பதிற்றுப்பத்து/ஆறாம்பத்து

விக்கிமூலம் இலிருந்து

பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்

பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்

பாட்டு - 51[தொகு]

துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர
விளங்(கு)இரும் புணரி உருமென முழங்கும்
கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்
கூவல் துழந்த தடந்தாள் நாரை
5  குவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும்
வண்(டு)இறை கொண்ட தண்கடல் பரப்பின்
அடும்(பு)அமல் அடைகரை அலவன் ஆடிய
வடுஅடு நுண்அயிர் ஊதை உஞற்றும்
தூஇரும் போந்தைப் பொழில்அணிப் பொலிதந்(து)
10 இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள்
வெறிஉறு நுடக்கம் போலத் தோன்றிப்
பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
அரவழங்கும் பெரும்தெய்வத்து
வளைஞரலும் பனிப்பெளவத்துக்
15 குணகுட கடலோ(டு) ஆயிடை மணந்த
பந்தர் அந்தரம் வேய்ந்து
வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
நனைஉறு நறவின் நா(டு)உடன் கமழச்
சுடர் நுதல் மடநோக்கின்
20 வாள்நகை இலங்(கு)எயிற்(று)
அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென
உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே
25 மழைதவழும் பெருங்குன்றத்துச்
செயிர்உடைய அர(வு)எறிந்து
கடும்சினத்த மிடல்தபுக்கும்
பெரும்சினப்புயல் ஏ(று)அனையை
தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
30 எஃ(கு)உடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்(து) ஊ(று)அளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க
35 மாற்(று)அரும் சீற்றத்து மாஇரும் கூற்றம்
வலைவிரித் தன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவித் தானே. (51)


பெயர்: வடுவடு நுண்ணயிர்
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்


பாட்டு - 52[தொகு]

கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
அருங்கலந் தாணஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு
5  மைஅணிந்(து) எழுதரும் ஆயிரம் பஃறோல்
மெய்புதை அரணம் எண்ணா(து) எஃகுசுமந்து
முன்சமத்(து) எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட
10 நல்அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கை
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்(பு)அறி யாஎனக் கேட்டிகும் இனியே
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
15 சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
உயவும் கோதை ஊரல்அம் தித்தி
ஈர்இதழ் மழைக்கண் பேர்இயல் அரிவை
ஒள்இதழ் அவிழ்அகம் கடுக்கும் சீறடிப்
20 பல்சில கிண்கிணி சிறுபர(டு) அலைப்பக்
கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்றுநின்
எறியர் ஓக்கிய சிறுசெங் குவளை
ஈஎன இரப்பவும் ஒல்லாள் நீஎமக்(கு)
யாரை யோஎனப் பெயர்வோள் கைஅதை
25 கதும்என உருத்த நோக்கமோ(டு) அதுநீ
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி
அகல்இரு விசும்பில் பகல்இடம் தாணஇயர்
தெறுகதிர் திகழ்தரும் உழுகெழு ஞாயிற்(று)
30 உருபுகிளர் வண்ணம் கொண்ட
வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே. (52)


பெயர்: சிறுசெங்குவளை
துறை: குரவைநிலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 53[தொகு]

வென்றுகலம் தாணஇயர் வேண்டுபுலத்(து) இறுத்தவர்
வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
நல்கினை ஆகுமதி எம்என்(று) அருளிக்
கல்பிறங்கு வைப்பின் கட(று)அரை யாத்தநின்
5  தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின்
செம்பொறிச் சிலம்பொ(டு) அணித்தழை தூங்கும்
எந்திரத் தகைப்பின் அம்(பு)உடை வாயில்
கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
வான்உற ஓங்கிய வளைந்துசெய் புரிசை
10 ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி
நின்னின் தந்த மன்எயில் அல்லது
முன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பிய
எயில்முகப் படுத்தல் யாவது வளையினும்
பிறி(து)ஆறு செல்மதி சினம்கெழு குருசில்
15 எழூஉப்புறம் தாணஇப் பொன்பிணிப் பலகைக்
குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்
தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
20 மேம்படு வெல்கொடி நுடங்கத்
தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே. (53)


பெயர்: குண்டுகண் அகழி
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 54[தொகு]

வள்ளியை என்றலின் காண்குவந் திசினே
உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
வீங்(கு)இறைத் தடைஅய அமைமருள் பணைத்தோள்
ஏந்(து)எழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்
5  பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்
மின்இழை விறலியர் நின்மறம் பாட
இரவலர் புன்கண் தீர நாள்தொறும்
உரைசால் நன்கலம் வரை(வு)இல வீசி
அனையை ஆகல் மாறே எனையதூஉம்
10 உயர்நிலை உலகத்துச் செல்லா(து) இவண்நின்(று)
இருநிலம் மருங்கின் நெடிதுமன் னியரோ
நிலந்தப விடூஉம் ஏணிப் புலம்படர்ந்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
15 ஏவல் வியம்கொண்(டு) இளையரொ(டு) எழுதரும்
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை இறைகிழ வோயே. (54)


பெயர்: நில்லாத்தானை
துறை: காட்சிவாழ்த்து
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 55[தொகு]

ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
நின்நயந்து வந்தனென் அடுபோர்க் கொற்றவ
இன்இசைப் புணரி இரங்கும் பெளவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
5  கமழும் தாழைக் கானல்அம் பெருந்துறைத்
தண்கடல் படப்பை நல்நாட்டுப் பொருந
செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
வால்ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்
10 வாரார் ஆயினும் இரவலர் வேணடித்
தேரின் தந்(து)அவர்க்(கு) ஆர்பதம் நல்கும்
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்
வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்
பெய்துபுறம் தந்து பொங்கல் ஆடி
15 விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச்
சென்றா லியரோ பெரும அல்கலும்
நனம்தலை வேந்தர் தார்அழிந்(து) அலற
நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு
பொருதுசினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத்
20 தாங்குநர்த் தகைத்த வொள்வாள்
ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே. (55)


பெயர்: துஞ்சும் பந்தர்
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 56[தொகு]

விழவுவீற்(று) இருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்கஅவன் கண்ணி
வலம்படு முரசம் துவைப்ப வாள்உயர்த்(து)
5  இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன்
மடம்பெரு மையின் உடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்(து)உகு போர்க்களத்(து) ஆடும் கோவே. (56)


பெயர்: வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
துறை: ஒள்வாள் அமலை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 57[தொகு]

ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப
இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
துணங்கை ஆடிய வலம்படு கோமான்
5  மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
பாணர் கையது பணிதொடை நரம்பின்
விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி
10 இளம்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
ஒண்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்
இரவலர் புன்க ணஞ்சும்
15 புர(வு)எதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. (57)


பெயர்: சில்வளை விறலி
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 58[தொகு]

ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
வெண்தோட்(டு) அசைத்த ஒண்பூங் குவளையர்
வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்உறழ் மறவர்தம் கொல்படைத் தாணஇயர்
5  இன்(று)இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண்புனை இஞ்சி மதில்கடந்(து) அல்ல(து)
உண்குவம் அல்லேம் புகாஎனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு(பு) அறியா வயங்குசெந் நாவின்
10 எயில்எறி வல்வில் ஏவிளங்கு தடக்கை
ஏந்(து)எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்பன் என்ப கானத்துக்
கறங்(கு)இசைச் சிதடி பொரிஅரைப் பொருந்திய
சிறிஇலை வேலம் பெரிய தோன்றும்
15 புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்
சீர்உடைப் பல்பக(டு) ஒலிப்பப் பூட்டி
நாஞ்சில் அடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. (58)


பெயர்: ஏவிளங்கு தடக்கை
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 59[தொகு]

பகல்நீ(டு) ஆகா(து) இரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கள்
பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப்
புல்இருள் விடியப் புலம்புசேண் அகலப்
5  பாய்இருள் நீங்கப் பல்கதிர் பரப்பி
ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்(கு)
இரவன் மாக்கள் சிறுகுடி பெருக
உலகம் தங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்(று)இரும் கொற்றத்துச்
10 செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம்
அறியா(து) எதிர்ந்து துப்பின் குறைஉற்றுப்
பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
சினம்செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி
பல்வேறு வகைய நனம்தலை ஈண்டிய
15 மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்
ஆறுமுட்(டு) உறாஅ(து) அறம்புரிந்(து) ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்
பாடுசால் நன்கலம் தரூஉம்
நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே. (59)


பெயர்: மாகூர் திங்கள்
துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பாட்டு - 60[தொகு]

கொல்வினை மேவற்றுத் தானை; தானே
இகல்வினை மேவலன் தண்டாது வீசும்
செல்லா மோதில் பாண்மகள் காணியர்
மிஞிறுபுறம் மூசவும் தீம்சுவை திரியா(து)
5  அரம்போழ் கல்லா மரம்படு தீம்கனி
அம்சே(று) அமைந்த முண்டை விளைபழம்
ஆறுசெல் மாக்கட்(கு) ஓய்தகை தடுக்கும்
மறாஅ விளையுள் அறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலைஉடை மறவர்
10 பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி
வருங்கடல் ஊதையின் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே. (60)


பெயர்: மரம்படுதீங்கனி
துறை: விறலியாற்றுப்படை
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு


பதிகம்[தொகு]

குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
5  கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வாரின் குடிபுறந் தந்து
10 நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம்:
வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை,
துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்கு தடக்கை,
மாகூர்திங்கள், மரம்படுதீங்கனி. இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும்
நூறயிரங்காணமும் கொடுத்துத் தன்பக்கத்துக்கொண்டான் அக்கோ.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பதெட்டியாண்டு வீற்றிருந்தான்.