இளையர் அறிவியல் களஞ்சியம்/குளிர்பதனப் பெட்டி

விக்கிமூலம் இலிருந்து

குளிர்பதனப் பெட்டி : கோடை வெயிலின் போது குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பி பானை நீரைப் பருகி மகிழ்கிறோம். இதற்குக் காரணம் பிற பாத்திரங்களில் உள்ள நீரைவிட மண் பானை நீர் குளிர்ச்சி மிக்கதாக இருப்பதேயாகும். மண்பானை நீர் எவ்வாறு விரைந்து குளிர்ச்சியடைகிறது? மண்பானையின் கண்ணுக்குத் தெரியாத நுண் துளைகள் ஏராளமாக உண்டு. அந்நுண் துளைகளின் வழியே கசியும் நீர் ஆவியாகிறது. அவ்வாறு ஆவியாவதற்கு வேண்டிய வெப்பத்தை பானையினின்றும் பெறுவதால் பானை நீரின் வெப்பம் குறைய நீர் குளிர்ச்சியடைகிறது.

இந்த அடிப்படையில் அமைந்திருப்பதே குளிர்பதனப் பெட்டி. நவீன சாதனமாக அமைந்துள்ள இப்பெட்டி மின் விசையால் இயங்குகிறது. இப்பெட்டியின் மேற்பகுதியில் சுருள் குழாய் ஒன்று உண்டு. ஆவியாகக் கூடிய திரவம் அக்குழாய் வழியே செல்லும். ஆவியாவதற்குத் தேவையான வெப்பத்தைப் பெட்டிக்குள் இருக்கும் பொருள்களிலிருந்து பெறுகிறது. இதனால் வெப்பத்தை இழந்த பொருட்கள் குளிர்ச்சியடைகின்றன, ஆவி

குளிர்பதனப்பெட்டி

யான திரவத்தை மீண்டும் திரவ நிலைக்கு மாற்றும் மின்சாதன அமைப்பு அப்பெட்டியிலேயே இருக்கிறது. இவ்வாறு திரவம் ஆவியாவதும் மீண்டும் திரவ நிலைக்கே மாறுவதும் தொடர்ந்து நிகழும் தொடர் நிகழ்ச்சியாகும். இதனால் பெட்டிக்குள் எப்போதும் தாழ்ந்த வெப்பமே நிலைக்க நேரிடுகிறது. உள்ளிருக்கும் பொருள்களும் ஒரே மாதிரி குளிரான நிலையில் இருக்கிறது.

குளிர் பானங்கள் தயாரிக்கவும், காய்கறிகள் பழங்கள், வெண்ணெய் மற்றும் இறைச்சி போன்ற பொருட்கள் கெடாமல் இருக்கப்பயன்படுகிறது. சில வகை மருந்துகளும் கெடாமலிருக்க இதனுள் வைக்கப்படுகிறது.