இறைவர் திருமகன்/நெஞ்சுவக்கும் பிஞ்சுமக்கள்

விக்கிமூலம் இலிருந்து
8. நெஞ்சுவக்கும் பிஞ்சுமக்கள்

ஒரு நாள் ஜோர்டான் ஆற்றங்கரையிலே இயேசுநாதர் போதனை புரிந்து கொண்டிருந்தார். மக்கள் ஏதோ கூட்டமாக அவரைச் சுற்றிச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தின் இடையில் வேதம் எழுதி வைத்திருக்கும் பழைய மதவாதிகள் நின்று அவரைக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது சில தாய்மார்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். சிலர் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டும், சிலர் கையில் பிடித்து நடத்திக் கொண்டும் வந்தார்கள். அவர்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு, இயேசுநாதரின் அருகில் செல்ல முயன்றார்கள்.

"எங்களுக்கு வழிவிடுங்கள். இயேசு நாதரிடம் எங்கள் குழந்தைகளுக்கு வாழ்த்துப்பெற வந்திருக்கிறோம்" என்று அவர்கள் கூட்டத்தினரிடம் முறையிட்டு வழி கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இயேசுநாதரின் சீடர்கள் இதைக் கவனித்தார்கள். விரைந்து அந்தத் தாய்மார்களிடம் வந்தார்கள். கூட்டத்தை விலக்கி அவர்களுக்கு உதவி செய்ய அவர்கள் வரவில்லை. “நீங்கள் இப்போது அவருக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். அவர் இப்போது இன்றியமையாத வேலையில் ஈடுபட்டிருக்கிறார். நீங்கள் அவரைக் காண முடியாது. குழந்தைகளை அழைத்துக் கொண்டு திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறி அவர்களைக் கண்டித்தார்கள். ஆனால் அந்தத் தாய்மார்கள் திரும்பிச் செல்லவில்லை. மீண்டும் கூட்டத்தை நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்புகவே முயன்றார்கள்.

சீடர்கள் திரும்பவும் வந்து அவர்களைத் திருப்பியனுப்ப முற்பட்டார்கள். இருசாராருக்கும் இடையே பேச்சு மிகுந்தது. இந்தக் கூச்சல் இயேசுநாதரின் காதில் விழுந்தது. அவர் என்ன நடக்கிறதென்று கவனித்தார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவர்கள் பேசிக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து வந்தார்.

கோபத்தோடு தாய்மார்களிடம் சச்சர விட்டுக் கொண்டிருந்த தம் சீடர்களை நோக்கி "குழந்தைகளை வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில், அந்தக் குழந்தைகள் இறைவன் பேரரசுக்கு உரியவை" என்று கூறினார்.

தொடர்ந்து அவர் வந்திருந்த சிறுவர்களையும், சிறுமிகளையும் தம் அன்புக் கையினை வைத்து ஆசி கூறினார். சிறு குழந்தைகளைத் தம் கைகளில் ஏந்தி வாழ்த்தினார். அந்தத் தாய்மார்கள் பெருமகிழ்ச்சியடைந்தார்கள்.

இயேசுநாதர் குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதைச் சீடர்கள் இரண்டாவது முறையாகத் தெரிந்து கொண்டார்கள்.