நீதிக் களஞ்சியம்/நல்வழி

விக்கிமூலம் இலிருந்து


நல்வழி
(ஔவையார்)

கடவுள் வாழ்த்து

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்;—கோலம் செய்
துங்கக் கரி முகத்துத் தூ மணியே!—நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

நூல்

புண்ணியம் ஆம்; பாவம் போம்; போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்; எண்ணுங்கால்,
ஈது ஒழிய வேறு இல்லை, எச் சமயத்தோர் சொல்லும்;
தீது ஒழிய, நன்மை செயல்!1

சாதி இரண்டு ஓழிய வேறு இல்லை. சாற்றுங்கால்:
நீதி வழுவா நெறி முறையின், மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்;
பட்டாங்கில் உள்ளபடி.2

இடும்பைக்கு இடும் பை இயல் உடம்பு இது அன்றே?
இடும் பொய்யை மெய் என்று இராதே; இடும். கடுக;
உண்டாயின், உண்டாகும், ஊழின் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும்வீடு.3

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்யொண்ணாது,
புண்ணியம் வந்து எய்து போது அல்லால்; கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே;
ஆம் காலம் ஆகும், அவர்க்கு.4

வருந்தி அழைத்தாலும், வாராத வாரா;
பொருந்துவன, 'போமின்' என்றால், போகா; இருந்து ஏங்கி,
நெஞ்சம் புண்ணாக, நெடுந் தூரம் தாம் நினைந்து,
துஞ்சுவதே. மாந்தர் தொழில்.5

உள்ளது ஒழிய, ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா, குவலயத்தில்; வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரை ஏறினால் என்,
உடலோடு வாழும் உயிர்க்கு?6

எல்லாப் படியாலும் எண்ணினால், இல் உடம்பு
பொல்லாப் புழு, மலி நோய்ப் புண் குரம்பை: நல்லார்
அறிந்திருப்பார்; ஆதலினால், ஆம் கமல நீர்போல்,
பிறிந்திருப்பார்; போசர், பிறர்க்கு.7

ஈட்டும் பொருள் முயற்சி எண் இறந்த ஆயினும், ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம்; தேட்டம்
மரியாதை காணும்;—மகிதலத்தீர்!—கேண்மின்;
தரியாது காணும், தனம்.8

ஆற்றுப் பெருக்கு அற்று, அடி சுடும் அந் நாளும். அவ் ஆறு
ஊற்றுப்பெருக்கால் உலகு ஊட்டும்; ஏற்றவர்க்கு,
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்,
'இல்லை' என மாட்டார், இசைந்து.9

ஆண்டு ஆண்டுதோறும் அழுது புரண்டாலும்,
மாண்டார் வருவரோ?—மாநிலத்தீர்!—வேண்டா;
நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்.
'எமக்கு என்' என்று, இட்டு, உண்டு, இரும்.10

'ஒரு நாள் உணவை ஒழி' என்றால், ஒழியாய்;
'இரு நாளுக்கு ஏல்' என்றால், ஏலாய்; ஒரு நாளும்
என் நோ அறியாய்:—இடும்பை கூர் என் வயிறே!—
உன்னோடு வாழ்தல் அரிது.11

ஆற்றங்கரையின் மரமும். அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும், விழும் அன்றே; ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்;
பழுது உண்டு, வேறு ஓர் பணிக்கு.12

ஆவாரை யாரே அழிப்பர்? அது அன்றி,
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்,
ஐயம் புகுவாரை யாரே விவக்குலார்?—
மெய், அம் புவிஅதன் மேல்.13

பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை, பேசுங்கால்,
இச்சை பல சொல்லி இடித்து உண்கை: சிச்சீ!
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது.
உயிர் விடுகை சால உறும்.14

'சிவாயநம!' என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை; உபாயம்
இதுவே: மதி ஆகும்; அல்லாத எல்லாம்
விதியே மதி ஆய்விடும்.15

தண்ணீர் நில நலத்தால்: தக்கோர் குணம் கொடையால்;
கண்ணீர்மை மாறாக் கருணையால்; பெண் நீர்மை
கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதம் ஆம் என்றே அறி.16

செய் தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்,
எய்த வருமோ. இரு நிதியம்—'வையத்து
அறும் பாவம்' என்ன அறிந்து, அன்று இடார்க்கு, இன்று?
வெறும் பானை பொங்குமோ மேல்?17

பெற்றார், பிறந்தார். பெரு நாட்டார், பேர் உலகில்,
உற்றார், உகந்தார். என வேண்டார், மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்; இடாரே.
சரணம் கொடுத்தாலும் தாம்.18

சேவித்தும், சென்று இரந்தும், தெண் நீர்க்கடல் கடந்தும்,
பாவித்தும், பார் ஆண்டும், பாட்டு இசைத்தும், போவிப்பம்—
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்,
நாழி அரிசிக்கே நாம்.19

அம்மி துணை ஆக ஆறு இழிந்தவாறு ஒக்கும்.
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்; இம்மை
மறுமைக்கும் நன்று அன்று; மா நிதியம் போக்கி,
வெறுமைக்கு வித்து ஆய்விடும்.20

நீரும், நிழலும், நிலம் பொதியும் நெற்கட்டும்,
பேரும், புகழும், பெரு வாழ்வும், ஊரும்,
வரும் திருவும், வாழ்நாளும், வஞ்சம் இல்லார்க்கு என்றும்
தரும்—சிவந்த தாமரையாள்தான்.21

பாடு பட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து,
கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார்.
பாலிகாள்! அந்தப் பணம்?22

வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே;
பாதாள மூலி படருமே மூதேவி
சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே;—
மன்று ஓரம் சொன்னார் மனை.23

நீறு இல்லா நெற்றி பாழ்; நெய் இல்லா உண்டி பாழ்
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்: மாறு இல்
உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ்; பாழே,
மடக்கொடி இல்லா மனை.24

ஆன முதலில் அதிகம் செலவு ஆனால்,
மானம் அழித்து, மதி கெட்டு, போன திசை
எல்லார்க்கும் கள்ளன் ஆய், ஏழ் பிறப்பும் தீயன் ஆய்,
நல்லார்க்கும் பொல்லன் ஆம்; நாடு!25

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை,
தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல்,—பத்தும்
பசி வந்திடப் போம் பறந்து.26

ஒன்றை நினைக்கின், அது ஒழிந்திட்டு, ஒன்று ஆகும்;
அன்றி அது வரினும், வந்து எய்தும்; ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும், நிற்கும்;—
எனை ஆளும் ஈசன் செயல்.27

உண்பது நாழி; உடுப்பது நான்கு முழம்;
எண்பது கோடி நினைந்து எண்ணுவன; கண் புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை, மண்ணின் கலம் போல,
சாந்துணையும் சஞ்சலமேதான்.28

மரம் பழுத்தால் வௌவாலை,'வா' என்று கூவி,
இரந்து அழைப்பார் யாரும் அங்கு இல்லை; சுரந்து அமுதம்
சுற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்.
உற்றார், உவகத்தவர்.29

தாம் தாம் முன் செய்த வினை தாமே அனுபவிப்பார்,
பூந்தாமரையோன் பொறி வழியே;—வேந்தே!—
ஒறுத்தாரை என் செயலாம்? ஊர் எல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி?30

இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று; சால
ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று; வழுக்குடைய
வீரத்தின் நன்று விடா நோய்; பழிக்கு அஞ்சாத்
தாரத்தின் நன்று, தனி31

ஆறு இடும் மேடும் மடுவும் போல், ஆம் செல்வம்
மாறிடும் ஏறிடும்;— மா நிலத்திர்!—சோறு இடும்;
தண்ணீரும் வாரும்; தருமமே சார்பு ஆக,
உள் நீர்மை வீறும், உயர்ந்து.32

வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது; நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்கு விடாப் பாறை, பசு மரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.33

கல்லானே ஆனாலும். கைப் பொருள் ஒன்று உண்டாயின்,
எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர்: இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்று எடுத்த தாய் வேண்டாள்;
செல்லாது, அவன் வாயில் சொல்.34

பூவாதே காய்க்கும் மாமும் உள; மக்களுளும்
ஏவாதே நின்று உணர்வார்தாம் உளரே; தூவா
விரைத்தாலும் நன்று ஆகா வித்து எனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது. உணர்வு.35

நண்டு, சிப்பி, வேய், கதலி, நாசம் உறும் காலத்தில்,
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல்—ஒண்டொடீஇ!—
போதம், தனம், கல்வி, பொன்ற வரும் காலம் அயல்-
மாதர்மேல் வைப்பார், மனம்.36

வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்து ஆய நூலகத்தும் இல்லை; நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால், கவலை படேல்; நெஞ்சே!— மெய்
விண் உறுவார்க்கு இல்லை, விதி.37

நன்று என்றும் தீது என்றும், நான் என்றும் தான் என்றும்,
அன்று என்றும் ஆம் என்றும், ஆகாதே நின்ற நிலை
தான் அது ஆம் தத்துவம் ஆம்; சம்பு அறுத்தார், யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.38

முப்பதாம் ஆண்டு அளவில், மூன்று அற்று, ஒரு பொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறாள் ஆயின், செப்பும்
கலை அளவே ஆகும்ஆம் காரிகையார் தங்கள்
முலை அளவே ஆகும் ஆம், மூப்பு.39

தேவர் குறளும், திரு நான்மறை முடிவும்,
மூவர் தமிழம், முனி மொழியும் கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்,
ஒரு வாசகம் என்று உணர்.40

"https://ta.wikisource.org/w/index.php?title=நீதிக்_களஞ்சியம்/நல்வழி&oldid=1548429" இலிருந்து மீள்விக்கப்பட்டது