கலைக்களஞ்சியம்/அகராதி

விக்கிமூலம் இலிருந்து

அகராதி : ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வாிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை அம்மொழியாலேனும் பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். சொல்லின் பெருளைத் தவிர, அதன் தோற்றம், ஆட்சி, அது வந்துள்ள நூல், இடம் முதலியவற்றையும் பொிய அகராதிகளில் காணலாம். இவ்வாறு பொதுப்பட அமைந்துள்ள சொல்லகராதியே யன்றி, ஏதேனும் ஒரு பொருட்கு அல்லது, ஒரு தொழிற்குாிய சொற்கள், சொற்களின் தோற்றம், ஒரு நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கும் மொழிபேதங்கள் (Dialects) இவற்றைப் பற்றித் தனித்தனி அகராதிகள் தோன்றுதலும் உண்டு. அன்றியும், ஏதேனும் ஒரு நூலில் வந்துள்ள முக்கியமான சொற்களைத் தோ்ந்தெடுத்து, அவற்றை அகராதி முறையில் அமைத்து. அவை வந்துள்ள இடங்களையும் சுட்டி, அந்நூலின் பிற்சோ்க்கையாகவேனும் தனிப்படவேனும் வெளியிடுதலும் உண்டு. இவ்வகை முறையில் அமைந்துள்ளதற்கு அருஞ்சொல் அகராதி என்று பெயா். இங்ஙனமின்றி, ஒரு நூலிலுள்ள முக்கிய சொற்களை அல்லது பொருட்கூறுகளைத் தொகுத்து அவற்றை அகர வாிசைப்படுத்தி, அவற்றின் கீழ், அவை பயின்றுள்ள தொடா்களையும் இடங்களையும் தருவது பிறிதொருவகை அகராதி. இதனை ஆங்கிலத்தில் கங்காா்டன்ஸ். (Concordance) என்பா். சொற்களைப் பற்றியது சொற்கோவை-அகராதி (Verbal concor-dance) எனவும், பொருட் கூறுகளைப் பற்றியது பொருட் கோவை-அகராதி (Real concordance) எனவும் கூறத்தகும். திருக்குறள் முதலிய தலைசிறந்த நூல்களுக்கு இவ்வைக அகராதிகள் இயற்றல் பெரும் பயன் அளிக்க வல்லது. மேற்குறித்த அகராதி வகைகளேயன்றி, கலை முதலிய -அறிவுத் துறைகள் பற்றிய சொற்களை முறைப்படுத்தி அருஞ்சொற்களை விளக்குவதும் ஒருவகை அகராதியாகும். இதனை அறிவுத்துறை அருஞ்சொல் விளக்க அகராதி (Glossary) என்னலாம்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குமுன் அசிாிய மக்கள் அகராதி இயற்றியதாக் கூறப்படினும் அகராதி வகுக்கும் முறை மேனாட்டிலும் இந்நாட்டிலும் மெதுவாக வளா்ந்து வந்துள்ளது. கிரேக்கா்களும் ரோமா்களும் கடின சொற்களுக்கும் அாிய சொற்களுக்கும் அருஞ்சொல் விளக்கங்கள் மட்டுமே இயற்றினா். இதுபோலவேதான் இந்தியாவிலும் வடமொழிச் சொற்களுக்குப் பொருள்விளக்க நூல் இயற்றிவந்தனா். இத்தகைய நூலை நிகண்டு என்று கூறுவா்.

இம்முறையை மேனாடுகளில் பதினேழாம் நூற்றாண்டு வரை கையாளப்பட்டு வந்தது. அங்கு முதன்முதலாக அகராதி தோன்றியது இத்தாலிய மொழியில் 1612-ல் ஆகும். இம்முறை பின்னா் நன்கு வளா்ந்து இப்போது அந்நாடுகளில் சிறந்த அகராதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன.

அகராதியை யொத்துப் பயன்படும் நூல்களை உரிச்சொற் பனுவல் என முற்காலத்தில் தமிழில் வழங்கினர். இப்பெயர், இச்சொல் இன்னொரு பொருட்கு உரிந்து: இச்சொல் பல பொருட்கு உரித்து என்று உணா்த்துதலால் தோன்றியது. தொல்காப்பியரும் சில சொற்களுக்குப் பொருள் விளக்கஞ்செய்துள்ள பகுதியை உரியியல் என்று பெயரிட்டனர். ஆனால், இப்பெயர் காலப் போக்கில் மறைந்துவிட்டது. வடமொழிப் பெயராகிய நிகண்டு என்பதே தமிழிலும் நிலைத்துவிட்டது. நிகண்டு என்பதற்குத் தொகுதி என்று பொருள். தெய்வப் பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி முதலியனவாகச் சொற்களைத் தொகுதி தொகுதியாகப் பிாித்துக் கூறுதலால் இப் பெயா் தோன்றியது. இப் பெயருள்ள ஒரு பகுதி வேதத்தின் அருவகை அங்கங்களுள் நிருத்தத்தில் அடங்கிய தென்பதும் இங்கே அறியத்தக்கது.

இந்நிகண்டுகள் கடின பதங்களுக்கு மாத்திரம் பொருள் கூறின. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா என்பது தொல்காப்பியம். அன்றியும் ஆன்றோராட்சியில் வந்த செஞ்சொற்களை நிரலெகொடுத்து, அவற்றை விளக்குதலும் நிகண்டுகளின் நோக்கமாய் அமைந்தது. வழக்கெனப்படுவது உயர்ந்தோா் மேற்றே என்று தொல்காப்பியம் கூறுவது இதனை வலியுறுத்தும். சொற்களை ஆராய்ந்து தேர்ந்தெடுத்து, அவை வழங்கு முறை இவ்வாறு என்பதைத் துணிதலும் இந்நிகண்டுகளின் பிறிதொரு நோக்கம்.

நிகண்டுகளின் வழிவழியே வந்ததுதான் அகராதி. இப்பெயா் முதன்முதலிற் காணப்படுவது கி. பி. 1594-ல் இயற்றி முடித்த அகராதி நிகண்டு என்ற நூலின் பெயாிலேயாகும். இதன் ஆசிாியா் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர். இவா் இட்ட பெயரே, இப்பொழுது டிக்ஷனாி (Dictionary) என்று ஆங்கிலத்திற் கூறும் நூலுக்குாிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.

அகராதிமுறை நமக்கு எளிதாகத் தோன்றுகிறது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்துவந்திருக்கிற தமிழ்-இலக்கியங்களின் சரித்திரத்தில் இந்த அகராதிமுறை கி. பி. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதல் புலப்படுகிறது. அப்பொழுதும் இம்முறை அரைகுறையாய்த்தான் கையாளப்பட்டது. சொற்களின் முதலெழுத்து ஒன்றன் முறையையே ஆசிரியர்கள் நோக்கி வந்தனர். உதாரணமாக, அறிவன், அடியான், அருள், அவன், அஃது, அமா் முதலிய சொற்களை, முதலெழுத்தாகிய அகரம் ஒன்றையே நோக்கி, அவற்றை ஒரு முறையில் அமைத்தனர்; இரண்டாவது முதலிய எழுத்துக்களைக் கருதினார்களில்லை. முதலெழுத்து முறையை அகராதி நிகண்டில் காணலாம். இதனால் அகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லைக் குறித்த ஓாிடத்தில் கண்டுபிடிப்பது எளிதிற் கூடுவதாயில்லை. இரண்டாம் எழுத்தையும் நோக்கிச் சொற்களை முறைப்படுத்திய ஒரு நூல், அதற்குச்சுமார் நூறு ஆண்டுகளின் பின்னர்த் தோன்றியது. இதன் பெயா் அகராதிமோனைக் ககராதி எதுகை என்பது. இம்முறையிலேயும் ஒரு சொல்லைக் குறிப்பிட்ட ஓரிடத்தில் காணுவதற்கு இயலாமலிருந்தது. முதன் முதலில் சொற்களின் எழுத்துக்கள் அனைத்தையும் நோக்கி அகராதி முறையைக் கையாண்டவர்கள் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்த ஐரோப்பியப் பாதிரிகளேயாவர்.

இவர்கள் கையாண்ட முறையில் நமக்கு விளைந்த நன்மைகள் பல. முதலாவது, பிற மொழிகளில் செப்பமாக அமைந்துள்ள அகராதி முறையத் தமிழ் அகராதியிலும் கையாள முடிந்தது. இரண்டாவது, பாதிரிமார்களுக்குத் தமிழ் புதிய வேற்று மொழியாகையினாலே, இம்மொழியிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் இவர்கள் பொருளுணர வேண்டியவா்களாயிருந்தனா். ஆகவே, அருஞ்சொல், எளியசொல் என்ற வேற்றுமையின்றி, எளிய சொற்களுக்கும் பொருள் விளக்கம் செய்யேவண்டியது அவசியமாயிற்று. முன்றாவது, நூல் வழக்கிலன்றி பொதுமக்கள் பல்வேறிடங்களிலும் சிதைத்து வழங்கிவந்த சொற்களும் அகராதியில் இடம்பெற்றன. அவர்கள் கல்விபெறாத கீழ்த்தர மக்களோடும் பழகிவந்தார்கள். அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவா்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே, அவ்வழக்குச் சொற்களும் அகராதியிற் காணுதல் வேண்டும். இவ்வாறாகத் தமிழ் மக்களுள் பல இனத்தவர்களும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே வழிகாட்டியாயிருந்தாா்கள்.

கி.பி. 1679-ல் தமிழ்ப் போா்ச்சுகேசிய அகராதியொன்று ப்ரொஇன்ஸா என்ற பாதிாியாரால் இயற்றப்பட்டது. ஆனால், இவ்வகராதி இப்போது மறைந்துவிட்டது. இதனை அடுத்துத் தோன்றியது சதுரகராதியாகும். இதுவே தமிழில் முதன்முதற் பிறந்த அகராதி என்று சொல்லலாம். இதனை இயற்றியவா் தைாியநாதசுவாமி என்றும் வீரமாமுனிவா் என்றும் வழங்கிய பெஸ்கி பாதிாியா் (Father Beschi) ஆவா். இவா் இத்தாலி நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்து கிறிஸ்துமத போதனை செய்து வாழ்ந்தவா்.

சதுரகராதி என்றால் நான்கு வகைப்பட்ட அகராதிநூல் என்று பொருள். நான்கு வகையாவன : 1.பெயரகராதி 2.பொருளகராதி 3.தொகையகராதி 4.தொடையகராதி. பெயரகராதியில் ஒரு சொல்லுக்குாிய பலபொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பொருளகராதியில் ஒரு பொருளுக்குரிய பல பெயா்களும் காணப்படும். தொகையகராதியில் இருசுடா், முக்குணம், நாற்படை என்பன போல நூல்களில் தொகை தொகையாக வழங்கப்பட்டுள்ளனவற்றிற்கு விளக்கங் காணலாம். தொடையகராதியில் செய்யுட்கு வேண்டும் எதுகைச் சொற்கள் (Rhyming words) வாிசையாக அமைக்கப்பட்டுள்ளன.

அகராதிகள் தோன்றுவதற்குமுன் இருந்த நிகண்டுகள் மனப்பாட்ஞ் செய்வதற்கு என்று ஏற்பட்டன. முற்காலத்தில் அச்சுப்பொறி இல்லாததால் மனப்பாடமே வேண்டப்படுவதாயிற்று. சுமாா் கி.பி.10ஆம் நுாற்றண்டிலிருந்து நிகண்டுகளின் வாலாறு நமக்குத் தெளிவாயுள்ளது. தமிழில் முதன்முதல் தோன்றிய நிகண்டு திவாகரம் என்பதாகும். இவ்வகை நிகண்டுகளில் முக்கியமானவற்றிலுள்ள சொற்களை யொல்லாம் திரட்டிச் சதுரகராதி தந்துள்ளது.

இவ்வகராதி இயற்றப்பட்டது கி.பி.1732-ல். ஏடுகளில் இது பிரதிகள் செய்யப்பெற்றுத் தமிழ்நாடு முழுவதும் பரவியது. ஆங்கிலத்தில் டாக்டா் ஜான்சன் தமது அகராதியை 1755-ல் வெளியிட்டனா். இதற்குச் சுமாா் 25 ஆண்டுகட்கு முன்பாகவே சதுரகராதி தோன்றியதாகும். இந்நூலின் இராண்டாந் தொகுதியான (பொருளகராதி) 1819-ல் அச்சிடப்பட்டது. நூல் முழுவதும் 1824-ல் ரிச்சா்டு கிளாா்க் என்பவரது உத்தரவின்போில் தாண்டவராய முதலியாா், இராமச்சந்திரகவிராயர் என்ற இரண்டு வித்துவான்களாலும் பரி சோதித்தும் புதுக்கப்பெற்றும் வெளியிடப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிருவாக சங்கத்திற்கு உரிமையாக்கப்பட்டது.

கடைசியிற் குறிப்பிட்ட செய்தியால் பாதிரிமார்கள் செய்துவந்த முயற்சியில் ஆங்கிலேயத் துரைத்தனத்தாரும் கலந்துகொண்டு உதவிபுரிந்தார்கள் என்பது புலனாம். துரைத்தனத்தாருக்கு வியாபாரத் துறையிலும், அரசியல் துறையிலும், பலபடியாகத் தமிழ் நாட்டுப் பொதுமக்களோடு பழகிவந்த முறையிலும், தமிழ் ஆங்கிலம் இரண்டையும் ஒருசேரக் கற்றவர்கள் தேவையாயிருந்தனர். ஆகவே, இரண்டு மொழிகளையும் கற்பவர்களுக்குப் பயன்படும்படியாக இருமொழி அகராதி (Bilingual Dictionary) தோன்ற வேண்டியதாயிற்று. பெப்ரீஷியஸ், ப்ரெய்ட் ஹெப்ட் என்ற இரண்டு ஜெர்மன் பாதிரிகள் தமிழ்-ஆங்கில அகராதி யொன்றை 1779-ல் இயற்றினர். ஒவ்வொரு சொல்லின் கீழும் பல வழக்குத் தொடர்களும் கொடுக்கப்பட்டன. 185 பக்கங்களுள்ள ஒரு சிறு நூலாகச் சென்னையில் இது வெளியிடப்பட்டது. இது தமிழும் இங்கிலேசுமாயிருக்கிற அகராதி என்று இதன் முதற் பக்கம் குறிப்பிடுகின்றது. தமிழ் மொழியை மலபார் மொழி என்று ஐரோப்பியர் வழங்கிவந்தனர் என்றும் இம்முதற் பக்கத்தால் அறிகிறோம்.

இவ்வகராதி ஒரு சிறுநூலே யெனினும், தமிழ் நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் அகராதி பற்றிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுதற்கு இது தூண்டுகோலா யிருந்தது. சுமார் 1833-ல் யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தமிழ் அகராதியொன்றும், தமிழ்-ஆங்கில அகராதியொன்றும், ஆங்கிலத்-தமிழ் அகராதியொன்றும் இயற்றவேண்டும் என்று ஏற்பாடு செய்தனர். திஸ்ஸெரா, பெர்ஸிவல் பாதிரியார் முதலியவர்களின் துணைகொண்டு நைட் பாதிரியார் இவ்வகராதிகளுக்குரிய சொற்களைத் திரட்டி வந்தனர். இங்ஙனம் தொகுத்ததை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் சந்திரசேகர பண்டிதர் ஒரு தமிழ் அகராதி இயற்றி முடித்தனர். இதற்குச் சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தமும் சேர்த்தனர். இது ஸ்பால்டிங் பாதிரியாரால் 1842-ல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் அகராதி என்றும் வழங்கியது இதுவே. தமிழ் மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அடக்க முயன்ற அகராதிகளில் இதுவே முதலாவது.

அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தொடங்கிய மற்றை அகராதிகளும் வெளிவரலாயின. ஆங்கில-தமிழ் அகராதி வேலை ஹச்சிங்க்ஸ் பாதிரியாரால் மீண்டும் நடைபெற்றது. இவ்வகராதியை 1842-ல் வின்ஸ்லோ பதிப்பித்தனர். இதற்குச் சில ஆண்டுகட்கு முன்னர் சுமார் 1830-ல் தமிழ் ஆங்கில அகராதி யொன்று டாக்டர் ரொட்லர் என்பவரால் இயற்றப்பட்டது. இதனைத் திருத்தஞ் செய்வதற்கு இரண்டு தமிழ்ப் பண்டிதர்களையும் ஹக்நெஸ், ராபர்ட்ஸன் என்பவர்களையும் நியமனஞ் செய்தனர். முதற்பகுதி கவர்னர் ஜெனரல் பென்டிங் பிரபுவிற்கு உரிமையாக்கப்பட்டு 1834-ல் வெளிவந்தது. ராபர்ட்ஸன் இறந்து போகவே, டெய்லர் பாதிரியாரும் வேங்கடாசல முதலியாரும் இவ்வகராதி வேலையை மேற்கொண்டனர்.

ரொட்லர் அகராதி வெளிவந்த சில காலத்திற்குப் பின்னர்த் தமிழ்-ஆங்கில அகராதிக்காக யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் சார்பில் தொகுக்கப்பட்ட சொற்களை வீன்ஸ்லோ சென்னையில் 1862-ல் பதிப்பித்தனர். இப்பதிப்பு வேலையில் பல சிறந்த வித்துவான்கள் பலவாறு உதவி செய்துவந்தனர். இவர்களில் இராமாநுஜ கவிராயர், விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார் முதலிய அறிஞர்களை இங்கே குறிப்பிடல் தகும். இவ்வகராதியில் 67,452 சொற்கள் உள்ளன. இருவகை வழக்கிலுமுள்ள சொற்கள் மிகக் கூட்டப்பட்டன; பலவகையான சாஸ்திரச் சொற்கள் விளக்கப்பட்டன; ஆசிரியர்கள், புலவர்கள், வீரமக்கள், தெய்வங்கள் முதலியோர்களின் பெயர்களும் இதிற் சேர்க்கப்பட்டன.

மேற்குறித்த அகராதிகளேயன்றித் தமிழ்-லத்தீன் அகராதிகளும் தோன்றின. பெஸ்கி சுமார் 1742-ல் இவ்வகை அகராதியொன்றும் 1744-ல் தமிழ்-பிரெஞ்சு அகராதி யொன்றும், போர்ச்சுகேசிய-லத்தீன்-தமிழ் அகராதியொன்றும் இயற்றி முடித்தனர். பெஸ்கி, ரொட்லர், வின்ஸ்லோ என்ற மூவர் இயற்றியவைகளைப் பயன்படுத்தி ஆர். பி. குரி என்ற பாதிரியார் ஒரு தமிழ்-லத்தீன் அகராதி இயற்றி நாகப்பட்டணத்திலிருந்து 1867-ல் வெளியிட்டனர். இவ்வாறே, தமிழ்-பிரெஞ்சு அகராதிகள் வேறு சிலவும் வெளி வந்துள்ளன.

வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி மிகவும் பெரிய நூல் ; எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதன்று. பொதுமக்களது தேவைக்கு வேறோர் அகராதி வேண்டப்படுவதாயிற்று. இத்தேவையைநிரப்ப, 1897-ல் தரங்கம்பாடி (Tranquebar) அகராதி தோன்றியது. இது பெப்ரீஷியஸ் அகராதியை ஆதாரமாகக் கொண்டது. ஒரு முக்கியமான முறையையும் இது கையாண்டது. டாக்டர் க்ரால் என்பவர் தமிழில் முக்காலத்தும் வரும் வினைவிகற்பங்களை யெல்லாம் நன்கு ஆராய்ந்து வினையடிகளை 13 வகையாகக் கணக்கிட்டிருந்தனர். இவ்வகையை இவ்வகராதி மேற்கொண்டு ஒவ்வொரு வினையடியையும் அது எவ்வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிட்டுச் சென்றது. இதனால் வினைவிகற்பங்களையெல்லாம் அகராதியில் கொடுக்கவேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. இங்ஙனமாக இருமொழி அகராதிகள் பல படியாய்த் திருத்தமடைந்து வரலாயின.

ஆனால் ஒருமொழி அகராதி விருத்தியடையாது ஒரு நிலையிலேயே வெகுகாலம் நின்றுவிட்டது. யாழ்ப்பாண அகராதியொன்றுதான் பயன்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் நீதிபதியா யிருந்த கதிர்வேற் பிள்ளை ஒரு சிறந்த பேரகராதி வெளியிட வேண்டிய முயற்சிகளைச் செய்தனர். இவ்வகராதியில் ஒரு பகுதியை இவர் எழுதி முடித்தனர். இவ்வகராதி முழுவதையும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முற்றுவித்து வெளியிட்டனர். இக் காரணத்தால் தமிழ்ச்சங்க அகராதி என இதனை வழங்குவர்.

இத் தமிழ் அகராதி ஒருபுற மிருக்க, தமிழ்-ஆங்கில அகராதி பலவகையில் செப்பமடைய இடமிருந்தது. முதலாவது, சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல, வின்ஸ்லோவிற்குப் பின்னரே, அச்சில் வெளிவந்துள்ளன. இவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று. இரண்டாவது, சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்ஸ்லோ முதலியோர் அகராதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நயம் இருந்நது. இந்நயங்கள் அனைத்தையும் ஒருங்கு கொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்தி செய்வதும் வேண்டியதாயிருந்தது. மூன்றாவது, சொற்பொருள்களை அமைப்பதில் சில நெறிகளைக் கையாளுவதும் அவசியமாயிற்று. தமிழ்-அகராதி நூல்கள் பலவும், பொருள்களையும்கூட, அகராதிக் கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும். வரலாற்று முறையிலும், இயலாத இடங்களில் கருத்து வளர்ந்துசென்ற முறையிலும் இவற்றை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும். நான்காவது, சொல்லுக்குப் பொருளாகப்பரியாயச் சொற்களைக் கொடுப்பது போதாது. சொல்லுக்குரிய பொருளின் இலக்கணத்தையும் வரையறை செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் வழக்கம் தமிழ் அகராதிகளில் பெரும்பாலும் இல்லாமலிருந்தது; பரியாயச் சொல்லைக் கூறுவதே போதியதெனக் கருதப்பட்டது. தமிழ்-ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களும் ஒவ்வொரு வகையில் பிழைபாடு உடையனவாயிருந்தன. இக்குறைகளெல்லாம் நீங்கவேண்டுவது அவசியமாயிற்று. ஐந்தாவது சொல்லின் பிறப்பைக் குறித்து அகராதியாளர்கள் பெரும்பாலும் கருத்து செலுத்தியதேயில்லை. சில தமிழ்ச் சொற்களுக்கு வடமொழி மூலங்கள் தரப்பட்டிருந்தன. பிற திராவிடமொழிகளிலிருந்து பிறப்பொத்த சொற்கள் காட்டப் பெறவில்லை. ஆறாவது, மேற்கோள் காட்டுவதில் தகுதியான முறைகள் கையாளப் பெறவில்லை. தக்க முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கோள் கொடுப்பது அவசியமாயிருந்தது.

மேற்குறித்த அம்சங்களிற் பெரும்பாலுங்கொண்டு திருத்த மெய்தியது சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்-லெக்ஸிகன் ஆகும். இதுவும் அரசினர் ஆதரவில் சாண்ட்லர் என்ற அமெரிக்கன் மிஷன் பாதிரியாரால் தொடங்கப்பெற்று, தமிழ் வித்துவான்களின் உதவி கொண்டு, ஆங்கிலமும் தமிழுங் கற்ற ஆசிரியர்களால் முற்றுப்பெற்றது. இதிலும் பல குறைகள் உள்ளன. அகராதி வேலை மேலும் மேலும் நடைபெற்றுக்கொண்டே செல்லவேண்டியது என்பதை மறக்கலாகாது.

மொழியின் வளர்ச்சி நமது வாழ்க்கையின் வளர்ச்சியைப் பொறுத்தது. இம்மொழி வளர்ச்சிக்குச் சொல்லின் வளர்ச்சி ஒரு சிறந்த அறிகுறியாயுள்ளது. நமது வாழ்க்கை வளமுறுவதானால், சொற்கள் பெருகிக்கொண்டுதான் செல்லும். அகராதி வேலைக்கு எல்லையே இல்லை. குறைபாடுகளைத் திருத்துவதும் சொற்களின் பிறப்பு வரலாற்றை மொழி நூல் முறையில் உணர்த்தி ஜாதகம் கணிப்பதுபோல் விவரங்கள் தருவதும், சொல்லின் வடிவங்களையும் பொருள்களையும் காலக்கிரமத்தில், வரலாற்று முறையில் நிறுவி, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன வடிவம் பெற்றது, இன்ன சொல் இன்ன காலத்தில் இன்ன பொருள் பெற்றது என்பன முதலிய விவரங்களை நூல்களின் ஆதாரங்கொண்டு தெளிந்து உணர்த்துவதும், புதுச்சொற்களைச் சேர்ப்பதும் கலைக் குறியீட்டு மொழி அகராதிகளையும், கொடுந்தமிழ், திசைச் சொல் பற்றிய அகராதிகளையும் சொற்பிறப்பு அகராதிகளையும் இயற்றுவதும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத பெருஞ்செயல்களாகும். சுருங்கச்சொல்லின், ஆங்கிலத்திலுள்ள நூதன ஆங்கிலப் பேரகராதி (New English Dictionary)யின் முறைகளை முற்றும் தழுவி, ஒரு தமிழ்ப் பேரகராதி இயற்றுதல் தமிழ் அறிஞகர்களது கடமையாகும். எஸ். வை

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அகராதி&oldid=1453421" இலிருந்து மீள்விக்கப்பட்டது