திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"யூதித்து மெராரியின் மகள்...யூதித்தின் கணவர் மனாசே...யூதித்து கைம்பெண் ஆனார்...அவர் பார்வைக்கு அழகானவர்; தோற்றத்தில் எழில் மிக்கவர்...யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார்...மூப்பர்கள் வந்தபோது யூதித்து கூறியது: 'இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்? மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்?...'"- யூதித்து 8:1-12

யூதித்து (The Book of Judith)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

பெத்தூலியா மீது முற்றுகை[தொகு]


1 மறுநாள் ஒலோபெரின் தன் படை முழுவதற்கும்,
தன்னுடன் சேர்ந்து போரிட வந்திருந்த
எல்லா வீரர்களுக்கும் கட்டளையிட்டு,
பெத்தூலியாவை எதிர்த்துப் படையெடுத்துச் சென்று,
மலைப்பாதைகளைக் கைப்பற்றவும்,
இஸ்ரயேலருக்கு எதிராய்ப் போர்தொடுக்கவும் கூறினான்.
2 அன்றே படைவீரர் யாவரும் அணிவகுத்துச் சென்றனர்;
அவர்களின் எண்ணிக்கை வருமாறு:
காலாட் படையினர் ஓர் இலட்சத்து எழுபதாயிரம்;
குதிரைப் படையினர் பன்னிரண்டாயிரம்;
மற்றும் தேவையான பொருள்களைக்
கால்நடையாய் எடுத்துச் சென்றோர் மாபெரும் தொகையினர்.
3 அவர்கள் பெத்தூலியாவுக்கு அருகே பள்ளத்தாக்கில்
நீருற்றையொட்டிப் பாசறை அமைத்தார்கள்;
அகல அளவில் தோத்தானிலிருந்து பெல்பாயிம்வரையும்,
நீள அளவில் பெத்தூலியாவிலிருந்து எஸ்திரலோனுக்கு எதிரே இருந்த
கியமோன்வரையும் பரவியிருந்தார்கள்.


4 இஸ்ரயேலர், பெருந்திரளாய் வந்த பகைவர்களைக் கண்டு
மிகவும் நடுங்கினர்.
"இவர்கள், நாடு முழுவதையும் இப்போது விழுங்கப்போகிறார்கள்.
உயர்ந்த மலைகளோ பள்ளத்தாக்குகளோ குன்றுகளோ
அவர்களின் பளுவைத் தாங்கா" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
5 எனினும் அவர்கள் ஒவ்வொருவரும் படைக்கலம் தாங்கியவராய்,
தங்கள் காவல்மாடங்களில் தீமூட்டி
அன்று இரவு முழுவதும் காவல் புரிந்தார்கள்.


6 இரண்டாம் நாள் ஒலோபெரின் தன் குதிரைப்படை முழுவதையும்
பெத்தூலியாவில் இருந்த இஸ்ரயேலர் காணும்படி
அணிவகுத்துச் செல்லுமாறு செய்தான்;
7 இஸ்ரயேலருடைய நகருக்குச் செல்லும் வழிகளை மேற்பார்வையிட்டான்;
நீரூற்றுகளைத் தேடிப்பார்த்துக் கைப்பற்றி,
படைவீரர்களை அவற்றுக்குக் காவலாக நிறுத்தினான்;
பிறகு தன் படையிடம் திரும்பினான்.
8 ஏதோமிய மக்களுடைய ஆளுநர்கள் அனைவரும்,
மோவாபிய மக்களின் தலைவர்கள் அனைவரும்,
கடலோரப் பகுதிகளின் படைத்தலைவர்களும்
அவனிடம் வந்து பின்வருமாறு கூறினார்கள்:
9 "எங்கள் தலைவரே, உமது படைக்குத் தோல்வி ஏற்படாமலிருக்க
நாங்கள் சொல்வதைக் கேளும்.
10 இந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஈட்டிகளையல்ல
தாங்கள் வாழும் உயர்ந்த மலைகளையே நம்பியிருக்கிறார்கள்;
ஏனென்றால், அவர்களுடைய மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்வது எளிதன்று.
11 ஆகவே, தலைவரே,
வழக்கமான அணிவகுப்பு முறையை மாற்றியமைத்துப் போர் புரிந்தால்,
உம் ஆள்களுள் ஒருவர்கூட அழியமாட்டார்.
12 உமது கூடாரத்திலேயே நீர் தங்கியிரும்;
உம்முடைய படைவீரர்கள் எல்லாரும்
தங்களது இடத்திலேயே இருக்கட்டும்.
ஆனால், உம் பணியாளர்கள்
மலையடிவாரத்திலிருந்து சுரக்கும் நீரூற்றைக் கைப்பற்றிக்கொள்ளட்டும்.
13 ஏனெனில், பெத்தூலியாவில் வாழ்பவர்கள் யாவரும்
இதிலிருந்துதான் தண்ணீர் எடுக்கின்றனர்.
இதனால் தாகமே அவர்களைக் கொன்றுவிடும்.
அவர்கள் தங்களது நகரைக் கையளித்து விடுவார்கள்.
இதற்கிடையில் நாங்களும் எங்கள் ஆள்களும்
அருகில் உள்ள மலையுச்சிகளுக்கு ஏறிச்சென்று,
அங்குப் பாசறை அமைத்து,
ஒருவரும் நகரைவிட்டு வெளியேறாதவாறு பார்த்துக்கொள்வோம்.
14 அவர்களும் அவர்களின் மனைவியரும்
மக்களும் பசியால் நலிவுறுவார்கள்;
வாளுக்கு இரையாகுமுன்பே
தாங்கள் வாழும் நகரின் தெருக்களில் அவர்கள் மடிந்துகிடப்பார்கள்.
15 அவர்கள் உம்மை அமைதியாய் ஏற்றுக்கொள்ளாமல்
கிளர்ச்சி செய்ததற்குத் தண்டனையாக
அவர்களுக்கு இவ்வாறு தீங்கிழைப்பீர்."


16 அவர்களுடைய கூற்று ஒலோபெரினுக்கும்
அவனுடைய பணியாளர்கள் யாவருக்கும் ஏற்றதாய் இருந்தது.
ஆகையால், அவர்கள் சொன்னபடியே செய்ய அவன் கட்டளையிட்டான்.
17 எனவே, அம்மோனியப் படைவீரர்கள்
அசீரியப் படைவீரர்கள் ஐயாயிரம் பேருடன் சேர்ந்து முன்னேறிச் சென்று,
பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து,
இஸ்ரயேலருக்குத் தண்ணீர் கிடைக்காதவாறு
அவர்களின் நீரூற்றுகளைக் கைப்பற்றினார்கள்.
18 ஏசாவின் மக்களும் அம்மோனியரும் ஏறிச்சென்று
மலை நாட்டில் தோத்தானுக்கு எதிரே பாசறை அமைத்தார்கள்;
தங்களுள் சிலரைத் தென் கிழக்கில் எக்ரபேலுக்கு எதிரில் அனுப்பினார்கள்.
இது மொக்மூர் என்ற ஓடை ஓரத்தில் அமைந்திருந்த
கூசு என்ற இடத்துக்கு அருகே இருந்தது.
அசீரியரின் எஞ்சிய வீரர்கள் சமவெளியில் பாசறை அமைத்து
நாடு முழுவதையும் நிரப்பினார்கள்.
அவர்களுடைய கூடாரங்களும் பொருள்களும்
பெரியதொரு பாசறையாக அமைந்து நெடுந்தொலை பரவியிருந்தன.


19 உள்ளம் தளர்ந்துபோன இஸ்ரயேலர்
தங்கள் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கதறினர்;
ஏனெனில், அவர்களைச் சூழ்ந்துகொண்ட பகைவர்களிடமிருந்து
தப்பிக்க வழியே இல்லை.
20 காலாட்படை, தேர்ப்படை, குதிரைப்படை அடங்கிய
அசீரியரின் படைத்திரள் முழுவதும்
முப்பத்துநான்கு நாள் இஸ்ரயேலரைச் சூழ்ந்து கொள்ள,
பெத்தூலியாவில் வாழ்ந்தவர்கள் அனைவருடைய
தண்ணீர்க் கலன்களும் வெறுமையாயின.
21 நீர்த்தொட்டிகள் வறண்டுகொண்டிருந்தன.
ஒரு நாளாவது தாகம் தீரக் குடிக்கப்
போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை;
அவர்களுக்குக் குடிநீர் அளவோடு தான் கொடுக்கப்பட்டது.
22 அவர்களின் குழந்தைகள் சோர்வுற்றார்கள்;
பெண்களும் இளைஞர்களும் தாகத்தால் மயக்கமடைந்து
நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள்;
ஏனெனில், அவர்களிடம் வலுவே இல்லை.


23 இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லாரும்
ஊசியாவிடமும் நகரின் பெரியோர்களிடமும் கூட்டமாய்ச் சென்று
உரத்த குரல் எழுப்பினார்கள்;
மூப்பர்கள் அனைவர் முன்னும் பின்வருமாறு கூறினார்கள்:
24 "நமக்கிடையே கடவுள் தீர்ப்பு வழங்கட்டும்.
அசீரியருடன் நீங்கள் சமாதானம் செய்து கொள்ளாததால்,
நமக்குப் பெரும் அநீதி இழைத்திருக்கிறீர்கள்.
25 இப்போது நமக்கு உதவி செய்வார் யாரும் இல்லை.
நாம் தாகத்தாலும் பேரழிவாலும்
அவர்கள்முன் தலைகுனியும்படி
கடவுள் நம்மை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
26 உடனே அவர்களை அழையுங்கள்;
நகர் முழுவதையும் சூறையாடும்படி
ஒலோபெரினின் வீரர்களிடமும்
அவனுடைய படைகளிடமும் கையளியுங்கள்.
27 ஏனெனில், அவர்களால் சிறைப்பிடிக்கப்படுவது நமக்கு மேலானது.
அதனால் நாம் அவர்களுக்கு அடிமைகளாவோம்;
ஆனால் நமது உயிர் காப்பாற்றப்படும்.
மேலும் நம் கண்முன்னேயே நம் குழந்தைகள் சாவதையும்,
நம் மனைவி மக்கள் உயிர்விடுவதையும் காணமாட்டோம்.
28 விண்ணையும் மண்ணையும்,
நம் கடவுளையும் நம் மூதாதையரின் ஆண்டவரையும்
உங்களுக்கு எதிர்ச் சாட்சிகளாக அழைக்கிறோம்;
அவர் நம் பாவங்களுக்கு ஏற்பவும்,
நம் மூதாதையரின் பாவங்களுக்கு ஏற்பவும் நம்மைத் தண்டிப்பவர்.
நாங்கள் சொன்னவாறு கடவுள் இன்று நிகழாமல் பார்த்துக்கொள்வாராக."


29 அப்பொழுது மக்கள் கூட்டத்திலிருந்து
ஒருமித்த பெரும் புலம்பல் எழுந்தது.
அவர்கள் எல்லாரும் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி
உரத்த குரலில் மன்றாடினார்கள்.
30 ஊசியா அவர்களை நோக்கி,
"சகோதரர்களே, துணிவு கொள்ளுங்கள்;
மேலும் ஐந்து நாளுக்குப் பொறுத்துக் கொள்வோம்.
அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கங் காட்டுவார்;
அவர் நம்மை முற்றிலும் புறக்கணித்துவிடமாட்டார்.
31 ஐந்து நாள் கடந்த பின்னும் நமக்கு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்றால்,
நீங்கள் சொன்னவாறே செய்கிறேன்" என்று கூறினார்.
32 பிறகு மக்கள் கலைந்து
தாங்கள் காவல்புரிய வேண்டிய இடங்களுக்கு அவர் போகச் செய்தார்.
அவர்கள் நகரின் மதில்களுக்கும் கோட்டைகளுக்கும் சென்றார்கள்;
பெண்களும் பிள்ளைகளும் அவரவர் தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்;
நகரெங்கும் மக்கள் பெரிதும் சோர்வுற்றிருந்தார்கள்.


அதிகாரம் 8[தொகு]

2. யூதித்து வழியாகக் கிடைத்த வெற்றி[தொகு]

கைம்பெண் யூதித்து[தொகு]


1 அக்காலத்தில் யூதித்து இதைப்பற்றிக் கேள்விப்பட்டார்.
யூதித்து மெராரியின் மகள்;
மெராரி ஓசின் மகன்; ஓசு யோசேப்பின் மகன்;
யோசேப்பு ஓசியேலின் மகன்; ஓசியேல் எல்க்கியாவின மகன்;
எல்க்கியா அனனியாவின் மகன்; அனனியா கிதியோனின் மகன்;
கிதியோன் ரெபாயிம் மகன்; ரெபாயிம் அகித்தூபின் மகன்;
அகித்தூபு எலியாவின் மகன்; எலியா இல்க்கியாவின் மகன்;
இல்க்கியா எலியாபின் மகன்; எலியாபு நத்தனியேலின் மகன்;
நத்தனியேல் சலாமியேலின் மகன்; சலாமியேல் சரசதாயின் மகன்;
சரசதாய் இஸ்ரயேலின் மகன்.
2 யூதித்தின் கணவர் மனாசே.
அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் மனாசே இறந்துபோனார்.
3 அவர் தம் வயலில் கதிர்களைச்
சேர்த்துக் கட்டிக் கொண்டிருந்தவர்களை மேற்பார்வையிட்டபொழுது,
கடும் வெயில் அவரது தலையைத் தாக்கவே,
அவர் படுத்த படுக்கையானார்;
பின் தம் நகரான பெத்தூலியாவில் உயிர் துறந்தார்;
தோத்தானுக்கும் பால்மோனுக்கும் இடையில் இருந்த வயலில்
தம் மூதாதையரின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.


4 யூதித்து கைம்பெண் ஆனார்;
மூன்று ஆண்டு நான்கு மாதமாய்த் தம் இல்லத்திலேயே இருந்தார்.
5 தம் வீட்டின் மேல்தளத்தில் தமக்காகக்
கூடாரம் ஒன்று அமைத்துக்கொண்டார்;
இடுப்பில் சாக்கு உடை உடுத்தியிருந்தார்;
கைம்பெண்ணுக்குரிய ஆடைகளை அணிந்திருந்தார்;
6 தம் கைம்மைக் காலத்தில்
ஓய்வுநாளுக்கு முந்தினநாளும் ஓய்வுநாள் அன்றும்,
அமாவாசைக்கு முந்தின நாளும் அமாவாசை அன்றும்,
இஸ்ரயேல் இனத்தாருக்குரிய திருநாள்கள்,
மகிழ்ச்சியின் நாள்கள்தவிர மற்ற நாள்களில் நோன்பிருந்துவந்தார்.
7 அவர் பார்வைக்கு அழகானவர்;
தோற்றத்தில் எழில் மிக்கவர்.
ஆண் பெண் பணியாளர்களோடு
பொன், வெள்ளி, கால்நடைகள்,
வயல்கள் ஆகியவற்றை அவர் கணவர் மனாசே
அவருக்கு விட்டுச்சென்றிருந்தார்.
இவையெல்லாம் யூதித்தின் உடைமையாயின.
8 யூதித்து கடவுளுக்கு மிகவும் அஞ்சி நடந்தார்.
அவரைப்பற்றி யாரும் தவறாகப் பேசியதில்லை.

யூதித்தும் நகர மூப்பர்களும்[தொகு]


9 தண்ணீர்ப் பஞ்சத்தால் மக்கள் மிகவும் சோர்வுற்று,
ஆளுநருக்கு எதிராகக் கூறியிருந்த கடுஞ் சொற்களையும்,
ஐந்து நாள்களுக்குப்பின் நகரை
அசீரியரிடம் கையளிக்கப் போவதாக
ஊசியா ஆணையிட்டுக் கூறியிருந்த அனைத்தையும்
யூதித்து கேள்வியுற்றார்.
10 உடனே தம் நகரின் மூப்பர்களான ஊசியா, காபிரி, கார்மி
ஆகியோரை அழைத்து வருமாறு,
தன் உடைமைகளையெல்லாம் கண்காணித்துவந்த
தம் பணிப்பெண்ணை அனுப்பிவைத்தார்.


11 மூப்பர்கள் வந்தபோது யூதித்து
"பெத்தூலியாவில் வாழும் மக்களின் ஆளுநர்களே,
நான் சொல்வதைக் கேளுங்கள்;
இன்று மக்களிடம் நீங்கள் கூறிய சொற்கள் முறையற்றவை.
ஆண்டவர் தம் மனத்தை மாற்றி,
குறித்த நாளுக்குள் நமக்கு உதவி அளிக்காவிடில்
இந்த நகரை நம் எதிரிகளிடம் ஒப்புவிக்கப்போவதாக
நீங்கள் உறுதி அளித்துக் கடவுள்மேல் ஆணையிட்டிருக்கிறீர்கள்.
12 இன்று கடவுளைச் சோதிக்க நீங்கள் யார்?
மனிதர் நடுவே கடவுளுக்கு மேலாக
உங்களையே உயர்த்திக் கொள்ள நீங்கள் யார்?
13 இப்போது, எல்லாம்வல்ல ஆண்டவரைச் சோதிக்கின்றீர்கள்;
ஆனால் நீங்கள் எதையும் என்றுமே அறிந்து கொள்ளப்போவதில்லை.
14 மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது;
மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது.
அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை
எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்?
அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்?
அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்?
சகோதரர்களே, நம் கடவுளாகிய ஆண்டவரின் சினத்தைத் தூண்டி விடாதீர்கள்.
15 இந்த ஐந்து நாள்களில் நமக்கு உதவிபுரிய
அவருக்கு விருப்பமில்லை என்றாலும்,
அவருக்கு விருப்பமான எந்த நேரத்திலும் நம்மைப் பாதுகாக்கவோ
நம் பகைவர்கள் காண நம்மை அழித்து விடவோ
அவருக்கு ஆற்றல் உண்டு.
16 நம் கடவுளாகிய ஆண்டவரின் திட்டங்களுக்கு
நிபந்தனை விதிக்காதீர்கள்;
ஏனெனில், மனிதரை அச்சுறுத்துவதுபோலக்
கடவுளை அச்சுறுத்த முடியாது;
மானிடரை மன்றாட்டினால் மாற்றுவதுபோல்
ஆண்டவரையும் மாற்ற முடியாது.
17 எனவே, அவரிடமிருந்து மீட்பை எதிர்பார்ப்பவர்களாய்,
நமக்கு உதவி செய்ய அவரை மன்றாடுவோம்.
அவருக்கு விருப்பமானால் அவர் நமது மன்றாட்டுக்குச் செவிசாய்ப்பார்.
18 "முற்காலத்தில் நடந்ததுபோல,
நம் தலைமுறையில் நாம் வாழும் இக்காலத்தில்,
நம்மில் எந்தக் குலமோ குடும்பமோ நாடோ நகரமோ
கையால் உருவாக்கப்பட்ட சிலைகளைத்
தெய்வங்களாக வணங்கியதில்லை.
19 அவ்வாறு வணங்கியதால்தான் நம் மூதாதையர்கள் வாளுக்கிரையாகி,
சூறையாடப்பட்டு, நம் எதிரிகளின் முன்னிலையில் அறவே அழிந்தார்கள்.
20 நாம் ஆண்டவரைத் தவிர வேறு கடவுளை அறிந்ததில்லை.
அதனால் அவர் நம்மையோ நம் இனத்தாருள் எவரையுமோ
வெறுத்து ஒதுக்கமாட்டார் என நம்புகிறோம்.
21 நாம் பிடிபட்டால் யூதேயா முழுவதுமே பிடிபடும்;
நம் திருவிடம் கொள்ளையடிக்கப்படும்.
அதன் தூய்மைக்கேட்டுக்குக் கழுவாயாக நாம் குருதி சிந்த வேண்டியிருக்கும்.
22 நம் சகோதரர்களின் படுகொலை, நாட்டின் சிறைப்பட்ட நிலை,
நமது உரிமைச் சொத்தின் பாழ்நிலை ஆகியவற்றுக்கெல்லாம்,
நாம் அடிமைகளாய் இருக்கும் இடமெங்கும்
வேற்றினத்தார் நடுவே நாம் பொறுப்பு ஏற்கச்செய்வார்.
நம்மை அடிமைப்படுத்தியோர் முன்னிலையில்
ஏளனப் பேச்சுக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாவோம்.
23 நம்முடைய அடிமை நிலை நமக்குச் சாதகமாய் அமையாது;
நம் கடவுளாகிய ஆண்டவர் அதை நமக்கு இகழ்ச்சியாக மாற்றுவார்.


24 உடன்பிறப்புகளே,
இவ்வேளையில் நம் சகோதரர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்குவோம்.
ஏனென்றால், அவர்கள் உயிர் நம் கையில் உள்ளது.
அவ்வாறே திருவிடமும் கோவிலும்
பலிபீடமும் நம் பொறுப்பில் உள்ளன.
25 எனினும் நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்;
ஏனெனில், நம் மூதாதையரை அவர் சோதித்ததுபோல நம்மையும் சோதிக்கிறார்.
26 அவர் ஆபிரகாமுக்கு என்ன செய்தார் என்பதையும்,
ஈசாக்கை எவ்வாறு சோதித்தார் என்பதையும்,
யாக்கோபு தம் தாய்மாமன் லாபானின் ஆடுகளை
வட மெசப்பொத்தாமியாவில் [1] மேய்த்துகொண்டிருந்த போது
அவருக்கு என்ன நிகழ்ந்தது என்பதையும் எண்ணிப்பாருங்கள். [2]
27 ஆண்டவர் இவ்வாறு அவர்களின் உள்ளங்களைச்
சோதித்தறியும் பொருட்டு
அவர்களை நெருப்பில் புடமிட்டதுபோல
நம்மைப் புடமிடவில்லை;
நம்மைப் பழிவாங்கவுமில்லை.
ஆனால், தமக்கு நெருக்கமாய் உள்ளோரை எச்சரிக்கும்படி தண்டிக்கிறார்."


28 பின் ஊசியா யூதித்திடம் மறுமொழியாக,
"நீ சொன்னதெல்லாம் உண்மையே.
உன் சொற்களை மறுத்துப் பேசுவார் யாருமில்லை.
29 உனது ஞானம் முதன் முறையாக இன்று வெளிப்படவில்லை;
உன் இளமைமுதலே உன் அறிவுக்கூர்மையை மக்கள் யாவரும் அறிவர்.
நீ நல்ல உள்ளம் கொண்டவள்.
30 ஆனால், மக்கள் கடுந்தாகங் கொள்ளவே,
நாங்கள் முன்பு உறுதி கூறியவாறு செயலாற்றவும்
அதை மீறாதவாறு ஆணையிடவும் எங்களைக் கட்டாயப்படுத்தினார்கள்.
31 நீ இறைப்பற்றுள்ள பெண்.
ஆகையால், இப்போது நமக்காக இறைவனிடம் மன்றாடினால்
ஆண்டவர் மழை பொழியச் செய்து,
நம் நீர்த்தொட்டிகளை நிரப்புவார்.
நாம் இனியும் தாகத்தால் சோர்வு அடைய மாட்டோம்" என்றார்.


32 அதற்கு யூதித்து அவர்களிடம்,
"நான் சொல்வதைக் கேளுங்கள்.
நான் செய்யப்போகும் செயல் நம் வழிமுறையினர் நடுவே
தலைமுறை தலைமுறையாய் நினைவுகூரப்படும்.
33 நீங்கள் இன்று இரவு நகர வாயில் அருகே வந்து நில்லுங்கள்.
அப்போது நான் என் பணிப்பெண்ணுடன் வெளியே செல்வேன்.
நீங்கள் நகரை நம் பகைவர்களிடம் கையளிக்கப்போவதாக
உறுதியளித்த அந்த நாளுக்குள்
ஆண்டவர் என் வழியாக இஸ்ரயேலை விடுவிப்பார்.
34 நான் செய்யப்போவதுபற்றி நீங்கள் ஒன்றும் என்னிடம் கேட்காதீர்கள்.
நான் அதைச் செய்து முடிக்கும்வரை எதுவும் சொல்லமாட்டேன்" என்றார்.


35 அதற்கு ஊசியாவும் ஆளுநர்களும் அவரிடம்,
"நலமே சென்றுவா;
கடவுளாகிய ஆண்டவர் நம் பகைவர்களைப் பழிவாங்க
உன்னை வழி நடத்தட்டும்" என்றார்கள்.
36 பிறகு அவர்கள் அவரது கூடாரத்தை விட்டுத்
தாங்கள் காவல்புரியவேண்டிய இடங்களுக்குத் திரும்பினார்கள்.


குறிப்புகள்

[1] 8:26 - "சிரியா நாட்டைச் சார்ந்த மெசப்பொத்தாமியாவில்"
என்பது கிரேக்க பாடம்.
[2] 8:26 = தொநூ 22:1-18; 25:21; 29:13-31:6.


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை