வல்லிக்கண்ணன்149
முத்துமாலை பெருமூச்செறிந்தான். “என்ன வாழ்க்கை! என்ன மனுசங்க! எனக்கு எதுவுமே பிடிக்கலே” என்றான்.
—சே, திரிபுரம் என்னன்னமோ பேசிப் போட்டா! அவ என்னை புரிஞ்சுக்கிடவே இல்லையே!
இதை அவன் வாய்விட்டுச் சொல்லவில்லை.
—அவளை நெனைக்கையிலே பாவமாகத்தான் இருக்கு. திரிபுரம்தான் என்ன செய்வா பாவம்.
வேதனையால் குமைந்து புழுங்கினான் முத்துமாலை.
அன்று வழக்கம் போல்தான் பொழுது விடிந்தது.
ஆனால், சிவபுரத்துக்கு அது வழக்கம் போல் மற்றும் ஒரு நாளாக அமையவில்லை. விபரீதமான செய்தியை வைத்திருந்தது. இருட்டு. விடிவின் பேரொளி அந்த ஊர்க்காரர்களுக்கு அதிர்ச்சியைக் கொண்டு தந்தது.
—ஐயோ, இப்படியும் நடக்குமா!... அவனுக்கு இது மாதிரிச் சாவு வரும்னு யாரு நெனச்சா?... முத்துமாலை திடீர்னு செத்துப் போவான்னு யாரு கண்டது?...
—பாவி போயிட்டானே... ஊரை ஊரை சுத்தி வருவானே... சவத்து மட்டை குடிச்சுக் குடிச்சுக் கெட்டான்.
—குடிகாரனாத் திரிஞ்சாலும் யாருக்குமே தீங்கு செய்யமாட்டானே. நன்மையை நெனச்சு நல்லதுகளைச் செய்யனுமின்னுதான் அலைஞ்சான்! இப்படியா பொட்டுப் பொடுக்குன்னு போகணும்?
இந்த விதமாகவும் இன்னும் பலவாறும் பேசினார்கள். ஆண்களும் பெண்களும் ஆற்றாமையோடு புலம்பினார்கள்.