இளையர் அறிவியல் களஞ்சியம்/புகை

விக்கிமூலம் இலிருந்து

புகை : எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக வெளிப்படுவதே புகையாகும். எரிக்கப்படும் எரிபொருள் முழுமையும் எரிந்தால் புகை ஏதும் வெளிப்படாது

பெரும்பாலான எரிபொருட்கள் கரியம் எனப்படும் கார்பன், நீர் வாயுவாகிய ஹைட்ரஜன், பிராணவாயுவாகிய ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றையும் சிறிதளவு கந்தகம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். சில கனிமங்களின் சாம்பலும் கலந்திருக்கும். இந்த எரிபொருட்கள் முழுமையாக எரிந்து முடிந்தால் இறுதி விளைவாக கார்பன்டையாக்சைடு, நீராவி, நைட்ரஜன் ஆகியவை எஞ்சும். இவை தீங்கற்றவைகளாகும். எரி பொருளில் கந்தகமிருந்தால் கந்தக டையாக்சைடு சிறிதளவு வெளிப்படும். இது காற்றோடு அல்லது ஈரத்தோடு சேரும்போது அரிமான அமில (Corrosive acid) மாக மாறும்.

முழுமையாக எரியும்போது எரிபொருளானது உயர் வெப்பத்தில் ஆக்சிகரணத்துக்காக போதிய அளவு காற்றை எடுத்துக்கொள்ளும். இந்நிலைமை கெட்டித் தன்மையுள்ள எரிபொருட்களுக்குச் சரியாக அமையாது. இதனால் அவை புகையை வெளிப்படுத்துகின்றன. நிலக்கீல்,சத்தற்ற நிலக்கரி (Anthracite), கல் கரி (Coke) போன்றவை எரிக்கப்பட்டால் அவற்றிலிருந்து புகை வெளிப்படுவதில்லை. காரணம், எளிதில் ஆவியாகும் பொருள் எதுவும் அவற்றில் இல்லாததே யாகும்.

நீலக்கீல் (Bituminous coal) கரி குறைந்த வெப்பநிலையில் எரியும்போது உள்ளடங்கியுள்ள வாயு (Gases) வெளிப்படுகிறது. இதில் கலந்துள்ள தூசியும் சாம்பலும் புகையை உருவாக்குகின்றன. இதில் உள்ள தூசியும் சாம்பலும் நிலத்திலும் பிற பரப்பிடங்களிலும் அப்படியே படிகின்றன. சாதாரணமாக ஓரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு ஆண்டுக்கு 60 முதல் 75 டன்கள்வரை படிகின்றன. அதுவே தொழிற்சாலைப்பகுதியாயிருந்தால்இதைவிடப் பத்து மடங்கு அதிகமாகப் படியும்.

புகை பலவிதமான தீங்குகளைத் தோற்றுவிக்கின்றன. இது உடல் நலனைப் பாதிப்பதோடு சொத்துக்களையும் பயிர் பச்சைகளையும் பாதிக்கும். தொழிற்சாலை நிறைந்த பகுதிகளாக இருப்பின் சூரிய ஒளியின் அடர்த்தியைக் குறைக்கிறது. குறிப்பாக உடல் நலனுக்கு இன்றியமையாப்புறஊதாக்கதிர் (Ultra violet)களின் அடர்த்தியைக் குறைத்துத் தீங்கிழைக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையைக் காற்றுச் சிதறடிக்காமல் இருப்பின் தொழிற்சாலை நகரம் நாளெல்லாம் புகை மூட்டத்திலேயே இருக்க வேண்டியது தான். உண்மையில் புகை மூட்டமுள்ள பகுதியில் நுரையீரல், இதய நோய்களால் இறப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும்.

தாவரங்களைப் பொறுத்தவரையில் புகை மிகப்பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது. தாவரங்களை சுவாசிக்கவிடாமல் புகைதடுக்கிறது. தேவையான அளவு சூரிய ஒளிக்கதிர்களைப் பெற முடியாதபடி தாவரங்களின் மேற்ப்ரப்பை புகைப் பொருட்களால் மூடிவிடுகிறது. அவ்வப்போது புகையிலிருந்து வெளிப்படும் அமிலம் தாவரங்களை நேரடியாகவே அழிக்கவும் செய்கிறது.

இத்தகைய பாதிப்புகள் நேராவண்ணம் தடுக்க தற்காலத்தில் புகை உறிஞ்சிக்

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை

கருவிகளைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.