கலைக்களஞ்சியம்/ஆர்னல்டு, ஜோசெப்

விக்கிமூலம் இலிருந்து

ஆர்னல்டு, ஜோசெப் (1782-1818) எடின் பரோவில் மருத்துவக் கல்வி பெற்றவர். கப்பலில் மருத்துவராக இருந்தவர். பிறகு ராபில்ஸ் (Raffles) என்பவருடன் இயற்கை விஞ்ஞானியாகப் பிரயாணம் செய்த காலத்தில் உலகத்திலுள்ள பூக்களிலெல்லாம் மிகப் பெரியதான பூவைச் சுமாத்திரா தீவில் கண்டுபிடித் இவ்விருவர் நினைவாக ராப்லிசியா ஆர்னல்டை (Rafflesia Arnoldi) என்று பெயரிடப்பட்டது. அந்தப் பூவின் குறுக்களவு ஒரு கஜம் வரை இருக்கும். ஒவ்வொரு இதழும் ஓரடி நீளமிருக்கும். அதன் நிறை பதினைந்து ராத்தல். அதில் பன்னிரண்டு புட்டி அதாவது ஒன்றரை காலன் பூந்தேன் இருக்கும். செடிக்கு இலையுமில்லை. கிளையுமில்லை. ஓர் ஒட்டுண்ணி அதன் உடற்பாகங்கள் காளான்வேர் (மைசீலியம்) போன்று, ஒருவிதப் பிரண்டை அல்லது திராட்சைச் சாதிச் செடியின் வேர்த் திசுக்களுள்ளே புகுந்து வளரும். பூ அழுகிய புலால் நாற்றமடிக்கும்; புலாலுண் ஈக்கள் பூந்தேனுண்ண வரும்.