சங்க கால வள்ளல்கள்/இறுவாய்

விக்கிமூலம் இலிருந்து

இறுவாய்

இதுகாறும் கடை எழு வள்ளல்களின் வரலாற்றை ஒழுங்காக உணர்ந்தீர். இவ்வெழுவரும் வள்ளல்களாக மட்டும் இருந்ததோடு இன்றிப் பெரும் வீரர்களாகவும் விளங்கினர் என்பதையும் உணர்ந்துகொண்டீர்கள். இன்னோரன்ன வீரமும் கொடையும் நிறைந்த சிற்றரசர்கள், பேர் அரசர்கள் வரலாறுகள் பல நம் செந்தமிழ் நூல்களில் சிறக்கக் காணப்படுகின்றன. அவை யாவும் பொய்யுரையாகவோ புனைந்துரையாகவோ இன்றி, உள்ளதை உள்ளவாறு உணர்த்தும் வரலாறுகளே யாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து படித்தல் அறிவுடைமையாகும். இம்முன்னோர்களின் உண்மை வரலாறுகளை அறிதற்குப் பெருந்துணை செய்வன சங்கமருவிய நூற்களே யாகும். அவையே திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம் என்னும் பத்துப் பாட்டும், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டுத்தொகையும், நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இனியது நாற்பது, இன்னா நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூற்களாகும். இவற்றொடு சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காவியங்களும் பண்டை வரலாற்றை அறியத் துணைசெய்வன. தண்டமிழ் மொழியில் அறிவு பெற்றுத் தமிழ் முன்னோர் ஒழுகலாற்றை உணர விழைவோர் இந்நூற்களைப் பயின்று பேர் அறிவு பெறுவாராக.

இதனுடன் இந்நூலில் எழுதப்பட்ட கடையெழு வள்ளல்கள் இன்னார் என ஒரு சேரக் குறிப்பிட்ட இரு நூல்களில் காணப்படும் பாடல்கள் இரண்டும் பயில்வார்க்கு இன்பந்தரும் என்று எண்ணிச் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் படித்துப் பயனுறுவார்களாக.

________________
சிறுபாணாற்றுப்படை


வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் சுரும்புஉண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் அருவி வீழுஞ் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
வீர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரியும் நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாபம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நல்மொழி ஆயும் மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம்கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும் கரவாது

"நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும் நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் என ஆங்கு
எழுசமம் கடந்த எழுஉறழ் திணிதோள்
எழுவர்

.

- நல்லூர் நத்தத்தனார்

புறநானூறு

முரசுகடி இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் அருவி கல்அலைத்து ஒழுகும்
பறம்பில் கோமான் பாரியும், பிறங்குமிசைக்
கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும் காரி
ஊர்ந்து பேர் அமர்க் கடந்த
காரி ஈகை மறப்போர் மலையனும்
ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
கூவிளங் கண்ணிக் கொடும் பூண் எழினியும்
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும் திருந்து மொழி
மோசி பாடிய ஆயும் ஆர்வம் உற்று
உள்ளி வருவர் உலைவு நனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு
எழுவர்.

-பெருஞ்சித்திரனார்


வாழ்ந்த ஊரும், மலையும்


பாரி - பறம்பு மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.

வல்வில் ஓர் - கொல்லி மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.

ஆய் அண்டிரன் - பொதியின் மலையும், ஆய்குடி ஊரும்.

திருமுடிக்காரி - முள்ளூர் மலையும், மலாடு, திருக்கோவலூர் ஊர்களும்.

நள்ளி - தோட்டி மலையும், அதனைச் சார்ந்த ஊர்களும்.

நெடுமான் அஞ்சி - குதிரை மலையும், தகடூர் ஊரும்.

பேகன் - ஆவினன்குடி மலையும், நல்லூர் ஊரும்.

பாடிய புலவர்கள்
பாரி : கபிலர், இவன் மகளிர்.
வல்வில் ஓரி : வன்பரணர், கழைதின் யானையார்.
ஆய் அண்டிரன் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர்

ஓடைக்கிழார், குட்டுவன் கீரனார்.

திருமுடிக்காரி : கபிலர், மாறோக்கத்து நப்புசலையார்.
நள்ளி : வன்பரணர், பெருந்தலைச் சாத்தனார்
நெடுமான் அஞ்சி : ஔவையார், பரணர் பெருஞ்சித்திரனார்,

பொன்முடியார்.

பேகன் : பரணர், கபிலர், வன்பரணர் அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார்.
ஈந்த பொருள்கள்


பாரி - முல்லைக்குத் தேர் ஈந்தவன்.
வல்வில் ஓரி - நாடு கொடுத்தவன்.
ஆய் அண்டிரன் - சிவபெருமானுக்கு நீல நிறப்பட்டாடை ஈந்தவன்.
திருமுடிக்காரி - நாட்டையும் குதிரையும் கொடுத்தவன்.
நள்ளி - இல்லறம் நடத்த வேண்டுவன ஈந்தவன்.
நெடுமான் அஞ்சி - ஒளவையார்க்கு நெல்லிக்கனியைத் தந்தவன்.
பேகன் - மயிலுக்குப் போர்வை தந்தவன்.