இளையர் அறிவியல் களஞ்சியம்/போலியோ

விக்கிமூலம் இலிருந்து

போலியோ : இதைத் தமிழில் 'இளம்பிள்ளை வாதம்’ என்று கூறுவர். இளம்பிள்ளைகளுக்கு வாத நோயாக வந்து கால்களை முடமாக்கி விடுவதால் இந்நோய் இப்பெயர் பெற்றுள்ளது. மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் ஓரிரு நோய்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அச்சுறுத்தலுக்கு அடிப்படைக் காரணம் இந் நோய் உடலை ஊனப்படுத்துவதேயாகும்.

பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளம் சிறுவர்களைத் தாக்கும் இந்நோய் முதலில் முதுகுத் தண்டு, நரம்பு மண்டலம். உடல் உறுப்புகளின் சில தசைகள் இவற்றைத் தாக்கி முடமாக்குவது இந்நோயின் இயல்பாகும். மிக அரிதாக பெரியவர்களைத் தாக்கி ஊனப்படுத்துவதும் உண்டு. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே ஊனமாகிவிடுவதில்லை. ஒரு சிலரே கடுமையான ஊனத்துக்கு ஆளாகின்றனர்.

பொதுவாக, போலியோ நோய் தாக்கிய இரண்டொரு நாட்களில் தலைவலி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு, வயிற்றோட்டம் போன்ற உடற்கோளாறுகள் ஏற்படும். உடனடியாக வாத நோய் தாக்குவதில்லை. இத்தகைய நோய் அறிகுறிகள் கொண்ட நூறு பேரில் ஓரிருவர் மட்டுமே கடுமையான போலியோ நோய்க்கு ஆளானவராக இருப்பார். போலியோ நோய் எனக் கண்டறியப்பட்டவர்களில் பாதிப்பேர் முறையான மருத்துவத்தின் மூலம் உடனடியாகக் குணமாகிவிடுவர். முப்பது சதவீதத்தினர் சிறிய பாதிப்புகளோடு குணமடைவர். பதினான்கு சதவீத போலியோ நோயாளிகள் வாத நோய்க்கு ஆளாகியிருப்பர். ஆறு சதவீதத்தினர் மரணமடைய நேரிடும். இருபது வயதுக்குள்ளாக உள்ள 156 பேரில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே போலியோ நோய் பாதிப்புக்கு ஆளா கின்றனர்.

போலியோ நோய் மூன்று வகையான நச்சு நுண்ணுயிர்களால் (Viruses) உண்டாகிறது. இப்போலியோ கிருமிகளை உருப்பெருக்காடி கொண்டு மட்டுமே காண முடியும். வைரஸ் நச்சு நுண்ணுயிர்கள் செல்களுடனே வாழக் கூடியதாக உள்ளது.

போலியோ நோயுண்டாக்கும் வைரஸ்கள் உடலுள் புகுந்தவுடன் நரம்புகள் வழியே இரத்தத்தில் பயணம் செய்து முதுகுத் தண்டையும் மூளைப்பகுதியையும் அடைகின்றன. அங்குள்ள செல்களில் இவை வளர்ந்து முதுகுத் தண்டைப் பாதிக்கின்றன.

இந்த நரம்பு செல்கள் வீங்கிப் பருமனாகின்றன. இதனால் நோய்க்காளாக நேர்கின்றது. தசைகள் கட்டுப்பாட்டை இழப்பதால் இயங்க முடிவதில்லை. இதனால் அவர்கள் வாத நோய் பாதிப்புடையவர்களாகின்றார்கள். நரம்புகள் மீண்டும் பழைய நன்னிலையை அடைந்தால் தசைகள் திரும்பவும் இயங்கத் தொடங்கும். ஆனால், நரம்பு செல்கள் வைரஸ் கிருமிகளால் கொல்லப்பட்டிருந்தால், நரம்புகளுடன் இணைக்கப்பட்டிருந்த தசைகள் என்றென்றைக்குமாக செயல்பட முடியாமல் நிரந்தர வாதநோய் பாதிப்புக்கு ஆளாகி விடும்.

போலியோ நோய் பலவகைப்படும். உடலின் எந்தப் பகுதி நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோ அப்பகுதியைப் பொறுத்து நோயின் வகை அறியப்படும். முதுகுத் தண்டு வட போலியோ முதுகுத்தண்டு வட நரம்புகளைப் பாதிக்கும். பல்பார் போலியோ மூளைப் பகுதியைப் பாதிக்கும். இதனால் மூச்சு இயக்கத் தசைகள் இயங்காமல் போக நேரிடும். இத்தகைய பாதிப்புக்கு ஆளானவரின் சுவாசத் தசைகளை இரும்பு நுரையீரல் (Iron lung) எனப்படும் செயற்கை நுரையீரல் கருவி கொண்டு நோயாளியின் வாழ்வைக் காக்க முடியும்.

போலியோ நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மருத்துவரை அணுகவேண்டும். முறைப்படி மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். தவறினால் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். சாதாரணமாக போலியோ நோய் கண்ட குழந்தைகளின் எலும்புகள் வளைந்துவிடும். இன்று கண்டறியப்பட்டுள்ள நவீன சாதனங்களைக் கொண்டு. போலியோ நோய் பீடித்த குழந்தைகள் எவ்வித ஊனமுமின்றி குணமடைய முடிகிறது. அப்படியே பாதிப்புக்கு ஆளாகி ஊனமடைந்துவிட்ட சிறப்பு உடற் பயிற்சி மூலமும், மருந்துகள் மூலமும் குணமடைந்துவிட முடிகிறது.

இத்ற்காக தசைகளையும் நரம்புகளையும் சீராக்க மின் கருவிகளும் இன்று பயன்படுத்தப் பட்டு வருகிறது.

போலியோ நோய்க் கிருமிகள் நோயாளியின் மூலம், சளி ஆகியவை மூலம் எளிதாகப் பரவி மற்றவரைத் தொற்றுகிறது. நோய்த்தடுப்பு முறைதளை முழுமையாகக் கைக்கொள்வதன் மூலம் இந்நோய் மற்றவருக்கும் பரவாமல் தடுக்க முடியும்.

போலியோ நோயை முற்றாக ஒழித்துக் கட்ட எல்லா முனைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டாக்டர் ஜோன்ஸ் சால் என்பார் போலியோ தடுப்பு ஊசி மருந்தைக் கண்டுபிடித்துள்ளார். இதைக் கொண்டு இலட்சக்கணக்கானோர் போலியோ தொற்று நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொண்டுள்ளனர். சாதாரணமாக அம்மை குத்திக்கொள்வது போன்று போலியோ தடுப்பு ஊசிமருந்தை குழந்தைக்குப் போட்டுவிட்டால் போலியோ நோய்த் தொல்லை அணுகாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இன்று குழந்தைகளுக்கு வாய் மூலம் தரப்படும் சொட்டு மருந்து பெருமளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த மழலை குழந்தைக்கு குறிப்பிட்ட கால இடை வெளிகளில் சொட்டு மருந்து தந்து வந்தால் இந்நோய்ப் பாதிப்பு அறவே இல்லாதொழியும்.