அறிவுக் கனிகள்/அறிவு

விக்கிமூலம் இலிருந்து

15. அறிவு

298.‘அறிவு’—ஆம், அது நாம் வானுலகு ஏறுதற்குரிய வன் சிறகு.

-ஷேக்ஸ்பியர்

299.கடவுள் ஆலோசிப்பவன் ஒருவனை உலகிற்கு அனுப்பினால், ஜாக்கிரதை! அப்பொழுது அனைத்தும் அபாய நிலை அடையும்!

-எமர்ஸன்

300. எல்லா உடைமைகளிலும் ஞானமே அழியாததாகும்.

ஸாக்ரடீஸ்


301.சாத்தானுக்குச் சிந்தனை செய்பவனைப் போன்ற கொடிய சத்துரு கிடையான்.

கார்லைல்

302.நூலறிவு பேசும் — மெய்யறிவு கேட்கும்.

ஹோம்ஸ்

303.ஞானத்தின் முதல் வேலை தன்னை அறிதல்; அன்பின் முதல் வேலை தனக்குத் தான் போதுமானதாயிருத்தல்.

ரஸ்கின்

304.நுண்ணறிவு அன்புடன் சேர்ந்துவிட்டால் அதனால் அடைய முடியாதது எதுவும் அவனியில் கிடையாது.

கதே

305.மனோ விகாரங்களே வாழ்வாகிய கப்பலைச் செலுத்தும் காற்று. அறிவே அதை நடத்தும் சுக்கான். காற்றின்றேல் கப்பல் நின்றுவிடும். சுக்கானின்றேல் தரை தட்டிவிடும்.

ஷூல்ஜ்

306.வாழ்வு யோசிப்பவனுக்கு இன்ப நாடகம், உணர்பவனுக்குத் துன்ப நாடகம்.

வால்ப்போல்

307.நீ எண்ணுவது எல்லோருக்கும் சொந்தம், நீ உணர்வதே உனக்குச் சொந்தம்.

ஷில்லர்

308.மனிதனுடைய உடைமையா யிருக்கக் கூடியது அறிவு ஒன்றே. ஆகையால் அறிவை விருத்தி செய்வதே ஆசைப்பட்டு அடைய முயலத்தக்க ஒரே வெற்றியாகும்.

பழமொழி

309. உண்மை ஞானம் கண் முன் இருப்பதைக் காண்பதன்று, பின் வருவதை முன் அறிவதாகும்.

டெரன்ஸ்

310. எதை நாம் அறியவில்லையோ அது நம்முடைய தன்று.

கதே

311.ஒரு விஷயத்தைப் பல வாயிலாகப் பார்க்க முடியாத புத்தி குறுகியதாகும்.

ஜார்ஜ் எலியட்

312.தான் தானாகவே இருக்க அறிவதே உலகில் பெரிய விஷயம்.

மான்டெய்ன்

313.அறிவின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை வெறுப்பது; அன்பின் முதல் பாடம் ஐஸ்வரியத்தை அனைவருக்குமாகச் செய்வது.

ரஸ்கின்

314.உண்மை அறிவு அன்பில் கொண்டு சேர்க்கும்.

வோர்ட்ஸ்வொர்த்

315.உண்மையின் பெருங்கடல் நம்மால் அறியப்படாமல் பரந்து கிடக்கின்றது. நாமோ, கடற்கரையில் விளையாடி, அங்குமிங்கும் ஓடி, அழகான ஒரு சிப்பியையும் மெல்லிய ஒரு கடற் பாசியையும் கண்டு மகிழ்ந்து நிற்கும் சிறு குழந்தைகளைப் போல் இருக்கிறோம்.

ஆவ்பரி
செஸ்டர்டன்

316. சாஸ்திரிகளைப் போல் சாமர்த்தியமாய் அஞ்ஞானம் பேசுவதைவிட, சான்றோர்களைப்போல் சாமர்த்தியமின்றி ஞானம் பேசுதலே சாலச் சிறந்ததாகும்.

செஸ்டர்டன்

317.கூடிய மட்டும் துன்பம் விளையாமல் தடுத்துக் கொள்வதும், தடுக்கமுடியாத துன்பத்தைக் கூடிய மட்டும் பயன்படுத்திக் கொள்வதுமே அறிவு ஆகும்.

ரஸ்கின்
318.என்னை நகைக்கச் செய்வன நம் அறியாமைகள் அல்ல-நம் அறிவுகளேயாகும்.
மான்டெய்ன்

319.ஜீவனத்துக்கான சாதனமாக மட்டுமன்று, ஜீவிதத்துக்கான சாதனமாகவும் மனிதனுக்கு அறிவு தேவை.

ஆவ்பரி

320.நூலறிவு பெற்றவன் குளத்தை யொப்பான்; மெய்யறிவு உடையவன் சுனையை யொப்பான்.

ஆல்ஜெர்

பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். நம் அனைவரையும் ஒன்றாய் இயக்கத்தக்கது அதுவே. ஆனால், ஐயோ, நாம் அதைத்தான் நம்புவதில்லையே!

டால்ஸ்டாய்
டெனிஸன்


322.நூலறிவு வந்துவிடும், மெய்ஞ்ஞானம் வரத் தயங்குகின்றது.

டெனிஸன்

323.பிறர் வாசித்திருந்த அளவு நானும் வாசித்திருந்தால் அவர்களைப் போலவே நானும் அறிவில்லாதவனா யிருப்டபேன்.

ஹாப்ஸ்

324.அறிவாளி தன்னை மட்டும் உடையவனாயிருந்தால் போதும், அவன் ஒருபொழுதும் எதையும் இழப்பதில்லை.

மான்டெய்ன்

325.தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்குப் பெரிய வழி.

டிஸ்ரேலி

326.கற்றதை எல்லாம் முழுதும் மறக்க முடிந்த பொழுதே நாம் உண்மையில் அறிய ஆரம்பிக்கிறோம்.

தோரோ

327.தன்னலமின்மையும் நாணமுமே மெய்ஞ்ஞானத்தின் இலட்சணம்.

ரஸ்கின்
328.தன்னைப் பூரணமாய் அறியாதவன் ஒரு நாளும் பிறரைச் சரியாக அறிய முடியாது.
நோவாலிஸ்


329. பயபக்தியில்லாத அறிவு அறிவாகாது. அது மூளை அபிவிருத்தியாயிருக்கலாம் அல்லது கைத்தொழில் அறிவாயிருக்கலாம். ஆனால் ஆன்ம அபிவிருத்தியாக மட்டும் இருக்காது.

கார்லைல்

330.அறிஞர் பகைவரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வர்.

அரிஸ்டோபீனிஸ்

331.அறிவு பெற ஆற்றலுடைய ஒருவன் அறிவிலியாயிருப்பதைப் போன்ற துக்ககரமான விஷயம் வேறு எதுவுமில்லை.

கார்லைல்

332.ஆறாத மரத்தை வேலைக்கு அதிகமாக உபயோகிக்கக் கூடாது — அதுபோல்தான் பண்படாத அறிவையும்.

ஹோம்ஸ்

333.அறிய முடியாததையும் அறிய முடியும் என்று நம்புவதை ஒருநாளும் கைவிடற்க. இன்றேல் அதைத் தேடப் போவதில்லை.

கதே

334.நாம் அறிவதின் அளவு சுருங்குவதே நாம் அறிவில் முன்னேற்றம் அடைவதைக் காட்டும்-இப்படிக் கூறுவது முரணாகத் தோன்றலாம், ஆனால் உண்மையே ஆகும்.

ஹாமில்டன்

335. பக்தர் ‘தன்’னைத் துறத்தல் போலவே அறிஞரும் 'தன்'னைத் துறத்தல் அவசியமானதே.

எமர்ஸன்

336.அறிவிலிகள் அறிவாளிகள் மூலம் பயன்பெறுவதைக் காட்டிலும் அறிவாளிகள் அறிவிலிகள் மூலம் அதிகமாகப் பயன்பெறுவர்.

கேடோ
337.முடியுமானால் பிறரைவிட அறிவாளியாயிரு. ஆனால் அதை அவர்களிடம் கூறாதே.
செஸ்டர்பீல்டு

338.வித்தையில் விருப்பமுடையவன், தன்னை முழுவதும் அதற்குத் தத்தம் செய்யவும், அதிலேயே தன் வெகுமதியைக் காணவும் திருப்தியுடையவனாயிருக்க வேண்டும்.

டிக்கன்ஸ்

339.பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும்.

பிரெஞ்சுப் பழமொழி

340.ஒரு பிராணி வாழ்வதைக் கண்டு நீ ஆனந்திக்கும் அளவே நீ அதை அறிய முடியும். வேறு வழியில் முடியாது.

ரஸ்கின்

341.ஜலக் குமிழி தங்கக் கட்டிக்குச் சமானமாகுமானால் உயர்ந்த மூளையும் உண்மையான உள்ளத்திற்குச் சமானமாகும்.

ஹோம்ஸ்

342.நூலறிவு அதிகம் கற்று விட்டதாக அகத்தில் கர்வம் கொள்ளும். மெய்ஞ்ஞானம் இன்னும் அறிய வேண்டியது அதிகம் என்று தாழ்ச்சி சொல்லும்.

கெளப்பர்

343.சாக்கடை நீரில் குப்பையைக் காண்பதா, அல்லது வானத்தைக் காண்பதா? — உன் இஷ்டம்.

ரஸ்கின்

344.மெய்ஞ்ஞானம் கடவுளிடம் அடக்கத்தையும், ஜீவர்களிடம் அன்பையும், தன்னிடம் அறிவையும் உண்டாக்கும்.

ரஸ்கின்

345.அறிவுள்ள பிராணியாயிருப்பதில் அதிக செளகரியமே. அதைக்கொண்டு விரும்பியது எதற்கும் காரணம் சிருஷ்டித்துவிடலாம் அல்லவா?

பிராங்க்லின்

346.தன் உபயோகத்திற்கும் அவசியத்திற்கும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளாதவன் வேறு எவற்றை அறிந்திருந்தாலும் அறிவில்லாதவனே ஆவான்.

டிலட்ஸன்

347.யோசனை செய்யாதிருக்கக்கூடிய இடம் மரண சயனம் ஒன்றே. ஆனால் யோசனை செய்வதை அந்த இடத்திற்காக ஒருபொழுதும் விட்டுவைக்கக் கூடாது.

ரஸ்கின்
இப்ஸன்

 348.அறிவின் முன்னணியில் போர் புரிவோர்க்குப் பெரும்பான்மையோர் ஆதரவு ஒரு நாளும் கிடைப்பதில்லை.

இப்ஸன்

349.ஒன்றும் அறியாதவன் தான் கற்றுக்கொண்டதைப் பிறர்க்குக் கற்றுக் கொடுப்பதாய் நம்பிக்கொள்கிறான். அதிகம் அறிந்தவன் தான் கூறுவது பிறர் அறிந்திருக்க முடியாது என்று நினைப்பதில்லை.

லா புரூயர்

350.குறைந்த பட்சத் தீமையும், கூடிய பட்ச நன்மையும் விளையும்படி வாழ்வதே உலகில் தலை சிறந்த ஞானமாகும்.

ரொமெய்ன் ரோலண்டு

351.குறுகிய புத்தியுள்ள மனிதர் குறுகிய கழுத்துள்ள பாட்டில்களை ஒப்பர். அகத்தில் அற்பமாயிருந்தால் புறத்தில் ஊற்றும்பொழுது அதிகச் சப்தம் செய்யும்.

ஸ்விப்ட்

352.தீயவன் ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. ஆம், ஒருநாளும் மெய்யறிவு பெற்றதில்லை. இது முக்காலும் உண்மை.

போப்

353. அறியாமை ஆண்டவன் சாபம், அறிவு தேவர் உலகத்திற்குக் கொண்டு செல்லும் சிறகு.

ஷேக்ஸ்பியர்


354.'அறியாமை'யால் நமக்குச் செளகரியங்கள் கிடையாமல்போகும் என்பது மட்டுமன்று-நமது கேட்டிற்கு நம்மையே வேலை செய்யத் துண்டுவதும் அதுவே. அது அறிவு 'இன்மை' என்பது மட்டும் அன்று-சதா காலமும் துன்பம் தந்துகொண்டிருக்கும் தவறுகளின் 'நிறைவு'ம் ஆகும்.

ஸாமுவேல் பெய்லி


355.‘பார்க்க மாட்டோம்’ என்று சாதிக்கும் அளவுக்குக் குருடாயுள்ளவர் உலகில் கிடையார்.

ஸ்விப்ட்


356.ஒருவனுக்கு அறிவிருந்தும் ஆற்றல் இல்லையாகில் அவன் வாழ்வு பாழே.

ஷாம்பர்ட்

357. கண் குருடு என்று இரங்குவதுபோலவே அறிவு சூனியம் என்பதற்கும் இரங்க வேண்டும்.

செஸ்டர்பீஸ்டு


358.மூளையின் முன்புறம் (அறிவு) பின்புறத்தை (உணர்ச்சியை) உறிஞ்சி உலர்த்திவிடுமானால் கேடே. அறிவினால் மட்டுமே நம்மை பெற்றுவிட முடியாது. விசாலமான நெற்றிக்கே எப்பொழுதும் இறுதியில் வெற்றி. ஆனால் வெற்றி கிடைப்பது தலையின் பின்புறம் மிகப்பருமனாயுள்ள பொழுதே.

ஜே.ஆர்.லவல்

359. அறிஞனுக்கு அனைத்துலகும் தாய்நாடே. சாந்தமான மனத்திற்கு எந்த இடமும் அரண்மனையே.

லில்லி

360.அறிவிலி இடத்தையும் காலத்தையும் குறுக்க விரும்புகிறான். அறிஞனோ அவற்றை நீட்டவே விரும்புகிறான்.

ரஸ்கின்
361.தனக்குத்தானே வழிகாட்டி என்னும் வண்ணம் போதுமான அறிவுடையார் யாருமிலர்.
அக்கம்பிஸ்

362.வாழ்விடமிருந்தோ மக்களிடமிருந்தோ அதிகமாக எதிர்பாராதிருத்தலே மெய்யறிவின் ஜீவ அம்சமாகும்.

மார்லி

363.ஏறிக்கொள்ள அசுரனுடைய தோள்கள் கிடைக்குமானால் குள்ளன் அசுரனைவிட அதிகத் துரம் பார்க்க முடியும்.

கோல்ரிட்ஜ்

364.ஷேக்ஸ்பியர் என்னைவிட அதிக உயரமுள்ளவரே. எனினும் நான் அவரைவிட அதிகத் தூரம் பார்க்க முடியும். நான் அவருடைய தோள்களின் மேல் அல்லவோ நிற்கின்றேன்!

பெர்னார்டு ஷா

365.ஒன்றுமே அறியாதவன் வாழ்பவன் ஆகமாட்டான்.

கிரேஸியன்
கதே


366. அறிவை எதிர்ப்பவர் நெருப்பைக் கிளறுபவர் ஆவார். நெருப்புப் பொறி பறந்து எரிக்க வேண்டாதவற்றையும் எரித்துவிடும்.

கதே

367.ஒருவனுடைய அறிவை அபகரித்துவிட்டால் அவனைச் சிசு நிலைமையில் வைப்பதாகாது; விலங்கு நிலைமையில்—அதுவும் விலங்குகளில் எல்லாம் அதிகத் துஷ்டத்தனமான விலங்கின் நிலைமையில்—வைப்பதேயாகும்.

அர்னால்டு

368.அற்ப அறிவு அபாயகரம் என்றால், அபாயம் நேராத அளவு அதிக அறிவு அடைந்துள்ளவன் எவன்?

ஹக்ஸ்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்_கனிகள்/அறிவு&oldid=999988" இலிருந்து மீள்விக்கப்பட்டது