அதிசயப் பெண்/ஏமாற்றம்

விக்கிமூலம் இலிருந்து
ஏமாற்றம் !

பெரிய மிராசுதார் அவர்.

அவருக்கு நூற்றுக்கணக்கான காணிகள் இருந்தன.  நன்செய்யும் உண்டு; புன்செய்யும் உண்டு. நெல்லும் வாழையும் விளையும் நிலங்களும், கம்பும் கடலையும் விளையும் காடுகளும் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அவ்வளவு பெரிய பணக்காரர், சென்னையில் பெரிய மாளிகை கட்டிக்கொண்டு நாகரிக மோஸ்தரில் வாழ ஆரம்பித்தார். நிலங்களைக் குத்தகைக் காரர்களிடமும் காரியஸ்தர்களிடமும் விட்டுவிட்டு, நகர வாழ்க்கையின் கோலாகலத்திலே நீந்தி விளையாடினர்.

அவருக்கு ஒரு பிள்ளை. அவன் காலேஜில் படித்தான்; பிறகு சீமைக்குப் படிக்கப் போனான். 

இந்தியாவில் இருந்தபோது இந்நாட்டைப் பற்றி அவன் ஒன்றும் தெரிந்துகொள்ளவில்லை. சீமைக்குப் போன பிறகு அங்கே ஏற்பட்ட நண்பர்களின் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் திண்டாடினான். இந்தியாவைப் பற்றிய சில புத்தகங்களைச் சீமையிலே படித்தான்

இந்தியா விவசாய நாடு என்று அந்தப் புத்தகங்களின் மூலம் தெரிந்துகொண்டான். பல காணிகளைப் படைத்த பணக்காரர்கள் சொந்த ஊரை விட்டு நகர வாழ்க்கையில் உள்ள மோகத்தால் வந்துவிடுகறார்கள். கிராமத்திலோ நிலங்களைக் கூலிக்காரர்களும் குத்தகைக் காரர்களும் பார்க்கிறார்கள். இதனால் நிலம் சீர்குன்றி வளம் மங்கிப் போகிறது” என்று யாரோ புண்ணியவான் எழுதியிருந்தார். இந்த வாக்கியம் செல்வக் கும ரன் உள்ளத்திலே தைத்தது. தன் தந்தையாரும் நகர வாழ்க்கையில் மோகம் கொண்டவரென்பதை உணர்ந்தான்.

ஒருவிதமாகச் சீமைப் படிப்பு முடிந்தது. தாய் நாட்டுக்குப் போனவுடன், முதல் வேலையாகக் கிராமம் சென்று, அங்கே சொந்தக்காரரை ஏமாற்றி வாழும் காரியஸ்தர்களின் அட்டூழியங்களைக் கண்டு பிடிப்பது என்ற உறுதியை மேற்கொண்டான். தாய்நாடு வந்தான் ஒருநாள் கிராமத்துக்குப் போனான். “ இன்று நாம் நம் நிலங்களைப் பார்க்கவேண்டும்” என்று சின்னதுரையிடமிருந்து உத்தரவு பிறந்ததைக் கண்டு காரியஸ்தர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

“அப்படியல்லவா இருக்கவேண்டும்?’ என்று பாராட்டினார். - சீமை சென்றுவந்த குமரன் நிலங்களைப் பார்வையிடச் சென்றான். கடலை விளைந்திருந்த தோட்டத்துக்குப் போனான். “இதோ இது கடலைத் தோட்டம். காய் விளைந்து முற்றிவிட்டது. மகசூல் எடுக்க வேண்டியது. தான்” என்றார் காரியஸ்தர்.

குமரன் வரப்பருகில் உட்கார்ந்துகொண்டான். ஒரு கடலைச் செடியைத் தொட்டுப் பார்த்தான்; புரட்டினான். எதையோ தேடுவதைப் போல இருந்தது. “இந்த ஆசாமிகள் பட்டப்பகலில் கொள்ளேயடிப்பவர்கள் என்பது உண்மை. நாம் ஒன்றையும் கவனிக்க மாட்டோம் என்ற நினைவினால், பொய் சொல்லி ஏமாற்றுகிறான், இந்த மனுஷன். காய் விளந்துவிட்ட தாம்! செடி முழுவதும் ஒரே இலையாக இருக்கிறது. ஒரு காயைக் காணுேம். நமக்கு விஷயம் தெரியாதென்று நினைத்து விட்டானே!"-குமரன் எண்ணம் ஓடியது. கோபம் கனன்றது.

“என்ன ஐயா! ஒரே புளுகாகப் புளுகுகிறீரே. காய் விளைந்துவிட்டதென்று ஏன் பொய் சொல்லுகிறீர்?” என்று படபடப்போடு கேட்டான் சின்ன எஜமானன்.

“விளைந்து விட்டது என்பது பொய்யா? இதோ: அடுத்த வாரத்தில் வெட்டப்போகிறோமே!” .

“என்ன ஐயா! முழு மோசமாக இருக்கிறது. செடியில் ஒரு காயைக் காணோம். நீர் அளக்கிறீரே!”

காரியஸ்தருக்கு உண்மை விளங்கியது. அழுவதா சிரிப்பதா என்று அவருக்கு யோசனை வந்துவிட்டது. ‘எஜமான் செடியைப் புரட்டிப் பார்ப்பதற்குக் காரணம்

இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. கடலைக்காய், செடியின் மேல் இருக்காது. வேரிலேதான் இருக்கும். அதனால் வேர்க்கடலை என்று இதைச் சொல்வார்கள். இதோ பாருங்கள்” என்று விளக்கிக் கொண்டே காரியஸ்தர் ஒரு செடியைப் பிடுங்கிக் காட்டினார். வேரில் கொத்துக் கொத்தாய்க் கடலைக்காய்கள் இருந்தன. தன்னைக் காரியஸ்தர் ஏமாற்றவில்லை, கடலைச் செடிதான் ஏமாற்றிவிட்டதென்பதை, சீமைப் படிப்பில் தேர்ச்சி பெற்ற செல்வன் அப்போது தெளிந்தான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=அதிசயப்_பெண்/ஏமாற்றம்&oldid=1104815" இலிருந்து மீள்விக்கப்பட்டது