இளையர் அறிவியல் களஞ்சியம்/நுரையீரல்கள்

விக்கிமூலம் இலிருந்து

நுரையீரல்கள் : ஆங்கிலத்தில் 'லங்க்ஸ்’ (Lungs) என்று அழைக்கப்படும் நுரையீரல்கள் மனிதர்களிடம் மட்டுமல்லாது முதுகெலும்பு உள்ள உயிரினங்களிடத்தும் அமைந்துள்ளன. இதன் மூலம் சுவாசம் நடைபெறுவதால் இது உடலின் மிக முக்கிய உறுப்பாகக் கருத்தப்படுகிறது. கடற்பஞ்சு போன்று அமைந்துள்ள நுரையீரல்கள் வலப்புறம் ஒன்று, இடப்புறம் ஒன்றுமாக இரண்டு உள்ளன.

நுரையீரல்கள் நுண்மையான உறுப்பாதலின் அஃது மிகப் பாதுகாப்பாக மார்புக் கூட்டின் மையமாக உட்புறத்தில் அமைந்துள்ளது. அதைச் சுற்றிலும் மார்பு எலும்புகளும் தசைகளும் உள்ளன. இது சிறு சிறு காற்றறைகளைக் கொண்டு அமைந்துள்ளது. சுமார் 60 கோடி காற்றறைகளைக் கொண்டதாக நுரையீரல்கள் அமைந்துள்ளன என உயிரியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.

நாம் மூச்சை உள்ளே இழுக்கும்போது, உள்ளிழுக்கும் காற்று இந்நுண்ணறைகளுள் சென்று நிறைகின்றன. இதனால் நுரையீரல் விரிவடைகிறது. காற்றை நாம் வெளிவிடும் போது காற்று இந்நுண்ணறைகளை விட்டு வெளியேறுகிறது. இதனால் மீண்டும் சுருங்கிய வடிவைப் பெறுகிறது.

இருபகுதி நுரையீரல்களும் பிரமிடு வடிவில் அமைந்துள்ளன. இவ்விரண்டின் நடுவே உணவுக்குழல், இதயம், இரத்தக்குழாய்கள் உள்ளன. நுரையீரல்கள் மேலே மூச்சுக் குழலுடன் இணைந்துள்ளன.

நுரையீரல் புளுரா (Pleura) எனும் மெல்லிய சவ்வாலான பையினுள் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இது நுரையீரலின் இடையே படர்ந்துள்ள ஒரு வகைத் திரவம். இஃது எளிதாகச் சுருங்கி விரிய உதவுகிறது. நுரையீரலைச் சுற்றியுள்ள தசைகளும் இப்பணியைச் செவ்வனே செய்ய உதவுகின்றன.

உடலில் உள்ள உயிரணுக்களுக்கு வேண்டிய பிராணவாயுவை நுரையீரல்களே அளித்து உதவுகின்றன. உடலெங்கும் ஓடும் இரத்தம், திசுக்களுக்கான உணவுச்சத்தையும் பிராண வாயுவையும் தந்துவிட்டு, அவை தரும் கரிய மிலவாயுவைப் பெற்று நுரையீரல்களுக்கு வழங்குகின்றன. மூச்சு விடும்போது கரியமில வாயு நுரையீரலிலிருந்து வெளியேறி விடுகிறது. மீண்டும் காற்றை உள்ளிழுக்கும் நுரையீரலில் வரும் பிராணவாயு இரத்த ஓட்டம் மூலம்

நுரையீரல்கள் அமைப்பு (மூச்சுக்குழல் பிரிந்துள்ளது)

மீண்டும் உடலெங்கும் சத்துப் பொருளைச் சுமந்து சென்று, இரத்தம் வாயிலாகவே திசுக்களுக்கு அளிக்கிறது. இப்பணி தொடர்ந்து மாறி மாறி நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

சாதாரணமாக ஒருவர் ஒரு நிமிடத்துக்குக் குறைந்தபட்சம் 18 தடவை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகின்றார்.

சில சமயம் நுரையீரலில் நோய்கள் ஏற்படுவதும் உண்டு. அந்நோய்களுள் நியூ மோனியா, காசநோய் ஆகிய இரண்டும் முக்கியமானவைகளாகும். இந்நோய்கள் கண்ட நோயாளிக்குக் காய்ச்சலும் இருமலும் உண்டாகும். சளி கோர்ப்பதால் மூச்சுவிட முடியாமல் திணறவும் நேரிடும். அப்போது செயற்கை சுவாசக் கருவிகளைப் பயன்படுத்தி எளிதாக மூச்சுவிடலாம். இந்நோய்கள் உண்டாகக் காரணம் மூச்சுக்கிளைக் குழல்களில் ஏற்படும் ‘அழற்சி'யே யாகும்.