை எருசலேமுக்குச் செல்ல வேண்டாமெனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம்.
13 அதற்குப் பவுல் மறுமொழியாக,
"நீங்கள் அழுது ஏன் என் உள்ளத்தை உடைக்கிறீர்கள்?
நான் ஆண்டவர் இயேசுவின் பெயருக்காக
எருசலேமில் கட்டப்படுவதற்கு மட்டுமல்ல, சாவதற்கும் தயார்" என்றார்.
14 அவரை நாங்கள் இணங்க வைக்க முடியாது போகவே,
"ஆண்டவரின் திருவுளப்படி நடக்கட்டும்" எனக்கூறிப் பேசாமலிருந்து விட்டோம்.
15 இந்நாள்களுக்குப் பின்பு நாங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து
எருசலேமுக்குச் சென்றோம்.
16 செசரியாவிலிருந்து சீடர் சிலரும் எங்களுடன் வந்தனர்.
சைப்பிரசு தீவைச் சேர்ந்த தொடக்க காலச் சீடரான
மினாசோவின் வீட்டில் நாங்கள் விருந்தினராகத் தங்குமாறு அழைத்துச் செல்லப்பட்டோம்.

எருசலேம் நகரில் பவுல்[தொகு]

பவுல் யாக்கோபைச் சந்தித்தல்[தொகு]


17 நாங்கள் எருசலேம் சென்று சேர்ந்தபோது
சகோதர் சகோதரிகள் எங்களை மகிழ்வுடன் வரவேற்றார்கள்.
18 மறுநாள் பவுல் எங்களைக் கூட்டிக் கொண்டு யாக்கோபிடம் சென்றார்.
அங்கு அனைத்து மூப்பரும் வந்திருந்தனர்.
19 பவுல் அவர்களை வாழ்த்தியபின்
தம் திருப்பணி மூலம் கடவுள் பிற இனத்தாரிடம் செய்தவற்றை
ஒவ்வொன்றாக விளக்கினார்.
20 இதைக் கேட்டவர்கள் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
எனினும் அவர்கள் அவரிடம்,
"சகோதரரே! யூதருள் எத்தனையோ ஆயிரம்பேர் நம்பிக்கை கொண்டுள்ளதையும்
அவர்கள் அனைவரும் திருச்சட்டத்தின்மீது ஆர்வமுடையவர்களாயிருப்பதையும்
நீர் பார்க்கிறீர் அல்லவா?
21 நீர் பிற இனத்தாரிடையே வாழும் யூதர் அனைவரும்
தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யவேண்டியதில்லையென்றும்
நம் முறைமைகளின் படி நடக்க வேண்டியதில்லையென்றும் கூறி
மோசேயின் சட்டத்தை விட்டு விலகுமாறு கற்றுக் கொடுப்பதாக
உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
22 நீர் வந்திருப்பது பற்றி இங்குள்ள யூதர்கள்
எப்படியும் கேள்விப்பட்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.
அவர்கள், "இப்போது என்ன செய்வது?" என்று சிந்தித்துக் கொண்டே,
23 "நாங்கள் உமக்குக் கூறுவதை நீர் செய்யும்.
பொருத்தனை செய்து கொண்ட நான்கு பேர் எங்களிடையே உள்ளனர்.
24 இவர்களைக் கூட்டிக் கொண்டு போய்,
இவர்களோடு சேர்ந்து தூய்மைச் சடங்கு செய்துகொள்ளும்.
அவர்கள் முடிவெட்டுவதற்கான செலவை நீரே ஏற்றுக்கொள்ளும்.
இதனால் நீர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பவர் என்றும்
உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டவைகளில் உண்மை எதுவும் இல்லை என்றும்
அனைவரும் தெரிந்து கொள்வர். [1]
25 சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை,
இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை
மற்றும் பரத்தைமை ஆகியவற்றை
நம்பிக்கை கொண்ட பிற இனத்தவர் தவிர்க்க வேண்டும் என்று
நாங்கள் தீர்மானித்து அவர்களுக்கு எழுதியுள்ளோம்" என்று அவரிடம் கூறினார்கள். [2]
26 மறுநாள் பவுல் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய்,
அவர்களோடு சேர்ந்து தாமும் தூய்மைச் சடங்கு செய்துகொண்டார்.
பின் கோவிலுள் சென்று
எப்போது தூய்மைச் சடங்கு காலம் நிறைவு பெறுகிறது என்றும்
எப்போது அவர்களுள் ஒவ்வொருவருக்காகவும்
பலி செலுத்தப்படும் என்றும் தெரியப்படுத்தினார்.

கோவிலுள் பவுல் கைது செய்யப்படுதல்[தொகு]


27 அந்த ஏழு நாள்களும் முடியப் போகும் வேளையில்
ஆசியாவிலுள்ள யூதர் கோவிலுள் பவுலைக் கண்டனர்.
உடனே அவர்கள் மக்கள் கூட்டம் முழுவதையும் தூண்டிவிட்டுப் பவுலைப் பிடித்து,
28 "இஸ்ரயேல் மக்களே! உதவ வாருங்கள்;
மக்களுக்கும் திருச்சட்டத்துக்கும் இந்த இடத்துக்கும் எதிராக
எல்லா இடங்களிலும் கற்பிப்பவன் இந்த மனிதன்தான்;
மேலும் கிரேக்கரைக் கோவிலுக்குள் கூட்டி வந்து
இந்தத் தூய்மையான இடத்தை தீட்டுப்படுத்தியுள்ளான்" என்று கத்தினார்கள்.
29 ஏனெனில் அவர்கள் எபேசியரான துரொப்பியம் என்பவரை
அவரோடு நகரில் கண்டிருந்தனர்.
பவுல் அவரைக் கோவிலுக்குள் கூட்டிக்கொண்டு போயிருப்பார்
என்று நினைத்துக் கொண்டனர்.
30 நகரெங்கும் கலகம் உண்டாயிற்று.
மக்கள் கூட்டமாய் ஓடிச்சென்று பவுலைப் பிடித்துக்
கோவிலின் வெளியே இழுத்து வந்து கதவுகளை அடைத்தனர்.
31 அவர்கள் அவரைக் கொலை செய்ய வழி தேடியபோது
எருசலேம் நகரம் முழுவதும் குழப்பம் நிலவுகிறது என்ற செய்தி
படைப்பிரிவின் ஆயிரத்தவர் தலைவருக்கு எட்டியது.
32 உடனே அவர் போர் வீரர்களையும் நூற்றுவர் தலைவர்களையும்
கூட்டிக்கொண்டு ஓடி வந்தார்.
ஆயிரத்தவர் தலைவரையும் அவரோடு போர்வீரர்களையும் கண்டதும்
பவுலை அடிப்பதை மக்கள் நிறுத்தினார்கள்.
33 ஆயிரத்தவர் தலைவர் அருகில் வந்து பவுலைப் பிடித்து
இரு சங்கிலிகளால் கட்டுமாறு ஆணை பிறப்பித்தார்;
பின்பு "இவன் யார்? என்ன செய்தான்?" என்று வினவினார்.
34 கூட்டத்திலிருந்தவர்களில் சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கூச்சலிட்டனர்.
அமளி மிகுதியால் உறுதியாய் எதுவும் தெரிந்துகொள்ள முடியாதவராய்
ஆயிரத்தவர் தலைவர் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லுமாறு ஆணை பிறப்பித்தார்.
35 பவுல் படிக்கட்டுகளை அடைந்தபோது
மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காததாய் இருந்ததால்
படைவீரர் அவரைத் தூக்கிக்கொண்டு மேலே செல்ல நேரிட்டது.
36 ஏனெனில், "இவன் ஒழிக!" என்று கத்திக்கொண்டே
அங்குத் திரண்டிருந்த மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.
37 அவர்கள் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லவிருந்தபோது
பவுல் ஆயிரத்தவர் தலைவரிடம்,
"நான் உம்மோடு பேசலாமா?" என்று கேட்க அவர்,
"உனக்குக் கிரேக்க மொழி தெரியுமா?" என்றார்.
38 "அப்படியானால் சிலநாள்களுக்கு முன்னால் கலகம் செய்து
கத்தி ஏந்திய நாலாயிரம் பேரைப்
பாலை நிலத்துக்குக் கூட்டிச் சென்ற எகிப்தியன் நீ தானோ?" என்று கேட்டார்.
39 அதற்குப் பவுல், "நான் ஒரு யூதன்;
சிலிசியாவிலுள்ள தர்சு நகரைத்தைச் சேர்ந்தவன்.
புகழ் பெற்ற அந்நகரத்தின் குடிமகன்;
மக்களிடம் இப்போது பேச அனுமதி வேண்டுகிறேன்" என்றார்.
40 பவுல் அனுமதி பெற்றுப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு
மக்களை நோக்கிக் கையால் சைகை காட்டினார்.
மிகுந்த அமைதி உண்டாயிற்று.
பின் பவுல் எபிரேய மொழியில் உரையாற்றத் தொடங்கினார்.


குறிப்புகள்

[1] 21:23,24 = எண் 6:13-21.
[2] 21:25 = திப 15:29.

அதிகாரம் 22[தொகு]


1 பவுல், "சகோதரரே, தந்தையரே!
உங்கள் குற்றச்சாட்டுக்கு நான் கூறப்போகும் விளக்கத்தைக் கேளுங்கள்" என்றார்.
2 அவர் எபிரேய மொழியில் உரையாற்றுவதை அவர்கள் கேட்டபோது
இன்னும் மிகுதியான அமைதி உண்டாயிற்று.
பவுல் தொடர்ந்து கூறியது:
3 "நான் ஒரு யூதன்; சிலிசியாவிலுள்ள தர்சு நகரத்தில் பிறந்தவன்;
ஆனால் இந்த எருசலேம் நகரில் வளர்க்கப்பட்டவன்;
கமாலியேலின் காலடியில் அமர்ந்து நம் தந்தையரின் திருச்சட்டங்களில்
நுட்பமாகப் பயிற்சி பெற்றவன்;
நீங்கள் அனைவரும் இன்று கடவுள் மீது ஆர்வம் கொண்டுள்ளது போன்று
நானும் கொண்டிருந்தேன்.
4 கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைத்தேன்;
சாகும் வரை அவர்களைத் துன்புறுத்தினேன்.
5 தலைமைக் குருவும் மூப்பர் சங்கத்தாரும் இதற்குச் சாட்சி.
இவர்களிடமிருந்து தமஸ்கு நகரிலுள்ள சகோதரர்களுக்குக்
கடிதங்களைப் பெற்றுக் கொண்டு
அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டு வந்து
தண்டிப்பதற்காக அங்குச் சென்றேன். [1]
6 நான் புறப்பட்டுத் தமஸ்கு நகரை நெருங்கியபோது
நண்பகல் நேரத்தில் திடீரென வானிலிருந்து ஒரு பேரொளி என்னைச் சூழந்து வீசியது.
7 நான் தரையில் விழுந்தேன்.
அப்போது, 'சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?'
என்ற குரலைக் கேட்டேன்.
8 அப்போது நான், 'ஆண்டவரே நீர் யார்?' என்று கேட்டேன்.
அவர், 'நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே' என்றார்.
9 என்னோடிருந்தவர்கள் ஒளியைக் கண்டார்கள்;
ஆனால் என்னோடு பேசியவரது குரலைக் கேட்கவில்லை.
10 ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?" என நான் கேட்க,
ஆண்டவர் என்னை நோக்கி,
'நீ எழுந்து தமஸ்குவுக்குச் செல்.
நீ செய்வதற்கென குறிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் அங்கே உனக்குக் கூறப்படும்' என்றார்.
11 அந்த ஒளியின் மிகுதியால் நான் பார்க்க முடியவில்லை.
என்னோடிருந்தவர்கள் எனது கையைப் பிடித்துத்
தமஸ்குவினுள் அழைத்துச் சென்றார்கள்.
12 அங்கு அனனியா என்னும் ஒருவர் இருந்தார்.
அவர் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்;
அங்கு வாழ்ந்து வந்த யூதர் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்.
13 அவர் என்னிடம் வந்து அருகில் நின்று,
'சகோதரர் சவுலே, மீண்டும் பார்வையடையும்' என்றார்.
அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.
14 அப்போது அவர்,
'நம் மூதாதையரின் கடவுள்
தம் திருவுளத்தை அறியவும் தம் நேர்மையாளரைக் காணவும்
தம் வாய்மொழியைக் கேட்கவும் உம்மை ஏற்படுத்தியுள்ளார்.
15 ஏனெனில், நீர் கண்டவைகளுக்கும் கேட்டவைகளுக்கும்
அனைவர் முன்பும் நீர் சாட்சியாய் இருக்க வேண்டும்.
16 இனி ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?
எழுந்து அவரது திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப் பெற்றுத் திருமுழுக்குப் பெறும்' என்றார்.
17 பின்பு நான் எருசலேம் திரும்பி வந்தேன்.
கோவிலில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது
நான் மெய்ம்மறந்த நிலைக்குள்ளானேன்.
18 ஆண்டவரை நான் கண்டேன்.
அவர் என்னிடம், 'நீ உடனே எருசலேமை விட்டு விரைவாகப் புறப்படு.
ஏனெனில் என்னைப் பற்றி நீ அளிக்கும் சான்றை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்' என்றார்.
19-20 அதற்கு நான், "ஆம் ஆண்டவரே,
உம்மீது நம்பிக்கை கொண்டோரை நான் சிறையிலடைத்தேன்;
தொழுகைக் கூடங்களில் அவர்களை நையப் புடைத்தேன்;
20 உம் சாட்சியாம் ஸ்தேவான் கொலை செய்யப்பட்டபோது
நான் அங்கு நின்று உடன்பட்டு,
அவரைக் கொலை செய்தோரின் மேலுடைகளைக்
காவல் செய்து கொண்டிருந்தேன்.
இவை அனைத்தும் அங்குள்ளோருக்குத் தெரியும்' என்றேன். [2]
21 அவர் என்னை நோக்கி, "புறப்படு!
தொலையிலுள்ள பிற இனத்தவரிடம் நான், உன்னை அனுப்புகிறேன்' என்றார்."

பவுலும் ஆயிரத்தவர் தலைவரும்[தொகு]


22 இதுவரைக்கும் பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள்,
"இவனை அடியோடு ஒழியுங்கள்; இவன் வாழத் தகுதியற்றவன்" என்று கத்தினர்.
23 இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டே தங்கள் மேலுடைகளை வீசி எறிந்து,
புழுதி வாரி இறைத்தார்கள்.
24 மக்கள் இவ்வாறு கூச்சலிடுவதின் காரணத்தை
ஆயிரத்தவர் தலைவர் அறிய விரும்பி
அவரைக் கோட்டைக்குள் அழைத்துச் சாட்டைகளால் அடித்து
விசாரணை செய்ய ஆணை பிறப்பித்தார்.
25 அவர்கள் அவரைச் சாட்டையால் அடிப்பதற்கென்று கட்டியபொழுது
பவுல் அங்கு நின்ற நூற்றுவர் தலைவரிடம்,
"உரோமைக்குடி மகன் ஒருவரைச் சாட்டையால் அடிப்பது,
அதுவும் முறையான தீர்ப்பின்றி அடிப்பது சட்டப்படி செல்லுமா?" என்று கேட்டார்.
26 இதைக் கேட்டதும் நூற்றுவர் தலைவர்
ஆயிரத்தவர் தலைவரிடம் சென்று பவுல் கூறியதை அறிவித்து,
"என்ன செய்யப் போகிறீர்? இவர் ஓர் உரோமைக் குடிமகன் அல்லவா?" என்றார்.
27 ஆயிரத்தவர் தலைவர் பவுலிடம், "நீர் ஓர் உரோமைக் குடிமகன்தானா? கூறும்" என்றார்.
அவர், "ஆம்" என்றார்.
28 அதற்கு ஆயிரத்தவர் தலைவர் மறுமொழியாக,
"நான் இக்குடியுரிமையை ஒரு பெருந்தொகை கொடுத்தல்லவா
பெற்றுக் கொண்டேன்" என்றார்.
அதற்குப் பவுல், "நான் ஓர் உரோமைக் குடிமகனாகவே பிறந்தேன்" என்றார்.
29 உடனே அவரை விசாரணை செய்யவிருந்தவர்கள் அவரைவிட்டு விலகினார்கள்.
ஆயிரத்தவர் தலைவரோ தாம் கட்டி வைத்திருந்தவர்
உரோமைக்குடி மகன் என அறிந்ததும் அச்சமுற்றார்.

தலைமைச் சங்கத்தின் முன் பவுல்[தொகு]


30 யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சுமத்துகிறார்கள் என்பதை உறுதியாக அறிய
ஆயிரத்தவர் தலைவர் விரும்பினார்.
எனவே, மறுநாள் தலைமைக் குருக்களும்,
தலைமைச் சங்கத்தினர் அனைவரும் கூடிவருமாறு
அவர் ஆணை பிறப்பித்துப்
பவுலை சிறையிலிருந்து கொண்டு வந்து அவர்கள் முன் நிறுத்தினார்.


குறிப்புகள்

[1] 22:4,5 = திப 8:3; 26:9-11.
[2] 22:20 = திப 7:58; 8:1; 26:10


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை