பல்லவர் வரலாறு/6. இடைக்காலப் பல்லவர் - (கி.பி. 340-575)

விக்கிமூலம் இலிருந்து
6. இடைக்காலப் பல்லவர்
(கி.பி. 340-575)

சுற்றுப்புற நாடுகள்

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களைக் கொண்டு அவர் வரலாறு அறிய முற்படு முன், அவர் காலத்தில் இருந்த சுற்றுப்புற நாடுகளைப் பற்றிய தெளிவு இருத்தல் இன்றியமையாதது ஆதலின், முதற்கண் அந்நாடுகளைப் பற்றி ஓரளவு அறிந்துகோடல்நலமாகும்.

விஷ்ணுகுண்டர் (கி.பி. 450-700)

கோதாவரிக்கு வடபாற்பட்ட நிலப்பகுதியை ஆண்டவர் விஷ்ணுகுண்டர் ஆவர். இவர்கள் வாகாடகருடன் பெண்வழித் தொடர்புடையவராக இருந்தனர். இவர்கள் நிலப்பகுதி பையப் பையச் சாளுக்கியர் கைப்பட்டது.[1]

சாலங்காயனர் (கி.பி. 320-620)

கோதாவரி, கிருஷ்னை யாறுகளுக்கு இடையில் இருந்து ஆண்டவர் சாலங்காயனர் எனப்பட்டனர். இவர்கள் தலை நகரம் வேங்கி என்பது. இவர்கள் நந்தி வழிபாட்டினர் (சாலங்காயன-நந்தி). இம் மரபரசருள் இரண்டாம் மன்னனான அத்திவர்மனே (கி.பி.345-370) சமுத்திர குப்தனை எதிர்த்த அரசருள் ஒருவன். இந்நாடு கிருஷ்ணைக்குத் தெற்கே பரவியிருந்தது. அந்தப் பகுதி பல்லவர் கைப்பட்டது. மற்றப் பகுதி சாளுக்கியர் கைப்பட்டு அழிவுற்றது.[2]

ஆனந்தர் (கி.பி. 500-600)

இக்குவாகர் ஆட்சியில் இருந்த குண்டூர்-கிஷ்ணைக் கோட்டங்களைச் சேர்ந்த நிலப்பகுதி பல்லவர் கைக்குமாறியது. பின் அப்பகுதி இடைக்காலப் பல்லவர் 5] கி.பி. 350-450 வரை ஆனந்தம் என்ற அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பின்னர் அப் பகுதி பல்லவர் ஆட்சிக்கே திரும்பி விட்டது.[3]

இக்காலப் பல்லவர் வடக்கிலும் வடமேற்கிலும் தெற்கிலும் ஓயாத போர்கள் செய்தன்ர் ஆதலின், முற்காலப் பல்லவர் நாடே இவர் காலத்தும் இருந்ததென்னலாம்

சூட்டு நாகர் (கி.மு. 250-350)

இவர் ஆந்திர சாதவாகனர்க்கு உறவினர்; இக்குவாகர்க்குப் பெண் கொடுத்தவர் கி.பி. 220இல் தனியாட்சி உண்டாக்கி ஆண்டவர். இவர் நாடு பம்பாய் மாகாணத்தின் தென்கோடிக் கோட்டங்களும் மைசூரின் வடபகுதியும் கடப்பை-அனந்தப்பூர்க் கோட்டங்களும் கொண்ட நிலப்பரப்பாகும். இது கிழக்கே திருப்பருப்பதத்தை எல்லையாகக் கொண்டது. ஏறக்குறைய கி.பி. 350 இல் சமுத்திர குப்தன் படையெடுத்துச் சென்றபின், வீரகூர்ச்சவர்மன் என்னும் பல்லவன் இவர்தம் பெண்ணை மணந்து குந்தள நாட்டையும் பெற்றான் என்று பொருள்படும் முறையில் பல்லவர் பட்டயம் எழுதப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் வைசயந்தி எனப்படும் வனவாசி ஆகும்.

கதம்பர் (கி.பி. 350-600)

ஏறத்தாழக் கி.பி. 350 இல் மயூரசன்மன் என்னும் வீரமறையவன் திருப்பருப்பதத்தைச் சேர்ந்த நாடுகளைக் கைப்பற்றிப் பின் சித்தூர், வடஆர்க்காட்டுக் கோட்டங்களை ஆண்ட பாண அரசரை அடிமைப்படுத்திப் பல்லவர் நாட்டு எல்லைப் புறத்தில் குழப்பம் உண்டாக்கிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அரசனாக இருந்த பல்லவன் மயூரசன்மனுடன் சந்து செய்து கொண்டு, அவனைத் தன் படைத் தலைவனாகவும் சிற்றரசனாகவும் ஏற்றுக் கொண்டான்; பின் மயூரசன்மன் நாளடைவில் குந்தள நாட்டிற்கே தனி அரசன் ஆனான். இவன் தன் நாட்டைப் பல வழிகளிலும் விரிவாக்கினான். இவன் மரபினர் கீழ்க்கண்டவராவர்.

மயூரசன்மன் (கி.பி. 350-375)
கங்க வர்மன் (கி.பி. 375-400)
பகீரதன் (கி.பி. 400-425)
இரகு காகுத்த வர்மன் (கி.பி. 425-450)
சாந்தி வர்மன் (கி.பி. 450-475)
மிருகேச வர்மன்(கி.பி. 475-500)
(கி.பி.500-525) இரவிவர்மன் சிவரதன் பானுவர்மன்
அரிவர்மன்.86 (கி. பி. 535-570)

அரிவர்மன்[4] (கி.பி. 535-570)

இக்கதம்பருள் உட்பிரிவுகள் சில உண்டு. மேற்பட்டியலிற் கண்ட காகுத்த வர்மனுக்கு மகனும் சாந்தி வர்மனுக்கு இளவலுமான கிருஷ்ணவர்மன் என்பவன் வழியினர் ஒரு பிரிவினர் ஆவர். இக் கிருஷ்ணவர்மன் பல்லவரோடு நடத்திய போரில் இறந்துவிட்டான். இவன் மகனான விஷ்ணுவர்மன் தன் பெரியப்பனான சாந்திவர்மன் அரசாட்சியில் தன்னைத் தர்ம மகாராசன் என்று ஒரு கல்வெட்டில் கூறிக்கொள்கிறான். எனவே, கிருஷ்ண வர்மன் மரபினர் குந்தள நாட்டின் ஒரு பகுதியைத் தனிப்பட்ட முறையில் ஆட்சி செய்தவராவர். காகுத்தவர்மன் மூன்று நாடுகட்கு அரசன் என்று தன்னைக் கூறிக் கொள்வதால் அவன் காலத்திலேயே குந்தள நாடு மூவகைக் கதம்பர் ஆட்சியில் இருந்ததென்பதை அறியலாம்.[5] ஆயினும் பிற்காலத்தில் இம் மரபினருக்குள் போர் மூண்டது. ‘இரவீவர்மன், கிருஷ்ணவர்மன் மரபைச்சேர்ந்த விஷ்ணுவர்மனைக் கொன்று, பல்லவனை முறியடித்தான்; பலாசிகாவைத் தனதாக்கிக் கொண்டான்’ என்று வரும் பட்டயச் செய்தியால் கிருஷ்ண வர்மன் மரபினர் பலாசிகாவைக் (இப்போதைய ஹல்சி) கோ நகரமாகக் கொண்டு குந்தள நாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்தவர் என்பது விளங்கும். மகாராசன் குமாரவர்மன், அவன் மகன் மாந்தாத்ரி வர்மன், மாது வர்மன், தாமோதர வர்மன் முதலிய கதம்பர் மரபு ஒன்றும் குந்தள நாட்டில் இருந்ததாகத் தெரிகிறது. இவருள் வனவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சாந்தி வர்மன் மரபினர்க்கும் இடைக்காலப் பல்லவர்க்குமே ஓயாத போராட்டங்கள் நடைபெற்றன. கதம்பர் மரபினருக்குள் போர்களும் கலகங்களும் நடந்தபோதும்,[6] கதம்பர் தமக்குத் தெற்கே இருந்த கங்கரை வெல்ல முயன்றபோதும், இவ் விருதிறத்தாரும் பல்லவர் உதவியை நாடினர். அப்பொழுது பல்லவர் தலையிட்டனர்.[7] மேலும், கதம்பப் பேரரசைத் தமது நாட்டிற்கு மேற்கே வளர விடுதல் பல்லவர் நன்மைக்கு ஏற்றதன்று. ஆதலின், பல்லவர் அடிக்கடி கதம்பருடன் இந்த இடைக்காலத்தில் தொடர்ந்து போரிட வேண்டியவர் ஆயினர்.

கதம்பர் சிங்க இலச்சினை, குரங்குக் கொடி, ‘பெர்மத்தி’ என்னும் வாச்சியம் முதலியவற்றை உடையவர். அவர் அனைவரும் தம்மைத் ‘தர்ம மகாராசாதிராசர்’ என்றே கூறிக்கொண்டனர். அவர் குல தெய்வம் வனவாசியில் உள்ள ‘மதுகேசா’ ஆவர். கதம்ப அரசர் பெரும்பாலும் சமணர்க்கே மிகுதியாகத் தானம் அளித்துள்ளனர்.[8]

கங்கர்

காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டவர் கங்கர் என்பவர். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்கள் சேர நாட்டிற்கு வடக்கே இருந்தனர். பல்லவர் பேரரசின் போது அதற்கு அடங்கி இருந்தனர்; கதம்பர் படை யெடுத்த போதெல்லாம் பல்லவர் துணையைப் பெற்று வாழ்ந்தனர். இவர்களில் முதல்வனான மாதவன் காலம் கி.பி. 350 என்னலாம்.[9]

கங்க அரசர் நாக மரபினர்; நாகமரபைச் சேர்ந்த பெண்களை மணந்தனர். அரவக் கொடியையே கொடியாகப் பெற்றவர்.[10]

தமிழகத்தரசர்

இந்த இடைக்காலத்தில் பல்லவ நாட்டிற்குத் தெற்கே வன்மை மிகுந்து இருந்தவர் களப்பிரர் ஆவர். அம் மரபினரே சோணாட்டின் பெரும் பகுதியையும் பாண்டிய நாட்டையும் ஏறக்குறையக் கி.பி. 250-550 வரை ஆண்டு வந்தனர். இக் காலத்தில் சோழரும் பாண்டியரும் சிற்றரசராக இருந்து காலம் கழித்தனர்; எனினும், பல்லவரை எதிர்த்த பொழுதெல்லாம் களப்பிரரோடு சேர்ந்தே போரிட்டனர். எனவே, இத் தமிழ் வேந்தர்கள் இடைக்காலப் பல்லவர்க்கு ஓயாத துன்பத்தை விளைத்தே வந்தனர். இவரைப் பற்றிய விரிவு முன்னரே தரப்பட்டுள்ள தன்றோ?

அகச்சான்றுகள்

இடைக்காலப் பல்லவரைப் பற்றி அறியப் பெருந்துணை புரிவன வடமொழியில் வரையப்பட்ட செப்பேடுகளும் இரண்டொரு கல்வெட்டுகளுமே ஆகும். வடமொழி வளர்ச்சியில் நுண்ணறிவுடையார் இவற்றை ஆராய்ந்து இவற்றின் காலம் ஏறக்குறைய கி.பி. 340-575 எனக் கூறியுள்ளனர். செப்பேடுகள் பல இடங்களிலிருந்து பல்லவ அரசர்களால் விடப்பட்டுள்ளன. அவற்றில் பல முதற்காலப் பல்லவரைப் போலக் காஞ்சிபுரத்திலிருந்து வெளியிட்டதாகத் தெரியவில்லை. அவையாவும் தெலுங்க நாட்டில் உள்ள ‘தாம்ராப, பலககட, மேன்மாதுர, தசனபுரம், பிகீரா, ஒங்கோடு, தர்சி. இராய கோட்டம், சந்தலூர், உதயேந்திரம் உருவப்பள்ளி,’ என்னும் இடங்களிலிருந்து வெளியிடப்பட்டவை ஆகும். கல்வெட்டுகள் வாயலூர், அமராவதி என்னும் இடங்களிலிருந்து வெளியிடப் பட்டவை ஆகும். இப்பட்டயங்களும் கல்வெட்டுகளும் பிராக்ருதப் பட்டயங்களைப் போலவே அரசன் பட்டமேற்ற ஆண்டையே குறிக்கின்றன. ஆயின் பல்லவ அரசர் பலர் பெயர்களைக் குறிக்கும் இப் பட்டயங்கள் அவர்கள் முறையைக் கூறுவதில்லை. இதனால், அரசர் முறை வைப்பு உள்ளவாறு அறிதல் கூடவில்லை. இன்ன அரசன் இன்ன காலத்தவன் என்றும் உறுதியாக உரைக்க இயலவில்லை.

புறச்சான்றுகள்

(1) கங்கர் கல்வெட்டு ஆயின், இஃதே இடைக்காலத்தில் பல்லவ நாட்டை அடுத்த வேற்று நாட்டரசர் பட்டயங்கள் சிலவற்றால், இவ்விடைக்காலப் பல்லவர் சிலர் ஆண்ட காலங்களைச் சற்றேறக்குறைய ஒருவாறு அறிய முடிகின்றது. மேலைக்கங்க அரசனான இரண்டாம் மாதவன் வெளியிட்ட பெனுகொண்டா-பட்டயங்களில் ‘கங்க அரசனான தன் தந்தை அரிவர்மனையும் தன்னையும் கங்க நாட்டுப் பட்டயத்தில் ஏற்றிய பெருமை முறையே பல்லவ அரசரான சிம்மவர்மன் கந்தவர்மன் என்பவரையே சாரும்’ என்று குறித்துள்ளான். இதனால் மேற் கூறப்பட்ட கங்க அரசர் காலத்தவர் சிம்மவர்மன், கந்தவர்மன், என்னும் பல்லவ அரசர் என்பது எளிதிற் புலனாகின்றது. இக் கங்கர் பட்டயங்களை நன்கு சோதித்த டாக்டர் ப்ளிட் (Fleet) என்பார், ‘பல்லவர் தயவால் பட்டம் பெற்ற கங்க அரசர் காலம் ஏறக்குறையக் கி.பி. 475 என்னலாம்’ என்று முடிவு கூறியுள்ளார்.[11]

(2) லோகவிபாகம், (3) அவந்தி சுந்தரி சுதா. இவற்றைப் பற்றி இரண்டாம் பிரிவிற் கூறப்பட்டுள்ளது, ஆண்டுக் காண்க.

(4) அல்லகாபாத் கல்வெட்டு: வட இந்தியாவில் பெரும் புகழுடன் வாழ்ந்த சமுத்திர குப்தன் என்னும் பேரரசன் ஏறக் குறையக் கி.பி. 350இல் டெக்கானை நோக்கிப் படையெடுத்து வந்தான். அவனைக் கிருஷ்ணை, கோதாவரி என்னும் யாறுகளைச் சார்ந்த நாடுகளில் இருந்த அரசர் பலர் ஒன்று சேர்ந்து எதிர்த்தனர். அவன் அவர்களை வென்று முடிவில் காஞ்சி அரசனாக இருந்த விஷ்ணுகோபன் என்பவனையும் வென்றதாக அவனது (அல்லகாபாத்தில் உள்ள) கல்வெட்டுக் கூறுகின்றது.

இதுகாறும் கண்ட வெளி அரசர் பட்டயங்களாலும் வடமொழி நூல்களாலும் கீழ்வரும் செய்திகளை ஒருவாறு அறியலாம்:

(1) விஷ்ணு கோபன் காலம் ஏறக்குறையக் கி.பி. 350

(2) சிம்மவர்மனும் கந்தவர்மனும் கங்கரை அரசராக்கிய காலம், கி.பி 436-475

(3) பிற்காலப் பல்லவருள் முதல்வனான சிம்மவிஷ்ணுவின் காலம் கி.பி. (575-615)

இடைக்காலப் பல்லவர் பட்டயங்களை நன்கு ஆராய்ந்த அறிஞர் கீழ்வருமாறு அரசமுறை வகுத்துளர்.

குமார விஷ்ணு I
கந்தவர்மன் I
வீரகூர்ச்சவர்மன்
கந்தவர்மன் II
(இவன் பிள்ளைகள் மூவர்)
சிம்மவர்மன் இளவரசன்
விஷ்ணுகோபன்
குமாரவிஷ்ணு III
கந்தவர்மன் II
நந்திவர்மன்
சிம்மவர்மன் II
விஷ்ணுகோபவர்மன்
புத்தவர்மன்
குமாரவிஷ்ணு III
சிம்மவிஷ்ணு

(1) களடர்த்திரி என்பவனைக் ‘குடும்பத் தலைமணி’ என்றும், ‘இலக்குமி கணவன்’ என்றும் பட்டயங்கள் குறித்தலால், கிருஷ்ண சாஸ்திரியார் கருத்துப்படி இவனுக்குக் ‘குமாரவிஷ்ணு’ என்னும் பெயர் இருந்தது என்று கோடலில் தவறில்லை. மேலும் இவனே சமுத்திரகுப்தனை எதிர்த்த விஷ்ணுகோபனாக இருக்கலாம்; ‘இருத்தல் இயலாது’ என்று மறுக்கக் காரணம் ஒன்றும் இல்லை. முற்காலப் பல்லவருள் கடைசி அரசன் புத்தியங்குரன். இடைக்காலப் பல்லவருள் தலைமணி போன்றவன் களபர்த்திரி அல்லது குமார விஷ்ணு. இவ்விருவருக்கும் இடையில் வேறு அரசர் ஆள இடமில்லை.[12] இந்தக் குமார விஷ்ணுவின் ஆட்சிக்காலமும் சமுத்திர குப்தன் படையெடுப்பின் காலமும் ஒத்திருத்தலின், குமார விஷ்ணுவும் அல்லகாபாத் கல்வெட்டில் குறிக்கப்பட்ட விஷ்ணுகோபனும் ஒருவனே எனத் துணியலாம். எனவே, முதலாம் குமாரவிஷ்ணு (விஷ்ணுகோபன்) சமுத்திரகுப்தன்காலத்தில் காஞ்சி யரசனாக இருந்தான் என்பது தெளிவு. ஆகவே, அவனது காலம் ஏறக்குறையக் கி.பி. 340-350 எனக் கூறலாம்.

(2) லோகவிபாக நூலின் கணக்குப்படி சிம்மவர்மன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436 ஆகின்றது. அவனையும் (அவன் மகனான) கந்தவர்மன் என்னும் மற்றொரு பல்லவனையும் அரிவர்மனும் இரண்டாம் மாதவனும் பட்டமேறஉதவி புரிந்தவர் எனக் கி.பி. 475இல் போந்த இரண்டாம் மாதவனது பட்டயம் கூறலால், அங்ஙனம் அவர்களைப் பட்டத்தில் ஏற்றியவர் நமது பல்லவர் பட்டியலில் உள்ளபடி முதலாம் சிம்மவர்மனும் அவன் மகனான மூன்றாம் கந்தவர்மனுமே ஆவர். எனவே, கங்கர் பட்டயம் கண்ட அரசனும் அரிவர்மனும் சிம்மவர்மன் பட்டம் பெற்ற கி.பி. 435 முதல் பட்டயத் தோற்றம் வரை (கி.பி. 475 வரை) ஆண்டிருக்கலாம். அஃதாவது, சிம்மவர்மன், அவன் மகன் கந்தவர்மன் ஆகிய இருவரும் கி.பி. 436 முதல் 475 வரை ஆட்சிபுரிந்திருக்கலாம் எனக்கோடலில் தவறில்லை.[13]

கங்கர் வரலாற்றை ஒருவாறு ஆராய்ச்சி செய்த ஆசிரியர் ஒருவர் கங்கர் பட்டயங்களைச் சோதித்து, (1) அரிவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 436-460 என்றும், (2) இரண்டாம் மாதவன் காலம் கி.பி. 460-500 என்றும் குறித்துள்ளார்.[14] இதுபொருந்துவதாயின், பல்லவ வேந்தருள் (1) முதலாம் சிம்மவர்மன் காலம் கி.பி. 436-460 எனவும், (2) மூன்றாம் கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 460-475 எனவும் கொள்ளலாம்.

(3) சிம்மவர்மன் பட்டம் பெற்றது கி.பி. 436 எனின், அவன் தந்தையான கந்தவர்மன் 2 ஆட்சி அதே ஆண்டில் முடிவுற்றதாகும். அவனது 33ஆம் ஆட்சி ஆண்டுப் பட்டயம் இருத்தலை நோக்க[15] அவன் ஏறக்குறைய 36 ஆண்டுகள் ஆண்டதாகக் கொள்ளலாம். அங்ஙனமாயின், அவனது ஆட்சிக்காலம் கி.பி.400-435 என்றாகிறது.

(4) முதலாம் குமார விஷ்ணுவின் காலம் ஏறக்குறையக் கி.பி. 341-350 எனக் கொண்டதாலும், இரண்டாம் கந்தவர்மன் காலம் கி.பி. 400-436 எனக் கொண்டதாலும், இவ்விருவர்க்கும் இடைப்பட்ட முதலாம் கந்தவர்மன், வீரவர்மன் என்பவர் ஆட்சிக்காலம் 50 ஆண்டுகள் ஆகின்றது. எனவே, வரலாற்றாசிரியர் மதிப்பிடும் 25 வருட ஆட்சி ஒவ்வொருவர்க்கும் கணக்காகிறது. அஃதாவது, முதலாம் கந்தவர்மன் காலம் கி.பி. 350-375 வீரவர்மன் காலம் கி.பி. 375-400

(5) “விஷ்ணுகோபன் ஈறாக அரசர் பலர் காலமான பின்னர்ப் பல்லவர் குடும்பத்தில் நந்திவர்மன் பிறந்தான். அவன் சிவனருளால் நாக அரசனை அடக்கினான்,’ என்று வேலூர்ப் பாளையப் பட்டயங்கள் கூறலால், விஷ்ணுகோபன் உள்ளிட்ட அரசர் பலருக்குப் பிற்பட்டவன் நந்திவர்மன் 1 என்பது மட்டுமே தெரிகிறது; காலம் உறுதியாகக் கூறக்கூடவில்லை. நமது பட்டியலில் விஷ்ணுகோபன் மகன் மூன்றாம் சிம்மவர்மன் குறிக்கப்பட்டுள்ளான். அவன் மகனே பிற்காலப் பல்லவர் முதல்வனான சிம்ம விஷ்ணு என்பவன். இவன் காலம் கி.பி. 575-615 என ஆராய்ச்சியாளர் கூறுவர். எனவே, நந்திவர்மனும் அவனுக்குப் பிற்பட்ட மூன்றாம் சிம்மவர்மனும் ஏறக்குறையக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இடைப்பட்டவர் (கி.பி. 525-575) ஆவர். ஏனையோர் அனைவரும் ஏறத்தாழக் கி.பி. 475க்கும் 525க்கும் இடைப்பட்டவர் ஆகலாம்.

பல்லவர் வரலாற்றில் துன்பம் தரத்தக்க பகுதி இஃதொன்றே ஆகும். இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர்-அவரவர் வழிவந்தவர் பலர்-இவருள் இவருக்குப் பின் இவர் பட்டம் பெற்றனர்-அக்காலம் இன்னது என வரையறுத்துக் கூற இயலவில்லை. இதனாற்றான், ஆராய்ச்சியாளர் பல குழப்பமான முடிவுகளை வெளியிட்டுத் தம்மைக் குழப்பிக் கொண்டதோடு படிப்பவரையும் குழம்பி விட்டனர். பல்லவர் பட்டியலை வகுத்தவர் பலர். அவற்றிற்குக் காரணங் கூறியவர் பலர். அவற்றுள் ஒன்றேனும் முற்றத் தெளிவு தாராமையின், ஈண்டு இடம் பெற்றிலது. அவர்கள் ஒருமுறை பற்றி அரசர் முறைவைப்பே முயன்று முடிக்கின்றனர்; பின்னர்ச் சில உண்மைகளைத் தக்க காரணம் கூறி வற்புறுத்த முயல்கையில் அம் முறைவைப்புத்தவறாகின்றது. அத்தவற்றை மறைக்கப்பட்டயத்தில் இந்தத் தொடர் முன்னதாக இருக்க வேண்டும், இவன் அவன் பாட்டனாக இருக்க வேண்டும்..... இவன் 40 ஆண்டுகட்கு மேலும் அரசாண்டிருக்கலாம் அன்றோ? என்றெல்லாம் கூறி இடர்ப்படுகின்றனர். இவ்வளவு குழப்பத்திற்கும் இவ்விடைக்காலப் பல்லவர் பரம்பரை இடம் தருகின்றது.

இரண்டாம் கந்தவர்மன் மக்கள் மூவர் பரம்பரையினரும் ஒரே பட்டத்தை அடுத்தடுத்துப் பெற முடியுமா? அங்ஙனம் பெற்றனரா? என்பது தெளிவாகவில்லை. ஆயின், ‘விஷ்ணு கோபனுக்குப் பின் அவன் மகன் பட்டம் பெறாமல் நந்திவர்மன் பட்டம் பெற்றான் என்பதால் பரம்பரை மாறி பங்காளிகள் மாறிமாறித் தேவைக் கேற்றபடி அரசு கட்டில் ஏறினர் எனக்கோடலே பொருந்துவதாகும். நந்தி வர்மனுக்குப் பிறகு சிம்ம விஷ்ணுவின் (கி.பி. 575-615) தந்தையான மூன்றாம் சிம்ம வர்மன் பட்டம் பெற்றான் என்பது தெரிகிறது.

(6) இளவரசன் - விஷ்ணுகோப வர்மன் பல்லவர் மாகாணம் ஒன்றைப் பிரதிநிதியாக இருந்து ஆண்டிருக்கலாம். அதன் தலைநகரம் பலக்கடவாக இருக்கலாம். அதிலிருந்து தான் உருவப்பள்ளி - பட்டயம் வெளியிடப்பட்டது.[16]

இதுகாறும் கூறி வந்த காலவரையை (நாம் பார்த்த அளவு) அரசர் பெயருடன் இங்குக் குறித்து மேற்சொல்வோம்:

குமார விஷ்ணு I (கி. பி. 340-350)
கந்த வர்மன் I (கி. பி. 350-375)
வீரகூர்ச்ச வர்மன் கி. பி. 375-400)
கந்தர் வர்மன் I (கி.பி. 400-436)
(இவன் மக்கள் மூவர்)
சிம்ம வர்மன் I
(கி.பி. 436-450)
இளவரசன் விஷ்ணுகோபன் குமார விஷ்ணு II
கந்த வர்மன் III
(கி.பி. 450-475)
சிம்ம வர்மன் II புத்த வர்மன்
நந்தி வர்மன் I
(கி.பி. 525-530)
விஷ்ணுகோபன் குமார விஷ்ணு III
சிம்மவர்மன் III
(கி.பி. 550-575)
சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615)

குழப்பமான காலம்

இத்தகைய குழப்பங்கட்கெல்லாம் என்ன காரணம்? “இந்தக்காலம் பல்லவர் வரலாற்றில் குழப்பமான காலமாகும். பல்லவர் வடக்கிலும் தெற்கிலும் போரிட வேண்டியவர் ஆயினர். உள் நாட்டிலும் குழப்பம் இருந்திருத்தல் வேண்டும். இந்தக் காலத்திலேதான் கதம்பர் ஆட்சி தோன்றியது. கங்கர் ஒருபுறம் தலையெடுக்கலாயினர். தமிழகத்தில் நிலையாக இருந்த முடியுடைச் சோழ பாண்டியரை விரட்டி நாட்டைக் கைப்பற்றிக் பல்லவரையும் எதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்த களப்பிரர் குழப்பத்தால் இடைக்காலப் பல்லவர் தென்பகுதியில் அல்லலுற்றனர். மேலும், சமுத்திர குப்தன் படையெடுப்பால் பல்லவர் நாடும் அரசும் குழப்பமுற்றன.[17] அந்த இழிநிலையில் கதம்பர் பல்லவரைத்தாக்கிப்போர் விளைக்கலாயினர்.[18]

பலவகைப் போர்கள்

இந்தக் குழப்பமான இடைக்காலத்தில் (கி.பி. 340-575) நடந்த போர்கள் பல போரிட்ட அரசுகள் பல. இவை ஏறத்தாழக் காலமுறைப் படுத்தி விளகமாக இங்கு (முதன் முறையாக)த் தரப்படுகின்றன.

சமுத்திர குப்தன் படையெடுப்புக்கு ஆளானவருள், காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் ஒருவன். அவன் குப்தனிடம் போரிட்டுத் தோற்றான் என்பதில் ஐயமில்லை. அந்த அமயத்திற்றான் பல்லவனுடன் போரிட்டு மயூரசன்மன் குந்தன அரசை ஏற்படுத்தினான்.[19]

வரகாடகர் போர்

மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825-850) வெளியிட்ட வேலூர் பாளையப் பட்டயத்தில், கந்த சிஷ்யன் இருபிறப்பாளர் தம் கடிகாவை (கல்லூரியைச்) சத்தியசேனன் என்ற அரசனிடமிருந்து மீட்டான்’ என்னும் செய்தி காணப்படுகிறது. அதே பட்டயத்தில் மேற்சொன்னதை அடுத்தே, ‘அவனுக்குப்பின் வந்த குமார விஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ என்பது குறிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்காலத்தில் பல்லவரோடு மாறுபட்ட சுற்றுப்புற அரசருள் ‘சத்தியசேனன்’ என்ற பெயருடன் எவனும் இருந்ததில்லை. இதைச் சொன்ன வேலூர் பாளையப் பட்டயமே பின்னர்ச் சோழர் படைகளைப் பெயரிட்டுக் குறிக்கிறது அங்ஙனம் சோழரை அறிந்திருந்த பிற்காலப் பல்லவர் (பட்டயம் வெளியிட்டவர்) சத்தியசேனன் இன்னவன் எனக் கூறாததையும், குமாரவிஷ்ணு காஞ்சியை இன்னவர் கையிலிருந்து மீட்டான். என்பதைத் தெளிவாகக் கூறாமையையும் நோக்க, இச் சத்தியசேனன் என்பவன் ‘முற்றும் புதியவன்-வெளிநாட்டான்’ எனக் கோடலில் தவறில்லை. அங்ஙனமாயின், இவன் யாவன்?

வரகாடகர் படையெடுப்பு(?)

சமுத்திரகுப்தன் படையெடுப்பால் வலியிழந்த ஆந்திர நாட்டு அரசரை வென்று, வாகாடர் என்ற அரசு மரபினர் ஆந்திரப் பெருநாட்டின் வடபகுதியைக் கவர்ந்தனர். அவருள் ஒருவனான முதலாம் பிருதிவிசேனன் (கி.பி. 350-390) என்பவன் தெற்கு நோக்கிப் படையெடுத்தான் கதம்ப அரசனை (கங்கவர்மனை)ப் போரில் முறியடித்தான்.[20] இப் படையெடுப்பு ஏறத்தாழக் கி.பி. 350-360 இல் நடந்திருக்கலாம்.[21] இந்தப் பிருதிவிசேனனே கதம்பரை வென்ற பிறகு, அணித்திருந்த பல்லவரையும் தாக்கிக் காஞ்சியைக் கைப்பற்றி இருக்கலாம்; தன் இளவரசன் அல்லது தானைத்தலைவனான ‘சத்தியசேனன்’ என்பவனைக் காஞ்சிக்கு அரசனாக்கி மீண்டிருக்கலாம்; காஞ்சியும் அதற்கு வடபாற்பட்ட நிலப்பகுதியும் சிறிது காலம் சத்தியசேனன் ஆட்சியில் இருந்திருக்கலாம். அக்காலத்தில் நமது பழைய ஆந்திர பதத்திற்கு ஓடிவிட்ட பல்லவர் வழிவந்த கந்தவர்மன் தக்க படையுடன் வந்து, முதலில் இருபிறப்பாளர் கடிகையை (கல்லூரியை)க்கைப்பற்றி இருக்கலாம்.

‘கடிகா’ என்பது காஞ்சி அன்று

‘கடிகா’ என்பது கல்லூரியையும் அஃது ஊரையுமே குறிக்கும். அது, (காஞ்சியில் கல்லூரி இருப்பினும்) காஞ்சியைக் குறிக்காது. காஞ்சி ‘பல்லவனாம்புரீ’ என்று தெளிவாகக் கதம்பரது தாள குண்டாக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது; ‘மயூரசர்மன் பல்லவனாமபுரீ (காஞ்சி) அடைந்து கடிகாவில் சேர்ந்தனன்’ என்று தெளிவுற அதே கல்வெட்டுக் குறித்துள்ளது. ஆதலின், ‘கடிகா’ என்று வேலூர் பாளையக் கல்வெட்டில் காணப்படுவதும், இரண்டாம் கந்தவர்மனால் கைப்பற்றப் பட்டதும் காஞ்சி அன்று; மேலும், அவனுக்குப் பின்வந்த அவன் மகனான ‘குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றினான்’ எனவரும் கல்வெட்டுத் தொடரும் இம்முடிபிற்கு அரண் செய்தல் காண்க.

‘கடிகா’ என்பது யாது?

வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ எனத் தனித்து வந்திருத் தலால், இது வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் பாணபுரத்திற்கு ஏழு கல் தொலைவில் உள்ள கடிகசாலம் எனப்படும் சோழசிங்கபுரமே ஆகும். இதனைக் ‘கடிகை’ என்றே திருமங்கையாழ்வார் குறித்துள்ளார். வடமொழிச் சொல்லான ‘சீதா’ என்பது தமிழில் ‘சீதை’ என வருதல் போலக் ‘கடிகா’ என்னும் வடசொல் தமிழில் ‘கடிகை’ எனப்பட்டது. வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள திருவல்லம் கல்வெட்டு ஒன்று (இரண்டாம் நந்திவர்மன் காலத்தது) இந்த இடத்தில் (கடிகாசலத்தில்) இருந்த கடிகையையே குறித்தலைக் காணலாம். இங்குச் சிறந்த பெருமாள் கோவில் இருக்கிறது. இங்கு வைணவர்கென்று ஒரு கல்லூரி (கடிகா) இருந்திருத்தல் இயல்பே. இக் கடிகாவை இரண்டாம் நந்திவர்மன் ஆதரித்தான் என்பது தெரிகிறது.[22] இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் ‘கடிகா’ என்றது கடிகாசலத்தைக் குறித்ததெனின், இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் காலத்து வேலூர் பாளையப் பட்டயத்தில் ‘கடிகா’ என்ற சொல் கடிகாசலத்தையே குறித்ததாதல் வேண்டுமென்றோ?

முடிவு

கி.மு. 350 முதல் 400க்குள் உண்டான இச் செயல்கள் (இரண்டாம் கந்தவர்மன் கடிகாவைக் கைப்பற்றியதும் குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பறியதும்) கதம்பர் கல்வெட்டு களிற் காணப்படா மையாலும், வேறு எந்தக் கல்வெட்டுகளிலும் நூல்களிலும் காணப் படாமையாலும், இக் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் வாகாடரை விரட்டநடந்தனவாகக் கோடலே பொருத்தமாகும்.

வாகாடகர்பால் நாட்டை இழந்த பல்லவன் (வீரகூர்ச்சவர்மன்?) சூட்டு நாகருடன் உறவு கொண்டான். ‘பெண்ணையும் அரச நிலையையும் அடைந்தான் அவனால் வளர்க்கப்பெற்ற இரண்டாம் கந்தவர்மன் தொண்டை நாட்டைக் கைப்பற்ற விழைந்தான்; கடிகாசலம் வரை இருந்த தொண்டைநாட்டுப் பகுதியையே கைப்பற்ற முடிந்தது. அவற்றிற்குப்பின் அவன் மக்கள் மூவருள் ஒருவானன குமாரவிஷ்ணு மேலும் முயன்று காஞ்சியைக் கைப்பற்றி வெற்றிகொண்டான். இங்ஙனம் காஞ்சியில் மீட்டும் பல்லவர் அரசு நிலைபெற்ற பின்னரே, இக் குமார விஷ்ணு மகனான புத்தவர்மன் சோழரையும் வென்றான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது.

வேலூர் பாளையப் பட்டயம் சோழர் என்றும் கதம்பர் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு, சத்தியசேனன் இன்னவன் என்று குறியாது விடுத்தமையும், குமாரவிஷ்ணு இன்னவரிடமிருந்து காஞ்சியை மீட்டான் என்பதைக் குறியாமையும் நோக்கிச் சிந்திப்பார்க்கு, நாம் மேலே விளக்கிக் கூறிய அனைத்தும் பொருத்தமாகக் காணப்படும்.[23]

திருக்கழுக்குன்றம்-கல்வெட்டு

‘கந்தசிஷ்யன் என்ற இரண்டாம் கந்தவர்மன் திருக்கழுக் குன்றத்துச்சிவன் கோவிலுக்கு நிபந்தம் விட்டிருந்தான்; அது மீட்டும் முதல் நரசிம்மவர்மன்காலத்தில் புதுப்பிக்கப்பட்டது என்று இராசராச சோழன் கல்வெட்டுக் குறித்தலால்,[24] திருக்கழுக்குன்றம் முதல் கடிகாசலம் வரை இருந்த நிலப்பகுதி இவன் கையில் இருந்தது என்பதை அறியலாம். இவன் இங்ஙனம் காஞ்சிக்கு அண்மை (ஏறத்தாழ 56 கி.மீ தொலைவு) வரையுள்ள நாட்டைப் பிடித்தமை யாற்றான், குமார விஷ்ணு எளிதிற் காஞ்சியைக் கைப்பற்ற முடிந்தது போலும்!

இதுகாறும் கூறியவை பொருந்துமாயின், பல்லவர் காஞ்சியை மீட்க வாகாடகருடன் இருமுறை போர் செய்தனர் என்பது கோடல் தகும்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டினான நரசிம்மவர்மன் மேலைச் சாளுக்கியரை வென்று, அவர்தம் தலைநகரை அழித்துப் பதின்மூன்று ஆண்டுகள் வசப்படுத்தி இருந்தான்[25] என்பதை நோக்க-அவனுக்குப் பின் வந்தவருள் ஒருவனான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில், சாளுக்கிய-இரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் அங்குத் தங்கி இருந்தான்[26] என்பதை நோக்க-இரண்டாம் கந்தவர்மனுக்கு முன்னும் இரண்டாம் குமார விஷ்ணுவுக்கு முன்னும் (சில ஆண்டுகளேனும்) காஞ்சிமாநகரம் பல்லவர் வசமின்றிப் பகைவர் ஆட்சியில் இருந்திருநத்தல் வேண்டும் என்பது நன்கு தெளிவாதல் கூடும்.

“ஏறக்குறைய கி.பி. 350 இல் வடக்கே சமுத்திரகுப்தன் படையெடுப்பால் அல்லது கதம்பர் துன்பத்தால் காஞ்சியைச் சுற்றியுள்ள தம் நாட்டைவிட்டுப் பல்லவர் ஆந்திர நாட்டிற்கு விரட்டப்பட்டருக்கலாம். குமார விஷ்ணு என்னும் பல்லவ அரசன் (காஞ்சியை மீட்டவன்) வரை ஒன்பதின்மர் ‘பல்லவப் பேரரசர்’ என்றும் அறப் பேரரசர் என்றும் கூறப்பட்டுள்ளார்.” என்று சிறந்த ஆராய்ச்சி அறிஞரான கிருஷ்ன சாத்திரியார் கூறுதல் காண்க.[27]

சாதவாகனப் பேரரசின் தென்மேற்குப் பகுதியை ஆண்டிருந்த ‘சூட்டு நாகர் மகளை முதலாம் கந்தர்வர்மன் மகனான வீரவர்மன் மணந்தான் அம்மணவன்மையால் நாட்டைப் பெற்றான்’[28] என்று பல்லவர் பட்டயம் ஒன்று கூறலாலும், அவன் மகனான இரண்டாம் கந்தர்வர் மனது ஓங்கோட்டுப் பட்டயம், ‘வீரவர்மன் பல போர்களில் வெற்றி கண்டான்’ என்று கூறலாலும், அக் காலத்தில் (கி.பி. 375-400) காஞ்சியும் அதனைச் சார்ந்த நாடும் வாகாடகர் மேற்பார்வையில் இருந்ததாலும் (?) சூட்டுநாகர் துணையைக் கொண்டு வாகாடகரை எதிர்த்து ஓரளவு நிலப்பகுதியைக் கைக்கொண்டிருக்கலாம் என்பது தெளிவாகிறது. இந்த வீரர்கள் சூட்டுநாகர் மகளை மணந்ததால் அவர் தம் நாட்டைப் (அவர்க்கு ஆண் மகவு இன்மையால்) பெற்றான் எனக் கோடலிலும் தவறில்லை. ஏனெனின், ஏறத்தாழக் கி.பி.350இல் கதம்ப அரசை வனவாசியில் தோற்றுவித்த மயூரசன்மன் பல்லவரிடமிருந்தே சூட்டுநாகர் ஆண்ட நாட்டைப் பெற்றான் என்று கதம்பர் பட்டயம் கூறுதலால் என்க. சிவஸ்கந்தர்வர்மன் (கி.பி. 300-325) வெளியிட்ட மயிதவோலு, ஹிரஹதகல்லிப் பட்டயமொழிக்கும் கதம்பர் முதலில் வெளியிட்ட மாலவல்லிப் பட்டய மொழிக்கும் சிறிதளவே வேறுபாடு. கதம்பரது பட்டயம் பிற்காலத்தது என்பது, உணரக்கிடத் தலால், சிவஸ்கந்தர்வர்மனுக்குப் பிறகு அண்மையிலேயே கதம்பர் அரசு தோன்றியிருத்தல் வேண்டும். வீரவர்மனுக்குப் பின்வந்த இரண்டாம் கந்தவர்மன் வாகாடரிடமிருந்து முன்சொன்ன கடிகாசலமும் அதனைச்சுற்றி இருந்த நிலப்பகுதியையும் கைப் பற்றினான் என்பது பொருத்தமாகக் காணப்படுகிறது.[29]

பல்லவர் - கதம்பர் போர்கள்

(1) ஏறக்குறையக் கி.பி. 350 இல் மயூர சர்மன் பல்லவரைத் துன்புறுத்திச் சமாதானத்திற்கு வரச்செய்து, அவரிடம் குந்தளநாட்டை மேற்பார்க்கும் உரிமை பெற்றான். அவனுக்குப்பின் வந்த கங்க வர்மன், பாகீரத வர்மன், காகுத்த வர்மன் ஆகிய இவர்கட்கு அரசர்க்குரிய பட்டயங்கள் இல்லா திருத்தலை நோக்க - இவர்க்குப் பின் வந்த சாந்தி வர்மன், மிருகேச வர்மன் முதலியோர்க்குத் தரும மகாராசர் முதலிய பட்டங்கள் இருத்தலைக் காண, முன் சொல்லப்பட்டவர் பல்லவர்க்கு அடங்கிய சாமந்தராக இருந்து குந்தள நாட்டைப் பாதுகாத்து வந்தனர் எனக் கொள்ளலாம்.[30] அஃதாவது காகுத்தவர்மன் (கி.பி.425-450) கால முதல் கதம்பர் தம் மாட்சி ஏற்படுத்த முயன்று பல்லவரோடு போரிட்டிருத்தல் வேண்டும்; அத்துடன் கதம்பர் தெற்கே இருந்த கங்க நாட்டையும் கைப்பற்ற முனைந்திருத்தல் வேண்டும். என்னை? கங்கரை அடிக்கடி வென்றதாகக் கதம்பர் பட்டயங்கள் குறிக்கின்றமையின் என்க. கங்கர் பல்லவர் துணையை நாடினர். கதம்பரை அடக்கிவைக்கக்கங்கர்க்குப் பல்லவர் உதவ வேண்டியவர் ஆயினர்.

(2) அரிவர்மன் கி.பி. 436 முதல் 460 வரை கங்கநாட்டை ஆண்டான். இவன்காலப் பல்லவ அரசன் முதல் சிம்மவர்மன். அவன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 436. அக்காலத்தில் கதம்ப அரசனாக (கி.பி. 425-450) இருந்தவன் காகுந்த வர்மன். அவன் குப்தர்க்கும் வாகாடர்க்கும் பெண் கொடுத்த பெருமையுடையவன்.[31] அவனது தாளகுண்டாப் பட்டயமே மயூர சன்மன் பல்லவர் மீது கொண்ட பகைமையையும் கதம்ப அரசு உண்டான வரலாற்றையும் குறிப்பது. எனவே காகுத்த வர்மன் பல்லவர்மீது வெறுப்புற்றவன் என்பது கல்வெட்டால் நன்கறியலாம். அவன் இளவரசனாக இருந்தபோதே பல போர்கள் செய்தவன்.[32] அவன் அரிவர்மன் பட்டம் பெறத் தடை செய்தனனோ, அல்லது அரசனாக இருந்த அவனைப் போரிட்டு வென்றனனோ தெரியவில்லை. இதனிற் சிம்மவர்மன் தலையிட வேண்டியதாயிற்று. அவன்தன்தலையீட்டில் வெற்றியும் பெற்றான்; அரிவர்மன் கங்க அரசன் ஆனான்.

(3) கங்க அரசனான இரண்டாம் மாதவன்.கி.பி. 450 முதல் 500 வரை அரசாண்டான். அப்பொழுது இருந்த பல்லவன் சிம்மவர்மன் மகனான மூன்றாம் கந்தர்வர்மன் அப்பொழுது ஏறத்தாழப் பட்டம் பெற்ற கதம்ப அரசன் மிருகேசவர்மன் என்பவன். இவன் தன் பாட்டனைப்போலவே கங்க அரசன் மீது படையெடுத்தான் போலும் ‘இவன் கங்கரை வென்று பல்லவரை நடுங்க வைத்தான்’ என்று ‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது. ‘பல்லவ அரசனான கந்தர்வர்மனால் நான் அரசு கட்டில் ஏறினேன்’ என்று கங்க அரசனான இரண்டாம் மாதவன் குறித்துள்ளான். இவற்றை நோக்க, உண்மை வெளியா கின்றது. அஃதாவது, அரசனாக இருந்த கங்க அரசனை மிருகேச வர்மன் வென்றான். இதனை அறிந்த பல்லவனான கந்தவர்மன் விரைந்து சென்று போரிட்டுக்கதம்பனை வென்று, தன் நண்பனான இரண்டாம் மாதவனை மீட்டும் அரசன் ஆக்கினான்’ என்பது.

இவன் பங்காளியான விஷ்ணுவர்மன் இவனுக்கு மாறாகக் காஞ்சிப் பல்லவனைச் சரண் அடைந்தான். அதனாற் போர் மூண்டது. இரவிவர்மன்தன் பங்காளியுடனும் பல்லவனுடனும் போரிட்டான்.[33]

(4) திருப்பர்வதத்தை ஆண்ட கதம்ப மரபினருள் முதல்வன் முதலாம் கிருஷ்ணவர்மன். அவன் காகுந்த வர்மன் மகனாவன். அவன் காலம் கி.பி. 475-480 ஆகும். அவன் அக்காலப் பல்லவ அரசனிடம் படுதோல்வி அடைந்தான் என்று கல்வெட்டே கூறுகிறது. அக்காலப் பல்லவன் இரண்டாம் சிம்மவர்மனாக இருக்கலாம்.[34]

(5) கி.பி. 500 முதல் 535 வரை கதம்ப அரசனாக இருந்தவன் மிருகேச வர்மனின் மகனான இரவி வர்மன் என்பவன். இவன், ‘காஞ்சி அரசனான சண்ட தண்டனை அழித்தான்’ என்று ‘ஹல்சி’ பட்டயம் பகர்கின்றது.[35] இவன் காலத்தில் ஏறத்தாழக் காஞ்சி அரசனாக இருந்தவன் (முதலாம் நந்தி வர்மனுக்கு முற்பட்ட) விஷ்ணு கோபவர்மன் ஆவன்.

முடிவு

இந்த இரவி வர்மனுக்குப் பிறகு கதம்ப அரசர் எவரும் தாம் பல்லவரை வென்றதாகக் குறிக்கவில்லை. இதற்குக் காரணம், பின் வந்த கதம்பர், தமக்கு வடக்கே சாளுக்கிய அரசை உண்டாக்கி அதனை வலுப்படுத்த முயன்ற சாளுக்கியருடன் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர் என்பதேயாகும்.[36]

பல்லவர் - சோழர் போர்

காஞ்சியைக் கைப்பற்றிய குமார விஷ்ணுவின் மகனான புத்த வர்மன் சோழருடைய கடல் போன்ற சேனைகட்கு வடவைத் தீப்போன்றவன் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இதனால், நாம் முன்னர்க் கூறியாங்கு, குமாரவிஷ்ணு காஞ்சியைக் கைப்பற்றிய பின், தெற்கே இருந்து தமக்கு இடையறாத துன்பத்தை உண்டாக்கி வந்த களப்பிரரை வெல்லவோ, அல்லது எஞ்சிய தொண்டை நாட்டையும் சோணாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தாலோ புத்தவர்மன் தன் படையுடன் சென்றான். பல்லவரை எதிர்க்கச்சோழரும்களப்பிரருடன் சேர்ந்திருப்பர். போரின் விளைவு தெரிந்திலது. எனினும் இப் போரில் புத்தவர்மன் வெற்றி பெற்றதாகக் கூறற் கிடமில்லை. ஏன்? கி.பி. 575 இல் அரசனாக வந்த சிம்மவிஷ்ணுவே காவிரி வரையுள்ள நாட்டை வென்றவனாதலின் என்க. எனவே, காஞ்சிமீது படையெடுத்து வந்த களப்பிரரையும் சோழரையும் புத்தவர்மன் விரட்டி இருக்கலாம்; மேற்கொண்டு தெற்கு நோக்கிப் போகவில்லை எனக் கோடலே பொருத்தமாகும்.

சாளுக்கியர் தோற்றம்

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சிற்றரசராக இருந்து உயர்நிலைக்கு வந்தவர் சாளுக்கியர். அவருள் முதல்வள் விசயாதித்தன். வாதாபியைத் தலைநகராகக் கொண்டசாளுக்கிய அரசை ஏற்படுத்தினான்.

பல்லவர் சாளுக்கியர் போர்கள்

விசயாதித்தனுக்கும் திரிநயனப் பல்லவற்கும் போர்கள் நடந்தன என்று கதை கூறப்படுகிறது. அது மெய்யென்பார் சிலர்; பொய் என்பார் சிலர். சாளுக்கியர் பேரரசை ஏற்படுத்த முனைகையில், பேரரசராக இருந்த பல்லவர்க்குப்பகைமைதோன்றல் இயல்பன்றோ? ஆதலின், இன்று நாம் அறிய முடியாத வகையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்சொன்ன போர்கள் நிகழ்ந்திருக்கலாம். மேலும், இடைக்காலப் பல்லவர் ஆந்திர பதத்திலும் (சாளுக்கிய நாட்டிற்கு அண்மையில்) இருந்து அரசாண்டனர் என்பதை நினைவிற் கொண்டால், இக்கதை உண்மையாக இருக்கும் என்று நம்பலாம். இது நிற்க.

(1) விசயாதித்தன் மகனான ஜயசிம்மன் சாளுக்கிய அரசனான பொழுது அவனுடன் பல்லவரும் இராட்டிர கூடரும் ஓயாது போரிட்டனர். எனினும், ஜயசிம்மன் தன் அரசை நிலைநிறுத்திக் கொண்டான். அவனுக்குப் பின்வந்த அவன் மகனான இரணதீரனும் பல்லவருடன் போரிட்டான்.[37]

இவர்கள் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன்பெரும்பாலும் முதலாம் நந்தி வர்மன் (கி.பி. 525-550) ஆவன். இவன் விஷ்ணுகோபன் ஈறான அரசர் பலர் இறந்தபின் பிறந்தவன்; சிவபிரான் அருளால் வன்மை மிக்க நாக அரசனை நடனம் செய்வித்தான் என்று வேலூர் பாளையப் பட்டயம் பகர்கின்றது. இந்த ‘நாக அரசன்’ யாவன்? ‘சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர்’ ஆகிய மூவரும் தம்மை ‘மானவ்ய கோத்திரத்தார்’ என்றும், ‘நாக மரபினர்’ என்றும் கூறிக் கொண்டனர்.[38] இவருள் சூட்டு நாகர் நந்திவர்மன் காலத்தில் வரலாற்றிலிருந்தே மறைந்து விட்டனர்; கதம்பரும் சாளுக்கியரும் போர்களில் ஈடுபட்டு இருந்தனர். மேலும், இரவி வர்மனுக்குப்பின்வந்த கதம்பர் பல்லவருடன் போர் செய்த குறிப்புக் கல்வெட்டுகளில் இல்லை. அவர்கள் ஓய்வின்றி வடக்கே சாளுக்கியரிடம் போராடின காலம் அது. ஆதலின் நந்திவர்மன் நடுங்கச் செய்த நாக அரசன் சாளுக்கியனாகத் தான் இருத்தல் வேண்டும்; அவன் ஜயசிம்மன் அல்லது இரணதீரன் ஆதல் வேண்டும். இங்ஙனம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொடங்கிய சாளுக்கியர்-பல்லவர் போர்கள் சாளுக்கியர் பேரரசு ஒழிந்த கி.பி. 8 ஆம் நூற்றாண்டுவரை தொடர்ந்து நடந்தன என்பது இங்கு அறியத்தகும்.

(2) இரணதீரன் மகன் முதலாம் புலிகேசி கி.பி. 550 முதல் 566 வரை அரசனாக இருந்தான். இவன் பல சிற்றரசரை வென்று அடிப்படுத்திக் கி.பி.560இல் ‘பரிவேள்வி’ செய்தவன். இவன் மகன் முதலாம் கீர்த்திவர்மன் (கி.பி. 566-598). இவனே கதம்பர் அரசைக் குலைத்துக் கதம்ப நாட்டைச் சாளுக்கியப் பெருநாட்டில் சேர்த்துக் கொண்டவன். இவ்விருவர் காலங்களிலும் சாளுக்கியர் - பல்லவர் போர்கள் நடந்தன.[39] இந்தக் காலத்தில் பல்லவ அரசனாக இருந்தவன் மூன்றாம் சிம்மவர்மன் ஆவன். இக் குறிப்புகளுடன், ‘மூன்றாம் சிம்மவர்மன் தன் பகைவரைப் போர்களில் வென்றான்’ என வரும் வேலூர் பாளையப் பட்டயக் குறிப்பை ஒப்பிட்டு உணர்க.

போர்களின் பட்டியல்

இதுகாறும் கூறப்பெற்ற பல போர்களையும் கீழ்வருமாறு முறைப்படுத்திக் கூறலாம்.

போர்
எண்
ஏறத்தாழப்
போர் நடந்த காலம்
கி. பி.
போரிட்ட பல்லவர் போரிட்ட
இருதிறந்தார்
1 340-350 குமார விஷ்ணு 1 பல்லவர் - குப்தர் போர் 1
2 345-360 குமார விஷ்ணு 1 (அ)
கந்தவர்மன் 1
பல்லவர் - கதம்பர் போர்
3 350-375 வீரகூர்ச்சவர்மன் பல்லவர் - வாகாடகர் போர் 1
4 400-436 கந்தவர்மன் 2 பல்லவர் - வாகாடகர் போர் 2
5 436-460 சிம்மவர்மன் 1 பல்லவர் - கதம்பர் போர் 2
போர்
எண்
ஏறத்தாழப்
போர் நடந்த காலம்
கி.பி.
போரிட்ட பல்லவர் போரிட்ட
இருதிறந்தார்
6 436-460 குமார விஷ்ணு 2 பல்லவர் - வாகாடகர் போர் 3
7 460-475 கந்தவர்மன் 3 பல்லவர் - கதம்பர் போர் 3
8 460-475 புத்தவர்மன் பல்லவர் - சோழர் போர்
9 475-480 சிம்மவர்மன் 2 பல்லவர் - கதம்பர் போர் 4
10 500-525 விஷ்ணுகோபவர்மன் பல்லவர் - கதம்பர் போர் 5
11 525-550 நந்திவர்மன் 1 பல்லவர் - சாளுக்கியர் போர் 1
12 550-575 சிம்மவர்மன் 3 பல்லவர் - சாளுக்கியர் போர் 2

இங்ஙனம், வடமொழிப் பட்டயங்களை வெளியிட்ட இடைக்காலப் பல்லவருட்பலர், ஏறத்தாழத்தமதுகாலம் முழுவதுமே (கி.பி. 340-575) குப்தர், வாகாடகர், கதம்பர், சாளுக்கியர், சோழர் என்பவரோடு ஓய்வின்றிப் போர் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாலும், அடிக்கடி தமது பேரரசின் சில பகுதிகள் பகைவர் கைப்பட்டமையாலும், தமது தலைநகரமே கைமாறியதாலும், தம் செப்பேடுகளையும் கல்வெட்டுகளையும் காஞ்சியிலிருந்து விடுத்திலர் என்பது நன்கு அறியத்தக்கது. “நெல்லூர், குண்டுர்களை ஆண்ட இடைக்காலப் பல்லவர் (1) வீரகூர்ச்சவர்மன் (2) இரண்டாம் குமாரவிஷ்ணு (3) இரண்டாம் கந்தவர்மன் (4) வீரவர்மன் (5) மூன்றாம் கந்தவர்மன் (6) இரண்டாம் சிம்மவர்மன் (7) அவன் மகன் விஷ்ணுகோபவர்மன் ஆவர்” என்று அறிஞர் அறைதலும் நோக்கத்தக்கது.[40]


  1. Vide “The place of Virakurcha in the pallava Genealogy, “Madras Christian College Magazine’ April, 1928.
    D. Sircar’s “Successors of the Satavahanas’, pp.97.140.
  2. Ibid. pp. 73,82,83.
  3. Ibid, pp.55, 62, Dr.K. Gopalachari’s “Early History of the Andhra Country’ pp. 186-195.
  4. D. Sircar’s “Successors of the Satavahanas’ pp.232, 238-240.
  5. D. Sircar’s Successors of “Satavahanas’ pp.258-259
  6. Ibid pp.281, 283.
  7. R. Gopalan’s “Pallavas of Kanchi,” pp.66,67.
  8. Mysore Gazetter. Vol II, Part II, P.505.
  9. M.V.Krishna Rao’s “Gangasof Talakad” pp.13, 14.
  10. Ibid p. 180.
  11. Ep. Carnataka Vol. III, No.142, MER. 1914, p.52
  12. Prof. Durbrueil’s “Ancient History of the Dekkhan’ p.54.
  13. M.V. Krishna Rao’s “Ganges of Talakad,’ pp.11,12,29,32.
  14. Ibid,pp.29, 31
  15. Omgodu plates of Skandavarman II.
  16. D. Sircar’s “Successors of the Satavahanas’ p.205.
  17. Dr. S.K. Aiyangar’s int. to “The Pallavas of Kanchi’ by R.Gopalan. pp. 19-21.
  18. Morae’s “The Kadambakula,’ p.26.
  19. Ibid, pp.16,17
  20. Prof. Dubruell’s “Ancient History of Dekkhan,’ pp.98-100.
  21. R.Gopalan’s “Pallavas of Kanchi’, P71.
  22. D.C. Minakshi’s “Ad, and S. Life under the Pallavas pp. 197-199.
  23. எனினும் இது முடிந்த முடிபன்று. மேலும் ஆராய்ச்சிக்குரியது.
  24. K.A.N. Sastry’s “Cholas,’ Vol.II, Part I, p.486.
  25. Dr. S.K. Aiyangar’s Int, to the “Pallavas of Kanchi’, p.27.
  26. R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.124.
  27. Ep. indica, Vol. 15, No.11, p.249. C.V.N. Iyer’s Saivism in S. India, pp. 295, 296.
  28. D. Sircar’s Successors of the Satavahanas, p.223.
  29. இது மேலும் ஆராய்ச்சிக்கு உரிய பகுதியாகும். ‘சமுத்திர குப்தன் படையெடுப்புக்குப்பின் காஞ்சி நகரம் சோழர் கையிலிருந்தது. அவரிடமிருந்தே குமார விஷ்ணு மீட்டான்’ என எழுதிய ஆராய்ச்சியாளர் பலர். அவர் கூற்றுப் பொருந்தாது என மறுத்தார் பலர். & Vide R. Gopalan’s “Pallavas of Kanchi.’ pp.63, 65.
  30. M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.27: ‘கங்கவர்மன் அஞ்சத்தக்க போர்கள் புரிந்தவன். பாகீரத வர்மன் பேரரசனாக இருந்தான் சந்திரகுப்தன் காளிதாசனைத் தூது அனுப்பி இவனிடம் பெண் கொள்ள முயன்றான் எனின், இவன் சிறப்பை என்னென்பது & Morae’s Kadamba Kula pp.18-23.
  31. Ibid pp.21-22, 26.
  32. Ibid. p.23.
  33. Moraes’s “Kadamba kula,’ pp.39-40.
  34. Ibid.p.33
  35. Ind Ant vol VI p.24: முதலாம் பரமேசுவர வர்மன் தன்னை ‘உக்கிரதண்டன்” எனக் கூறிக்கொள்ளல் இங்கு நினைவு கூர்தற்குரியது.
  36. M.V.K. Rao’s “Ganges of Talakad,’ pp.37-38.
  37. S.II. vol II p.510.
  38. Bombay gazatteer - pp.180, 277-280, 286.
  39. M.V. Krishna Rao’s “Ganges of Talakad’ p.38.
  40. D. Sircar’s “Sucessors of the Satavahanas’ p.391.