கலைக்களஞ்சியம்/ஆறுகளின் வேலை

விக்கிமூலம் இலிருந்து

ஆறுகளின் வேலை: போதிய நீர் வசதியும் தக்க சரிவும் இருந்தால் ஆறு தோன்றிப் பாய்கிறது. தரையடி நீரும், பனிப்பாறைகள் உருகித் தோன்றும் நீரும் ஆறுகளின் தோற்றத்திற்குக் சில சமயங்களில் காரணமாக இருந்தாலும், பெரும்பான்மையான ஆறுகள் மழை நீரிலிருந்தே தோன்றுகின்றன.

தரையை அடையும் மழைநீர் ஓடைகளாக ஓடி, ஒன்று சேர்ந்து ஒரு வாய்க்கலாகப் பாய்கிறது. இதன் அளவு சரிவையும், கால்வாயின் குறுக்குவெட்டையும், வடிவையும் பொறுத்திருக்கும். இவை ஆற்றின் இயக்கத்தாலேயே மாறுகின்றன. உபநதிகளின் நீரும் தரைநீரும் வந்து சேர்வதால் ஓர் ஆற்றின் பிறப்பிடத்தைவிட அதன் முகத்துவாரத்தில் பாயும் நீர் அதிகமாக இருக்கும்.

அரிமானம் : ஆற்றின் இயக்கமும், அரித்தலும், சுரண்டலும், தேய்வும் சேர்ந்து ஆற்றின் அரிமானத்திற்குக் காரணமாகின்றன. தளர்ந்துள்ள பொருள்களை நீரோட்டத்தின் விசையானது பெயர்த்துச் சென்றுவிடுகிறது. நீர் மண்ணைக் கடைந்து கழுவிச் சென்று சிறுபொந்துகளைக் குடைகிறது ; பாறையில் உள்ள உறுதியற்ற தளங்களிலும் பிளவுகளிலும் தனது இயக்கத்தால் குழி தோண்டிவிடுகிறது. உறைபனி பாறைகளைப் பிளந்து நீரோட்டம் கற்களைக் கடத்திச் செல்ல உதவுகிறது.

பாறைகள், கூழாங்கற்கள், மணல், வண்டல் ஆகிய பொருள்கள் ஆற்றின் படுகையையும் பக்கங்களையும் தேய்த்துவிடுவது சுரண்டல் எனப்படும். மிகக் கடினமான அடிப்பாறைகளும் இவ்வினையினால் அகழப்பட்டும் மழுங்கியும் விடுகின்றன. இதனால் உருளை வடிவமான குழிகள் தோன்றுகின்றன. இவை பானைக்குழிகள் எனப்படும். இவற்றுள் பெரும்பான்மையானவை ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும் சுழல்களில் உள்ள துணுக்குக்களின் சுழற்சியினால் தோன்றுபவை.

நீரோட்டத்தின் பாதையிலுள்ள பொருள்களை நீரானது கரைத்துவிடலாம். அல்லது அவற்றுடன் ரசாயன வினைகளை நிகழ்த்தலாம். சுண்ணாம்புக்கல் இவ்வாறு எளிதிற் கரையும்.

இவ்வாறு கடத்தப்படும் பொருள்கள் தாமாகவே சிதைந்து, மழமழப்பாகி உருண்டை வடிவம் பெறுகின்றன. இந்த விளைவு தேய்தல் (Attrition) எனப்படும். இவ்வினையின்போது தோன்றும் சிறு துணுக்குக்கள் இன்னும் எளிதில் கடத்திச் செல்லப்படும்.

கடத்தலும் படிதலும் : அரிக்கப்பட்ட பொருள்களும் கரைந்துள்ள பொருள்களும் நீரோட்டத்தால் கடத்திச் செல்லப்படுகின்றன. நீரின் இயக்கம் ஒரே சீராக இல்லாமல் அதில் குறுக்கோட்டங்களும் சுழல்களும் இருப்பதால் இப்பொருள்களைக் கடத்திச் செல்வதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

சிறு துணுக்குக்களும், இலேசான பொருள்களும் நெடுந்தொலைவு கடத்தப்படுகின்றன. பெரியவைகளும் கனமானவைகளும் அவ்வளவு அதிகமாகக் கடத்தப்படுவதில்லை. இதனால் ஆற்றுப்படுகை பிறப்பிடத்தினருகில் கல் நிறைந்ததாகவும், முகத்துவாரத்தில் மணற்பாங்காகவும் இருக்கும்.

நீர்வீழ்ச்சிகளும் விரைவோட்டங்களும்: நீரோட்டம் பாயும் இடத்தின் சரிவு திடீரென அதிகமாகும் பகுதிகளில் நீர்வீழ்ச்சிகளும் விரைவோட்டங்களும் தோன்றுகின்றன. இவ்விரண்டிற்கும் தெளிவான வேறுபாடு இல்லை. இவை ஓங்கல்களிலிருந்து விழும்போதும், உறுதியான பாறைகளிலிருந்து மென்மையான பாறைகளை அடையும்போதும் தோன்றும். மைசூர் - பம்பாய் எல்லையில் சராவதி என்ற ஆற்றின் ஜோக் நீர்வீழ்ச்சி 900 அடி உயரமுடையது. அவ்விடத்தில் எரிமலைக் குழம்பு வெளிப்பட்டுப் பாறையாகக் குளிர்ந்து கடினப்பட்டது. இக் கடினமானபாறைக்கும், கடினமற்ற பழைய பாறைக்கும் உள்ள வேறுபாட்டினால் இப்பெரும்பள்ளம் தோன்றி யிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றிய பிளவுப் பள்ளங்களில் அங்குப் பாயும் ஆறுகளின் நீர்வீழ்ச்சிகள் பல உள்ளன. அரிமானத்தால் நயாகரா நீர்வீழ்ச்சி பின்னோக்கிச் செல்வது போலவே ஜோக், சிவசமுத்திரம் ஆகிய நீர்வீழ்ச்சி களும் பின்னோக்கிச் செல்கின்றன என நம்பலாம்.

ஆற்றின் படிவுகள் : இவை வண்டற் படிவுகள் என்றும் கூறப்படும். ஒரே இடத்திலுள்ள படிவுகளுங் கூடப் பலவேறு வகையினவாக இருக்கலாம். ஆறு ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு வளைந்து செல்லும்போது அது உயரமான நிலத்தைக் கீழிருந்து அரித்துக்கொண்டு போகிறது. இதனால் ஆற்றுப் பள்ளத்தாக்கு அகலமாகிறது. மேற்புறத்திலுள்ள சரிவுகள் மெல்லத் தேய்கின்றன. வளைவுகளின் உட்புறத்திலும் மேற்புறத்திலும் நீரின் வேகம் குறைவாக இருக்கும். ஆகையால் இவ்விடங்களில் நீரிலுள்ள பொருள்கள் படிகின்றன.

ஓர் ஆற்றின் வெள்ளம் கரையை மீறிவிட்டால் அது அடுத்துள்ள நிலங்களை அடைகிறது. சமதளமான நிலத்தில் வெள்ளம் பரவும்போது அதன் வேகம் திடீரெனக் குறைகிறது. இதனால் நுண்ணிய பாறைத் துணுக்குக்கள் ஆற்றின் இருபுறங்களிலும் படிகின்றன. இப்படிவுகள் உயரம் குறைவான முகடுகளாகின்றன. இவை வண்டலிடு கரைகள் (Levees) எனப்படும். வெள்ளத்தினால் பாதிக்கப்படும் பள்ளத்தாக்குப் பரப்பு வெள்ளச் சமவெளி (Flood plain) எனப்படும். கங்கைக்கும் பிரமபுத்திராவிற்கும் பல்லாயிரச் சதுர மைல் பரப்புள்ள வெள்ளச் சமவெளிகள் உள்ளன.

ஆற்று நீரின் மட்டம் குறைவான நிலையில் அதிகமான வண்டலுள்ள நீரோட்டங்கள் ஆவியாதலினாலும் படுகையின் நீர் கசிவதாலும் ஆறுகள் தமது நீரிற்பெரும் பகுதியை இழக்கின்றன. இதனால் அவற்றின் பாதையில் ஏராளமான வண்டல் படிந்து பாதை தூர்ந்து போகக்கூடும். இவ்விளைவு பின்னுதல் (Braiding) எனப்படும். இதனால் பள்ளத்தாக்கில் சிக்கலான வலை போன்ற அமைப்புள்ள ஆழம் குறைவான கால்வாய்கள் தோன்றுகின்றன. வறண்ட பகுதிகளிற் பாயும்

ஆறுகளிலும், பனியாறு உருகுவதால் தோன்றும் ஆறுகளிலும் பின்னுதல் தோன்றும் கால்வாய்கள் ஏராளமாக இருக்கும். ஆற்று நீரில் போதிய அளவு வண்டல் இல்லாவிடில் பின்னல் விளைவு நிகழ்வதில்லை. இதற்குப் பதிலாக மணலும் பரலும் சேர்ந்து நெடிய தடைகளைத் (Bars) தோற்றுவிக்கும். இவற்றுள் சில நிலையாக எப்போதும் ஆற்றில் இருப்பதுண்டு. அடுத்த வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்படும் தடைகளும் உண்டு.

ஆறு கடலை அடையும்போது அதன் ஓட்டம் தடைப்படுவதாலும், வண்டல் துகள்களைத் உப்புநீர் திரளச் செய்வதாலும் வண்டல் விரைவில் படிந்துவிடும். கடலலைகளும் நீரோட்டமும் மிக வலிவாக இருந்தால், அவை இந்த வண்டலை அடித்துச் சென்று, அது படியாமல் தடுக்கும். இதைத் தவிர நிலமும் கடலடியும் இறங்கிக் கொண்டிருந்தாலோ, அண்மையில் இறங்கியிருந்தாலோ, அதன் பள்ளத்தாக்கு அரைகுறையாக நீரில் மூழ்கி இருக்கும். இப்போது ஆறு ஒரு கழிமுகத்தின் வழியே கடலை அடையும்.

இவ்வாறின்றிக் கடலின் ஏற்றவற்றமும் நீரோட்டமும் குறைவாக இருந்தால், ஆற்றின் முகத்துவாரத்தில் படிவுகள் தோன்றி, அகலமானதும், வெளிப்புறம் சாய்வானதும், விசிறிபோன்ற வடிவுள்ளதுமான திட்டுத் தோன்றும். சில சமயங்களில் படிவுகள் மிக அதிகமாகி நீரின்போக்கையே தடை செய்துவிட்டால், வெள்ளத்தின்போது ஆற்றின் நீர் கடலை அடைய வழியில்லாமல், கரைகளை உடைத்துக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட கால்வாய்களின் வழியே கடலை அடையும். இது பலமுறை நிகழ்ந்து, ஆற்றிற்கு ஏராளமான கிளை நதிகள் தோன்றும். இவ்வாறு கடலைநோக்கி வளரும் படிவு நிலம் கழிமுகத்தீவு (Delta) என அழைக்கப்படும். நல்ல வண்டலினாலான இந்நிலம் மிக வளமானதாக இருக்கும். கங்கை - பிரமபுத்திரா கழிமுகத்தீவு இதற்கு மிகச் சிறந்த சான்றாகும். இந்தக் கழிமுகத்தீவுகளில் பரந்து கிடக்கும் சுந்தரவனங்கள் தாவரங்கள் தழைத்து வளரும் வளமுள்ள பிரதேசங்களாகவும், காட்டு விலங்குகளுக்கு உறைவிடமாகவும் விளங்குகின்றன. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய ஆறுகளின். கழிமுகத்தீவுகள் பயிர்கள் செழிக்கும் பகுதிகளாக உள்ளன. கடலடியின் இறக்கத்தினால் தான் கங்கை - பிரமபுத்திரா கழிமுகத்தீவின் கனம் இவ்வளவு அதிகமாகி யது எனக் கருதுகிறார்கள்.

அரிமானச் சுற்றும் பள்ளத்தாக்கு வளர்ச்சியும்: ஆறுகளும், நிலத்தோற்றத்தின் மற்ற அமிசங்களும் எப்போதும் மாறியவண்ணம் உள்ளன. புதிதாக ஒரு நிலப்பகுதி உயர்த்தப்பட்டதும் இயற்கை தனது செதுக்குவேலையைத் தொடங்குகிறது. பள்ளத்தாக்குக்களும், மற்ற நில வடிவங்களும் தெளிவான சிறப்பியல்புகள் கொண்ட பல படிகளை அடைகின்றன. இவை, இளமை, முதிர்ச்சி, முதுமை என்று அழைக்கப்படும். திடீரென நிகழும் புவியியக்கங்கள் இவற்றைத் தடை செய்யாமல் இருந்தால் அப்பகுதி முழுதும் இறுதியாக ஒரு தேய்ந்த நிலப்பரப்பாகிறது. நிலத் தோற்றத்தின் பரிணாமத்தில் நிகழும் இம்மாறுதல்கள் அரிமானச் சுற்று என அழைக்கப்படுகின்றன.

இளமை என்னும் பருவத்தில் மாறுதலற்ற அமைப்புள்ள பீடபூமியையும், அலைகள்போன்ற மடிப்புக்கள் கொண்ட பகுதியையும் ஆற்றுநீர் கூறுபடுத்தத் தொடங்குகிறது. இக்காலத்தில் பள்ளத்தாக்கு ஆழத்திலும் முன்புறத்திலும் மிக விரைவாக வளர்கிறது. விரைவோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும், மலை இடுக்குக்களும் இந்நிலையில் அதிகமாக இருக்கும். அண்மையில் மடிந்த பிரதேசங்களில் முக்கிய நதிகள் கீழ்வளைவுப் (Synclinali) பள்ளங்களில் இருக்கும். ஒன்றோடொன்று இணையும் முகடுகளும், V வடிவமான பள்ளத்தாக்குக்களும் இந்நிலையின் சிறப்பியல்புகள்.

முதிர்ச்சியின் தொடக்கத்தில் பள்ளத்தாக்குக்களைப் பிரிக்கும் மேட்டு நிலங்களின் உயரமும், பள்ளத்தாக்குக்களின் அகலமும் உச்சமாக இருக்கும். மேட்டு நிலங்களின் உயரம் சிறிது சிறிதாகக் குறையும். புது உபநதிகள் இன்னும் தோன்றிய வண்ணம் இருக்கும். சில ஆறுகள் அருகிலுள்ள நீரோட்டங்களைக் கைப்பற்றித் தமது வடிகால் பரப்பைப் பெருக்கிக்கொள்ளும். பெருமலைகளின் உச்சிகளும் முகடுகளும் கூரிய முனையை இழந்து அகலமான விளைவுகளாகும். பக்கவாட்டில் நிகழும் அரிமானத்தால் மலைச்சரிவு அகலமாகும். ஆற்று வளைவுகள் அதிகமாகும். வண்டற் சமவெளிகள் பெருகும். கடலின் அருகே அடுத்துள்ள அறுகளின் வெள்ளச் சமவெளிகள் அடிப்பாறைவரை முழுவதுந் தேய்ந்து விடும். பள்ளத்தாக்கின் சமவெளி ஆற்று வளைவு அகலத்தைப்போல் பலமடங்காகிவிட்டால் அப்பிரதேசம் முதுமையடைந்து விட்டது எனலாம்.

முதுமையில் பக்கவாட்டு அரிமானமும் மேடுகளின் தேய்வும் முன் போலவே தொடர்ந்து நிகழும். இளமையில் காணப்படும் மேடுகளும், முதிர்வில் பின்னிக்கிடக்கும் சரிவுகளும் முதுமையில் மாறி அகலமான சமவெளிகளாகின்றன. இப்போது அப் பிரதேசம் ஒரு தேய்ந்த நிலப்பரப்பாகிவிடும். அரிமானத்தை எதிர்த்து நிற்கும் சில பகுதிகள் மட்டும் திட்டுக்களாகவும் குன்றுகளாகவும் உயர்ந்து நிற்கும்.

இந்த மாற்றங்கள் நிகழ்ந்து முடியும்வரை புவியியக்கங்கள் நிகழாமல் இருக்கவேண்டும். ஆனால் இவ்வாறு நிகழ்வது மிக அருமை. சைபீரியாவையும், ஹட்ஸன் நதிப் பிரதேசத்தையும் போன்ற தேய்ந்த நிலப் பரப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்பட இதுவே காரணமாகும்.

இந்தியாவின் வடிகால் முறை (Drainage System of India) : இந்திய ஆறுகளைத் தீபகற்ப ஆறுகள் என்றும், இமய ஆறுகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் கொண்டவை.

தீபகற்ப ஆறுகள்: இவற்றுள் முக்கியமானவை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, நருமதை, தபதி ஆகியவை, இவற்றின் பாதைகள் நல்ல சரிவை உடையவை. இவற்றின் பள்ளத்தாக்குக்கள் அகலமானவை. பெரிய ஆறுகள், விரிவான கழிமுகத்தீவுகளை உடையவை. இவை அரிமானச் சுற்றின் முதிர்வைக் காட்டுகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் வேகம் மிகுந்தும் நீளம் குறைந்தும் இருக்கும். இவற்றின் முகத்துவாரத்தில் கழிமுகத்தீவுகள் இல்லை. மலைகள் உயர்ந்தபின் இவை உண்டாகி இன்னும் நெடுங்காலமாகவில்லை. ஆதலால் இவை இன்னும் கழிமுகத்தீவுகளை அமைக்கவில்லை எனக் கருதப்படுகின்றது.

நருமதையும் தபதியும் மேற்கு நோக்கிப் பாயும் தனிச் சிறப்புள்ளவை. இவற்றின் பாதைகள் பிளவுப் பள்ளங்களின் திசையில் அமைந்துள்ளன என்பதற்குச் சான்று உள்ளது, நருமதையின் மத்தியப்பகுதி மிகவும் நேராக இருப்பது இதற்கு ஒரு சான்று.

இமய ஆறுகள்: சிந்துவிலிருந்து பிரமபுத்திராவரை இருபது ஆறுகளுக்கு மேலாக இமயமலையிலிருந்து தோன்றுகின்றன. பனியாறுகள் உருகித் தோன்றும் நீரே இவற்றின் மேற்பகுதியில் அதிகமாக இருக்கும்.

இமாலய ஆறுகளின் நீர்ப்பிரிவு, உயரமான சிகரங்களிலோ, அவற்றிற்கு அருகிலோ இல்லாமல் இன்னும் வடக்கே திபெத்தில் உள்ளது. பிரமபுத்திராவும், சிந்துவும், கங்கையின் உபநதிகள் பலவும் V வடிவமான பள்ளத்தாக்குக்களில் ஆழமான இடுக்குக்களின் வழியே மலைத் தொடர்களைக் கடந்து வருகின்றன. காச்மீரிலுள்ள கில்ஜிட்டின் அருகே வரும் சிந்து நதியின் மட்டம் அதன் கழிமுகத்தீவைவிட 3,000 அடி உயரத்தில் உள்ளது. ஆனால் அதன் இருபுறங்களிலுமுள்ள மலைச் சுவர்கள் 20,000 அடி. உயரம் உள்ளன. பிரமாண்டமான ரம்பத்தைப்போல் இந்த ஆறு 17,000 அடி ஆழம் பாறைகளை அறுத்துள்ளது. இத்தகைய வடிகால் முறை முந்திய வடிகால் முறை எனப்படும். ஆனால் அலகநந்தா என்னுமிடத்திலுள்ள படுகுழி வேறுவகையில் தோன்றியிருக்கவேண்டும் எனக் கருதுகிறார்கள். இது ஒரு பிளவுப் பள்ளமாக இருக்கலாம்.

மலைகளின் மேல் ஆறுகளின் பிறப்பிடம் பின்நோக்கிச் செல்வதுண்டு. நீரோட்டத்தின் இயக்கத்தினாலும், பனியாறுகளின் இயக்கத்தினாலும் இது நிகழலாம். இதனால் ஆற்றின் தோற்றுவாய் இமயமலையின் வடக்குச் சரிவை அடைந்து, அங்குள்ள வேறு ஆறுகளின் வடிகாலையும் கைப்பற்றிவிட்டது. நேபாளத்திலுள்ள கோசி நதியின் கிளையான அருண் என்னும் ஆறு இவ்வகையில் வட இமயமலைப் பிரதேசத்திற்கு வடிகாலாக அமைந்துள்ளது இதற்கு நல்ல உதாரணமாகும். சீ. ம.