பக்கம்:தம்ம பதம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் பதினைந்து

களிப்பு

195. பகை கொள்ளும் மனிதரிடையே பகையில்லாது நாம் இன்பமாக வாழ்கிறோம்; பகைக்கும் மனிதரிடையே நாம் பகையின்றித் திரிகிறோம். (1)

196. துயர்களால் வருந்துவோர் நடுவே துயரின்றி நாம் இன்பமாக வாழ்கிறோம்; துயரப்படுவோர் நடுவே நாம் துயரின்றித் திரிகிறோம். (2)

197. கவலையால் நலிந்தவரிடையே நாம் கவலையின்றி இன்பமாய் வாழ்கிறோம்; கவலைப்படுவோர் நடுவே நாம் கவலையின்றித் திரிகிறோம். (3)

198. எமது என்று எதுவுமில்லாத நாம் இன்பமாக வாழ்கிறோம்; தேசு மிகுந்த தேவர்களைப்போல் நாம் இன்பத்தைப் பருகிக்கொண்டே வாழ்வோம். (4)

199. வெற்றி வெறுப்பை வளர்க்கும்; தோல்வியுற்றார் துக்கத்தில் வாழ்பவர். வெற்றியும் தோல்வியும் விரும்பாதவன் சுகமும் சாந்தியும் பெறுகிறான். (5)

200. ஆசைகளுக்கு நிகரான அனல் வேறில்லை;

துவேஷத்திற்கு நிகரான நோய் வேறில்லை;
உடலோடு வாழ்வதற்கு நிகரான துயர் வேறில்லை;
சாந்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை.

(6)

201. பேராசையே பரம ரோகம்;

ஐம்புல ஆசைகள் பரமரோகம்;
இதை உண்மையாக உணர்ந்தவனுக்கு
நிருவாணமே பரம சுகம்.

(7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/52&oldid=1400597" இலிருந்து மீள்விக்கப்பட்டது