திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து


"ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன் நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான்...நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில் இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில் அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான்." - யூதித்து 1:2,5.

யூதித்து (The Book of Judith) [1][தொகு]

முன்னுரை

செலூக்கியர் ஆட்சியின்போது யூதர்கள் அனுபவித்த துயரத்தின் வரலாற்றையும், மக்கபேயர் வழியாகக் கடவுள் அவர்களுக்கு அளித்த முழுவிடுதலையையும் பின்னணியாகக் கொண்ட இந்நூல் ஒரு புதினம். இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம்.

இந்நூலின் ஆசிரியர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர், பாலஸ்தீனாவில் பரிசேயரின் வழிமரபில் தோன்றிய ஒரு யூதர் என்பதில் ஐயமில்லை. இது எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கவேண்டும்; மூல நூல் கிடைக்காமையால், அதன் கிரேக்க மொழிபெயர்ப்பே இன்று நமக்கு மூலபாடமாக இருந்து வருகிறது.

ஒருவர் கடவுள் மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால், எத்துணை வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்றுவிடலாம் என்பது இந்நூலின் மையக் கருத்து ஆகும். இக்கருத்தை யூதர்கள், என்றும் தங்கள் நினைவில் நிறுத்தும் பொருட்டு, கோவில் அர்ப்பணிப்பின் ஆண்டு விழாவின்போது இந்நூல் பொதுவில் படிக்கப்பட்டது.

யூதித்து[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர் 1:1 - 7:32 25 - 34
2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி 8:1 - 16:25 34 - 48

யூதித்து (The Book of Judith)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. யூதர்களுக்கு நேரிட்ட பேரிடர்[தொகு]

நெபுகத்னேசரும் அர்ப்பகசாதும்[தொகு]


1ஒரு காலத்தில் நெபுகத்னேசர் மன்னன்
நினிவே மாநகரில் அசீரியர்களை ஆண்டுவந்தான்.
அப்பொழுது எக்பத்தானாவில் அர்ப்பகசாது அரசன்
மேதியர் மீது ஆட்சி செலுத்திவந்தான்.
2 அர்ப்பகசாது எக்பத்தானாவைச் சுற்றிலும் மூன்று முழப் பருமனும்
ஆறு முழ நீளமுமான செதுக்கிய கற்களைக் கொண்டு,
எழுபது முழ உயரமும் ஐம்பது முழ அகலமும் உடைய
மதில்களை எழுப்பினான்.
3 அதன் வாயில்கள்மேல் நூறு முழ உயரம் கொண்ட
காவல் மாடங்களைக் கட்டினான்;
அவற்றின் அடித்தளங்களை அறுபது முழ அகலத்தில் அமைத்தான்.
4 தன்னுடைய வலிமைமிகு படைகள் புறப்பட்டுச் செல்வதற்கும்,
காலாட்படை அணிவகுத்துச் செல்வதற்கும் வசதியாக,
எழுபது முழ உயரமும் நாற்பது முழ அகலமும் கொண்ட
வாயில்களைக் கட்டினான்.


5 நேபுகத்னேசர் மன்னன் தனது ஆட்சியின் பன்னிரெண்டாம் ஆண்டில்
இராகாவு நகர எல்லையில் இருந்த பரந்த சமவெளியில்
அர்ப்பகசாது அரசனுக்கு எதிராகப் போர்தொடுத்தான்.
6 மலைவாழ் மக்கள், யூப்பிரத்தீசு, திக்ரீசு,
உதஸ்பு ஆகிய ஆறுகள் அருகே வாழ்ந்தோர்,
சமவெளியில் வாழ்ந்த ஏலாமியரின் அரசன் அரியோக்கு
ஆகிய அனைவரும் நெபுகத்னேசருடன் சேர்ந்து கொண்டார்கள்.
இவ்வாறு, பல மக்களினங்கள்
கெலயூது [1] மக்களின் படைகளோடு சேர்ந்து கொண்டன.


7 பின்னர் அசீரிய மன்னன் நெபுகத்னேசர்
பாரசீகத்தில் வாழ்ந்தோர் அனைவருக்கும்,
சிலிசியா, தமஸ்கு, லெபனோன், எதிர் லெபனோன் ஆகிய
மேற்கு நாடுகளில் வாழ்ந்தோர் யாவருக்கும்,
கடற்கரைவாழ் மக்கள் எல்லாருக்கும்,
8 கர்மேல், கிலயாது, வட கலிலேயா,
எஸ்திரலோன் பெரும் சமவெளியெங்கும் வாழ்ந்த
மக்களினத்தார் எல்லாருக்கும்,
9 சமாரியாவிலும் அதன் நகர்களிலும் வாழ்ந்தோர் அனைவருக்கும்,
யோர்தானுக்கு மேற்கே எருசலேம், பாத்தேன்,
கெலூசு, காதேசு, எகிப்தின் எல்லையில் இருந்த ஓடைவரை [2] வாழ்ந்தோருக்கும்,
தபினா, இராம்சேசு, கோசேன் பகுதிகளின் மக்கள் எல்லாருக்கும்,
10 தானி, மெம்பிசுக்கு அப்பால் எத்தியோப்பியாவின் எல்லைவரை
எகிப்தில் வாழ்ந்த எல்லாருக்கும் தூது அனுப்பினான்.
11 ஆனால், இந்த நாடுகளில் வாழ்ந்தோர் யாருமே
அசீரிய மன்னன் நெபுகத்னேசரின் சொல்லைப் பொருட்படுத்தவில்லை;
அவனோடு சேர்ந்து போரிட முன்வரவில்லை;
அவனுக்கு அவர்கள் அஞ்சவுமில்லை.
ஆனால் அவனை யாரோ ஒரு மனிதனாகவே கருதினார்கள்;
அவனுடைய தூதர்களையும் இழிவுபடுத்தி
வெறுங்கையராய்த் திருப்பியனுப்பினார்கள்.


12 ஆகவே, இந்நாடுகள் அனைத்தின் மீதும்
நெபுகத்னேசர் கடுஞ் சினங் கொண்டான்.
சிலிசியா, தமஸ்கு, சிரியா ஆகிய நாடுகள் அனைத்தையும் பழிவாங்கி,
மோவாபியர், அம்மோனியர், யூதேயர், எகிப்தியர்
ஆகிய அனைவரையும் வாளுக்கு இரையாக்கப்போவதாகத்
தன் அரியணைமீதும் அரசுமீதும் ஆணையிட்டான்;
இவ்வாறு, மத்திய தரைக்கடல்முதல்
பாரசீக வளைகுடா வரையிலும் வாழ்ந்த எல்லாரையும்
அழிக்கக் கட்டளையிட்டான்.


13 நேபுகத்னேசர் தனது ஆட்சியின் பதினேழாம் ஆண்டில்
தன் படைகளை அர்ப்பகசாது அரசனுக்கு எதிராக ஒன்று திரட்டினான்;
அவனோடு போரிட்டு, வெற்றி பெற்று அவனுடைய காலாட்படை, குதிரைப்படை,
தேர்ப்படை அனைத்தையும் முறியடித்தான்;
14 அவனுடைய நகர்களைக் கைப்பற்றியபின் எக்பத்தானாவை வந்தடைந்தான்;
அதன் காவல்மாடங்களைக் கைப்பற்றி,
கடை வீதிகளில் புகுந்து கொள்ளையடித்து, அதன் எழிலைச் சீர்குலைத்தான்.
15 மேலும், அவன் இராகாவு மலைப்பகுதியில்
அர்ப்பகசாதைப் பிடித்துத் தன் ஈட்டியால் குத்திக்கொன்று
முற்றிலும் அழித்தொழித்தான்.
16 பின்னர், தன்னோடு சேர்ந்து போரிட்ட
மாபெரும் திரளான படைவீரர்களோடு நினிவேக்குத் திரும்பி வந்தான்.
அங்கு அவனும் அவனுடைய படைவீரர்களும்
நூற்றுஇருபது நாள் விருந்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.


குறிப்புகள்

[1] 1:6 - கல்தேயரைக் குறிக்கலாம்.
[2] 1:9 - எகிப்துக்கும் பாலஸ்தீனத்துக்கும்
எல்லையாய் அமைந்த "எல் அரிஸ்" ஓடை.


அதிகாரம் 2[தொகு]

மேற்கு நாடுகளோடு போரிடத் திட்டம்[தொகு]


1 அசீரிய மன்னன் நெபுகத்னேசர் சூளுரைத்திருந்தவாறு
எல்லா நாடுகளையும் பழிவாங்குவான் என்று
அவனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டு,
முதல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று
அரண்மனையில் பேசப்பட்டது.
2 அவனும் தன் பணியாளர்கள்,
உயர்குடி மக்கள் யாவரையும் அழைத்துத்
தனது இரகசியத் திட்டம் பற்றி அவர்களோடு கலந்தாலோசித்தான்;
அந்த நாடுகளின் சூழ்ச்சிபற்றித் தன் வாய்ப்பட
முழுமையாக எடுத்துரைத்தான்.
3 மன்னன் இட்ட கட்டளையை ஏற்காத அனைவரும்
அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.


4 ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், அசீரிய மன்னன் நெபுகத்னேசர்
தன் படைத் தலைவனும் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவனுமான
ஒலோபெரினை அழைத்து அவனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்:
5 "அனைத்துலகின் தலைவராகிய மாமன்னர் இவ்வாறு கூறுகிறார்:
இங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்லும்;
போரிடத் தயங்காத ஓர் இலட்சத்து இருபதாயிரம் காலாட் படையினரையும்
பன்னிரண்டாயிரம் குதிரைப் படையினரையும் உம்மோடு கூட்டிக்கொள்ளும்.
6 நான் கொடுத்த ஆணைக்கு மேற்கு நாட்டவருள் எவருமே பணியாததால்,
அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லும்.
7 அவர்கள் நிலத்தின் விளைச்சலையும் தண்ணீர் வசதியையும் [*]
எனக்கு அளிப்பதற்கு அவர்களை ஆயத்தமாய் இருக்கச் சொல்லும்.
ஏனெனில், நான் சினமுற்று அவர்களை எதிர்த்துச் செல்லவிருக்கிறேன்.
அவர்களது நாடு முழுவதையும் என் படைவீரர்களின் காலடிகள் மூடும்.
அதனை அவர்கள் சூறையாடும்படி கையளிப்பேன்.
8 அவர்களுள் காயமடைந்தோர் பள்ளத்தாக்குகளை நிரப்புவர்;
ஓடைகளும் ஆறுகளும் அவர்களின் பிணங்களால் நிரம்பி வழியும்.
9 நிலத்தின் கடை எல்லைக்கே அவர்களை நாடுகடத்துவேன்.
10 நீர் எனக்கு முன்னதாகப் புறப்பட்டுச் சென்று,
அவர்களின் நாடுகளையெல்லாம் என் பெயரால் கைப்பற்றும்.
அவர்கள் உம்மிடம் சரணடைந்தால்,
அவர்களை நான் தண்டிக்கும் நாள்வரை காவலில் வைத்திரும்.
11 பணிய மறுப்பவர்களுக்கோ இரக்கம் காட்டாதீர்.
நீர் கைப்பற்றும் நாடெங்கும் அவர்களைக்
கொலைக்கும் கொள்ளைக்கும் கையளித்துவிடும்.
12 என் உயிர்மேல் ஆணை!
என் அரசின் ஆற்றல்மேல் ஆணை!
நான் சொன்னதையெல்லாம் என் கையாலேயே செய்து முடிப்பேன்.
13 உம் தலைவரின் ஆணைகளில் எதனையும் மீறாதீர்.
நான் உமக்குக் கட்டளையிட்டவாறே
அவற்றைத் திண்ணமாய்ச் செய்து முடியும்;
காலம் தாழ்த்தாமல் செயல்புரியும்."

ஒலோபெரினின் படையெடுப்பு[தொகு]


14 ஒலோபெரின் தன் தலைவனிடமிருந்து சென்று
அசீரியப் படையின் தலைவர்கள், தளபதிகள்,
அலுவலர்கள் ஆகிய அனைவரையும் தன்னிடம் அழைத்தான்.
15 தலைவன் தனக்கு ஆணையிட்டபடி
ஓர் இலட்சத்து இருபதாயிரம் தேர்ந்தெடுத்த வீரர்களையும்
வில் வீரர்களான குதிரைப்படையினர்
பன்னிரண்டாயிரம் பேரையும் திரட்டினான்.
16 பெரும் படை ஒன்று போர் தொடுக்கச் செல்லும் முறைப்படி,
அவர்களை அணிவகுக்கச் செய்தான்;
17-18 மேலும் தங்கள் பொருள்களைச் சுமந்து செல்லப்
பெருந்திரளான ஒட்டகங்களையும் கழுதைகளையும்
கோவேறுகழுதைகளையும்,
உணவுக்குத் தேவைப்பட்ட எண்ணற்ற செம்மறியாடுகளையும்
மாடுகளையும் வெள்ளாடுகளையும்,
அனைவருக்கும் போதுமான உணவுப் பொருள்களையும்,
அரண்மனையிலிருந்து மிகுதியான பொன்னையும்
வெள்ளியையும் திரட்டிக்கொண்டான்.


19 இவ்வாறு தேர்ப்படையினர், குதிரைப் படையினர்,
தேர்ந்தெடுத்த காலாட் படையினர் ஆகியோர் அடங்கிய
தன் முழுப் படையுடன்,
நெபுகத்னேசர் மன்னனுக்கு முன்னதாகச் சென்று,
மேற்குப் பகுதி முழுவதையும் நிரப்புமாறு ஒலோபெரின் புறப்பட்டான்.
20 அப்பொழுது பல இனங்களைச் சேர்ந்த,
எண்ணிலடங்காத பெருங் கூட்டம் ஒன்று
வெட்டுக்கிளிகளின் திரள்போலும் நிலத்தின் புழுதிபோலும்
அவர்களோடு புறப்பட்டுச் சென்றது.


21 அவர்கள் நினிவேயிலிருந்து புறப்பட்டுப்
பெக்திலேது சமவெளியை நோக்கி
மூன்று நாள் பயணம் சென்றார்கள்;
அதைத் தாண்டி மேல் சிலிசியாவுக்கு வடக்கே
மலை அருகில் பாசறை அமைத்தார்கள்.
22 ஒலோபெரின் தன் காலாட்படை, குதிரைப்படை,
தேர்ப்படை அடங்கிய முழுப்படையையும் அங்கிருந்து நடத்திக்கொண்டு,
மலைநாட்டிற்குள் முன்னேறிச் சென்றான்;
23 வழியில் பூது, லூது என்னும் நகர்களைப் பாழ்படுத்தியபின்,
கெலயோன் நாட்டிற்குத் தெற்கே
பாலை நிலத்தின் ஓரத்தில் வாழ்ந்துவந்த இராசியர்,
இஸ்மவேலர் ஆகிய அனைவரையும் கொள்ளையடித்தான்;
24 யூப்பிரத்தீசு கரை வழியாகச் சென்று,
மெசப்பொத்தாமியாவைக் கடந்து
அப்ரோன் ஓடைமுதல் கடல்வரை இருந்த
அரண்சூழ் நகர்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கினான்.
25 மேலும் சிலிசியா நாட்டை அவன் கைப்பற்றித்
தன்னை எதிர்த்த யாவரையும் கொன்றான்;
பிறகு அரேபியாவிற்கு எதிரே இருந்த எப்பெத்தின்
தென் எல்லையை அடைந்தான்;
26 மிதியானியர் யாவரையும் சுற்றி வளைத்து,
அவர்களின் கூடாரங்களைத் தீக்கிரையாக்கி,
ஆட்டுக் கொட்டில்களைக் கொள்ளையடித்தான்.
27 கோதுமை அறுவடைக் காலத்தில்
அவன் தமஸ்குச் சமவெளிக்கு இறங்கிச் சென்றான்;
அவர்களுடைய வயல்களுக்குத் தீவைத்தான்;
ஆடு மாடுகளை அழித்தான்; நகர்களைச் சூறையாடினான்;
வயல்வெளிகளைப் பாழாக்கினான்;
இளைஞர்கள் அனைவரையும் வாளுக்கிரையாக்கினான்.
28 சீதோன், தீர், சூர், ஒக்கினா, யாம்னியா
ஆகிய கடலோர நகர்களில் வாழ்ந்தோர் யாவரும்
அவனுக்கு அஞ்சி நடுங்கினர்;
அசோத்து, அஸ்கலோனில் வாழ்ந்தோரும் அவனுக்குப் பெரிதும் அஞ்சினர்.


குறிப்பு

[*] 2:7 - "படைக்குத் தேவையான அனைத்தும்" என்பது பொருள்.
நிபந்தனையின்றிச் சரணடைவதன் அடையாளம் இது.


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை