கொல்லிமலைக் குள்ளன்/11

விக்கிமூலம் இலிருந்து

11

“தங்கமணி, இந்த மரம் ஒரே ஆட்டம் கொடுக்கிறதே, அதிக நேரம் தாங்காது போல் இருக்கிறது" என்று சுந்தரம் தெரிவித்தான். ஆற்றுவெள்ளத்திற்குள் நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளையைச் சுற்றிப் போடப்பட்ட கயிற்றில் இரண்டு நுனிகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கும் முறை இப்பொழுது அவனுக்கு. அதனால் மரத்தின் நிலைமையை அவனால் உணர முடிந்தது.

"நல்லவேளை கண்ணகி தூங்குகிறாள். இல்லாவிட்டால் அவள் ரொம்பவும் பயப்படுவாள். மரம் அப்படி ஆட்டம் கொடுக்கிறது" என்று அவன் மேலும் கூறினான். தங்கமணி சட்டென்று கயிற்றின் நுனிகளைத் தன் கையில் வாங்கிக கொண்டு கவனித்தான். சுந்தரம் சொல்வது சரிதான் என்று அவனுக்குப் பட்டது. கயிறு கையில் இருக்கும்போதுதான் மரத்தின் நிலைமையை நன்றாக உணர முடிந்தது.

"அதோ, நிலாக் கிளம்புகிறது. இப்பொழுது மணி மூன்றிருக்கலாம்" என்றான் தங்கமணி.

"இந்த வெளிச்சம் நமக்கு உதவியாக இருக்கும்" என்று சுந்தரம் சற்று உற்சாகத்தோடு பேசினான்.

"அது மெய்தான். ஆனால், இந்த மரம் இன்னும் ஒருமணி நேரங்கூடத் தாங்காது போல இருக்கிறது" என்று தன் கவலையைத் தெரிவித்தான் தங்கமணி.

இப்படியாக இருவரும் விட்டுவிட்டு உரையாடிக்கொண்டே கயிற்றை மாறிமாறிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். காடுகளுக்கும் மலைகளுக்குமிடையிலே இப்படி இரவு நேரத்தில் ஆற்றில் மிதந்துகொண்டிருப்பது அவர்களுக்குத் துணிகர உணர்ச்சியையும் அச்சத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தது ஆனால், அவர்கள் மனம் சோரவில்லை. அச்சத்தினால் செயலற்றுப் போய்விடவில்லை. தங்களால் இயன்றதை செய்வதில் சிறிதும் தளர்ச்சியடையாமல் இருந்தனர்.

மேலும் ஒரு மணி நேரம் இந்த நிலையில் கழிந்தது “மணி. இந்தக் கயிற்றைப் பிடித்துப்பார். எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது" என்று பரபரப்புடன் கூவினான் சுந்தரம். தங்கமணி வேகமாகக் கயிற்றைப் பற்றியதும் சுந்தரம் சொல்வது சரிதான் என்று அவனுக்குப் புலப்பட்டு விட்டது.

“இனியும் நாம் இந்த மரத்தை நம்பக்கூடாது. பிறகு நமக்கு உதவி செய்த மரமே நம்மை மோதித் தீங்கு செய்தி விடும்" என்று தங்கமணி கூறிக்கொண்டே, தன் கைப்பிடியிலிருந்த கயிற்றின் நுனி ஒன்றைத் தளர்த்தி விட்டுவிட்டு, மற்ற நுனியைப் பிடித்து இழுக்கலானான். கயிற்றை விடாமல் உருவி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது அவனுடைய எண்ணம்.

அந்த எண்ணம் தொந்தரவு இல்லாமல் நிறைவேறியது தான் தாமதம், பரிசலும் ஆற்றோடு செல்ல ஆரம்பித்துவிட்டது. மரமும் பின்னாலேயே நிலை பெயர்ந்து புரண்டு வீழ்ந்து வரலாயிற்று. அதன் கிளைகளில் அகப்படாமல் தப்பவேண்டுமானால் பரிசலைச்சற்று வேகமாக முன்னால் செலுத்துவது நல்லதென்று தங்கமணிக்குத் தோன்றிற்று. அதனால், அவன் வேகமாகத் துடுப்பை வலிக்கலானான். ஆனால், அந்த இடத்திலே ஆறு சுழித்துக்கொண்டு ஓடிற்று. இவர்கள் எதிர்பாராத விதமாக அந்தச் சுழிப்பு கரையை நோக்கியே சென்றதால் எல்லாம் அனுகூலமாக முடிந்தது.

"இனி மரத்தைப்பற்றிக் கவலையில்லை" என்றான் தங்கமணி.

"கரையில் காலெடுத்து வைக்க வேண்டும். அதற்குப் பரிசலை இன்னும் சற்று கரை அருகில் செலுத்த முயல வேண்டும். அது தான் இனி நமக்கு வேலை. ஒன்று போனால் மற்றொன்று வருகிறது. 'வால் போச்சு, கத்தி வந்தது, டும்டும்' என்று சுந்தரம் நகைத்தான். இந்தச் சமயத்திலே கண்ணகி விழித்துக்கொண்டாள். “அண்ணா, கோயிலிலே மத்தளம் அடிக்கிறதா ?" என்று கண்ணைப் பிசைந்து கொண்டே கேட்டாள். அவளுக்கு வஞ்சியூர்ச் சத்திரத்திலே படுத்திருப்பதாக நினைப்பு. “ஆமாம், தேர் புறப்பட்டுவிட்டது. அம்பாள் எழுந்தருள வேண்டியது தான் பாக்கி" என்று கேலி செய்தான் சுந்தரம். அப்பொழுது தான் கண்ணகிக்கு நிலைமை புலனாயிற்று.

"அண்ணா, இன்னும் கரைக்கு வந்து சேரவில்லையா? பொழுதுகூட விடிந்துவிடும் போலிருக்கிறதே!" என்று அவள் எழுந்து உட்கார்ந்து கவலையோடு கேட்டாள். கொட்டாவி விட்டுக்கொண்டு கிழக்குப் பக்கம் வெளுத்து வருவதை ஆவலோடு கவனித்தாள். அந்தச் சமயத்திலே சுந்தரம் திடீரென்று கை தட்டிக்கொண்டு உற்சாகத்தோடு, "அதோ, அதோ ஜின்கா!" என்று உரத்துக் கூவினான். தங்கமணியும் அவனோடு சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தான். ஜின்கா வந்து சேர்ந்தது அவர்களுக்கு அத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஜின்காவிற்கும் ஒரே குதூகலம். அதுவும் பல

விதமாக மகிழ்ச்சிக் குரல் எழுப்பி ஆராவரம் செய்துகொண்டே பரிசலுக்குள் தாவிக் குதித்தது. தங்கமணி ஜின்காவின் உடம்பிலிருந்து வழியும் தண்ணீரிலே தனது சொக்காயெல்லாம் நனைவதைக்கூடப் பொருட்படுத்தாமல் அதைத் தன் உடம்போடு சேர்த்துக் கட்டி அணைத்துக்கொண்டான். ஜின்காவும் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை வெளியிட்டது.

பிறகு, ஜின்கா தன் கன்னத்தில் அடக்கிவைத்திருந்த உருண்டைச் சிமிழை வெளியே எடுத்து, தங்கமணியிடம் கொடுத்தது.

“இதோ, அப்பா கடிதம்” என்று கூவினாள் கண்ணகி. “மாமா கடிதமா, அத்தை கடிதமா?" என்று சுந்தரம் சந்தேகத்தோடு கேட்டான்.

"யார் கடிதமென்றாலும் படிப்பதற்கு இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வர வேண்டும். அதற்குள்ளே கரையைச் சேருவதற்கு முயற்சி பண்ணுவோம்" என்று தங்கமணி கூறிவிட்டு, ஜின்காவைத் தட்டிக் கொடுத்தான்.

"ஜின்கா, நீ ரொம்ப களைத்துப் போயிருக்கிறாய், இருந்தாலும் உன்னுடைய உதவிதான் இப்பொழுது முதலில் வேண்டும்" என்று அவன் இரங்கிய குரலிலே ஜின்காவைப் பார்த்துக் கூறினான்.

“அண்ணா, ஒரு தேங்காயை உடைத்து ஜின்காவிற்குக் கொடுக்கட்டுமா? பாவம், ரொம்பக் களைத்துப்போயிருக்கிறது" என்று கண்ணகி பரிவோடு கேட்டாள். ஆனால், ஜின்கா உடனே செயலில் இறங்கத் துடித்துக்கொண்டிருந்தது.

"தங்கமணியைவிட ஜின்காவிற்குத்தான் பரிசலைக் கரைக்குச் சேர்க்க அவசரம். ஆனால் அதற்குத் துடுப்புப் போடத் தெரியுமா என்ன?" என்று சுந்தரம் புன்முறுவல் செய்தான்.

“துடுப்புப் போடத் தெரியாது. ஆனால், ஜின்கா பரிசலைக் கரைக்குச் சேர்க்கப்போகிறது பார்" என்று கூறிக் கொண்டே ஜின்காவின் கையிலே கயிற்றின் ஒரு நுனியை எடுத்துத் தங்கமணி கொடுத்தான். அது கயிற்றைப் பற்றிக் கொண்டே ஆற்றில் குதித்துக் கரையை நோக்கி நீந்தத் தொடங்கியது. "டேய் சுந்தரம்! நீ துடுப்பைப் போடு" என்று கூறிக்கொண்டே தங்கமணி தன் கையில் கயிற்றைப் பற்றிக் கொண்டு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று நீரில் தளர்த்திவிட்டுக்கொண்டிருந்தான். நல்லவேளையாகக் கயிறு போதுமான அளவு நீளமாக இருந்தது. அதனால் ஜின்கா ஆற்றின் கரைக்குக் கயிற்றோடு போய்ச் சேர முடிந்தது.

ஆனால் அதனால் பரிசலை இழுத்துப் பிடிக்க முடியாது. அது இழுத்துப் பிடிக்க முயன்றிருந்தால் ஆற்று வெள்ளத்தின் வேகம் அதையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் போயிருக்கும். ஜின்கா பரிசலோடு கூடவே கரையிலே கொஞ்ச தூரம் ஓடிற்று. தங்கமணி பல வகையாகக் குரலெழுப்பி அதற்குச் சமிக்கை செய்துகொண்டே இருந்தான். அதைப் புரிந்து கொண்டு ஜின்கா நடந்தது. கரையோரமாக ஒரு மரம் இருந்தால் போதும். அதை எதிர்பார்த்து ஜின்கா பரிசலுக்கு நேராகக் கரையில் ஓடலாயிற்று. ஓரிடத்திலே ஒரு பெரிய மரக் கூட்டம் கரையின் ஓரத்திலேயே இருந்தது. அதை நோக்கி ஆவலோடு ஜின்கா ஓடியது. ஒரு மரத்தின் அடிப்பாகத்திலே அது கயிற்றை இரண்டு மூன்று முறை சுற்றும்படியாக வேகமாகச் சுற்றி சுற்றி ஓடியது. இதைத்தான் தங்கமணி எதிர்பார்த்தான். சுந்தரமும் அவனுடைய யுக்தியைப் புரிந்து கொண்டு உற்சாகமாகப் 'பலே, பலே' என்று கூவினான்.

கயிற்றின் ஒரு நுனி அடி மரத்திலே கெட்டியாகச் சுற்றி யிருந்தது. மற்றொரு நுனியைத் தங்கமணி உறுதியாகப் பிடித்துக்கொண்டான். "அண்ணா, நானும் பிடிக்கட்டுமா? ...............சுந்தரம், நீ துடுப்புப் போடுவதை விடாதே” என்று கண்ணகி மகிழ்ச்சியோடு கூறினாள்.

"துடுப்புப் போடாவிட்டாலும் இனிப் பரிசல் கரையோரம் சேர்ந்துவிடும்” என்று கூறினான் சுந்தரம்.

சுந்தரம் கூறியது மெய்தான். இப்பொழுது பரிசல் ஆற்று வேகத்தினாலேயே தள்ளப்பட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகக் கரையை அணுகிற்று. ஆழம் முழங்கால் அளவுக்கு மேல் அதிகம் இல்லை என்று தெரிந்ததும் தங்கமணி ஆற்றில் குதித்தான். பரிசலின் விளிம்பைக் கையில் பிடித்து அதைக் கரைக்கு இழுத்துச் சென்றான். சுந்தரமும் அவனைப் பின்பற்றி நீரில் குதித்து அவனுக்கு உதவியாக இழுத்தான். கொஞ்ச நேரத்தில் அவர்கள் கரையை அடைந்துவிட்டனர். கண்ணகி குதூகலத்தோடு கீழே இறங்கினாள். பிறகு தங்கமணியும் சுந்தரமும் சேர்ந்து பரிசலைத் தண்ணீரை விட்டே மேலிழுத்துவிட்டார்கள். அதற்குள் ஜின்கா கயிற்றை இழுத்துக்கொண்டு ஓடிவந்து சேர்ந்தது. பொழுதும் விடியலாயிற்று.

எல்லோருக்கும் ஒரே உற்சாகம். "டேய், அந்தக் கடிதத்தைப் பாரடா" என்று சுந்தரம் உற்சாகமாகக் கூறினான்.

தங்கமணி அவசரம் அவசரமாகக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான். தந்தை வடிவேலை அந்தக் குள்ளன் சூழ்ச்சி செய்து எங்கேயோ கொண்டுபோய் விட்ட செய்தியும், உதவிக்காகப் போலீஸ்காரர்களை ஒரு பரிசலில் அனுப்பிவிட்டு வள்ளிநாயகி கூடல் பட்டணம் செல்லுகின்ற செய்தியும் அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரியவந்தன.

"அந்தப் பரிசலைப் பார்த்தோமே,உடனே நாம் கூவி அழைத்திருக்க வேண்டும்" என்றான் சுந்தரம்.

“ஒரு பரிசல் தானே அம்மா அனுப்பியிருக்கிறார்கள்! இரண்டு பரிசல்கள் எப்படி ஜோடியாக வந்தன?" என்று ஐயத்தோடு தன்னைத்தானே கேட்டுக்கொண்டான் தங்கமணி.

இந்தக் கேள்விக்கு விடை உடனே கிடைக்கவில்லை. "ஏன் இரண்டு பரிசல்களை அனுப்பியிருக்கக்கூடாதோ?” என்று சுந்தரம் கேட்டான்.

“அம்மா ஒரு பரிசலில் போலீஸ் வீரர்களை அனுப்புவதாகத்தான் எழுதியிருக்கிறார்கள். மற்றொரு பரிசல் அந்தக் குள்ளனுடைய ஆள்கள் வந்ததாக இருக்க வேணும். நாம் தப்பி வந்ததைக் குள்ளன் தெரிந்துகொண்டு நம்மைப் பிடிக்க ஆள்களை அனுப்பியிருப்பான். அவர்கள் போலீஸ்காரர்களிடம் அகப்பட்டார்களோ அல்லது போலீசார் அவர்களிடம் அகப்பட்டார்களோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் அவர்களைக் கூப்பிடாததே நல்லதாயிற்று. திருடர்களிடம் நாம் அகப்படாமலிருக்க வேண்டுமல்லவா?" என்றான் தங்கமணி.

சரி, இப்போது என்ன செய்யலாம்?" என்று கவலையோடு கேட்டாள் கண்ணகி.

"இனி நாம் ஆற்று வழியாகப் போகாமல் இந்தக் காட்டு வழியிலே போய் எப்படியாவது கூடல் பட்டணம் போக முயற்சி செய்யலாம். புறப்படுங்கள்" என்று தங்கமணி, ஆழ்ந்த யோசனையோடு சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/11&oldid=1100375" இலிருந்து மீள்விக்கப்பட்டது