உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பதுபோலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை; இருவருக்கு உறக்கம் நேரே வரவில்லை—இருவருக்கும் எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ, உன்னே நம்பிதானிருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினால் உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம் குழப்பம்—தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன்களெல்லாம் தீர்த்து, தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் உன் புகழை ஆயிரவிதமான புதியபுதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி, அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்யவேண்டும்.

தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக்கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால்–உன்னை எப்படி பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்வதில் பயனில்லை. அவளும் உனது சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்குபெற்று மேன்மையுற விரும்புகிறாள். இயன்றவரை உண்மையோடு தானிருக்கிறாள் அவளையும் நீ ஸ்ம்ரக்ஷணை செய்யவேண்டும்.