செயலும் செயல்திறனும்/நூல் முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை

திருவள்ளுவர் இவ்வுலகத்தைப் 'பொருள் உலகம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே, 'செய்க பொருளை' என்றும் கட்டளை இடுகின்றார். "பொருளே, மதிப்பில்லாத எவர்க்கும் மதிப்பை அளிப்பது". எனவே பொருளைப் பெறுவதற்கு ஏதாவது முயற்சி செய்தல் வேண்டும். ஆனால், பொருளைப் பெறுவதற்குப் பெறுவதே முழு முயற்சியாகவும் செயலாகவும் இருந்துவிடக் கூடாது.

பொருள் அழியக்கூடியது. எனவே அழியக்கூடிய பொருளைப் பெற்று, அழியக்கூடாத செயல்களைச் செய்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து.

அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல், (333)

இனி, செயல்கள் பலவகையானவை. அவற்றுள் அழியும் செயல்கள் பல அழியாச் செயல்கள் சில எளிய சொற்கள் பல அரிய செயல்கள் சில. அவற்றுள்ளும் அரிய செயல்களாகவும் அழியாச் செயல்களாகவும் தமக்கும் பிறர்க்கும் பயன்படக்கூடிய செயல்களாகவும் இருப்பவை மிகவும் சில.

எளியவர்கள் எளிய செயல்களையே செய்து மறைந்து போகின்றனர். வலியவர்கள் அஃதாவது பெருமை உடையவர்கள், செய்வதற்குக் கடினமான அருமையுடைய செயல்களையே செய்து, புகழ்பெற்று நிலைநிற்கின்றனர்.

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய சொல். (975)

செய்வதற்கு எளிய செயல்களையே இவ்வுலகில் பெரும்பாலும் அனைவரும் செய்கின்றனர். அவை அறிவதற்கும் எளிது. ஆற்றுவதற்கும் எளிது. எனவே, அவற்றையே அனைவரும் தேர்ந்து, விரும்பிச் செய்கின்றனர். அத்தகைய செயல்களைச் செய்பவர்களை இவ்வுலகம் நினைவில் வைப்பதில்லை; அவர்களின் மறைவுடன் அவர்தம் செயல்களும் மறைந்து போகின்றன. அவை அவர்களுக்கே பயன் தந்தன; அவர்களுடனேயே மடிந்தும் மறந்து போயின.

செய்வதற்கு அரிய செயல்களாகவும், அனைவர்க்கும் பயன்படும் செயல்களாகவும் இருப்பவை, அவற்றைச் செய்தவர்கள் மறைந்தாலும், மறையாமல், மற்றவர்க்கு என்றென்றும் பயனுடைய செயல்களாக விளங்குகின்றன.

தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் பயனுடைய அழியாத செயல்களையே அறச் செயல்கள் என்று நம் முன்னோர் கருதினர். அச் செயல்களே ஒருவர் செயத்தக்க செயல்களாகும். 'செயற்பாலது

ஒரும் அறனே என்று முழங்குகிறது திருக்குறள் (40). அவற்றைச் செய்பவரே போற்றுதற்கும் புகழ்தற்கும் உரியவர். 'செயற்கரிய செய்வார் பெரியர்' (26) என்பது திருக்குறள் இலக்கணம்.

எல்லாருக்கும் பயனுடைய செயல்களைச் செய்வது மிகக் கடினம்! எனவேதான் பலர் அவற்றைச் செய்யாமல், தங்களால் இயன்ற எளிய செயல்களையே செய்ய விரும்புகின்றனர். இனி, செயல்களைப் பற்றிச் சொல்லுதல் எவர்க்கும் எளியது; ஆனால், அவற்றைச் செய்வது கடினமானது. (664)

பெரும்பாலும், இவ்வுலகில், நல்ல செயல்கள் யாவும் கடினமாகவும், கெட்டசெயல்கள் யாவும் எளிமையாகவுமே இருப்பதைக் காணலாம். இன்றைய நிலையில் நல்ல செயல்கள் குறைந்து, நல்லவை அல்லாத செயல்கள் மலிந்து வருகின்றன. அஃதாவது, பொருள் ஈட்டுவதற்கு எளிய செயல்கள் தீய செயல்களாகவே இருக்கின்றன. எனவே, எல்லாரும் தீய செயல்களாக உள்ள எளிய செயல்களையே செய்ய முற்பட்டு விடுகின்றனர்.

செயல்களின் உயர்வு தாழ்வு, பெருமை இழிவு அறியாதவர்களே, தாழ்வான, இழிவான, எளிய செயல்களையே செய்ய முற்படுகின்றனர். அவர்கள் அவவாறு செய்வதற்கு ஒர் அடிப்படைக் காரணம், அவர்கள் செயல்களின் தரங்களையும் பெருமைகளையும் சிறப்புகளையும் அறியாமல் இருப்பதே ஆகும். இவற்றை அறிந்தவர்கள், கற்றவர்கள் பிறர்க்கு எடுத்துச் சொல்லுதல் வேண்டும். அவ்வாறு சொல்லுவாகளானால், அல்ல செயல்கள் மறைந்தொழியும்; நல்ல செயல்கள் தழைத்தோங்கும்.

அல்லவை தேய அறம்பெருகும், நல்லவை
நாடி இனிய சொலின் (96)

என்பது திருவள்ளுவப் பேராசானின் திருவாய்மொழி.

நல்லவற்றை நாடவும், அவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு இனிமையாக எடுத்துச் சொல்லவும் வேண்டும். அவ் வகையில் இந்த நூல் அப்பணியைச் செவ்வனே செய்யப் புகுந்தது என்க.

இனி, செயல்கள் எவ்வெவ் வகையில், எவரெவர் மேற்கொள்ள வேண்டும் அவை எவ்வெவ்வாறு செய்யப் பெறுதல் வேண்டும்; என்னெல் ன முயற்சிகள், முன்னெச்சரிக்கைகள், முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை செயல்களுக்கு இடையில் வரும் இடையூறுகள், இடர்ப்பாடுகள், பொருள் தடைகள், ஆள்தடைகள் எவ்வெவ்வாறு அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்: அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும், அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது, என்றிவை பற்றியெல்லாம் மிக விளக்கமாகவும் மிக விரிவாகவும் இந்நூலுள் கூறப்பெறுகின்றன. இனி, இவையெல்லா

வற்றுக்கும் ஒருபடி மேலாகச் சென்று, நல்ல, அரிய, பயனுள்ள செயல் களைத் திறம்படச் செய்வது எப்படி, எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும் அவற்றுக்கு எவரெவரைத் துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும். அவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் நன்கு எடுத்து விளக்குகிறது இவ்வரிய நூல்.

இந்த வகையில், தமிழில் இதுபோல், இதுவரை, எந்தவொரு நூலும், நமக்குத் தெரிந்த வரையில், வெளிவந்ததில்லை என்றே கூறுதல் வேண்டும். இந்த உண்மையை இதைப் படித்த பின் நன்கு உணர்வீர்கள்; அதனால் ஒரு பெருத்த மகிழ்ச்சியும் முழுநிறைவும் கொள்வீர்கள் என்னும் நம்பிக்கையும் நமக்குண்டு.

இதில் கூறப்பெறும் விரிவான, மிக நுட்பமான அறவியல், உளவியல், உலகியல், தொழிலியல், தொழில் நுட்பவியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கெல்லாம், நம் அரிய, இனிய நூலாகிய திருக்குறளிலிருந்தே ஏராளமான எடுத்துக் காட்டுகள் காட்டப்பெறுகின்றன. இஃது அனைவர்க்கும் மகிழ்ச்சியும், வியப்பும், பெருமிதமும் அளிக்கும் ஒரு செய்தியாகும்.

எனவே, இதைப் படித்து முடித்தபின், நம் திருக்குறளிலும் இத்தனைச் செய்திகளுண்டா என்று பலருக்கும் ஒரு வியப்பு வினா தோன்றும். ஆம், நம் திருக்குறளில் இதுவும் உண்டு; இதற்கு மேலும் உண்டு. எனவேதான், அதை ஒர் அறநூல், இலக்கிய நூல் என்பதைவிட, அதை ஒரு வாழ்வியல் நூல், இனநலம் காக்க வந்த புரட்சி நூல் என்றெல்லாம் நாம் எடுத்துக் கூறி மெய்ப்பித்து வருகிறோம். நம் இன முன்னேற்றத்திற்குரிய அத்தனைச் செய்திகளையும் திருவள்ளுவப் பேராசான் முன்கூட்டியே நமக்குப் பலவாறு அவரின் ஒண்டமிழ் நூலாம் திருக்குறளின்கண் நமக்கு உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார். அவற்றை நாம்தாம் ஆழப் பாராமல் அகலப் பார்த்துவிட்டு, அவற்றையும் புறக்கணித்து வந்திருக்கிறோம் என்பதை, இனியாகிலும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம். அதற்கு இந்நூலே ஒரு கலங்கரை விளக்கமாகவும், வழிகாட்டியாகவும், சான்றாகவும் விளங்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.

இந்நூல், நம் தமிழ்ச்சிட்டு என்னும் சிறுவர் இதழில் 1980 பிப்ரவரி (குரல் 1; இசை 10 முதல், 1987 ஏப்ரல் குரல் 18, இசை 10 வரை, ஏழு ஆண்டுகள், 56 தொடர்களாக வெளிவந்த ஆசிரியவுரைக் கட்டுரைகளாகும். இவை கட்டுரை வடிவில் வெளிவந்து கொண்டிருந்த பொழுதே, இஃதோர் அரிய நூல்; மேனாட்டாரும் படித்துப் பயனடைந்து, வியந்து போற்றுவதற்குரிய அரிய செய்திகளைக் கொண்டது; இஃது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெற்றால், நோபல் ப்ரிசு பெறுவதற்கும் உரியது என்று பலரும் அவ்வப்பொழுது நமக்கு

மடல்கள் எழுதிப் பாராட்டி வந்தனர். அவர்களின் ஊக்க உரைக்கும் ஆர்வத்திற்கும் முதற்கண் நம் நெஞ்சு நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கால், இதை நூல் வடிவில் கொணரவே பெருமுயற்சி தேவைப்பட்டது. இதைத் தக்கவர் ஒருவரைக் கொண்டு ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் எண்ணம் உண்டு. அதைக் காலந்தான் செய்தல் வேண்டும்.

இந்நூல் அச்சாகி வருங்கால், இதன் கட்டுரை வடிவ 40-ஆவது தொடருக்குப் பின், அஃதாவது 18ஆவது தலைப்பாக உள்ள இடையூறு கண்டு மனந்தளராமை என்னும் கட்டுரை இறுதியில், மேலும் 20 பக்கங்கள் அளவில் சில மனவியல் நுட்பங்கள் புதிதாக எழுதிச் சேர்க்கப் பெற்றிருக்கின்றன. அவ்விளக்கங்கள் அங்குத் தேவை என்று கருத வேண்டியிருந்தது. அவை பெரும்பாலும் மெய்யறிவியல் சான்ற கருத்துகளாகும். எனவே, மிகவும் பயனுடையவாக இருக்கும். இவற்றை வெறெந்த நூலிலும் பார்ப்பது கடினம்.

இந்நூலுக்கு அரியதொரு முன்மொழிவுரை நவின்ற தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடுகளாகிய துய தமிழ் அகரமுதலி, அறிவியல் சொல் அகரமுதலி ஆகிய இருபெரும் அகரமுதலிகள் பதிப்பாசிரியரும், இன்றைக்குத் தமிழ்ச்சொல் ஆய்விலும் அறிவிலும் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவரும் ஆகிய சொல்லாய்வறிஞர் திரு.ப. அருளி, வணிஇ சஇ, அவர்களுக்கு நம்நெஞ்சு நிறைந்த வாழ்த்தும் நன்றியும் உரியவாகுக.

என் இளைய மகன் திரு மா.பொழிலன், கமு, பொருளடக்கமும், பிழை திருத்தப்பட்டியும் எடுத்துதவினார். அவர்க்கும் நம் அன்பு வாழ்த்துக்கள்!

நம் நூல்களை முறையாக வெளியிடுவதற்கென்றே நம் உழுவலன்பர்கள் சிலரின் முயற்சியால் தொடங்கப்பெற்ற செந்தமிழ்நூல் தொகையையும் ஊதியத்தையும் கொண்டு, மேலும் இக்குழு இம்முயற்சியில் சிறந்த விளங்கவும் வெற்றி காணவும் நம் வாழ்த்துடன், அன்பர் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

இதனை அழகுற அச்சிட்டுதவிய புதுமைக் கலை அச்சக (நாவல் ஆர்ட் அச்சக) உரிமையாளர் பாவலர் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு எம் நன்றி.

கும்பம் உஎ

அன்புடன்

10-3-1988

பெருஞ்சித்திரனார்