பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பெரும் பாறைகளைக் கையாளுவதில் அவர்கள் மிக்க திறமை பெற்றிருந்தனர். பிரமிடுகளில் பயன்படுத்தப்பட்ட கற்களைவிட மிகவும் பளுவான கற்களைக் கோவில்கள் கட்டுவதில் பயன்படுத்தினர். கோவில்களின் மேற் கூரையாகப் பயன்படுத்தப்பட்ட கற்களும், கோவில்களின் முன்னால் சிற்பக் கலையழகோடு நாட்டப்பட்டிருக்கும் உயர்ந்த தூண்களும், கோவிலின் வாயிலை அலங்கரிக்கும் கண்கவர் சிற்பங்களும் நூற்றுக்கணக்கான டன் எடையுள்ளவை.

பாரோ மன்னர்கள், பிரமிடுக்குள் பிணங்களைப் புதைக்கும் போது அளவற்ற செல்வத்தையும் உடன் வைத்துப் புதைத்தனர் எனக் கண்டோம். இப்பழக்கம் பின் நாட்களில் பெருந் தீமையாக முடிந்தது. செல்வத்திற்கு ஆசைப்பட்ட கள்வர்கள், பிரமிடுகளின் வழிகளை உடைத்து உள்ளே நுழைந்து களவாடத் தொடங்கினர். இதை அறிந்த பாரோ மன்னர்கள் பிரமிடைப் பெரிய அளவில் கட்டுவதைவிடச் சிறியதாகவும், எளிதில் வழியைக் கண்டறிய முடியாதபடி நுட்பமான கட்டடக் கலைத்திறனோடு அமைந்ததாகவும் கட்டத் தொடங்கினர். இச்செயலால், திருடர்களை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால், அப்பிரமிடுகளை எழுப்பிய சிற்பிகளை எவ்வாறு தடுக்கமுடியும்? கட்டட நுட்பம் தெரிந்த சிற்பிகளே பிரமிடுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

இவ்வுண்மையை அறிந்த பாரோ மன்னர்கள் புதியதொரு வழியைப் பின்பற்றத் தொடங்கினர்;