பதிற்றுப்பத்து/ஆறாம்பத்து
பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்
பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாட்டு - 51[தொகு]
- துளங்குநீர் வியலகம் கலங்கக் கால்பொர
- விளங்(கு)இரும் புணரி உருமென முழங்கும்
- கடல்சேர் கானல் குடபுலம் முன்னிக்
- கூவல் துழந்த தடந்தாள் நாரை
- 5 குவிஇணர் ஞாழல் மாச்சினைச் சேக்கும்
- வண்(டு)இறை கொண்ட தண்கடல் பரப்பின்
- அடும்(பு)அமல் அடைகரை அலவன் ஆடிய
- வடுஅடு நுண்அயிர் ஊதை உஞற்றும்
- தூஇரும் போந்தைப் பொழில்அணிப் பொலிதந்(து)
- 10 இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள்
- வெறிஉறு நுடக்கம் போலத் தோன்றிப்
- பெருமலை வயின்வயின் விலங்கும் அருமணி
- அரவழங்கும் பெரும்தெய்வத்து
- வளைஞரலும் பனிப்பெளவத்துக்
- 15 குணகுட கடலோ(டு) ஆயிடை மணந்த
- பந்தர் அந்தரம் வேய்ந்து
- வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல்
- நனைஉறு நறவின் நா(டு)உடன் கமழச்
- சுடர் நுதல் மடநோக்கின்
- 20 வாள்நகை இலங்(கு)எயிற்(று)
- அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
- பாடல் சான்று நீடினை உறைதலின்
- வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்மென
- உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே
- 25 மழைதவழும் பெருங்குன்றத்துச்
- செயிர்உடைய அர(வு)எறிந்து
- கடும்சினத்த மிடல்தபுக்கும்
- பெரும்சினப்புயல் ஏ(று)அனையை
- தாங்குநர், தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும்
- 30 எஃ(கு)உடை வலத்தர்நின் படைவழி வாழ்நர்
- மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
- நிறம்பெயர் கண்ணிப் பருந்(து) ஊ(று)அளப்பத்
- தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
- கைவல் இளையர் கையலை அழுங்க
- 35 மாற்(று)அரும் சீற்றத்து மாஇரும் கூற்றம்
- வலைவிரித் தன்ன நோக்கலை
- கடியையால் நெடுந்தகை செருவித் தானே. (51)
- பெயர்: வடுவடு நுண்ணயிர்
- துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
- தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பாட்டு - 52[தொகு]
- கொடிநுடங்கு நிலைய கொல்களிறு மிடைந்து
- வடிமணி நெடுந்தேர் வேறுபுலம் பரப்பி
- அருங்கலந் தாணஇயர் நீர்மிசை நிவக்கும்
- பெருங்கலி வங்கம் திசைதிரிந் தாங்கு
- 5 மைஅணிந்(து) எழுதரும் ஆயிரம் பஃறோல்
- மெய்புதை அரணம் எண்ணா(து) எஃகுசுமந்து
- முன்சமத்(து) எழுதரும் வன்கண் ஆடவர்
- தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க
- உயர்நிலை உலகம் எய்தினர் பலர்பட
- 10 நல்அமர்க் கடந்தநின் செல்உறழ் தடக்கை
- இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
- மலர்(பு)அறி யாஎனக் கேட்டிகும் இனியே
- சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
- முழாஇமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
- 15 சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்துநீ
- நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி
- உயவும் கோதை ஊரல்அம் தித்தி
- ஈர்இதழ் மழைக்கண் பேர்இயல் அரிவை
- ஒள்இதழ் அவிழ்அகம் கடுக்கும் சீறடிப்
- 20 பல்சில கிண்கிணி சிறுபர(டு) அலைப்பக்
- கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்றுநின்
- எறியர் ஓக்கிய சிறுசெங் குவளை
- ஈஎன இரப்பவும் ஒல்லாள் நீஎமக்(கு)
- யாரை யோஎனப் பெயர்வோள் கைஅதை
- 25 கதும்என உருத்த நோக்கமோ(டு) அதுநீ
- பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
- யாங்குவல் லுநையோ வாழ்கநின் கண்ணி
- அகல்இரு விசும்பில் பகல்இடம் தாணஇயர்
- தெறுகதிர் திகழ்தரும் உழுகெழு ஞாயிற்(று)
- 30 உருபுகிளர் வண்ணம் கொண்ட
- வான்தோய் வெண்குடை வேந்தர்தம் எயிலே. (52)
- பெயர்: சிறுசெங்குவளை
- துறை: குரவைநிலை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 53[தொகு]
- வென்றுகலம் தாணஇயர் வேண்டுபுலத்(து) இறுத்தவர்
- வாடா யாணர் நாடுதிறை கொடுப்ப
- நல்கினை ஆகுமதி எம்என்(று) அருளிக்
- கல்பிறங்கு வைப்பின் கட(று)அரை யாத்தநின்
- 5 தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின்
- செம்பொறிச் சிலம்பொ(டு) அணித்தழை தூங்கும்
- எந்திரத் தகைப்பின் அம்(பு)உடை வாயில்
- கோள்வல் முதலைய குண்டுகண் அகழி
- வான்உற ஓங்கிய வளைந்துசெய் புரிசை
- 10 ஒன்னாத் தெவ்வர் முனைகெட விலங்கி
- நின்னின் தந்த மன்எயில் அல்லது
- முன்னும் பின்னும்நின் முன்னோர் ஓம்பிய
- எயில்முகப் படுத்தல் யாவது வளையினும்
- பிறி(து)ஆறு செல்மதி சினம்கெழு குருசில்
- 15 எழூஉப்புறம் தாணஇப் பொன்பிணிப் பலகைக்
- குழூஉநிலைப் புதவின் கதவுமெய் காணின்
- தேம்பாய் கடாத்தொடு காழ்கை நீவி
- வேங்கை வென்ற பொறிகிளர் புகர்நுதல்
- ஏந்துகை சுருட்டித் தோட்டி நீவி
- 20 மேம்படு வெல்கொடி நுடங்கத்
- தாங்கல் ஆகா ஆங்குநின் களிறே. (53)
- பெயர்: குண்டுகண் அகழி
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 54[தொகு]
- வள்ளியை என்றலின் காண்குவந் திசினே
- உள்ளியது முடித்தி வாழ்கநின் கண்ணி
- வீங்(கு)இறைத் தடைஅய அமைமருள் பணைத்தோள்
- ஏந்(து)எழில் மழைக்கண் வனைந்துவரல் இளமுலைப்
- 5 பூந்துகில் அல்குல் தேம்பாய் கூந்தல்
- மின்இழை விறலியர் நின்மறம் பாட
- இரவலர் புன்கண் தீர நாள்தொறும்
- உரைசால் நன்கலம் வரை(வு)இல வீசி
- அனையை ஆகல் மாறே எனையதூஉம்
- 10 உயர்நிலை உலகத்துச் செல்லா(து) இவண்நின்(று)
- இருநிலம் மருங்கின் நெடிதுமன் னியரோ
- நிலந்தப விடூஉம் ஏணிப் புலம்படர்ந்து
- படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்
- தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
- 15 ஏவல் வியம்கொண்(டு) இளையரொ(டு) எழுதரும்
- ஒல்லார் யானை காணின்
- நில்லாத் தானை இறைகிழ வோயே. (54)
- பெயர்: நில்லாத்தானை
- துறை: காட்சிவாழ்த்து
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 55[தொகு]
- ஆன்றோள் கணவ சான்றோர் புரவல
- நின்நயந்து வந்தனென் அடுபோர்க் கொற்றவ
- இன்இசைப் புணரி இரங்கும் பெளவத்து
- நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
- 5 கமழும் தாழைக் கானல்அம் பெருந்துறைத்
- தண்கடல் படப்பை நல்நாட்டுப் பொருந
- செவ்வூன் தோன்றா வெண்துவை முதிரை
- வால்ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை
- குடவர் கோவே கொடித்தேர் அண்ணல்
- 10 வாரார் ஆயினும் இரவலர் வேணடித்
- தேரின் தந்(து)அவர்க்(கு) ஆர்பதம் நல்கும்
- நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்
- வேண்டுவ அளவையுள் யாண்டுபல கழியப்
- பெய்துபுறம் தந்து பொங்கல் ஆடி
- 15 விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச்
- சென்றா லியரோ பெரும அல்கலும்
- நனம்தலை வேந்தர் தார்அழிந்(து) அலற
- நீடுவரை அடுக்கத்த நாடுகைக் கொண்டு
- பொருதுசினம் தணிந்த செருப்புகல் ஆண்மைத்
- 20 தாங்குநர்த் தகைத்த வொள்வாள்
- ஓங்கல் உள்ளத்துக் குருசில்நின் நாளே. (55)
- பெயர்: துஞ்சும் பந்தர்
- துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 56[தொகு]
- விழவுவீற்(று) இருந்த வியலுள் ஆங்கண்
- கோடியர் முழவின் முன்னர் ஆடல்
- வல்லான் அல்லன் வாழ்கஅவன் கண்ணி
- வலம்படு முரசம் துவைப்ப வாள்உயர்த்(து)
- 5 இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன்
- மடம்பெரு மையின் உடன்றுமேல் வந்த
- வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
- வீந்(து)உகு போர்க்களத்(து) ஆடும் கோவே. (56)
- பெயர்: வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
- துறை: ஒள்வாள் அமலை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 57[தொகு]
- ஓடாப் பூட்கை மறவர் மிடல்தப
- இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்பக்
- குருதி பனிற்றும் புலவுக்களத் தோனே
- துணங்கை ஆடிய வலம்படு கோமான்
- 5 மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச்
- செல்லா மோதில் சில்வளை விறலி
- பாணர் கையது பணிதொடை நரம்பின்
- விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணிக்
- குரல்புணர் இன்னிசைத் தழிஞ்சி பாடி
- 10 இளம்துணைப் புதல்வர் நல்வளம் பயந்த
- வளங்கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை
- ஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசை
- ஒண்நுதல் மகளிர் துனித்த கண்ணினும்
- இரவலர் புன்க ணஞ்சும்
- 15 புர(வு)எதிர் கொள்வனைக் கண்டனம் வரற்கே. (57)
- பெயர்: சில்வளை விறலி
- துறை: விறலியாற்றுப்படை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 58[தொகு]
- ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
- வெண்தோட்(டு) அசைத்த ஒண்பூங் குவளையர்
- வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
- செல்உறழ் மறவர்தம் கொல்படைத் தாணஇயர்
- 5 இன்(று)இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
- மண்புனை இஞ்சி மதில்கடந்(து) அல்ல(து)
- உண்குவம் அல்லேம் புகாஎனக் கூறிக்
- கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
- பொய்படு(பு) அறியா வயங்குசெந் நாவின்
- 10 எயில்எறி வல்வில் ஏவிளங்கு தடக்கை
- ஏந்(து)எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை
- வான வரம்பன் என்ப கானத்துக்
- கறங்(கு)இசைச் சிதடி பொரிஅரைப் பொருந்திய
- சிறிஇலை வேலம் பெரிய தோன்றும்
- 15 புன்புலம் வித்தும் வன்கை வினைஞர்
- சீர்உடைப் பல்பக(டு) ஒலிப்பப் பூட்டி
- நாஞ்சில் அடிய கொழுவழி மருங்கின்
- அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
- அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. (58)
- பெயர்: ஏவிளங்கு தடக்கை
- துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 59[தொகு]
- பகல்நீ(டு) ஆகா(து) இரவுப்பொழுது பெருகி
- மாசி நின்ற மாகூர் திங்கள்
- பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்பப்
- புல்இருள் விடியப் புலம்புசேண் அகலப்
- 5 பாய்இருள் நீங்கப் பல்கதிர் பரப்பி
- ஞாயிறு குணமுதல் தோன்றி யாஅங்(கு)
- இரவன் மாக்கள் சிறுகுடி பெருக
- உலகம் தங்கிய மேம்படு கற்பின்
- வில்லோர் மெய்ம்மறை வீற்(று)இரும் கொற்றத்துச்
- 10 செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம்
- அறியா(து) எதிர்ந்து துப்பின் குறைஉற்றுப்
- பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
- சினம்செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி
- பல்வேறு வகைய நனம்தலை ஈண்டிய
- 15 மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும்
- ஆறுமுட்(டு) உறாஅ(து) அறம்புரிந்(து) ஒழுகும்
- நாடல் சான்ற துப்பின் பணைத்தோள்
- பாடுசால் நன்கலம் தரூஉம்
- நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே. (59)
- பெயர்: மாகூர் திங்கள்
- துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 60[தொகு]
- கொல்வினை மேவற்றுத் தானை; தானே
- இகல்வினை மேவலன் தண்டாது வீசும்
- செல்லா மோதில் பாண்மகள் காணியர்
- மிஞிறுபுறம் மூசவும் தீம்சுவை திரியா(து)
- 5 அரம்போழ் கல்லா மரம்படு தீம்கனி
- அம்சே(று) அமைந்த முண்டை விளைபழம்
- ஆறுசெல் மாக்கட்(கு) ஓய்தகை தடுக்கும்
- மறாஅ விளையுள் அறாஅ யாணர்த்
- தொடைமடி களைந்த சிலைஉடை மறவர்
- 10 பொங்குபிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி
- வருங்கடல் ஊதையின் பனிக்கும்
- துவ்வா நறவின் சாயினத் தானே. (60)
- பெயர்: மரம்படுதீங்கனி
- துறை: விறலியாற்றுப்படை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பதிகம்[தொகு]
- குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
- ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
- தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
- தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
- 5 கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
- வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
- ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
- மன்னரை ஓட்டிக்
- குழவிகொள் வாரின் குடிபுறந் தந்து
- 10 நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
- ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
- யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
- காக்கைபாடினியார் நச்செள்ளையார்
- பாடினார் பத்துப் பாட்டு.
- அவைதாம்:
- வடுவடு நுண்ணயிர், சிறுசெங்குவளை, குண்டுகண்ணகழி, நில்லாத்தானை,
- துஞ்சும்பந்தர், வேந்துமெய்ம்மறந்த வாழ்ச்சி, சில்வளைவிறலி, ஏவிளங்கு தடக்கை,
- மாகூர்திங்கள், மரம்படுதீங்கனி. இவை பாட்டின் பதிகம்.
- பாடிப்பெற்ற பரிசில்: கலன் அணிக என்று அவர்க்கு ஒன்பது காப் பொன்னும்
- நூறயிரங்காணமும் கொடுத்துத் தன்பக்கத்துக்கொண்டான் அக்கோ.
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் முப்பதெட்டியாண்டு வீற்றிருந்தான்.