பல்லவர் வரலாறு/18. பல்லவர் ஆட்சி

விக்கிமூலம் இலிருந்து

18. பல்லவர் ஆட்சி

நாட்டுப் பிரிவு

பல்லவப் பெருநாடு பல இராட்டிரங்களாக (மண்டலங்களாகப்) பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாக (கோட்டங்களாக)ப் பகுக்கப்பட்டிருந்தது. பல்லவர் பட்டயங்களில் முண்ட ராட்டிரம் வெங்கோ ராட்டிரம்ட (வேங்கி ராட்டிரம்) முதலிய ஆந்திரப் பகுதி மண்டலங்களும் துண்டக ராட்டிரம் என்னும் தொண்டை மண்டலமும் குறிக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆண்ட தமிழ் நாட்டில் கோட்டம் நாடு ஊர் என்னும் பிரிவுகள் காணப்படுகின்றன. ஆந்திர நாட்டுப் பகுதிகளின் பெயர்களையும் தமிழ் நாட்டுப் பகுதிகளையும் நோக்கப், பல்லவர், தமக்கு முன் இருந்த தமிழ் அரசர் தொண்டை நாட்டுப் பிரிவுகட்கு வைத்திருந்த பெயர்களை அப்படியே தங்கள் ஆட்சியிலும் கையாண்டு வந்தனர் என்பதை நன்குணரலாம். தொண்டை நாடு பல்லவர்க்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அவையாவன:

1. புழல் கோட்டம், 2. ஈக்காட்டுக் கோட்டம், 3. மணவிற் கோட்டம், 4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், 6. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. ஊற்றுக்காட்டுக் கோட்டம், 9. களத்துர்க் கோட்டம், 10. செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12. வெண்குன்றக் கோட்டம், 13. பலகுன்றக் கோட்டம், 14.இலங்காட்டுக் கோட்டம், 15. கலியூர்க் கோட்டம், 16. செங்கரைக் கோட்டம், 17. படுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 19.செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவட்டான கோட்டம், 21. வேங்கடக்கோட்டம், 22. வேலூர்க்கோட்டம், 23. சேத்துர்க் கோட்டம், 24. புலியூர்க்கோட்டம்.[1]

அரச முறை

பெரும்பாலான பட்டயங்களால், பல்லவர் அரசமுறை தந்தையினின்று மூத்த மகனுக்கு உரிமையானதாகவே தெரிகிறது. அரசுக்கு ஏற்ற மைந்தன் இல்லாத காலங்களில் அரசனுடைய தம்பி மகன் பட்டத்தைப் பெறுதல் இயல்பாக இருந்தது. அரசன் திடீரெனப் பிள்ளை இன்றி இறந்தபோது, அமைச்சர் முதலிய பொறுப்புள்ள மக்கள் ஒன்று கூடி எண்ணிப் பார்த்து அரச மரபில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முடி புனைதல் வழக்கம். இச் செய்திகளை எல்லாம் முன்கண்ட பகுதிகளிலிருந்து நன்குணரலாம்.

அரசர் பட்டப் பெயர்கள்

பல்லவ அரசர்கள் தத்தம் தகுதிக் கேற்றவாறு பட்டயங்களைப் பெற்றிருந்தார்கள். மகாராசன், தரும மகாராசன். மகா ராசாதிராசன் என்று பட்டங்களைப் பட்டயங்களிற் காணலாம். முற்காலப் பல்லவருள் சிறந்து விளங்கிய சிவஸ்கந்தவர்மன் தன்னை ‘அக்நிஷ்டோம-வாஜ பேய-அஸ்வமேத ராஜ்’ என்று பட்டயத்தில் கூறிக்கொண்டதைக் காணப் பல்லவ வேந்தர் தாம் செய்த வேள்விப் பெயர்களையும் தங்கள் பட்டப்பெயர்களாகக் கொண்டமை நன்கறியலாம். பல்லவர் வீட்டுப் பெயர் ஒன்றாகும்; பட்டம் ஏற்றவுடன் கொண்ட பெயர் வேறாகும். அதனை ‘அபிடேக நாமம்’ என்னலாம். இராசசிம்மன் என்பது இயற்பெயர்; அவனுக்கிருந்த (இரண்டாம்) நரசிம்ம வர்மன் என்பது அபிடேகப் பெயர். பரமேசுவரன் என்பது இயற்பெயர் அவனுக்கிருந்த (இரண்டாம்) நந்திவர்மன் என்பது அபிடேகப் பெயர்.[2] இவை அன்றிப் பல்லவப் பேரரசர் பெற்றிருந்த் விருதுப் பெயர்கள் மிகப் பல ஆகும். அவை ஆங்காங்கே முன்னரே காட்டப்பட்டுள்ளன. அப் பெயர்கள் அவ் வேந்தர்தம் பலவகை இயல்புகளை நமக்கு விளக்குவனவாகும்.

அரசரும் சமயநிலையும்

பல்லவ வேந்தர் நல்ல உடற்கட்டு உடையவர்கள்; உயரமானவர்கள்: மணிமுடி தரித்த மன்னர்கள் என்னும் விவரங்கள் மகாமல்லபுரத்தில் உள்ள உருவச் சிலைகளைக் கொண்டு நன்கறியலாம். மூன்றாம் சிம்மவர்மன்[3] சிம்ம விஷ்ணு முதலிய பல்லவ அரசர் அனைவரும் வடமொழிப் புலவராக இருந்தவர்; மூன்றாம் நந்திவர்மன் மூன்றாம் சிம்மவர்மன். அபராசிதவர்மன் என்பவர் சிறந்த தமிழ்ப் புலவராக இருந்தவர். இராசசிம்மன் சைவ சித்தாந்தத்திற் சிறந்தவன்.[4] பல்லவ அரசமாதேவியாரும் நிரம்பப் படித்தவர்கள், ஒழுக்கம் மிக்கவர்கள் என்பது சாருதேவி, ரங்கபதாகை, தர்ம மகாதேவி, சங்கா, மாறம்பாவையார், பிருதிவீ மாணிக்கம் முதலிய பெண்மணிகள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளால் நன்கறியலாம்.

பல்லவர் இலச்சினை

பாண்டியர்க்கு மீனும், சோழர்க்குப் புலியும், சேரர்க்கு வில்லும், கங்கர்க்கு நாகமும், சாளுக்கியர்க்குப் பன்றியும் இலச்சினை ஆனாற்போலப் பல்லவர்க்கும் நந்தி இலச்சினை ஆயிற்று. நந்தி இலச்சினை பொதுவாகப் பல்லவர் சைவ சமய உணர்ச்சி உடையவர் என்பதை நன்கு விளக்குகிறது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த விளக்குகள், இடையே நந்தி அமர்ந்துள்ள அழகிய கோலம் கொண்ட பல்லவர் இலச்சினை பார்க்கத்தக்கது. உருவப்பள்ளி, பிகாரப் பட்டயங்களில் சிங்க இலச்சினை காணப்படுகிறது. சிங்க இலச்சினை கொண்ட பட்டயங்கள் யாவும் போர் முகத்திலிருந்து விடப்பட்டவை ஆகும். வெற்றியைக் குறிக்கச் சிங்க இலச்சினையை விடச் சிறந்த இலச்சினை கிடைத்தல் அரிய தன்றோ? பிற்காலப் பல்லவர் அனைவருமே நந்தி இலச்சினையே நன்கு பயன்படுத்தினர். பல்லவர் கொடி நந்திக்கொடி ஆகும். பல்லவர் காசுகளிலும் நந்தி இருத்தலைக் காணலாம்.[5] பல்லவ அரசர் வைணவராக இருந்த காலத்திலும் சமணராக இருந்த காலத்திலும் இந்த நந்திக் கொடியும் நந்தி இலச்சனையும நந்திப் பதிவு கொண்ட நாணயங்களும் வழக்கில்

இருந்தமை அறியற்பாலது. கூரம்காசக் குடிப்பட்டயங்களில் நந்தி மீது லிங்கம் அமைந்திருத்தல் இம் முடிபை நன்கு வலியுறுத்துவதாகும். எனவே, தனிப்பட்ட அரசன் எச்சமயத்தவன் ஆயினும், பல்லவர் ஆட்சியில் சைவமே அரசியல் சமயமாக இருந்தது என்பது இதுகாறும் கூறிய குறிப்புகளால் நன்கு புலனாகும்.

‘விடேல் விடுகு’ என்பது பல்லவர் விருதுப் பெயர்களுள் ஒன்று எனத் தவறாகக் கருதிய ஆராய்ச்சியாளர் பலர் ஆவர். இது ‘விடை+வெல்+விடுகு’ என்றிருத்தலே சிறப்புடையது. இதன் பொருள், ‘வெற்றியுடைய நந்தி இலச்சினையோடு விடுதல் பெற்ற (விடப்பெற்ற) ஆணை’ என்பதாகும். இப் பொருள் சரியா என்பது ஆராயத்தக்கது.[6]

பல்லவரது கத்வாங்கம்

‘கத்வாங்கம்’ என்பது சிவன் கொண்ட படைகளில் ஒன்றாகும். இதனாற்றான் சிவபெருமான் ‘கத்வாங்கன், கத்வாங்கதரன்’ என்றெல்லாம் கூறப்பட்டுள்ளான்.[7] இக் கத்வாங்கப் படையைப் பிற்காலப் பல்லவர் தம் சமய அடையாளமாகக் கொண்டிருந்தனர்.[8] முதலாம் பரமேசுவரவர்மன் கத்வாங்கத்தைக் கொடியிலே பெற்றவன் என்பது காசக்குடிப் பட்டயம் கூறுகின்றது. இரண்டாம் நந்திவர்மன் பட்டமேற்றபோது அவனுக்குக் கொடுக்கப்பட்ட பலவகைப் படைகளில் கத்வாங்கமும் ஒன்று என்று வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.[9]

அமைச்சியல்

சிவஸ்கந்தவர்மன் வெளியிட்ட ஹிரஹத கல்லிப் பட்டயத்தில் ஆமாத்யர் (அமைச்சர்) கூறப்பட்டுள்ளனர்.[10] பிற்காலப் பல்லவருள் மகேந்திவர்மனான குணபரன் திருநாவுக்கரசரை அழைத்துவரத்தன் அமைச்சரை அனுப்பினான் என்பதைப் பெரிய புராணத்தால் அறிகிறோம்.

பெரிய புராணத்ததைக் கொண்டு. மகேந்திரன் காலத்தில் அமைச்சர் இருந்தனர் என்பதை அறிதல் போல - இரண்டாம் நந்திவர்மன் காலத்திலும் பிற்காலத்திலும் பல்லவர் அரசியல் அமைப்பில் அமைச்சர்குழு இருந்தது என்பதைக் கல்வெட்டுகளால் நன்கறியலாம். இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சன் ‘பிரம்மஸ்ரீ ராஜன்’ எனப்பட்டான். எனவே, அவன் பிராமணன் என்பது வெளிப்படை மூன்றாம் நந்திவர்மன் அமைச்சன் நம்பன் இறையூர் உடையான் என்பவன். அவன் முன்னோர் பல்லவர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். உத்தமசீலன் - ‘தமிழ்ப் பேரரையன்’ என்று ஓர் அமைச்சன் பெயர் காணப்படுகிறது. எனவே, ‘பிரம்மராஜன்’ (பிரமராயன்), பேரரையன் என்பன அமைச்சர் பெறும் அரசியல் பட்டங்களாக இருந்தன. ‘தென்னவன் பிரமராயன்’ என்று மாணிக்கவாசகர் அழைக்கப்பட்டமை காண்க. இதனால் பண்டைத் தமிழ் அரசர், தம் அமைச்சருடைய சிறப்பியல்புகளை நோக்கிப் ‘பிரமராயன், பேரரசன்’ என்று பட்டங்களை வழங்கிய முறையைப் பின்பற்றியே பல்லவரும் நடந்து வந்தனர் என்பது நன்கு விளங்குகின்றது.[11] ‘உத்தம சீலன், நம்பன்’ என்னும் அமைச்சர் ஆணையை நடைமுறையிற் கொணர்ந்தனர் என்பது தெரிகிறது. அமைச்சர் அரசர்க்கு ஆலோசனையாளராகவும் இருந்தனர் என்பது வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டால் அறியக் கிடக்கிறது.

உள்படு கருமத்தலைவர்

பல்லவ வேந்தரிடம் உள்படு கருமத்தலைவர் (Private Secretaries) இருந்தனர் என்பதை ஹிரஹத கல் முதலிய சில பட்டயங்களால் அறியலாம். வாயில் கேட்பார் (Secretaries) கீழ் வாயில் கேட்பார் (Under Secretaries) முதலியவர்.பல்லவர் ஆட்சியில் அரசியலில் இடம் பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.[12]

அறங்கூர் அவையம்

பல்லவப் பெருநகரங்களில் அறங்கூர் அவையங்கள் இருந்தன. அவை ‘அதிகரணங்கள்’ எனப் பெயர் பெற்று இருந்தன என்பது மகேந்திரன் எழுதியுள்ள மத்தவிலாசப் பிரகசனத்தால் தெரிகிறது. அறங்கூர் அவையத்துத் தலைவர் ‘அதிகரண போசகர்’ எனப்பட்டனர். அதிகரணம் என்பது பெரிய அறங்கூர் அவையாகும். கரணம் என்பது சிற்றுரில் இருந்த அறங்கூர் அவையாகும். கரண அலுவலாளர் (தலைவர்) அதிகாரிகள் எனப்பட்டனர். பெரிய புராணத்தைக் கொண்டு சில சுவையுள்ள செய்திகளை அறியலாம். சிற்றுர்களில் சான்றோர் அறங்கூர் அவையத்தலைவராக இருந்தனர். மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) காலத்தில் திருவெண்ணெய் நல்லூரில் ஊரவை இருந்தது. அது வழக்கை விசாரித்து முடிவு கூறியதைப் பெரியபுராணத்தில் விரிவாகக் காணலாம். வழக்கில் முடிவுகூற மூன்று சான்றுகள் தேவை: அவை, (1) ஆட்சி (2) ஆவணம் (3) அயலார் காட்சி என்பன. இவற்றுள் ஆட்சி என்பது நீண்ட காலமாகக் கையாண்டு வரும் ஒழுக்கம் (அதுபோக பாத்தியம்). ஆவணம் என்பது வழக்கை முடிவு செய்ய உதவும் சுவடி, ஒலை முதலிய எழுத்துச் சீட்டுகள். அயலார் காட்சி என்பது வழக்கு நிகழ்ச்சியைக் கண்டார் கூறுவது. ஒப்பந்தம் ‘இசைவு’ (Will) எனப்படும். அந்தந்த ஊரார் கையெழுத்துகளையும் கை ஒப்பங்களையும் தனியாக ஊர்ப்பொது அரசாங்க அறச்சாலைப் பாதுகாப்பில் வைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. சிற்றுக்களில் இருந்த அறங்கூர் அவைய அலுவலாளன் காரணத்தான் எனப்பட்டான். பத்திரத்தில் சாட்சிகளாகக் கை ஒப்பமிட்டவர் ‘மேல் எழுத்திட்டவர்’ எனப்பட்டனர்[13]

இத்தகைய அறங்கூர் அவையங்களில் கைக்கூலி(லஞ்சம்) தாண்டவமாடியது என்பதை மகேந்திரவர்மனே தான் வரைந்துள்ள மத்தவிலாசத்தில் குறிப்பிட்டுளான். இக்காலத்தில் உள்ளது போல் உயர்நீதி மன்றம் (High Court) அக்காலத்திலும் இருந்தது. அது தருமாசனம் எனப்பட்டது. அது பல்லவப் பேரரசின் பொது மன்றம் ஆகும். அஃது அரசனது நேரான மேற்பார்வையில் இருந்தது. ‘அதிகரணம்’ என்பது குற்ற வழக்குகளை (Criminal) விசாரிக்கும் மன்றம் எனவும், ‘தருமாசனம்’ என்பது பிற வழக்குகளை (Civil) விசாரிக்கும் மன்றம் எனவும் கோடல் பொருத்தமாகும்.[14]

அரண்மனை அலுவலாளர்

இவருள் பொற்கொல்லர். பட்டய எழுத்தாளர், புலவர் முதலியோர் சிறப்பாகக் குறிக்கத்தக்கவர். (1) அரண்மனைப் பொற்கொல்லர் அரண்மனைக்கு வேண்டிய அணிகலன்களைச் செய்ததோடு செப்புப்பட்டயங்களில் அரசர் ஆணைகளைப் பொறித்துவந்தவர் ஆவர். மாதேவியாகிய அரசிக்கு அணி செய்த பொற்கொல்லர். மாதேவி பெருந்தட்டார், என்று பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளர். இப்பொற்கொல்லர் தம் மைந்தரும் பெயரரும் அரண்மனைப் பொற்கொல்லராகவே இருந்துவந்தனர் என்று பட்டயம்பகர்கின்றது. அரசனுக்கு அணிகள் முதலியன செய்து வந்த பொற்கொல்லன் அரசர் விருதுப்பெயருடன் ‘பெருந்தட்டான்’ என்பது சேர்த்து வழங்கப்பட்டான். (2) பொற்கொல்லர் அல்லாமல் செப்புப் பட்டயங்களைத் தீட்டப்பட்டய எழுத்தாளர் என்பவரும் இருந்தனர். அவர் அலுவலும் வழிவழி வந்ததாகும். (3) அரசர் மெய்ப்புகழை நாளும் பாடும் புலவர்.பல்லவர் அரண்மனையில் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் கவிகளைப் பாடியுள்ளனர். உதயேந்திரப் பட்டயத்தில் அரசனது மெய்ப்புகழை வரைந்த புலவன், மேதாவிகள் மரபில் வந்தவனும் புகழ்பெற்ற சந்திரதேவன்

மகனுமான ‘பரமேசுவரன்’ எனப்பட்டவன். இத்தகைய புலவர் ‘காரணிகர்’[15] எனப்பட்டனர்.

பல்லவர் படைகள்

தேர்ப்டை பல்லவரிடம் இருந்ததென்பதை மெய்ப்பிக்கக் கல்வெட்டு - பட்டயச் சான்றுகளோ, ஓவிய - சிற்பச் சான்றுகளோ இதுகாறும் கிடைத்தில. அவர்கள் யானைகள், குதிரைகள், வீரர்கள் பெற்றிருந்தார்கள் என்பது தேற்றம். சிறந்த துறைமுகப்பட்டினமாகிய மாமல்லபுரத்தில் பழைய காலத்திலிருந்தே மேனாட்டுக் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தமை இலக்கியம் கண்ட சான்று. வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள் வாயிலாகப் போர்ப்பரிகள் பல இருந்தன என்பது தெளிவாகும். சிறந்த சேனைத் தலைவர்கள் பல்லவர் காலத்தில் இருந்தனர். சிம்மவர்மன் காலத்தில் விஷ்ணுவர்மன் என்னும் தானைத்தலைவன் சிறந்திருந்தான்; நரசிம்மவர்மன் காலத்தில் வாதாவி கொண்ட சிறுத்தொண்ட நாயனார் சிறந்த சேனைத் தலைவராக விளங்கினார். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் அப் பேரரசனைத் பகைவர் முற்றுகையி லிருந்துகாத்த பெருவீரனான உதய சந்திரன் என்பவன் படைத்தலை வனாக இருந்தான். மூன்றாம் நந்திவர்மனிடம் பூதிவிக்கிரம கேகரி என்பவன்தானைத்தலைவனாக இருந்தான். -

பண்பட்ட படைகள்

பல்லவர் படைகள் போரில் வன்மை பெற்றவை. இடைக்காலப் பல்லவர் காலத்தில் வடபகுதியில் மேன் மதுரை, தசனபுரம் முதலிய இடங்கட்குச் சென்று போர் நடத்தி வெற்றிபெற்றன; பிற்காலப் பல்லவர் காலத்தில் கடம்பரை நிலைகுலையச் செய்தன. புகழ் பெற்ற சாளுக்கியரை அடக்கின; தமிழ் வேந்தரைப் பின்னடையச் செய்தன; இரட்டரை ஒடச் செய்தன. இக் குறிப்புகளை நன்கு நோக்குழிப் பல்லவர் பண்பட்ட போர்த்திறன் பெற்ற படைகளை வைத்திருந்தனர் என்பது வெள்ளிடை மலையாகும்.

கடற்படை

பல்லவர் கடற்படையும் இளைத்ததன்று. நரசிம்மவர்மன் தன் நண்பனான மானவன்மனுக்கு உதவிபுரியத் தன் கடற்படையை ஈழத்திற்கு அனுப்பினான்-அப்படைவெற்றிகொண்டதுஎன்பவற்றை உணர்கையில் பல்லவர் கடற்படை வலிமை தெற்றெனத் தெரிகின்றதன்றோ? நிருபதுங்கவர்மன் காலத்தில் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவன் கடற்படை பெற்று ஈழத்தின் மீது படையெடுத்த செய்தியைக் காண்க.[16] இராசசிம்மன் இலக்கத் தீவுகளை வென்றதாகக் குறிப்புக் காணப்படுகிறது.[17]

இந்த இராசசிம்மன் காலத்தில் பல்லவ நாடு சீனத்துடன் சிறந்த வாணிபம் செய்து வந்தது. அக் காலத்தில் நாகப்பட்டினம் பல்லவர் துறைமுகப் பட்டினங்களில் ஒன்று. அங்கு இவன் சீனவணிகர் பொருட்டுப் புத்தர் கோவில் ஒன்றைக் கட்டுவித்துச் சீனப்பேரரசன் நன்மதிப்பைப் பெற்றான்.[18] அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்த தென்னலாம்.[19] மூன்றாம் நந்திவர்மன் காலத்திலும் பல்லவர் கப்பல்கள் சையாம் முதலிய கடல்கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தன என்பது ‘தகோபா’ கல்வெட்டு முதலியவற்றால் அறியலாம்.

நாடும் ஊரும்

நாடு என்பது சிற்றுரைவிடப் பெரியது. கோட்டத்தை விடச் சிறியது. நாட்டார் என்பவர் அப்பகுதிக்கு உரிய சான்றோர். ஊரார் என்பவர் சிற்றுரைச் சேர்ந்த அறிஞர். ‘ஆள்வார்’ என்பவர் ஊரை ஆண்ட அவையினர். ஒரு நாட்டிற்கு உட்பட்ட எந்தச் சிற்றுரைப் பற்றிய செய்தியிலும் இம்முத்திறத்தாகும் கலத்தேதங்கள் கருத்தைத் தெரிவித்து வந்தனர் என்பது தெரிகிறது. ‘ஊற்றுக் காட்டுக் கோட்டத்து நாட்டாரும் காண்க.’ “திருமுகம் கண்டு. நாட்டோம் நாட்டு வியவன் சொல்லிய எல்லை போய், பதாகை வலம் செய்து கல்லும் கள்ளியும் நாட்டிக் கொடுத்ததற்கு எல்லை”[20] எனவரும் பட்டயக் குறிப்புகளைக் காண்க. பல்லவ மல்லன் விடுத்த பட்டத்தாள் மங்கலப் பட்டயத்தில், ‘நாட்டார்க்கு விட்ட திருமுகம் நாட்டார் பொழுது தலைக்கு வைத்து எல்லை போய்க் கல்லும் கள்ளியும் நாட்டிப் பதாகை வலம்செய்து நாட்டார் விடுத்த அறை ஒலைப்படி.... என வருதல் காண்கையில் (1) அரசன் விடுத்தது திருமுகம் என்பதும், (2) நாட்டார் அதனை நிறைவேற்றிப் பொது மக்கட்கு அறிவிப்பது அறை ஓலை என்பது தெளிவுறல் காண்க.

ஊர் ஆட்சி

ஊரார் ஆட்சிமுறை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக அறிதற்குரிய சான்றுகள் கிடைத்தில. ஆயினும் ஊரார், சிற்றுர்ச் சபையாருடன் (ஆள்வாருடன்) கலந்து வேலைகள் செய்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஊர் அவையார் பெருமக்கள் எனப்பட்டனர். இப் பெருமக்கள் உழவு. கோவிற் பணி, அறங்கூறல் முதலிய பல வேலைகளைப் பார்த்துவந்தனர். ஊர் அவை பல உட்பிரிவுகளாகப் பிரிந்து பல துறைகளிலும் நுழைந்து சிற்றுர் ஆட்சியைத் திறம்பெறச் செய்து வந்தது.[21] அக்காலத்தில் இத்தகைய ஊர் அவைகள் ஏறக்குறைய இருபது இருந்தன என்பது பட்டயங்களாலும் கல்வெட்டுக்களாலும் தெரிகிறது. மேலும் பல ஊர் அவைகள் இருந்திருத்தல் வேண்டும். இத்தகைய ஊர் அவைகளே கி.பி. 9ஆம் நூற்றாண்டில் (சுந்தரர் காலத்தில்) திருவெண்ணெய் நல்லூரில் இருந்தது; திருநீலகண்ட நாயனார் காலத்தில் சிதம்பரத்திலும் இருந்தது என்பது பெரியபுராணத்தில் அறிக.

ஊர் அவைப் பிரிவுகள்

ஊர் அவைக்குள் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் வாரியம் (Committee) எனப்பட்டது. ‘ஏரி வாரியப் பெருமக்கள்’ ‘தோட்ட வாரியப் பெருமக்கள்’ எனப் பல வகுப்புப் பெருமக்கள் கொண்ட முழு அவையே ஊரவை ஆகும். சிற்றுர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர் ஆளுங்கணத்தார் எனப்பட்டார். இவர் ஊரவையாரின் வேறானவர். இக்கால நகர அவையாரைப் போன்றவர் அக்கால ஊரவையார்; இக்காலக் கமிஷனர் முதலிய அரசியல் அலுவலாளர் அக்கால ஆளும் கணத்தார் ஆவர். கோவில் தொடர்புற்ற பலவகை வேலைகளையும் தவறாது கவனித்துக் கோவில் ஆட்சி புரிந்து வந்த கூட்டத்தார் அமிர்த சணத்தார்[22] எனப்பட்டார். “திருவொற்றியூர்ப்புறத்து ஆதம்பாக்கத்துச் சபையோமும் அமிர்த கணத்தோமும் இப்பொன்னால் யாண்டுவரை கழஞ்சின் வாய் மூன்று மஞ்சாடி...” எனவரும் கல்வெட்டுத் தொடரைக் காண்க. இவர்கள் கோவிலுக்கு வரும் தானங்களைப் பெறுவர்; கோவில் பண்டாரத்திலிருந்து பொருள்களைக் குறித்த வட்டிக்குக் கடன் தருவர். இவை தொடர்பான பாத்திரங்களைப் பாதுகாப்பர். கோவில் தொடர்புற்ற பிற வேலைகள் எல்லாவற்றையும் கவனிப்பர். இவர்கள் ஊர் அவையாருக்குக் கோவில் சம்பந்தமான செய்திகளில் பொறுப்புள்ளவர் ஆவர்.[23]

இராட்டிர ஆட்சி

இராட்டிரங்களாகிய மண்டலங்களை ஆண்டவர் பெரிதளவு தம்மாட்சியே செலுத்திவந்தனர். இவர் நாளடைவில் வழிவழியாக இப் பதவிகளில் நிலைத்துவிட்டனர். பல்லவர் வடவர் ஆதலாலும், அவரது பேரரசு வடக்கில் சாளுக்கியர் இரட்டர்களாளும், தெற்கில் பாண்டியராலும் அடிக்கடி துன்புற்றதாலும் பல்லவர் தமிழ்க் குறுநில மன்னர்களை மிகுதிப்படுத்த வேண்டியவர் ஆயினர். தமிழ் மக்கட்கு ஆளும் பொறுப்புத்தர வேண்டியவர் ஆயினர்.[24] இதனை நன்கு நினைந்தே சோழ அரசைப் பெயரளவில் தனியரசாக விட்டு வைத்தனர் போலும்!

சிற்றரர்கள்

இக் காலச் சிற்றுர்களே பெரும்பாலும் மாறுதல் இன்றி அக்காலத்திலும் இருந்தன. மக்கள் குடி இருப்புக்குரிய வீடுகள், நன்செய்-புன்செய் நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள், குளங்கள், புறம்போக்கு நிலங்கள், சிற்றுர்ப் பொது நிலங்கள். கடை வீதிகள், சுடுகாடு-இடுகாடுகள். கோவில்கள், கோவில் நிலங்கள் முதலியன இருந்தன. ஒவ்வொரு சிற்றுாரும் நன்கு அளக்கப்பட்டு எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தது. சிறிய சிற்றுார்கள் பல பெரிய சிற்றுார்கள் சில: இவை பல்வேறு குடி இருப்புகளையும் சேரிகளையும் கொண்டவை. பிராமணர் பெரும் பகுதியினராக வாழ்ந்த சிற்றுரர்களிலும் பல திறந்து மக்கள் குடியிருந்தனர். பலவகைத் தொழிலாளிகளும் வணிகரும் வாழ்ந்து வந்தனர். இக்கால வழக்கப்படியே கிணறுகள், குளங்கள். கோவில்கள், ஓடைகள் முதலியன சிற்றுர்களுக்குப் பொதுவாக இருந்தன. நெல் அடிக்கும் களத்துக்கு வரியாக நிலமுடையார் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றுர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தி வந்தனர். இத்தகைய பணிகளை ஊர் அவையார் கவனித்து வந்தனர்.

பிரம்மதேயச் சிற்றரர்கள்

இவை மறையவர் பொருட்டே புதியனவாக உண்டாக்கப் பட்டவை. அவற்றுள் உதயசந்திர மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் முதலியன சிலவாகும். இச் சிற்றுார்கள் எத்தகைய வரியும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியதில்லை. அதனால் இவை நன்னிலையில் வளர்ச்சியுற்று வந்தன.

தேவதானச் சிற்றூர்கள்

சில சிற்றுர்கள் கோவில்களுக்கென்று விடப்பட்டன. அவை தேவதானச் சிற்றுார்கள் எனப் பெயர்பெற்றன. அவற்றுள் ஒன்று மூன்றாம் நந்திவர்மனால் யக்ளுேஸ்வரர்க்கு விடப்பட்ட திருக்காட்டுப்பள்ளி என்னும் (பொன்னேரிக்கு அடுத்த) சிற்றுர் ஆகும். அச் சிற்றுாரின் வருவாய் முழுதும் கோவிற் பணிகளுக்கே செலவிடப்பட்டது. பல்லவப் பேரரசர் இந் நாட்டில் பல இடங்களில் பல வகைக் கோவில்களைக் கட்டினார்கள்: பல கோவில்கட்கு நிலதானம் செய்தார்கள். இம்முறையால், பல்லவர் ஆட்சியில் கோவில், சிற்றுார்ப் பொதுவாழ்வில் பெரிய மாறுதலைச் செய்துவிட்டன என்று கூறலாம்.

சிற்றரர்க் கோவில்கள்

கோவிலால் பல ‘குடும்பங்கள்’ பிழைத்தன. ‘தனிப்பரிவாரம், கோவில் பரிவாரம் அமிர்தகணத்தார்’ என்பவர் அனைவரும் கோவில் வருவாயைக் கொண்டு பிழைத்தவர் ஆவர். கோவில்களை அடுத்து அடியார்கட்கும் ஏழைகட்கும் உணவுச் சாலைகள் நடைபெற்று வந்தன.[25] கோவில் அல்லது உணவுச் சாலைக்கு ஊராரிடமிருந்தும் வணிகரிடமிருந்தும் இக் கால வழக்கம் போல ‘மகன்மை’ (மகமை அல்லது மகிமை) யாக ஒரு பகுதி நெல், அரிசி முதலியவற்றைப் பல்லவர் காலத்தில் வசூலித்து வந்தனர் என்பது தெரிகிறது. இச் செய்தியைப் பெருமான் அடிகள் என்று போற்றப்பட்ட இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு தெளிவாக அறிவிக்கின்றது.[26] இத்தகைய சத்திரங்கள் அல்லது மடங்கள் பல இந்த நாட்டில் இருந்தன. அவற்றில் காபாலிகர் காளாமுகர் முதலிய பலவகைச் சைவர் உண்டு வந்தனர். விழாக்காலங்களில் உள் ஊரார் வெளி ஊரார்

என்னும் அனைவர்க்கும் உண்டி வழங்க வசதிகள் அளிக்கப்பட்டி ருந்தன. அப் பணிக்கு அரசனும் பிறரும் பொருள் உதவி செய்தனர். திருஆதிரை முதலிய நல்ல நாட்களில் கோவில் விழாக்கள் சிறப்புற நடந்தன. அவற்றுள் சித்திரைவிசுத்திருவிழா ஒன்று. இது நடைபெற ஒரு தனிமகன் 15), கழஞ்சுபொன் திருத்தவத்துறை (லால்குடி) கோவிலுக்குச் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இங்ஙனம் சிற்றுர்க் கோவில்கள் சிற்றுாரார்க்குப் பக்தியை மட்டும் ஊட்டுவதோடு நில்லாது. ஊர்மக்கட்குக் கடன் கொடுத்துதவும் அறச்சாலையாகவும், அடியார்களை உண்பிக்கும் உணவு நிலையங்களாகவும் இருந்தன. இவற்றோடு, தேவைப்பட்ட காலங்களில் ஊரார்க்குப் பண உதவி செய்யும் கோவில் பண்டாரமாகவும், கோவில்கள் இருந்து வந்தன.[27]

பள்ளிச் சந்தம்

தேவதானம், பிரம்மதேயம் என்பன போலப் பள்ளிச் சந்தம் என்பது சமணப் பள்ளிக்கென விடப்பட்ட இறையிலி நிலங்கள் ஆகும். ஆனால், இப் பள்ளிச் சந்தம் பிற்காலத்ததே ஆகும். ஆயின், இதுகாறும் கிடைத்துள்ள பல்லவர் பட்டயங்களில் பெளத்தர்க்கு நிலம் விட்டதாக ஒரு சான்றும் காணக் கிடைக்கவில்லை என்பது குறிக்கத் தக்கது.[28]

ஏரிப்பட்டி

சிற்றுார்களில் உள்ள ஏரிகளை அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய செலவுக்காகச் சில நிலங்கள் ஊரவையார் பார்வையில் விடப்பட்டி ருந்தன. அவை ஏரிப்பட்டி எனப்படும். ஏரிப்பட்டியை மேற்பார்வை யிட்டடவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனப்பட்டனர்.[29] ஒரு குறிப்பிட்ட அளவையுடைய நிலத்து விளைவிலிருந்து குறிப்பிட்ட அளவுள்ள நெல்லை ஏரிவாரியாகத் தரும் பழக்கம் பல்லவர் காலத்திருந்தது.

நிலவகை

மிராசுதாரர் நிலங்களில் பெரும்பகுதி “பயல் நிலம்’ என்றும் அரசர்க்குரிய வரியைச் செலுத்த என்று விடப்பட்ட நிலப்பகுதி ‘அடை நிலம்’ என்றும் குறிக்கப்பட்டன. பயல் நில வருவாயில் பாதியை நிலத்தவர் பெற்றனர்; மற்றப் பகுதி பயிரிட்டவர் பெற்றனர். அரசாங்க நிலங்களைப் பயிரிட்ட குடியானவர் சிலர் இருந்தனர். அவர்களது ‘பயிரிடும் உரிமை’ அரசாங்கத்தாரால் தரப்பட்டு வந்தது. அந்த உரிமை அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது.[30]


பலவகை வரிகள்

தென்னை - பனை முதலியன

தென்னை மரங்கள் சிறப்பாகப் பிரம்மதேய தேவதானச் சிற்றுார்களில் அரசர் உரிமை பெற்று வரி செலுத்தாது பயிரிடப்பட்டன. இதனால் பிற ஊர்களில் அவற்றைப் பயிரிட விரும்பினோர் அவற்றின் விளைவில் ஒரு பகுதியை அரசர்க்கு வரியாகச் செலுத்தி வந்தனர் என்பது பெறப்படுகிறது. முன்சொன்ன பிரம்மதேய - தேவதானச் சிற்றுர்களில் இருந்த தென்னை - பனை மரங்களிலிருந்து கள் இறக்குதல் விலக்கப்பட்டிருந்தது. கள் இறக்கினவர் அரசாங்க வரி செலுத்தி வந்தனர்; இம் மரங்களைப் பயிரிட்டவர் அரசாங்கத்திற்கு ஒரு பகுதி வருவாயை வரியாகச் செலுத்தி வந்தனர்; வெட்டப்பட்ட மரங்களின் அடிப் பகுதியில் ஒரு பகுதியும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. தென்னை பனை மரங்கட்கு உரியவர், சாறு இறக்க வரி கட்டினர். பனம்பாகு செய்ய வரி

கட்டினர். கடைகளில் விற்கப்பட்ட பழைய பாக்கு மரங்களிலும் அரசாங்கம் பங்கு பெற்று வந்தது. ‘கல்லால மரம்’[31] பயிரிடச் சிற்றுாரார் அரசாங்கத்தினிடம் உரிமை பெற வேண்யிருந்தது. அவ்வுரிமைக்குச் சிறு தொகை செலுத்தவேண்டி இருந்தது; அது ‘கல்லால் காணம்’ எனப்பட்டது.

மருந்துச் செடிகள்

செங்கொடி (செங்கொடி வேலி அல்லது சித்திர மூலம்) என்பது மிகச் சிறந்த மருந்துக்கொடி. இது பல வகை நோய்களையும் இரணங்களையும் போக்க வல்ல ஆற்றல் பெற்றது. இதனைப் பயிரிடுவோர் உரிமை பெறவேண்டும். இதற்குச் செலுத்தப்பட்டவரி செங்கொடிக் காணம் எனப்பட்டது. ‘கருசராங் கண்ணி’ என்பதும் சிறந்த பயன்தரும் செடியாகும். அது பல நோய்களை நீக்க வல்லது. இச் செடியைப் பயிரிட அல்லது விற்க உரிமை தரப்பட்டது. அவ்வுரிமை பெறச்செலுத்தப்பட்ட தொகை கண்ணிட்டுக் காணம் எனப்பட்டது.

மருக்கொழுந்து முதலியன

பல்லவர் காலத்துக் கடல் வாணிபம் கிழக்கிந்தியத் தீவுகளிலும் சீயம், சீனம் முதலிய நாடுகளிலும் பரவி இருந்தது. அதனால் சீனத்திற்கு உரிய ‘மருக்கொழுந்து’ இங்குக் கொணரப்பட்டுப் பயிரிடப்பட்டதாகும். இதனைப் பயிரிடப் தேவதான - பிரம்மதேயச் சிற்றுர்கள் உரிமை பெற்றிருந்தன. பிற சிற்றுார்கள் அரசாங்க உரிமை பெற்றே (வரிசெலுத்தியே) பயிரிடவேண்டியவை ஆயின.

‘நீலோற்பலம்’ எனப்படும் குவளைச் செடிகளை நடுவதற்கும் உரிமைபெற வேண்டும்; விற்பதற்கும் அரசினரிடம் உரிமை பெற வேண்டும். இவை முறையே ‘குவளை நடு வரி’ எனவும், குவளைக் கானம்’ எனவும் பெயர் பெற்றன. இக் குவளை மலர் பூசைக்கும்

மருந்துகள் செய்வதற்கும் பயன்பட்டது. இங்ஙனமே செங்கழுநீர் நடுவதற்கும் உரிமை பெறவேண்டும். பிரம்மதேய - தேவதானச் சிற்றுார்கள் வரி இல்லாமலே இதை நடுவதற்கு உரிமை பெற்றிருந்தன. இதன் மலர் பூசைக்கு உரியது. வேர் மருந்துக்கு உரியது. இங்ஙனம் அரசாங்க உரிமை பெற்றுப் பயிரிடப் பட்டவை பல.[32] உப்பெடுத்தலும் சர்க்கரை செய்தலும் அரசாங்கமே கவனித்து வந்தது.[33]

பிற வரிகள்

கால்நடைகளாற் பிழைப்பவர், ‘புரோகிதர், வேட்கோவர், பலவகைக்கொல்லர், வண்ணார், ஆடைவிற்போர், ஒடக்காரர், தரகர், செக்கர், ஆடை நெய்பவர், நூல் நூற்பவர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், நெய் விற்போர், மணவீட்டார் முதலிய பல தொழிலாளரும் பிறரும் அரசாங்கத்திற்குக்குறிப்பிட்டவரி செலுத்தி வந்தனர்’ என்பது பல பட்டயங்களாலும் நன்கு புலனாகும் செய்தியாகும். சிற்றுர்த் தலைவன் சிற்றுர் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று வாழ்ந்தான். அவனுக்கு அவ்வூரார் செலுத்தி வந்த வரி ‘விசக்கானம்’ அல்லது ‘வியவன் காணம்’ எனப்பட்டது. இவ் வரிகள் அன்றி நெல் விற்பவர் அரிசி முதலிய பலவகைக் கூலவகைகளை விற்போர் குறிப்பிட்ட அளவையுடைய அரிசியோ பிற கூலமோ வரியாகத் தந்துவந்தனர் என்பதும் தெரிகிறது. இக்காலத்தில் அரசர் தலை இடப்பட்ட திருமுகங்களை நாம் பணம் தந்து பெறுதல்போல - அக்காலத்தில், செய்திகள் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குள் கொண்டு செல்ல வசதி இருந்ததோ என்னவோ தெரியவில்லை. அத்தகைய வசதிக்கென்று வரி இருந்ததை நாம் ஒருவாறு உய்த்துணரலாம். அது ‘திருமுகக் காணம்’ எனப் பெயர் பெற்றது. கத்தி முதலிய கருவிகளைச் செய்த தொழிலாளர்க்கு விதிக்கப்பட்ட வரி ‘கத்திக்காணம்’ எனப்பட்டது. பறை யடிப்போர் ஒருவகை வரி செலுத்தி வந்தனர். அது ‘நெடும்பறை’ எனப் பெயர்பெற்றது. அறுவடைக் காலங்களில் அரசியல் திறையாக நெல்லைப் பெற வந்த அதிகாரிகட்கு ஊரார் உணவளித்தல் வழக்கம்; அதற்கென்று ஊராரிடம் பெற்று வந்த சிறுதொகை ஒருவகை வரியாகக் கருதப்பட்டது. அதன் பெயர் ‘எ(ல்) சோறு’ (நாட்சோறு) என்பது. ஊர் மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட தண்டம் ‘மன்று பாடு’ எனப்பட்டது. இங்ஙனம் பல துறைகளினும் வந்த வருவாய் அரசாங்கப் பண்டாரத்தை அடைந்து வந்தது. இதுகாறும் கூறியவற்றால், பல்லவ அரசாங்கம் கணக்கற்ற துறைகளில் வருவாய் பெற்றுவந்தது என்பதை நன்குணரலாம்.[34]

பல்லவர் அரசாங்கப் பண்டாரம்

பல்லவர் வரலாற்றிற் கண்ட போர்களையும், பல்லவர் கட்டிய-குடைவித்த உலகம் போற்றும் கோவில்களையும் நினைக்கும்பொழுது, அவர்தம் செல்வநிலை நன்னிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை அறியலாம். அரசியல் பண்டாரத்தைப் பொறுப்புள்ளவரே காத்து வந்தனர். தண்டன் தோட்டப் பட்டயத்தால், ‘குமாரன்’ என்பவன் பண்டாரத் தலைவன்: அவன் சமயக்கல்வி உடையவன்; அவா அற்றவன்; நடுநிலை யாளன் சிறந்த ஒழுக்கம் உடையவன். பகைவர்க்கும் உறவினர்க்கும் ஒரே படித்தானவன் என்பது தெளிவுறத் தெரிகிறது.[35] இப் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவன் அன்றி, மாணிக்கப் பண்டாரம் காப்போர் பலர் இருந்தனர். பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும் படி ஆணை இடும் அலுவலாளர் ‘கொடுக்கப் பிள்ளை’ எனப்பட்டனர்.[36]

நில அளவை

பல்லவர் ஆட்சிக்குப்பட்ட நாட்டில் நிலம் முழுவதும் செவ்வையாக அளவை பெற்று இருந்தது. இன்ன பகுதி நிலங்கள் வரியற்றவை என்ற முடியும் பெற்றிருந்தன. நில அளவைக் கணக்குகளையும் வரி அளவை முதலிய கணக்குகளையும் சிற்றுர் - பேரூர் அரசியல் அலுவலாளர் வைத்திருந்தனர். ‘பழம் பிரம்மதேயம் இருபத்து நாலு வேலியும் நீக்கி’ என வரும் பட்டயத் தொடரை நோக்குங்கால், ‘பல்லவர் ஆட்சியில் நில அளவைக்கணக்கு முதலியன உண்டு’ என்பதைத் தெளிவாக உணரலாம். ஒரு குறிப்பிட்ட நிலத்தை அளந்ததும் கள்ளியும் கல்லும் நட்டு எல்லை வகுத்தல் அக் காலப் பழக்கமாக இருந்தது.[37]

நீர்ப்பாசன வசதிகள்

பல்லவர் ‘காடு வெட்டிகள்’ ஆதலால், நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்ய வேண்டியவர் ஆயினர். ஏரிகள் ‘தடாகம்’ என்று கூறப்பட்டன. பல்லவர் பல ஏரிகளைத் தம் நாட்டில் உண்டாக்கினர். அவை அரசர் பெயரையோ, தோண்டப்பட்ட இடத்தைச் சேர்ந்த சிறந்த தலைவன் பெயரையோ கொண்டதாக இருக்கும். இராசதடாகம், திரளயதடாகம் (தென்னேரி), மகேந்திர தடாகம், சித்திர மேக தடாகம் (மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம் (கூரம் ஏரி) வைரமேகன் தடாகம் (உத்திரமேரூர் ஏரி), ‘வாலி வடுகன்’ என்பவன் வெட்டுவித்த வாலி ஏரி, குன்றாண்டார்கோவில்- (புதுக்கோட்டை).திருச்சிராப்பள்ளியில் ஆலம்பாக்கத்தில் ‘மாரிப்பிடுகன்’ என்பவன் வெட்டுவித்த ‘மாரிப்பிடுகு ஏரி’ வடஆர்க்காட்டுக் கோட்டம் குடிமல்லத்தில் உள்ள வெள்ளேரி தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் காவேரிப்பாக்கம் ஏரி, வந்தவாசிக் கூற்றத்தில் இருந்த மருதாடு ஏரி, வேலூர் கூற்றத்தில் உள்ள கனவல்லி தடாகம் முதலியன குறிப்பிடத் தக்கவை. இவையன்றிக் கல்வெட்டுகளில் குறிபிடப்பெறாத ஏரிகள் பல இருந்தன. இவ்வேரிகளில் பல மழை நீரையே பெற்றவை; சில ஆற்று நீரையும் பெற்றவை. இவற்றிலிருந்து கால்வாய்கள் பல இடங்கட்கும் சென்று வயல்கட்கு நீரைப்பாய்ச்சிவந்தன. இந்த ஏரிகள் அல்லாமல் கூவல் (கிணறு)கள் பல எடுக்கப்பட்டன. இக் கிணறுகள் பெரியவை: வயல் கட்கு நீரை உதவுபவை; இப் பெருங்கிணறுகள் போன்றவற்றை இன்றும் தொண்டை நாட்டில் காணலாம். திருவெள்ளறை என்னும் வைணவத் தலத்தில் முத்தரையர் மரபைச் சேர்ந்த கம்பன் அரையன் என்பவன் ‘மாரிப் பிடுகு பெருங் கிணறு’ ஒன்றை எடுத்ததாகப் பல்லவர் பட்டயம் (நந்திவர்மன் காலத்தது) கூறுகின்றது.

பாலாறு காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லப் பல கால்வாய்கள் பல்லவர் நாடெங்கும் இருந்தன. அவை ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப் பெயர் பெற்றன. திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் வைரமேகன் (நந்திவர்மன்) வாய்க்கால் இருந்தது. கூரத்தில் இருந்த பரமேசுவர தடாகத்திற்குப் பாலாற்று நீரைக் கொண்டுவந்தது ‘பெரும்பிடுகு வாய்க்கால்’ என்பது. இப் பெரிய கால்களிலிருந்து பிரிந்த கிளைக்கால்கள் பலவாம். அவை ‘குரங்கு, கால். கிளைக்கால், ஓடை எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தன. அவற்றுள் சில ‘கணபதி வாய்க்கால்’ ‘ஸ்ரீதர வாய்க்கால்’ என்றாற் போல வேறு பெயர்களும் பெற்றிருந்தன.[38] ஆறுகளில் நீர் இல்லாத காலங்களில் ஊற்றுக்கால்கள் எடுத்து நீர் பாய்ச்சப் பெற்றது. ஏற்றம் இறைத்து வயல்கட்கு நீரைப் பாய்ச்சும் முறையும் அக் காலத்தில் இருந்து வந்தது. கால் வசதி இல்லாத இடங்களில் வேறு என்ன செய்யமுடியும்? வாய்க் கால்களில் அங்கங்கு மதகுகள் இருந்து கிளைக்கால்களில் நீரைவிட்டு வந்தன. சிலபெரிய கால்வாய்கள்மீது பாலங்கள் இருந்தன. அங்கு மதகுகள் இருந்தன. அவை தண்ணிரை வேண்டிய அளவு சிறிய கால்வாய்களில் விட்டு வந்தன. மதகில் இருந்த சிறப்பு வாய்கள் ‘கூற்றன் வாய்” வாய்த்தலை, தலைவாய், முகவாய் எனப் பலவாறு பெயர் பெற்றன.

ஏரி வாரியம்

இதுகாறும் கூறிவந்த ஏரி, கிணறு வாய்க்கால், மதகு இவற்றை மேற்பார்வையிட்டு வேண்டிய திருத்தங்களை ஏரிவாரியப் பெருமக்கள் செய்து வந்தனர். பெரிய ஏரிகளில் சீர் திருத்தம் நடைபெறும்போது, ஏரிக் கரைகளைப் பண்படுத்தத் தோணிகள் பயன்படுத்தப்பட்டன. இத்திருத்தங்களைச்செய்ய ஊரவையாரிடம் பணம்படைத்த பெருமக்கள் அடிக்கடி பொன் முதலியவற்றை ஒப்புவித்தல் மரபு. அவர்கள் அத்தொகையை வட்டிக்கு விட்டுப் பெருக்கி அதனை நல்வழியிற் பயன்படுத்தி வந்தனர். நீர்ப்பாசன வசதிகளை ஊராரும் ஊன்றிக் கவனித்துவந்தனர். பலர் நிலங்களைத் தானம்செய்து, அவற்றின் வருவாயைக் கொண்டு நீர்ப்பாசன வசதிகளைத் திருத்தமுறச் செய்து வந்தனர். ஊர் வருமானத்தில் ஒரு பகுதியும் இப் பணிகட்குப் பயன்பட்டுவந்தது. போதாத இடங்களில் அரசாங்கமும் பொருள் உதவி செய்து வந்தது. இத்தகைய வியத்தகு முறைகளால் நீர்ப்பாசனம் குறைவின்றிப் பல்லவர் காலத்தில் நடைபெற்று வந்தது.[39]

நீட்டல் அளவை

‘கலப்பை, நிவர்த்தனம், பட்டிகா, பாடகம்’ என்னும் நான்கு அளவைகள் பல்லவர் ஆட்சியில் இருந்தன. (1) கலப்பை- இரண்டு எருதுகள் பூட்டப்பெற்ற ஒரு கலப்பையைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒருவன் உழும் நிலத்தின் அளவு கலப்பை எனப்பட்டது. (2) நிவர்த்தனம் ஒருவன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து புறப்பட்ட இடத்தை அடைந்தவுடன் அவனால் எல்லை கோலப்பட்டநில அளவே ‘நிவர்த்தனம்’[40] எனப்பட்டது. பிற்காலத்தில் 200 சதுரமுழம்

கொண்ட நிலப்பரப்பே ‘நிவர்த்தனம்’ எனப் பெயர்பெற்றது. (3) பட்டிகா (பட்டி) என்பது ஆட்டை ஓர் இடத்தில் கட்டி அதன் கயிற்றின் உதவியால் சுற்றும் அளவையுடைய நிலப்பகுதியை ஆகும். (4) பாடகம் என்பது 240 குழிகொண்ட நிலமாகும். பிற்காலப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் ‘வேலி குழி’ என்பன அளவைகளாகக் காண்கின்றன. குழி என்பது 144 சதுர அடி முதல் 576 சதுர அடிவரை நாட்டுக்கேற்ப வழங்கப்பெற்றது. நிருபதுங்கன் காலத்தில் ஒரு குழி 81 சதுர அடி அளவை உடையதாக இருந்தது.

இந்த அளவைகளோடு (1) நாலு சாண் கோல், (2) பன்னிரு சாண் கோல், (3) பதினாறு சாண் கோல் முதலிய நீட்டல் அளவைகள் இருநதன என்பதும் கல்வெட்டுகளால் அறியத்தகும் செய்தியாகும்.[41]

முகத்தல் அளவை

நாழிகள் பல பெயர்கள் பெற்றிருந்தன; அவை, (1) கரு நாழி (2) நால்வா நாழி (3) மாநாயநாழி (4) பிழையா நாழி (5) நாராய(ன) நாழி முதலியன. உறி என்பது ஒருமுகத்தல் அளவைக்கருவியாகும். ஒரு கல்வெட்டில் ‘பிருதி(வீ) மாணிக்கஉறி’ என்னும் பெயர் காணப்படுகிறது. ‘பிருதிவீ மாணிக்கம்’ என்பது நிருபதுங்கவர்மன் மனைவி பெயராகும் இங்ஙனம் பல அளவைகள் கோப்பெருந் தேவியர் பெயர்களை கொண்டனவாக இருந்திருக்கலாம். ‘விடேல் விடுகு உழக்கு என்பது பொதுவாக மூத்திரையிடப் பட்ட பல்லவர் கால முகத்தல்கருவியாகும். அஃது எல்லாப் பல்லவ அரசர்காலத்தும் இருந்து வந்ததாகலாம் எண்ணெய், நெய் பால் முதலிய அளக்கப் பயன்பட்ட சிறிய அளவை ‘பிடி’ எனப்பட்டது. இவை அன்றி, நெல்முதலியன அளக்கச் சோடு, நாழி, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலியன பயன்பட்டன.[42]

நிறுத்தல் அளவை

கழஞ்சு, மஞ்சாடி என்பன பொன் முதலியன நிறுக்கும் அளவைகள், கழஞ்சி’ என்பது பல பட்டயங்களில் காணப்படும் அரசாங்க அளவை (Standard Weight) ஆகும். கழஞ்சின் பன்னிரண்டில் ஒரு பாகம் ‘மஞ்சாடி’ ஆகும். அதனாற்றான் பட்டயங்களில், கழஞ்சிற்கு வட்டி குறிப்பிட்டபோதெல்லாம் ‘மஞ்சாடி’ அளவை குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லவர் காசுகள்

பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவற்றின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டி லிருந்து கூறலாம். அவை பிற்காலப் பல்லவருடையன என்னலாம். பெரும்பாலான காசுகள் நந்தி இலச்சினை பெற்றவை. சில, இரண்டு பாய்மரக்கப்பல் இலச்சினை கொண்டவை. முன்னது பல்லவரது சைவ சமயப் பற்றையும் பின்னது கடல் வாணிபத்தையும் குறிப்பவை; காசின் மறுபுறம் சுவஸ்திகா, வேள்விக்குரிய விளக்கு, சங்கு, சக்கரம், வில், மீன், குடை, சைத்தியம் (கோவில்), குதிரை. சிங்கம் முதலியன காசுதோறும் வேறுபட்டுள்ளன. -

(1) எல்லாக்காசுகளும் சிறந்த வேலைப்பாட்டுமுறை பெற்றவை. டாக்டர் மீனாட்சி என்னும் ஆராய்ச்சித்திறன் பெற்ற அம்மையார்,தாம் சென்னைப் பொருட்காட்சிச்சாலை களிற் சோதித்த காசுகளில் பொற்காசுகளாக இருந்த ஆறும், முதலாம் மகேந்திரன் காலத்தவையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.[43] அக்காசுகளின் மீது கதாசித்ரா என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ‘கடாக-(கடாவ)- சித்ர (காரப்புலி)’ என்பவற்றைக் குறிப்பனவாகக் கொண்டு அம்மையார், அவை ‘காடவனாகிய எத்திரகாரப்புலி (மகேந்திர வர்மன்) என்பவன் காலத்தவை’ என்று கூறுதல் பொருத்தமாகவே காணப்படுகிறது. பல்லவர் வரலாற்றில் பண்பட்ட ஆராய்ச்சி உடைய அவ்வம்மையார் கூற்றுக்கோடற்பால்தேயாம்.

(2) நந்தி முத்திரை கொண்ட சில காசுகளில் ‘ஸ்ரீபரன், ஸ்ரீநிதி’ என்பன குறிக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் இராசசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனைக் குறிப்பன என்பது மகாபலிபுரம் - தருமராசர் தேரில் உள்ள தொடர்களாலும் கயிலாசநாதர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளாலும் நன்கறியலாம். எனவே, இக்காசுகள் அவன் காலத்தன ஆகும்.

(3) நந்தி முத்திரையுடன் மீன் பொறிக்கப்பட்டுள்ள காசுகளிலும், ஸ்ரீபரன், ஸ்ரீநிதி என்பன காணப்படுகின்றன. ‘மீன்’ பாண்டியர்க்கே உரியது. இராசசிம்மன் காலத்தில் பாண்டிய மன்னனாக இருந்தவன் கோச்சடையன் இரணதீரன் என்பவன். இவன் பெரிய புராணம் கூறும் நின்றசீர் நெடுமாறனுக்கும் மங்கையர்க்கரசியாருக்கும் பிறந்தவன். இவன் மகன் இராசசிம்மன் எனப் பெயர் பெற்றான். இதைக்கொண்டும் மீன் கொடி பல்லவர் காசுகளில் இருத்தலைக் கொண்டும், கோச்சடையன் இரணதீரன் இராசசிம்ம பல்லவனின் மகனை மணந்து, பிறந்த குழந்தைக்குப் பல்லவ இராசசிம்மன் (பாட்டன்) பெயரையே இட்டிருக்கலாம் என்று அறிஞர்[44] கருதுகின்றனர். அங்ஙனமாயின், பல்லவப் பேரரசை மருமகனான கோச்சடையன் பெருமைப்படுத்தி இருக்கலாம். அதற்கு அடையாளமாகப் பல்லவ மன்னன் பாண்டியன் இலச்சினையைத் தன்காலத்துக் காசில் பொறித்தல் முறையே. இதனை வலியுறுத்த,

இராசசிம்ம பல்லவனிடம் சீன தூதனாக வந்த ஒருவன் சீனப் பேரரசனால் கொடுக்கப்பட்ட மீன் உருவம் அமைக்கப்பட்ட பை ஒன்றுடன் வந்தான் என்னும் குறிப்பினால், இராசசிம்மன் பாண்டியரும் பாராட்டத்தக்க நிலையில் பேரரசனாக இருந்தான் என்பதைச் சீனப் பேரரசனும் மதித்துவந்தான் என்று விளக்குகின்றது என்று அறிஞர் கருதுகின்றனர்.[45]

(4) நந்தி இலச்சினைக்கு மேல் ‘மானபரா’ என்பது பொறிக்கப்பட்டுள்ள காசுகள் சிலவாகும். இக்காசுகளின் பின்புறம் சங்கு ஒன்று பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளதே போலப் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைக் ‘கதிரவன்’ என்று எலியட் கூறுவர். இஃது ‘அதிமான’ என்று தன்னைக் கூறிக்கொண்ட இராசசிம்மனது காசாகாலம் என்று டாக்டர் மீனாட்சி அம்மையார் கருதுகின்றனர். ‘சங்கு’ தெளிவாகப் பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ளதை நன்கு நோக்க, இக்காசுகள் வைணவப் பற்றுடைய பல்லவ அரசர் காலத்தவை எனக்கோடலே பொருத்தமாகும். (பிற்காலப் பல்லவருள்) வைணவப் பற்றுடையராக இருந்தவருள் சிறப்பாக முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் என்போரைச் சொல்லலாம். ஆதலின், சங்கு பொறிக்கப்பட்ட காசுகள் இவர்கள் காலத்துக் காசுகளாக இருக்கலாம். வழிவழியாக வரும் நந்தி இலச்சினைக்குப்பின் தாம் மேற்கொண்டசமயத்தைக் குறிக்கச்சங்கு சக்கரம் இவற்றைக் காசுகளின் பின்புறத்தில் பொறிக்க இவ்வைணவ அரசர் விழைந்திருத்தல் இயல்பே அன்றோ?

(5) நண்டு, ஆமை, கப்பல் முதலியன பொறிக்கப்பட்ட காசுகள் பல்லவரது கடல் வாணிபச் சிறப்பைக் குறிப்பன ஆகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர்.

(6) பல்லவர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பொன் காசுகள் இருந்தமை குறிக்கப்பட்டுள்ளது. பொன்[46] என்பது ஒரு காசின் பெயர் பழங்காசு என்பன சிறந்த வேலைப்பாடு கொண்டவை; ‘பழங்காசினோடு உறைப்ப துளைப் பொன்’ என வருதல் காண, பிற்காலக் காசுகள் அப்பழங்காசு நிலையில் இருந்தனவா என்பது சோதிக்கப்பட்டன[47] என்பது அறியத்தகும். பழங்காசு நிலையில் இல்லாத பொற்காசுகள் வாசி இன்றி (வட்டம் இல்லாமல்) செல்லாவாயின. இவ்வரிய நுட்பமான செய்தி திருஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியக்கிடத்தல் காண்க. அம்மட்டமான காசுகளைக் ‘கறைகொள் காசு’ என்று சம்பந்தர் கூறல் காண்க.[48] துளைப்பொன் என்பது துளையிடப்பட்டபொற்காசு, ‘விடேல் விடுகு - துளையிட்ட செம்பொன்’ என்பது துளையிடப்பட்ட விடேல் விடுகு முத்திரை பெற்ற காசாகும். கழஞ்சுக் காசு என்பது ஒரு கழஞ்சு எடையுள்ள பொற்காசு.

பல்லவர் நாட்டில் பஞ்சங்கள்

(1) மழை பெய்யாவிடில் பயிர் விளையாது; நாட்டில் பஞ்சம் ஏற்படுதல் இயற்கை. அத்துடன் ஓயாத பெரும் போர்களாலும் அரசியல் நிலைகுலைய-மூலபண்டாரம் வற்ற-அவ்வந்நாட்டுப் பண்டாரங்கள் வற்ற-நாட்டில் பஞ்சக் கொடுமை தலைவிரித் தாடலும் இயல்பு பல்லவப்பேரரசில் தொண்டை நாடு ஆற்றுவளம் நிரம்பப்பெற்றதன்று. மழை இன்றேல் ஏரிகளில் நீர் இராது. பல்லவர் ஆட்சிக்குட்பட்ட சோணாட்டில் ‘செவிலித்தாய்’ என்ன ஒம்பும் தீம்புனற்கன்னியாறு மழை பெய்யாவிடில் என்ன செய்யும்! ஆற்றில் மழை நீர் வரினும், நாட்டின் செல்வ நிலை இழிவுற்றிருப்பின், நிறைந்த விளைச்சலை எதிர்பார்த்தல் இயலாது. அரசியல் மூலபண்டாரம், நாட்டுப் பண்டாரம், ஊர்ப்பண்டாரம் என்பவை போரால் வற்றி வயல்களில் நீர்மட்டும் குறைவற இருந்தும் பயன் என்ன? பணமும் இன்றி மழையும் இல்லையேல் நாடு சொல்லொணா வறுமைப் பிணியுள் ஆழ்ந்து விடும். இத்தகைய துன்ப நிலையே அப்பர், சம்பந்தர்காலத்தியமுதலாம் நரசிம்மவர்மன் ஆட்சி இறுதியில் அல்லது பரமேசுவரவர்மன் ஆட்சி இறுதியிலும் - பிற்பட்டபல்லவர் காலங்களிலும் அடிக்கடி உண்டானது. சைவசமய குரவர் திருவிழிமிழலையில் இருந்தபொழுது கொடிய வறுமை நோய் நாடெங்கும் பரவியது. அடியார்கள் உணவின்றித் துன்புற்றனர். அப்பொழுது சமய குரவர் திருவீழிமலைப் பெருமானை வேண்டிக் காசு பெற்று அடியாரை உண்பித்தனர் என்று பெரிய புராணம் கூறும். இக்கூற்றால் நாம் உணரத்தக்க வரலாற்றுச் செய்திகள் இரண்டு. அவை: (1) அவர்கள் காலத்தில் பல்லவ நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது; (2) கோவில் பண்டாரம் அடியார் உணவுக்காகப் பொற்காசுகளை நல்கியது[49] என்பன. இப்பொழுது நடைபெற்ற உலகப் பெரும் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் பேரரசின் மூலபண்டாரம் எந்த அளவுவற்றிவிட்டது என்பதை நாம் நன்கு உணர்கின்றோம் அல்லவா? இந்த உணர்ச்சியுடன் அக்கால நிலையை நோக்கின், உண்மை புலனாகும்.

(2) நரசிம்மவர்மன் காலத்துப் பஞ்சம் கல்வெட்டுச் சான்றுகள் பெற்றிலது. முதலாம் பரமேசுவர வர்மனுக்கும் சாளுக்கிய விக்கிரமாதித்தற்கும் (கி.பி. 665-680) நடந்த கொடிய போர் முன்பே விளக்கப்பட்டதன்றோ? அப்போரில் பாண்டியர், சோழர் முதல் பலரும் தொடர்புற்றனர். இங்ஙனம் நடைபெற்ற பெரும் போரினால் மூல பண்டாரம் வற்றக்கேட்பானேன்? நாடு வறுமை கொள்ள இதைவிடச் சிறந்த காரணம் வேறென்ன வேண்டும்? இதுகாறும் கூறப்பட்ட பெரும் போர்களின் விளைவாலும், இராசசிம்மன் காலத்தில் கொடிய வறுமை உண்டானது. இதனை அவன் காலத்து அவைப்புலவரான தண்டி என்பார் பின்வருமாறு கூறியுள்ளார் அது, “சோழ பாண்டிய நாடுகள் பகைவன் கொடுமையால் வெந்துயர் உற்றன; மங்கையர் சீரழிக்கப் பட்டனர்; வேள்விகள் குன்றின, களஞ்சியங்கள் காலியாயின. மதிப்புக் கெட்டது. தோட்டங்களும் மரங்களும் அழிக்கப்பட்டன; பலர் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டனர்; வேள்விச் சாலைகள் அழிக்கப்பட்டன... செல்வர் கொல்லப்பட்டன. சாலைகள் பழுதுபட்டுக் கிடந்தன; பல்லவ நாட்டில் தண்டியின் உற்றார் உறவினர் மாண்டொழிந்தனர்; தண்டி உணவின்றி நாடு முழுவதும் சுற்றி அலைந்தார்; பல்லவப் பேரரசு தத்தளித்தது: காஞ்சிநகரம் கை விடப்பட்டது; அவைப் புலவரும் கற்றாரும் நாடு முழுவதும் அலைந்து திரிந்தனர்,” என்பது.[50]

(3) மூன்றாம் நந்திவர்மன் (கழற்சிங்கன்) தெள்ளாற்றில் தன் பகைவரான தமிழ் வேந்தரை முறியடித்தான். அக்காலத்தில் சோழர் சேனைத்தலைவராக இருந்தவர். கோட்புலி நாயனார்[51] ஆவர். பல்லவர்க்கும் தமிழ் அரசர்க்கும் இருந்த மனக் கசப்பையும், போரில் கோட்புலியார் காட்டிய வீரத்தையும் சுந்தரர் தம் பதிகங்களில் பாடியுள்ளார்.[52] இக் கோட்புலி நாயனார் போருக்குச் சென்ற பிறகு நாட்டில் பெரும் பஞ்சம் உண்டானது. அவர் சிவனடியார்க்கு என்று வைத்திருந்த நெல்லை அவர் உறவினர் உண்டுவிட்டனர்.[53] இக்குறிப்பினால், சுந்தரர்-மூன்றாம் நந்திவர்மன் கோட் புலியார் காலத்தில் (கி.பி. 825-850) தென்னாட்டில் பஞ்சம் உண்டானது என்பதை அறியலாம். இங்ஙனம் பல்லவர் ஆட்சியில் பல காலங்களில் பஞ்சம் உண்டாயின என்பது தேற்றம்.

பஞ்சம் ஒழிப்பு வேலை

பெரும் போர்களில் ஈடுபட்டிருந்த பேரறிவும் பெரும் பக்தியும் கொண்ட பல்லவப் பேரரசர் சிற்றுர்களில் முன்னெச்சரிக்கையாக, அல்லது போர் நடந்தபிறகு (இயன்ற வரை குடிகட்குத் துன்பம் உண்டாகாமற் காக்கப்) பஞ்ச வார வாரியம் ஏற்படுத்தி இருந்தனர் என்பது ஊகித்து உணர்தற்பாலது. ஒவ்வொரு சிற்றுரிலும் அறுவடையானவுடன் பஞ்ச ஒழிப்பிற்கென்று ஒரு பகுதி நெல் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதனைச் சேர்த்தல், மேற்பார்வை இடல். காத்தல், பஞ்ச காலத்தில் குடிகட்குத் தந்து உதவல் முதலிய

வேலைகளைச் செய்து வந்தவர் கூட்டமே ‘பஞ்சவார வாரியம்’ எனப்பட்டது. குடிகள் கொடுத்த நெல் ‘பஞ்ச வாரம்’ (வாரம்-பங்கு) எனப்பெயர் பெற்றது. இது பற்றிய செய்தி மூன்றாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு ஒன்றில், “திருக்காட்டுப் பள்ளிப் பஞ்சவாரம் ஆயிரக்காடி நெல்,” என்னும் தொடரில் காணப்படுகிறது.[54]

அறப்பணிகள்

ஒருவரை அவரது செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலிற் பொன் கொடுத்து விளக்கு வைத்தலோ வேறொன்று நடைபெறச் செய்தலோ அக்காலப் பழக்கங்கள் பலவற்றுள் ஒன்றாகும். மாடு பிடிப்போரில் மாண்டவீரர் இருவர் நினைவுக்காகப் பல்லவர் சிற்றரசன் ஒருவன், குறிப்பிட்ட மதிப்புள்ள பொன்னைக் கோவிலுக்குத் தானம் செய்து, அவர் நினைவுக்கறிகுறியாக விளக்கிடச் செய்தான்.[55]

நிருபதுங்கன் ஆட்சிக்காலத்தில் இத்தகைய செயல்கள் சில நடைபெற்றன. அவற்றுள் ஒன்று திருத்தவத் துறைச் சிவன்கோவில் கல்வெட்டுக் குறிக்கும் செய்தியாகும். பூதிகந்தனிடம் பொன்னைப்பெற்ற இடையாறு நாட்டு அவையார், அப்பொன்னுக்கு வட்டியாக ஆண்டு தோறும் நெல் அளந்து கொடுத்துச் சித்திரை விசுத்திருவிழாவை நடத்த உடன்பட்டனர். அப்பொன் பூதி கந்தனின் தாயார் செய்த செயல் ஒன்றைப் பாராட்டிக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதாகும்.[56]

‘பிள்ளைப்பாக்கக் கிழார்’ என்பவன் செய்த நற்செயல் ஒன்றின் நினைவிற்காக, அவன் தம்பியான அய்யாக்குட்டி யார் என்பவன் பிள்ளைப்பாக்கத்தில் இருந்த தனது நிலத்தில் ஒரு பகுதியை அவ்வூர்ச் சிவன் கோவிலுக்கு எழுதி வைத்தான்.[57]

இம்மூன்று சான்றுகளாலும், பல்லவர் காலத்தில் தனிப்பட்டவர் நினைவிற்காகவும் அவர் தம் மதிப்பிடத்தக்க செயலுக்காகவும் குறிப்பிட்ட தொகையை அல்லது நிலத்தைக் கோவிலுக் களித்து அறப்பணி செய்தல் மரபு என்பது நன்கு புலனாகிறது.

உருவச் சிலைகள்

பல்லவர் காலத்தில் உருவச் சிலைகள் செய்யப்பட்டன என்பதற்குக் கல்வெட்டுச் சான்று இல்லை எனினும், ஆதிவராகர் கோவிலில் உள்ள சிம்ம விஷ்ணு, மகேந்திரவர்மன் உருவச் சிலைகளையும், தந்திவர்மன் ஆட்சிமுதல் தோன்றிய வீரக்கற்களில் பொறிக்கப்பட்ட உருவச் சிலைகளையும் நோக்க, இவ்வேலை பல்லவர் காலத்திற் சிறப்புற்றதென்பதை நன்கு உணரலாம்.

வீரக் கற்கள்

பல்லவர் காலத்து வீரக்கற்கள் மீது தொல்காப்பியர் காலத்துப் பழக்கம் போலவே “பெயரும் பீடும் எழுதி” உருவமும் பொறித்தல் மரபு. ஆனால் இக்கற்கள் அனைத்தும் தந்திவர்மன் கால முதலே புறப்பட்டவை. என்னை? அவன் காலத்திற்றான் பல்லவப்பெருநாடு சீர்குலையத்தொடங்கியது. பல பக்கங்களிலும் எல்லையிற் சுருங்கத் தொடங்கி யது ஆதலால் என்க. யாண்டும் போர்களும் சிறு கலகங்களும் நடந்தன. இக்கற்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, செங்கற்பட்டுக் கோட்டங்களிற்றாம் கிடைக்கின்றன.

திருத்தவத்துறை (லால்குடி)யை அடுத்த சென்னி வாய்க்கால் என்ற இடத்திற்கு அருகில் வீரக் கல் ஒன்று உண்டு. அதில் ஒரு மறையவன் உருவம் அம்பைக் கழுத்திற் செருகுதல் போலப் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அடியில், “பாண அரசன் படையெடுப்பால் மடம் ஒன்று அழிந்தது. அதனைக் காக்க முயன்ற இம் மறையவனான சத்தி முற்ற தேவர் இறந்தான்,” என்பது பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூன்றாம் நந்திவர்மன் காலத்தது.[58]

கம்பவர்மன் ஆட்சி ஆண்டில் இரண்டு இடங்களில் வீரக்கற்கள் நடப்பெற்றன. ஒன்று ஒலக்கூரில் நடப்பெற்றது. ஒலக்கூரைப் பகைவர் தாக்கியபோது எதிர்த்து நின்ற வீரருள் மாந்திரிகள் ஒருவன். அவன் அப்பொழுது நடைபெற்ற போரில் இறந்தான் என்று கல்வெட்டுக் குறிக்கிறது. ஒலக்கூரைக் கம்பவர்மனே கைப்பற்ற எதிர்த்தான் போலும்![59]

கம்பவர்மனைத் தாக்க வந்த பிருதிவி கங்கராயருடன் உண்டான பூசலில் ‘வாணராயர்’ என்னும் தலைவன் ஒருவன் மாண்டான். அவனுக்கு வட ஆர்க்காடு கோட்டத்து மேல் பட்டியில் வீரக்கல் நடப்பெற்றதென்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[60]

சில சமயங்களில் வீரக்கல் நடாமல் இறந்தவர் நினைவுக்கு அறிகுறியாகக் கோவில்களில் விளக்கேற்றல் முதலிய பணிகட்காகப் பொருள் அளித்தலும் வழக்கமாக இருந்தது. மாடுபிடிச்சண்டையில் ‘விடை போற்பட்ட’[61] இருவர் நினைவாகப் பாண அரசன் ஒருவன் பிடாரி கோவிலுக்குப் பணம் அளித்தான் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[62] இது தந்திவர்மன் காலத்துச் செய்தியாகும்.

நிருபதுங்கன் காலத்து வீரக்கற்கள் இரண்டு ஆம்பூரில் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிலும் மேலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இறந்த வீரன் தன் இடக்கையில் வில்லும் வலக்கையில் வாளும் ஏந்தியுள்ளன். அவன் அம்புகள் தைத்த நிலையில் காண்கின்றான். அவன் தலை இரண்டு கவரிகட்கிடையே காண்கின்றது. இதன் குறிப்பு, அவன் வீரசுவர்க்கம் அடைந்தான் என்பதாகும். அவனுக்குப் பின்புறம் ஒரு கூடையில் பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு வீரற்கு எதிரில் விளக்கும் பின்புறம் பானை ஒன்றும் விளக்கு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இறந்தார்க்கு வைக்கும் வழிபாட்டுப்பொருள்கள் ஆகும். வீரர் இருவரும்அ அகளங்ககாடவராயன் பிள்ளையும் தமையன் மகனும் ஆவர்.[63]

நித்தார் நினைவுக் குறிகள்

நீத்தார்க்குக் கோவில் கட்டல் நாட்பட்ட வழக்கம் என்பதை விரக்கல் கொண்டும் கண்ணகி கோவில் கொண்டும் நன்கறியலாம். இங்ஙனம் கோவில் கட்டும் பழக்கம் பல்லவர் காலத்தும் இருந்தது. செங்கற்பட்டுக் கோட்டம் பொன்னேரிக் கூற்றத்தைச் சேர்ந்த சத்தியவேடு என்னும் சிற்றுளில் உள்ள ‘மதங்கப்பள்ளி’ இங்ஙனம் அமைந்ததே ஆகும். அஃது இன்று சிவன் கோவிலாக இருந்து வருகிறது. மதங்கன் பெரிய சிவனடியராக இருந்து இறந்தவர் போலும்.[64]

கம்பவர்மன் காலத்துப் பள்ளிப்படை ஒன்று உண்டு. அஃது இராசாதித்தன் என்ற தலைவன் தன் தந்தையான பிருதிவி கங்கராயன் என்பவன் இறந்த இடத்தில் எழுப்பிய சமாதி கொண்ட கோவிலாகும்; தம் அப்பனாரைப் பள்ளிப் படுத்த இடத்து ஈசராலயமும் அதீ தகரமும் (சமாதியும்?) எடுப்பித்துக் கண்டு செய்வித்தான் என்பது கல்வெட்டு.[65]


  1. Chingleput, Manual p.438.
  2. S.I.I Vol.IV Vaikuntaperumal Koil Inscription.
  3. இவன் பெரியபுராணம் கூறும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்று ஆராய்ச்சியர் கருதுகின்றனர். Vide Mysore Archaeological Annual Report 1925, pp-9.11
  4. S.I.I. Kailasanathar Temple Ins.
  5. Walater Elliet’s “Coins of South India’ Nos. 31 to 38; 65, 57.
  6. Dr. C.Minakshi’s “Administration and social Life under the Pallavas’ pp.42, 43, 44.
  7. அப்பர் தேவாரம், ஐந்தாந்திருமுறை ()
  8. S.I.I Vol. II p.357
  9. S.I.I. Vol, IV, No.135.
  10. Ep.Indica Vol.II, p.5.
  11. Dr.C.Minakshi’s “Administration & Social Life under the Pallavas, p.52.
  12. S.I.I.Vol.II. Page 361.
  13. C.K.Subramania Mudaliar’s “Sekkilar’ pp.68-72 (Madras University Lectures, 1930)
  14. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’ pp. 53-55.
  15. இறையனார் அகப்பொருளுக்கு ‘இன்ன உரைதான் சரி’ என்பதை உணர்த்தக் ‘காரணிகள்’ ஒருவன் வேண்டும் என்று இறைவனிடம் குறை இரந்த செய்தி களவியல் உரையிற் காண்க. எனவே ‘காரணிகள்’ பட்டயம் தீட்டுவதிலும், படிப்பதிலும் தேர்ந்தவன் என்பது தேற்றமாதல் காண்க.
  16. EP, Indica, Vol. XVIII, P.13,
  17. Ibid p.152. 370.
  18. Dr.C.Minakshi’s Administration and Social Life under the Pallavas” pp.68-69
  19. சம்பந்தர் தேவாரம் பக்.14-15. (கழகப் பதிப்புப்)
  20. S.I.I. Vol. II part, pp. 109, 110.
  21. R.Gopalan’s “Pallavas of Kanchi’ pp.154-156
  22. இந்த அமிர்த கணத்தார் ஆட்சி இருந்தனமயாற்றான் அப்பர் சமபந்த்ர், சுந்தரர் காலங்களில் கோவில்கள் உயர்நிலையில் இருந்தன. நாயன்மார்க்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அக்காலத்தில் கோவில்களில் ஆடல் - பாடல்கள், விழாக்கள் முதலியன குறைவின்றி நடைபெற்றன. சைவ சமயம் இசை, நடனம், சிற்பம், ஒவியம் முதலியன கொண்டு செவ்வனே வளர்ந்தது. இங்ஙனமே வைணவமும் நன்கு வளர்ந்தது.
  23. R.Gopalan’s “Pallavas of Kanchi’ pp.156-157.
  24. Srinivasachari’s History and the Institutions of the Pallavas’ p.23.
  25. S.I.I Vol II P.509.
  26. M.E.R. 17 of 1899.
  27. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’ p. 138.
  28. Dr.C.Minakshi’s “Administration and Social Life under Pallavas’ p. 145.
  29. EP. Indica Vol.XI, p.225.
  30. S.I.I. Vol.II .P.351.
  31. ‘கல்லால் நிழல்கீழ் அறங்கள் உரைத்த அம்மானே'- சுந்தரர் தேவாரம், - திருக்கச்சூர் ஆலக்கோவில் பதிகம். கல்லால் மரம் செங்கற்பட்டை அடுத்த செம்பாக்கம் மலையில் இருக்கிறது.
  32. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallava’s p. 151-153.
  33. உப்பெடுக்கும் உரிமை சாதவாகனர் ஆட்சியிலும் அரசாங்கத்தினிடமே இருந்து வந்தமை இங்கு அறியத் தக்கது.
    Dr.K.Gopalachari’s Early History of the Andhra Country p.115.
  34. இத்தகைய பல வரிகள் ஏறத்தாழக் கங்கநாட்டிலும் வசூலிக்கப்பட்டன. Vide M.VK.Rao’s “Ganges otTalakad’ pp.145-150.
  35. S.I.I. Vol.II, pp.525, 530.
  36. 17 of 1899.
  37. Gopalan’s “Pallavas of Kanchi’ p.149.
  38. இந்த ஏரிகள் பெருங்கிணறுகள், வாய்க்கால்கள் என்பவற்றிற் பல சோழர் காலத்தில் அப் பெயர்கள் கொண்டே இருந்தன என்பது சோழர் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.
    Vide the Author’s “Cholar Varalaru’, Part II.
  39. K.V.S. Iyer’s “Ancient Dekkhan,’ pp.368-370 392.
  40. கங்க நாட்டிலும் இப்பெயர்கள் உண்டு.
  41. இத்தகைய நீட்டல் அளவைகள் கங்க நாட்டில் வரிசைக்கோல், கங்ககோல், பெருந்த கோல், மர்குந்தி கோல், சச்சவி கோல் எனப் பலவாறு வழங்கப்பெற்றன. Vide “Gangas ofTalakad,’ P. 144.
  42. Dr.C.Minakshi’s “Administration and SocialLife under the Pallavas'
  43. Vide her “administration and Social Life under the Pallavas’, P89.
  44. மகேந்திர வர்மன் காலத்தவராகிய அப்பரும், நரசிம்மவர்மன் காலத்தவராகிய அப்பரும் சம்பந்தரும் மிழலை நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கத் திருவிழிமிழலையில் கோவில் கொண்டிருந்த சிவபிரானிடம் (கோவில் பண்டாரதத்திலிருந்து) பொற்காசுகள் பெற்று அடியார்க்கு உணவு வழங்கினர் என்னும் பெரியபுராண தேவாரச் செய்திகள் இங்குக் கருதற்பாலன. இங்ஙனம் காணப்பெறும் பெரியபுராண - தேவாரச் செய்திகள் பல, பல இடங்களில் பல்லவர் வரலாற்றுச் செய்திகளுடன் ஒன்றுபடல் காணத்தக்கது. பெரியபுராணமும், தேவாரப் பதிகங்களும் பல்லவர் வரலாறு காட்ட இலக்கியச் சான்றாக நின்று எத்துணைப் பேருதவி புரிகின்றன என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்;- Vide Appar Puranama SS. 235-261.

    Prof. J. Dubreuil’s “Pallavas,’ p.63.
  45. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.90.
  46. கங்க நாட்டில் அரைச்சுவரன் ‘பொன்’ எனப்பட்டது. Vide “Gangas of Talakad’ p.145.
  47. Ibid. p.92.
  48. ‘வாசி திரவே காசு நல்குவீர்’ என்னும் சம்பந்தர் பாடல் இங்கு ஆராய்ச்சிக்குரியது - திரு இருக்குக்குறள். பதிகம்: (12): 1.
  49. ‘திருவிழிழலையில் உள்ள இறைவனைப் பாட இறைவன் காசு கொடுத்தான்’ என்பது, ‘எல்லாம் இறைவன் திருவருளால் நடப்பன’ என்னும் அடியார் கொள்ளும் பொதுக்கொள்கை பற்றியதே என்பதை அறிஞர் உணர்வர்.

    பிற்காலச் சோரு காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கீழே காண்க.

    ‘கி.பி.1152இல் சோழநாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. ஆலங்குடி மக்கள் கோவில் பண்டாரத்திலிருந்து 101 கழஞ்சு நிறையுள்ள பொன் நகைகளும், 464 பலம் நிறையுள்ள வெள்ளிப் பொருள்களும் கடனாகப் பெற்று உயிர் வாழ்ந்தனர்’ என வரும் ஆலங்குடிக் கல்வெட்டின் கூற்று இங்குக் கவனிக்கற்பாலது.

    K.A.N. Sastry’s “Cholas, Vol.II, Part I, p.377.
  50. இதனைப் பாண்டிய நாட்டுப் பஞ்சவருனனையொடு (களவியலிற் கூறப்படுவது) ஒப்பிட்டுக் காண்க.களவியல் உரையின்கூற்றுப் பொய் என்று கூறினோர் பலராவர். ‘பொய்’ எனப்பட்டதெல்லாம் வரலாற்றால் ‘உண்மை’ ஆகுதல் கருதற்பாலது. இத்தகைய பஞ்சம் ஒன்று காஞ்சியில் உண்டானதென்று மணிமேகலை கூறல் காண்க. ‘மணிமேகலை அங்குச் சென்று பெருஞ்சோறு வழங்கினாள்’ என்பதும் மணிமேகலை குறிக்கிறது. அப் பஞ்சம் அக்காலத்தில் உண்டானதேன் இளங்கிள்ளி சோழ, பாண்டியரோடு காரியாற்றில் நடத்திய பெரும்போரே காரணமாகும் என்பது இங்கு உணரற்பாலது.
  51. Dr. C. Minakahi’s “Administration and Social Life under the Pallavas’, pp.304-305.
  52. “பல்லவற்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமான்” - சுந்தரர். “கூடாமன்னரைக் கூட்டத்து வென்ற கோட்புலி”
  53. கோட்புலி நாயனார் புராணம், செ.4-10
  54. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, pp.119,120 ‘பிற்காலச் சோழர் ஆட்சியில் பல பஞ்சங்கள் உண்டாயின. அவற்றுள் மூன்றாம் குலோத்துங்கன்ஆட்சியில் உண்டானது கொடியது; ஒரு காசுக்குக் கால்படி அரிசி விற்றது. இப்பஞ்சக் கொடுமையை நீக்கச் செல்வர் பலர் குளம் எடுத்தல், ஆற்றுக்குக் கரையிடுதல் முதலிய பணிகளில் மக்களைப் புகுத்திக்காசு கொடுத்து உதவினர்’ என்பது இங்கு நினைக்கத்தக்கது. K.A.N. Sastrys “The Cholas “Vol.II Part I, p.135.
  55. 283 of 1916
  56. 122 of 1929.
  57. 172 of 1730
  58. 144 of 1929.
  59. 357 of 1909. A.R.E. 1910, p.80
  60. 171 of 1921.
  61. ‘எய்போற் கிடந்தான் என் ஏறு’ - பு.வெ.மாலை.
  62. 283 of 1916.
  63. Ep. Ind. Volp.130
  64. K.V.S. Iyer’s “History of Ancient Dekkan’ pp. 384-385.
  65. 429 of 1902.