எதிர்பாராத முத்தம்/பாடல் 21

விக்கிமூலம் இலிருந்து


21

ஜீவமுத்தம்

வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்;
வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று
வடதிசைநோக் கிச்சென்றான்; நெருங்கலானார்!
வளர்புதர்கள், உயர்மரங்கள் நிறைந்த பூமி!
நடைப்பாதை ஒற்றையடிப்பாதை! அங்கே
நாலைந்து மாடுகளும் தமிழர் தாமும்
வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள்!
வணிகர்களும் கண்டார்கள் வெகுதூ ரத்தில்!
பொன் மூடியும் எதிர்கண்டான் ஒரு கூட்டத்தைப்

புலைத் தொழிலும் கொலைத்தொழிலும்
                                    [புரிவோராண
வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான்!
வாய்மையுறு தமிழரெனத் தெரிந்துகொண்டான்
தன்நடையை முடுக்கினான். எதிரில், மங்கை
தனர் நடையும் உயிர்பெற்றுத்தாவிற்! றங்கே
"என்னஇது! என்னஇது!" என்றே அன்னோன்
இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான்.

"நிச்சயமாய் அவர்தாம்" என் றுறைந்தாள்
                                    [மங்கை!
"நிசம்" என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல்
கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள் கைகள்
கொட்டினாள்! ஆடினாள்! ஓடலானாள்.
"பச்சை மயில்; இங்கெங்கே! அடடாஎன்னே!
பறந்துவந்து விட்டாளே! அவள்தான்" என்று,
கச்சைதனை இறுக்கி எதிர் ஓடிவந்தான்.
கடிதோடி னாள் அத்தான் என்ற ழைத்தே!
நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது
நெடுமரத்தின் மறைவினின்று நீள் “வாள் ஒன்று
பாய்ந்ததுமேல்! அவன் முகத்தை அணைத்தாள்
                                        [தாவிப்,
பளீரென்று முத்தமெரன்று பெற்றாள்! சேயின்
சாந்தமுகந் தனைக்கண்டாள் உடலைக் காணாள்!
தலைசுமந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்!
தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன்
செத்ததற்குச் செத்தாள் அத்தென்னாட்டன் னம்!