வேங்கடம் முதல் குமரி வரை 4/011-032

விக்கிமூலம் இலிருந்து
11. பூவணத்துப் புனிதர்

அழகு அனுபவத்தைப் பற்றி எவ்வளவோ ஆய்ந்திருக்கிறார்கள் அறிஞர்கள்! பொதுவாக நாம் இயற்கைக் காட்சிகள், சித்திரங்கள், சிற்பங்கள் முதலியவற்றைப் பார்க்கும் போது அவை அழகாயிருக்கின்றன என்று எண்ணுகிறோம். அதனால் மகிழ்ச்சி அடைகிறோம். இதுதான் அழகு அனுபவம். இந்த அனுபவம் வெறும் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிப்பதோடு அமையாமல் உள்ளம் நிறைந்தததாகவும் இருக்குமானால் அதை வாயால் வர்ணிக்கவும் முடியாது, பாகுபடுத்திப் பார்க்கவும் முடியாது. ஸ்ரீமதி பால சரஸ்வதியின் பரத நாட்டியம் பல வருஷங்களுக்கு முன் அமரர் ஸிகமணி அவர்கள் வீட்டில் நடந்தது. நாங்கள் பலர் பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வளவோ அனுபவங்களைப் பெற்றோம். ஆனால் பெற்ற அனுபவத்தைச் சொல்லத் தெரியாமல், சொல்ல முடியாமல் தவித்தோம். ஆனால் டி. கே. சி. அவர்கள் வீட்டு வேலைக்காரி நடனம் முடிந்ததும், 'அ...! பாதகத்திமகள் எப்படி எல்லாம் ஆடுகிறாள்!' என்று சொல்லிக் கொண்டு மூக்கில் விரலை வைத்து நின்று விட்டாள். இதைப் பார்த்த டி.கே.சி 'இதுவே கலை அனுபவம், அழகு அனுபவம்' என்றார்கள்.

இதே போல் ஓர் அனுபவம் பொன்னனையாள் என்ற கணிகைக்கு, பொன்னனையாள் சிறந்த பண்புகள் நிறைந்தவள்: நல்ல சிலபக்தை. வருகிற சிவனடியாரையெல்லாம் உபசரித்து உணவருத்துவதிலேயே அவள் செல்வம் எல்லாம் கரைகிறது. அவளுக்கு ஓர் ஆசை, சிவபெருமானை நல்ல பஞ்சலோகத்தில் ஒரு மூர்த்தியாக வடித்துப் பார்க்க வேண்டும் என்று. அதற்கு அவளிடம் பணம் இல்லை . அதற்காக வருந்துகிறாள். அவளது விருப்பத்தை நிறைவேற்றத் திருவுளம் கொண்ட சிவபெருமான், ஒரு சித்தர் வடிவிலே வருகிறார். அவள் விருப்பம் என்ன என்று கேட்கிறார். அதற்கு வேண்டிய பொருள் தன்னிடம் இல்லையே என்றதும், 'பரவாயில்லை வீட்டில் கிடக்கிற இரும்பு, செம்பு, ஈயம், பித்தளை எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டுவா' என்கிறார். அத்தனையையும் அன்றிரவே புடம் போட்டுத் தமது ரஸவாதத் திறமையினால் எல்லாவற்றையும் நல்ல உலோகமாக்கிக் கொடுக்கிறார்; வந்த சித்தர் மறைந்து விடுகிறார் பின்பு கிடைத்த உலோகத்தால் பொன்னனையாள் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு இறைவனது திருவுருவை வடிக்கச் சொல்கிறாள். அப்படிச் சிற்பி வடித்த படிமமும் மிக்க அழகுடையதாக அமைந்து விடுகிறது. அந்த அழகைக் கண்டு ஆனந்திக்கிறாள். அந்த அழகிய பிரானது கன்னத்தைத் திருகி முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள். இப்படி அழகை அனுபவித்த பொன்னனையாளைப் பரஞ்சோதியார்,

மழவிடை உடையான் மேனி
வனப்பினை நோக்கி அச்சோ!
அழகிய பிரானோ என்னா
அள்ளிமுத்தங் கொண்டு அன்பில்
பழகிய பரனை யானும்
பரிவினால் பதிட்டை செய்து
விழவுதேர் நடத்திச் சின்னாள்
கழிந்தபின் வீடு பெற்றாள்,

என்று நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்படிக் கன்னம் கிள்ளிக் கொஞ்சியதால் ஏற்பட்ட வடுவுடனேயே இறைவன் இன்னும் அந்தக் கோலத்தில் இருந்து கொண்டிருக்கிறான். அப்படிப் பொன்னனையாளால் உருப்பெற்று, நகக் குறியும் பெற்ற இறைவன் இருக்கும் தலம்தான் திருப்பூவணம். அந்தத் திருப்பூவணத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருப்பூவணம், மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் பாதையில் மதுரைக்குக் கிழக்கே பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கிறது. சிறிய ஊர்தான், மதுரை மானாமதுரை லயனில் சென்றாலும் திருப்பூவணம் ஸ்டேஷனில் இறங்கிச் செல்லலாம். மெயின் ரோட்டுக்கு வடப்புறம் ஒரு பர்லாங்கு தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் நிரம்பப் பெரிய கோயிலும் அல்ல, சிறிய கோயிலும் அல்ல. இறைவன் பெயர் பூவணநாதர், இறைவி பெயர் மின்னனையாள். கோயிலுக்கு வடபுறம் வைகை நதி ஓடுகிறது பாண்டிய மன்னரோடு சோழ மன்னரும் சேரரும் வந்து வணங்க பெருமை உடையவர் பூவணநாதர், இதை ஞானசம்பந்தர் பாடுகிறார்

அறையார் புனலும் மாமலரும்
ஆடு அரவார் சடைமேல்
குறையார் மதியம் சூடி
மாது ஓர் கூறுடையான் இடமாம்
முறையால் முடிசேர் தெள்னர்,
சேரர். சோழர்கள் தாம் வணங்கும்
திறையார் ஒளிசேர் செம்யை
ஓங்கும் தென் திருப்பூவணமே.

என்பது அவரது தேவாரம், தமிழ் மன்னர் மூவர் மாத்திரம் அல்ல, தேவர் மூவரில் ஒருவனான பிரமனும் வந்து பூஜித்துப் பேறு பெற்றிருக்கிறான் என்று வரலாறு கூறும்.

இத்தலத்தில் மின்னனையாளையும் மிஞ்சிய புகழ் உடையவளை பொன்னனையாள் என்று கண்டோம். மின்னனையாள் திருமோல் விளங்க ஓர் தன்னமர் பாகமதாகிய சங்கரன்” என்று பாட ஆரம்பித்த சந்தரரும்,

முன்நிளையார் புரம்மூன்று எரியூட்டிய
பொன்னனையான் உறைபூவணம் ஈதோ

என்று தானே முடித்திருக்கிறார்? பொன்னனையள் உருவாக்கிய பூவணநாதர் பொன்னனையான் என்ற பெயரோ விளங்குகிறார். உத்சவமூர்த்தி நல்ல அழகான வடிவம், கன்னத்தை கிள்ளி முத்தமிட்ட தழும்பு, வடிவத்தில் இருக்கிறது. வடிவத்தைக் கண்டால் நமக்கும் கூடக் கன்னத்தைக் கிள்ளலாமா என்று தோன்றும் அர்ச்சகர்கள் அனுமதிக்கமாட்டர்களே என்பதனால்தான் கை நீட்டாது வருவோம். பொன்னனையாள் திருவுருவம் செப்புச்சிலையில் கோயிலில் இருக்கிறது. மின்னனையாள் வடிவமும் அழகானதே. சிவபெருமான் பொன்னனையாளுக்காக ரஸவாதியாக வந்த திருவிளையாடலை,

விரிநீர்ச் செம்போதத் திரு உருவாம்
பொன்னனையாட்கு இந்த வாதத்
திருஉருவாய் வந்துதித்தோன்

என்று திருப்பூவனநாதர் உலா போற்றுகிறது. கோயிலுக்கு வடபுறம் பொன்னனையாள் மண்டபம் என்று ஒரு, கட்டிடம் இருக்கிறது. அது இப்போது இடிந்து பாழடைந்து கிடக்கிறது. அங்குள்ள தூண் ஒன்றில் பொன்னனையாளின் சிலா உருவம் செதுக்கப் பட்டிருக்கிறது.

பூவணத்து மின்னனையாள்

அக்கோயில் வாயிலில் உள்ள நந்தி சிறிது சாய்ந்திருக்கிறது. ஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வந்தபோது இங்குள்ள மணலெல்லாம் சிவலிங்கமாகக் காட்சி அளித்திருக்கிறது. ஆதலால் அவர் அக்கரையிலே நின்று பாடியிருக்கிறார். அவரைப் பார்க்க இறைவன் விரும்பினாரோ, இல்லை அவர் தம்மைப் பார்க்க வசதி செய்து கொடுக்க வேண்டுமென்றுதான் விரும்பினாரோ? இறைவன் நந்தியைக் கொஞ்சம் சாய்ந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார். இன்னும் சம்பந்தரிடம் வாதில் தோற்ற சமணர்களெல்லாம் கழு ஏறிய இடம் இப் பூவணம்தான் என்பர். அதைக் குறிக்கக் கழுவர் படைவீடு என்று ஓர் இடம் உண்டு என்றும் கூறுவார்.

இத்தலத்துக்குச் சம்பந்தர், சுந்தரர் மாத்திரம் வந்தார் என்றில்லை. அப்பருமே வந்திருக்கிறார். அற்புதமாக; திருத்தாண்டகம் பாடியிருக்கிறார்.

மயலாகும் தன்னடியார்களுக்கு
அருளும் தோன்றும், மாசிலாப்
புன்சடைமேல் மதியம் தோன்றும்,
இயல்பாக இடு பிச்சை ஏற்றல்
தோன்றும், இருங்கடல் நஞ்சுண்டு
இருண்ட கண்டம் தோன்றும்,
கயல்பாய கடுங்கல் உழிக்,
கங்கை நங்கை ஆயிரமாம்
முகத்தினோடு வானில் தோன்றும்,
புயல்பாய சடை விரித்த
பொற்புத் தோன்றும் பொழில்
திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே

என்ற பாடல் மிக்க சுவையுடைய பாடல் மட்டும் அல்ல இறைவனது திருக்கோலங்களையெல்லாம் விளக்கும் பாடலும் ஆயிற்றே.

இக்கோயிலில் பாண்டிய மன்னர்களில் கோநேரின்மை கொண்டான். பராக்கிரம பாண்டிய தேவர் முதலியவர்களின் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இருக்கின்றன். இக்கல்வெட்டுக்களில் இறைவன் திருப்பூவணமுடைய நாயனார் என்று குறிக்கப் பெற்றிருக்கிறார்.

இந்த வட்டாரத்தில் இக் கோயிலைத் தவிர வேறு குறிப்பிடத்தக்க கோயில்கள் இல்லை. அறுபத்து நாலு திருவிளையாடலில் ஒன்றான ரஸவாதம் நடத்திய இடத்தையும் பார்த்தோம். 63 நாயன்மாரில் ஒருவரான இளையான்குடி. மாறனையும் பார்க்க வேண்டாமா? அவர் சரித்திரம் பிரபலமானதாயிற்றே. தமிழரின் விருந்தோம்பல் பண்பாட்டுக்குச் சிறந்த இலக்கியமாக விலங்குகிறவர் ஆயிற்றே, அவர் பிறந்து வளர்ந்த பதி திருப்பூவணத்துக்குத் தென் கிழக்கே முப்பது மைல் தூரத்தில் இருக்கிறது.

திருப்பூவணத்திலிருந்து மானாமதுரை வந்து அங்கிருந்து தெற்கு நோக்கிப் பார்த்திபனூர் வழியாய், பரமக்குடி செல்லவேண்டும். பரமக்குடிக்கு நேர் வடக்கே ஐந்து ஆறு மைல் தொலைவில் இளையான் குடியிருக்கிறது. காரிலேயே செல்லலாம் ஊர்வரை. ஊர் சின்னஞ் சிறிய ஊர். இங்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது.

பூவணத்துப் பொன்னனையான்

அத்தலத்தில் உள்ள மஞ்சப்புத்தூர் செட்டிமார்கள் என்னும் ஆயிர வைசியர் இளையான்குடி மாறரைத் தங்கள் இனத்தவர் என்று உறவு கொண்டாடுகிறார்கள். இளையான் குடிமாறர், அவர் மனைவி ஆகிய இருவரது செப்புப் படிமங்களையும் செய்து வைத்திருக்கிறார்கள். இளையான்குடி மாறர் சரித்திரம் தெரிந்தது தானே. வருகின்ற சிவனடியாரையெல்லாம் அழைத்து விருந்தருந்த வைக்கும் இயல்புடையவர், அவர் வறுமையால் வாடுகிறார்.

இந்த நிலையில் ஒரு நாள் இரவில் அகாலத்தில் இறைவனே அடியவர் வேடத்தில் வருகிறார். வீட்டிலோ பிடி அரிசி இல்லை அதற்காக மாறர் சோர்ந்து விடவில்லை. அன்று விதைத்த நெல்லை வயலிலிருந்து சேகரித்து வந்து கொடுக்கிறார். அதனை வறுத்து, உலர்த்தி, அரிசியாக்கிக் சமைக்கிறாள் அவர் மனைவியார், விறகு இல்லையென்பதால் கூரையையே பிய்த்து எடுத்துத் தீ மூட்டுகிறார். தம்பதியர் இருவரது இந்த விருந்தோம்பல் பணியை! உலகுக்கு அறிவித்து அவர்களை ஆட்கொள்கிறார் இறைவன், தமிழ் மக்கள் எல்லாம் பின்பற்றி நடக்க வேண்டிய வாழ்க்கை வரலாறாயிற்றே இவரது வாழ்க்கை. அந்த மாறரையும் மனைவியையும் கண்டு தரிசிக்காமல் இருக்கலாமா என்றுதான் இத்தனை தூரம் உங்களைக் கொஞ்சம் இழுத்து அடித்துவிட்டேன்.

இப்படி வந்த இடத்திலே ஒரு பழய பெருமாள் கோயிலையும் பார்த்து விடலாம். அங்கே வேணுகோபாலர் கோயில் கொண்டிருக்கிறார். இந்தப் பெருமான் பெயர் மிகமிக நீளம். ருக்மனி சத்யபாமா சமேதராக நின்று குழலூதும் வின்னசாத்து எம்பெருமான் என்பர். திருக்கை அமர்த்தும் திருநாராயணன், நெடியகரிய மாணிக்க மரகத மதன வேணுகோபாலப் பெருமாள் என்று சொல்லிவிட்டாலே பெருமாளின் திருவடிவம் முழுதும் நம் கண்முன் வருமே. இளையான்குடி மாறரைக் காணவந்த இடத்தில் பெருமாள் தரிசனமும் கிடைக்கிறதென்றால் அதை விட்டு வைப்பானேன்.