பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பாரதிதாசன்


படுத்துகின்றன.

“ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்.
கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும்
தெங்கின் பழனும் தேமாங் கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமுங் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்”

(சிலம்பு-காட்சி-37)

மேலும் பாண்டிய நாட்டுத் தாலாட்டில்

வாழை இலைபரப்பி வந்தாரைக் கையுமர்த்தி
வருந்தி விருந்துவைக்கும் மகராசர் பெயரனோ?
தென்னை இலைபரப்பிச் சென்றாரைக் கையமர்தித்
தேடி விருந்தழைக்கும் திசைக்கருணர் பெயரனோ?

என்ற தாய்மைதரும் தாலாட்டு வரிகள்,

“செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்” குறட் பண்பாட்டை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. 'சோதிச் சுடரொளியே' என்று தன் குழந்தையைப் பாராட்டுகிறாள் தாய். “சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று இறைவனைப் பாராட்டியழைக்கிறார் மாணிக்கவாசகர். நாஞ்சிற் பகுதித் தாலாட்டில் ‘எலும்புருகப் பெற்றெடுத்த இலஞ்சியமே' எனத் தாய் தன் குழந்தையைப் பாராட்டுவது போல “உமையாள் பயந்த இலஞ்சியமே” என்று தமது திருப்புகழில் முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி நாதர்.