கெடிலக் கரை நாகரிகம்/கல்வி - கலைத்துறை

விக்கிமூலம் இலிருந்து

24. கல்வி - கலைத்துறை


கல்வி

ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்தில்தான் கற்றவர்கள் மிக்கிருந்தனர். மிக்கிருந்தனர் என்றால், மற்ற மாவட்டங்களை நோக்க மிகுதியே தவிர, இன்றைய நிலையை நோக்க மிகவும் குறைவே. 1822ஆம் ஆண்டில் தமிழகத்தில் கற்றவர் தொகையை ஆராய்ந்து கணக்கிடுவதற்காகத் தாமஸ் மன்ரோ (Sir Thomas Munro) என்பவர் தலைமையில் ஒரு குழு புறப்பட்டது. அந்த ஆராய்ச்சியினால், தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டத்திலும் தஞ்சை மாவட்டத்திலுமே கற்றவர் மிகுதி என்பதும், தஞ்சை மாவட்டத்தில் கற்றவர் விழுக்காடு 2.0% (நூற்றுக்கு இரண்டு) என்பதும், தென்னார்க்காடு மாவட்டத்தில் கற்றவர் விழுக்காடு 2.3% என்பதும் தெரிய வந்தன. பின்னர்த் தமிழகத்தில் ஏற்பட்ட எத்தனையோ துறைக் கல்வி வளர்ச்சியில் தென்னார்க்காடு மாவட்டம் வேறு சில மாவட்டங்களினும் பின் தங்கியது என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாக, மற்ற மாவட்டங்களின் தலைநகர்களிலும் உள்நகர்களிலும் பல்லாண்டுகளாகக் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் முதலியன மிக்க எண்ணிக்கையில் நடைபெற்று வந்தும், தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரில் 1963ஆம் ஆண்டில்தான் கலைக்கல்லூரி ஏற்பட்டது; மாவட்டத்தில் சிதம்பரம் தவிர மற்ற நகர்களில் இதுவரை கலைக்கல்லூரி ஏற்படவில்லை; இப்போதுதான் சில நகரங்களில் உருவாகத் தொடங்கியுள்ளது. இந் நிலையைக் காணுங்கால், இம் மாவட்டத்தின் பின்தங்கிய நிலை நன்கு புலப்படுகிறது.

ஆனால், கல்லூரிகளின் எண்ணிக்கையில் மற்ற மாவட்டங்களினும் தென்னார்க்காடு மாவட்டம் பின் தங்கியிருக்கும் எளிய நிலையை ஈடு செய்யும் முறையில் சிதம்பரத்தில் பல்லாண்டுகளாக ஒரு கல்லூரி அன்று-ஒரு பல்கலைக் கழகமே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வள்ளல் அண்ணாமலை செட்டியார் அவர்களின் அருட்பெருக்கால் தோன்றியுள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை

வைத்துப் பார்க்கும்போது, தென்னார்க்காடு மாவட்டம் கல்வித் துறையில் சென்னைக்கு அடுத்தபடி சிறப்பிடம் பெற்றுள்ளது என்று சொல்லலாம். மற்றும், அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இருப்பதனால்தான், கடலூரில் இவ்வளவு நாள் கல்லூரி தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. கடலூர் வட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் நாடோறும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்குப் புகைவண்டியில் சென்று கல்வி கற்றுவந்தது நினைவுகூரத்தக்கது.

கடலூர்க் கல்லூரிகள்

கடலூரில் 1963ஆம் ஆண்டில்தான் ஆண்கள் கலைக் கல்லூரியும் 1967 ஆம் ஆண்டில்தான் பெண்கள் கலைக் கல்லூரியும் ஏற்பட்டிருப்பினும், சென்ற நூற்றாண்டிலேயே இங்கே இரண்டு கலைக்கல்லூரிகள் தோன்றி நடைபெற்று வந்தன என்பதை மறந்து விடுவதற்கில்லை. கடலூரில் 1879ஆம் ஆண்டில் ‘டவுன் காலேஜ்’ (Town College) என்னும் பெயரில் ஒரு கலைக்கல்லூரி அரசினரால் தோற்றுவிக்கப்பட்டு 1902ஆம் ஆண்டுவரை நடைபெற்றுப் பின்னர் மறைந்து விட்டது. அடுத்து, 1884ஆம் ஆண்டில் ‘செயின்ட் ஜோசப் காலேஜ்’ (St Joseph’s College) என்னும் பெயரில் தனியார் கலைக்கல்லூரி ஒன்று தோன்றி 1909ஆம் ஆண்டு வரை இயங்கிப் பின்னர் எடுக்கப்பட்டுவிட்டது. இவ்விரு கல்லூரிகளையும் வைத்துக் காணுங்கால் சென்ற நூற்றாண்டில் கல்வித் துறையில் கடலூர் பெற்றிருந்த தலைமைநிலை புலனாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

கடலூர்க் கல்லூரிகளை அடுத்து இம் மாவட்டத்தில் செட்டி நாட்டரசர் அண்ணாமலை செட்டியாரவர்கள் சிதம்பரத்தில் 1920ஆம் ஆண்டு ஒரு கலைக்கல்லூரியும், பின் ஓர் இசைக் கல்லூரியும், 1927இல் தமிழ்க் கல்லூரி, தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, வடமொழிக் கல்லூரி முதலியனவும் தம் அன்னையார் மீனாட்சியம்மை பெயரால் தொடங்கி நடத்தினார்கள். இவை 1929இல் ஒருங்கிணைக்கப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக மாறின; இன்று இப் பல்கலைக்கழகத்தில் எத்தனையோ வகைக் கல்விப் பிரிவுகள் ஏற்பட்டுள்ளன. வள்ளல் அண்ணாமலை செட்டியார் புகழ் வளர்க!

மயிலம் தமிழ்க் கல்லூரி

அடுத்து, இம்மாவட்டத்தில் மயிலம் என்னும் ஊரில் சிவத்திரு, சிவஞான பாலைய அடிகளாரால் 1938இல் நிறுவப் பட்ட தமிழ்க் கல்லூரி மிகவும் குறிப்பிடத்தக்கது. இதனாலும் இம்மாவட்டத்திற்குப் பெருமை மிக உண்டு. இன்று தமிழகத்தில் பத்திற்கு மேற்பட்ட தமிழ்க் கல்லூரிகள் உள்ளன. இவற்றுள், திருவையாற்றிலுள்ள அரசர் கல்லூரியும், அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கல்லூரியும் பழைமையானவை; மூன்றாம் இடம் மயிலம் தமிழ்க் கல்லூரிக்கு உரியது.

பாடலிபுத்திரம்

இன்று கெடிலக்கரை நாட்டில் பல ஊர்களிலும் உயர்நிலைப் பள்ளிகள், பல்வகைத் தொழிற் பள்ளிகள் முதலியன நடைபெற்ற வருவது கண்கூடு. பண்டு இந்த நாட்டுப் பகுதியில் பாடலிபுத்திரம், பாகூர், எண்ணாயிரம் முதலிய ஊர்களில் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இருந்ததாக வரலாறு கூறுகிறது. திருப்பாதிரிப் புலியூரை அடுத்திருந்த பாடலிபுத்திரத்தில் பெரிய சமணசமய நிலையம் இருந்தது. இங்கே ஐந்தாம் நூற்றாண்டிலேயே சிம்மசூரி, சரவநந்தி முதலிய சமணத் தலைவர்கள் தங்கியிருந்து பல நூல்கள் இயற்றியுள்ளனர். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநாவுக்கரசர் தருமசேனர் என்னும் தலைமைப் பட்டப் பெயருடன் சமணத் தலைவராய் இங்கே வீற்றிருந்தார். அங்கே அருங்கலை நூல்கள் பல பயிலப்பட்ட செய்தியை,

[1]“அங்கவரும் அமண்சமயத்து அருங்கலை
நூலான வெலாம்
பொங்கும் உணர்வுறப் பயின்றே
அந்நெறியில் புலன்சிறப்ப”

என்னும் பெரியபுராணப் பாடற் பகுதியால் அறியலாம்.

பாகூர்

பாகூரில் ஒரு வடமொழிப் பல்கலைக் கழகம் எட்டாம் நூற்றாண்டிலேயே இருந்தது. இங்கேயே மாணவர்கள் உண்டும் உறைந்தும் கல்வி கற்றனர். ஒன்பதாம் நூற்றாண்டில் நிருபதுங்கவர்மப் பல்லவன் இந்தப் பல்கலைக் கழகத்திற்குச் சேத்துப்பாக்கம், விளங்காட்டங்காடவனுர், இறைப்புனச்சேரி என்னும் மூன்று ஊர்களை முற்றூட்டாக அளித்தான். இப்பல்கலைக்கழகத்தில் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தர்ம சாத்திரம், புராணம், ஆயுர்வேதம், தனுர் வேதம், காந்தர்வம், அர்த்த சாத்திரம் ஆகிய பதினெட்டுப் பிரிவுகள் பயிற்றப்பட்டன.

பாடலிபுத்திரம், பாகூர் முதலிய இடங்களில் இருந்த அமைப்புகளைக் கொண்டு, தமிழகத்தில் சங்ககாலத்தை யடுத்துச் சமண பெளத்த சமயங்களின் ஆட்சியும் வடமொழியின் ஆட்சியும் வேரூன்றி வளரத் தொடங்கிவிட்டன என அறியலாம். சமண பெளத்தமும் வடமொழியும் இங்கே வேரூன்றுவதற்குப் பல்லவர்கள் பெருந் துணைபுரிந்தனர். அவர்கள் வடமொழியை நன்கு வளர்த்தனர். முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் பெரிய வடமொழிப் புலவனாகவும் திகழ்ந்தான்; அவன் இயற்றிய ‘மத்தவிலாசப் பிரகசனம்’ என்னும் வடமொழி நாடகம் அக்காலத்தில் பெரிய விளம்பரம் பெற்றிருந்தது. பல்லவர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் ஓரளவு ஆதரவு அளித்து வந்தனர். பல்லவர் காலத்துக்கு முன்னும் பின்னும் சோழ பாண்டிய மன்னர்களால் தமிழ்மொழி பெரிய அளவில் வளர்க்கப்பட்டது. சோழ பாண்டிய மன்னர்களின் மேலாட்சியின் கீழ்த் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசர்களும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தனர். யார் என்ன செய்தும், தமிழுடன் வடமொழியும் வளர்ந்து கொண்டே வந்தது.

பள்ளிக்கூடங்கள்

பண்டைக்காலத்தில் பொதுப் பள்ளிகள் கோயில்களிலும் மடங்களிலும் நடைபெற்றன. சமண பெளத்தக் கோயில்களும் மடங்களும் ‘பள்ளி’ என்று அழைக்கப்பட்டன. அந்த இடங்களில் கல்விக் கூடம் நடைபெற்றபோது ‘பள்ளிக்கூடம்’ என அழைக்கப்பட்டது. அந்தப் பெயர் நின்று நிலைத்துவிட்டது. இத்தகைய பொதுப் பள்ளிகள் சமயச் சார்புடையன வாகவே இருந்தன. இவையேயன்றி, ஊர் தோறும் தனித்தனி ஆசிரியர்களால் அவரவர் இல்லங்களில் தனித்தனிப் பள்ளிகள் பல நடத்தப்பெற்று வந்தன. இவ்வகைப் பள்ளிகட்குத் திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுலம் என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்பட்டன. நாட்டில் இத்தகைய பள்ளிகளே மிக்கிருந்தன என்று சொல்லலாம். ஆசிரியர் ஒவ்வொருவரும் பல்கலைப் புலவராகத் திகழ்ந்தனர்; கணிதம், வானவியல், மருத்துவம் முதலிய கலைகளில் திறமை பெற்றிருந்தனர். மாணாக்கர்க்குப் பல்வகைக் கலைகளும் பயிற்றப்பட்டன.

ஆங்கிலேயர்கள் தமிழகத்தை ஆளத் தொடங்கிய போது, தென்னார்க்காடு மாவட்டத்தில் உருப்படியான பழையமுறை நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தொள்ளாயிரத்துக்கும் (900) மேற்பட்ட எண்ணிக்கையில் நடைபெற்று வந்ததாகத் தாமஸ் மன்றோ குழுவினரால் கணக்கிடப்பட்டுள்ளது. மூலை முடுக்கு ஊர்களில் இருந்த இன்னும் எத்தனையோ பள்ளிகள் இந்தக் குழுவின் கணக்கிற்குள் அகப்படாமல் இருந்திருக்கலாம். பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை மிக்கிருந்தும், படித்தவர் விழுக்காடு 2.3% என்னும் அளவிலேயே இருந்தது. இதிலிருந்து, ஊர் தோறும் பள்ளிக்கூடம் இருந்தும், அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை; ஒரு சிலரே ஆசிரியரை அடுத்துக் கல்வி கற்றனர் - என்னும் உண்மை புலனாகிறது. அதனால் தான் இப்போது கட்டாயக் கல்விமுறை தேவைப்படுகிறது.

அறிஞர் பெருமக்கள்

திருமுனைப்பாடி நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை கல்வியின் தரம், கற்றவர் தகுதி, இலக்கியங்களின் அமைப்பு முதலியவை எப்படி இருந்தன என்று கணிப்பதற்கு, இந்த நூலிலுள்ள ‘கெடிலக்கரைப் பெருமக்கள்’, ‘கெடிலக்கரை இலக்கியங்கள்’ என்னும் இரண்டு தலைப்புகளும் பெருந்துணை புரியும். ‘கல்வி - கலைத்துறை’ என்னும் இந்தத் தலைப்பிற்குள் அந்த இரண்டு தலைப்புகளையும் அடக்கிக் கொள்ளவுஞ் செய்யலாம். கபிலர், பரணர், ஒளவையார், அம்மூவனார், கல்லாடனார், பேரிசாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார், கோவூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் முதலிய சங்க காலப் புலவர்கள் திருமுனைப்பாடி நாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ திருமுனைப்பாடி நாட்டில் பன்னாள் வாழ்ந்ததாலோ, திருமுனைப்பாடி நாட்டு மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்றதாலோ இந்நாட்டோடு மிக்க தொடர்புடையவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களுள் பெரும் புலவராய கபிலர் திருக்கோவலூரோடும் மலையமான் திருமுடிக்காரியோடும் கொண்டிருந்த தொடர்பு பெரிதும் குறிப்பிடத்தக்கது. அவர் வடக்கிலிருந்து தீயிட்டுக்கொண்டு உயிர் நீத்த இடமாகக் குறிப்பிடப்படும் கபிலர்குன்று திருகோவலூர்ப் பகுதியில் உள்ளது.

சங்கப் புலவாகளை அடுத்து, இடைக்காலத்தில் திருநாவுக்கரசர், சுந்தரர், தொல்காப்பியத்தேவர், மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், வில்லி புத்தூரார், அருணகிரிநாதர், முதலிய பெருமக்கள் பிறந்து வளர்ந்ததாலும் நிலையாக நெடுங்காலம் வாழ்ந்ததாலும் திருமுனைப்பாடி நாட்டோடு மிகமிக நெருங்கிய தொடர்புடையவர்களாவார்கள். தேவார ஆசிரியர்கள் மூவருள் இருவரான நாவுக்கரசரும் சுந்தரரும் கெடிலக்கரை ஊர்களில் பிறந்து மிகப்பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்ததால் திருமுனைப்பாடிநாடு மிக்க பெருமைக்கு உரியது எனப் புலவர் பலராலும் பல நூல்களில் பாராட்டப் பெற்றிருப்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது.பாரதம் பாடிய வில்லிபுத்துரார் பிறந்த சனியூரும் திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்ததே. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் பிறந்த திருவண்ணாமலையும் இந்நாட்டினதே. (முதலில் திருவண்ணாமலை வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திலேயே சேர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). கம்பர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பெற்று வளர்ந்த திருவெண்ணெய் நல்லூர் சோழ நாட்டில் உள்ள ஊர் என்று சிலர் கூறினும், திருமுனைப்பாடி நாட்டில் உள்ள ஊர் என்று பலர் கூறுகின்றனர்; இஃது உண்மையானால், திருமுனைப்பாடி நாட்டின் கல்விப் பெருமைக்குக் கணக்கேயில்லை. இப்பெருமக்களே யன்றி, திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், பொய்கை யாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், திருமங்கை யாழ்வார், சேக்கிழார், பட்டினத்தார் முதலியோரும் திருமுனைப்பாடி நாட்டுப் பதிகளை வணங்கிப் பாடி நாட்டிற்குப் பெருமை தேடித் தந்துள்ளனர்.

பிற்காலத்தில் நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள், வடலூர் இராமலிங்க வள்ளலார், இலக்கணம் சிதம்பரநாத முனிவர், ஈசானிய மடம் இராமலிங்கசாமி, திருவதிகை வாகீச பக்த நாவலர், திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப நாவலர், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளார், திருப்பாதிரிப் புலியூர் சிவசிதம்பரப் புலவர், வண்டிப் பாளைம் இராசப்ப ஆசிரியர் முதலிய பெருமக்கள் பலர் இப் பகுதியில் வாழ்ந்து. சிறந்த நூல்கள் இயற்றியும், பலர்க்குப் பாடங் கற்பித்தும் தமிழ்மொழியை வளர்த்துள்ளனர். திருப்பாதிரிப் புலியூரில் ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் வாழ்ந்த காலத்தில் ஞானியார் மடம் ஒரு பெரிய தமிழ்ப் பல்கலைக் கழகமாக விளங்கிற்று, மடத்தில் அடிகளாரிடத்தில் கல்வி கற்றுப் பெரும் புலவர்களாய் உயர்ந்தோர் மிகப் பலராவர். இன்னும் இந்த நூற்றாண்டில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல துறைக்கல்வி கற்றுப் பலர் பேரறிஞர்களாய்த் திகழ்வது வெளிப்படை.

திருமுனைப்பாடி நாட்டில் திருநாவுக்கரசர், சுந்தரர், மெய்கண்டார் முதலிய அருட்பெருங் குரவர்கள் பிறந்தும் வாழ்ந்தும் அரும்பெரும் படைப்புகளை அளித்துள்ளனரென்றால், இந்நாட்டில் அன்றிருந்த கல்விச் சூழ்நிலையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! மாபெருஞ் சிறப்பிற்குரிய இலக்கியப் படைப்புகளேயன்றி, ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளும் திருமுனைப்பாடி நாட்டில் அமையப் பெற்றிருப்பது நாட்டின் பழம் பெருஞ் சிறப்பிற்கு மேலும் தக்க சான்றாகும். செய்யுள் வடிவிலும் கல்வெட்டுகள் உள்ளன. இது பற்றிய விவரங்களை இந்நூலில் ‘கெடில நாட்டுக் கல்வெட்டுகள்’ என்னும் தலைப்பில் காணலாம்.

கலைகள்

இயல், இசை, கூத்து (நடனம்), ஒவியம், கட்டடம் முதலிய பொறியியல், சிற்பம் முதலிய கலைகள் திருமுனைப்பாடி நாட்டில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தன. பல்லவ மன்னர்களும் சோழ வேந்தர்களும் இக்கலைகட்குப் போதிய ஆதரவு அளித்து வந்தனர். இத்தனை கலைகளையும் திருக்கோயில்களில் காணலாம்.

இயல்

இயல் கலையாகிய இலக்கியத்திற்கு இந்நாட்டில் குறைவேயில்லை. மலையமான் மன்னர்களைப் பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள், அப்பர் - சுந்தரரின் தேவாரங்கள், மெய்கண்டார் - அருணந்தி சிவாசாரியார் ஆகியோரின் சித்தாந்த சாத்திர முதன்மைத் தலைநூல்கள், வேதாந்த தேசிகரின் நூற்றிற்கு மேற்பட்ட வைணவப் பெருநூல்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், வில்லிபுத்தூராரின் பாரதம், நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகளின் கற்பனைக் களஞ்சிய நூல்கள், வடலூர் வள்ளலாரின் அருட்பா முதலிய இயற் கலைப் படைப்புகள் திருமுனைப்பாடி நாடு தந்த செல்வங்களேயாம்.

இசை

பண்டு திருக்கோயில்களில் தமிழ்ப் பண்களின் முழக்கமே கேட்கப்பட்டது. தேவாரத் - திருப்புகழ்ப் பாடல்கள் தமிழிசைப் பண்களின் நிலைக்களம் என்பது யாவரும் அறிந்த உண்மை. இந்தத் தேவார ஆசிரியர் மூவருள் இருவராய அப்பரும் சுந்தரரும், திருப்புகழ் ஆசிரியராகிய அருணகிரிநாதரும் பிறந்தது திருமுனைப்பாடி நாடுதான்! மற்றும், கெடிலக் கரையிலுள்ள பண்ணுருட்டி (பண் + உருட்டி) என்னும் ஊரின் பெயரும் இந்நாட்டு இசை வளர்ச்சிக்குச் சான்று பகரும்.

கூத்து

கூத்து என்னும் கலையில் நடனம் (ஆடல்), தெருக்கூத்து, நாடகம் முதலியவை அடங்கும். பாடல் பெற்ற பெரிய திருக் கோயில்கள் ஆடல் கலைக்கு நிலைக்களமாக இருந்தன. இதற்கென்றே கோயில்களில் ஆடல் மாதர்கள் அமர்த்தப் பட்டிருந்தனர்; அவர்கள் விழாக் காலங்களில் ஆடல் விருந்து அளித்துவந்தனர். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் ஆடற்கலை பெற்றிருந்த பெரு வளர்ச்சிக்குத் திருக்கோவலூர், திருவதிகை, பாகூர் முதலிய கோயில்களில் உள்ள ஆடற்

சிற்பங்கள் போதிய சான்று பகரும். எடுத்துக்காட்டாக, பாகூர்ச் சிவன் கோயிலிலுள்ள பல்வேறு ஆடல் சிற்பங்களுள் ஓர் ஐந்தினை மட்டும் இங்குக் காண்போம். ஐந்தும் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் உள்ளன. இவை பத்தாம் நூற்றாண்டில் படைக்கப் பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்த ஐந்துக்கு மேலும் பல ஆடற் சிற்பங்கள் பாகூர்க் கோயிலில் உள்ளன. சிற்பங்களின் முகங்கள் சிறுவர்களால்

சிதைக்கப்பட்டுப் பொலிவிழந்துள்ளன. இவையே யன்றி, திருவதிகைக் கோயிலிலும் ஆடல் மாதரின் சிற்பங்கள் உள்ளன. திருக்கோவலூர்ப் பெருமாள் கோயிலிலுள்ள பெண்டிர் கோலாட்ட நடனச் சிற்பம் மிகவும் கண்டு களிக்கத்தக்கது.

இவ்வாறு சிற்பிகள் கற்சிற்பங்களாக வடிக்கும் அளவிற்கு அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் ஆடற்கலை பெருவளர்ச்சி பெற்றிருந்தது. அடுத்து, அம்மன்கோயில், ஐயனார்கோயில் முதலிய சிறுகோயில்கள் தெருக்கூத்துக் கலையை வளர்த்தன.

இந்தக் கோயில்களில் விழா நடக்கும் நாள்களில் தெருக் கூத்துகள் நடத்தப்பெறும். கடலூர், திருக்கோவலூர் முதலிய இடங்களில் மிகப் புகழ் பெற்ற தெருக்கூத்துக் குழுவினர் உள்ளனர். இது போக, அரங்கங்களில் நாடகங்களும் நடிக்கப்பட்டன. திருநாவுக்கரசரின் வரலாற்றை மையமாகக் கொண்டு ‘பூம்புலியூர்’ என்னும் பெயருடைய நாடகம் ஒன்று இற்றைக்கு எண்ணுாறு ஆண்டுகட்கு முன்பே நடிக்கப் பட்டதாகத் தெரிகிறது. பூம்புலியூராகிய திருப்பாதிரிப் புலியூரில் ‘முத்தையா ஹால்’ என்னும் பெயருடைய நாடக அரங்கம் ஒன்று உள்ளது; கால் நூற்றாண்டுக்கு முன், இந்த அரங்கமே தமிழ் நாட்டிலேயே மிகப்பெரிய அரங்கம் என்று சொல்லப்பட்டது.

அடுத்து, நாட்டுப் புறக் கும்மி, கோலாட்டம், கரகம் சிலம்பு, பொய்க்காலிக் குதிரையாட்டம் முதலியவற்றையும் கூத்து வகைகளுள் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வகைக் கலைகள் இந்தப் பகுதியில் நிரம்ப உண்டு. பொய்க்காலிக் குதிரையாட்டக் கலைக்குக் கடலூர் மிகவும் புகழ்பெற்ற ஊராகும். மாசிமக விழாவிலும், மற்றப் பெருவிழாக்களிலும் இந்தக் கலைகளை இந்தப் பகுதியில் கண்டுகளிக்கலாம்.

ஓவியம்

ஒவியக்கலை பற்றிக் குறிப்பிடத்தக்கதாக ஒன்றுமில்லை. பல்லவ மன்னர்கள் குடைந்த குகைக் கோயில்களிலும் கட்டிய கற்கோயில்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. தென்னார்க்காடு மாவட்டத்தில் மண்டகப்பட்டில் பல்லவர் குடைந்த குகைக்கோயில் உள்ளது. வேறு சில இடங்களில் கற்கோயில்களும், கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பொதுவாகச் சிவப்பு, மஞ்சள், பச்சை, கறுப்பு ஆகிய (Vegetable Colours) நிறங்களால் தீட்டப்பட்டிருந்தனவாகக் கூறப்படும் ஓவியங்களை இப்போது காண முடிவதில்லை. பல்லவர் காலத்திற்குப் பின் ஒவியக்கலை இந்தப் பகுதியில் அவ்வளவு வளர்ச்சி பெற்றதாகத் தெரியவில்லை.


கட்டடம் - சிற்பம்

கட்டடக் கலையும் சிற்பக் கலையும் பெற்றிருந்த வளர்ச்சிக்கு, இப் பகுதியிலுள்ள கோயில் கட்டடங்களும் கோபுரங்களும் கோயில்களிலுள்ள சிற்பங்களும் சிலைகளும் சான்று பகரும். சிறப்பாக, மண்டகப்பட்டுக் குகைக்கோயில் திருக்கோவலூர்ப் பெருமாள் கோயில் மண்டபம், ரிஷி வந்தியம் கோயிலில் கருங்கல் யாளியின் திறந்த வாய்க்குள் உருளும் கல் உருண்டை,வேங்கடம் பேட்டையிலுள்ள மண்டபங்கள்,

சேந்தமங்கலம் கோட்டைக்கோயில், திருவதிகைக் கோயிலின் கருவறை விமானம், திருநாவலூரிலுள்ள சுந்தரர், பரவையார், சங்கிலியார், நரசிங்கமுனையரையர் ஆகியோரின் உலோகச் சிலைகள், திருப்பாதிரிப் புலியூரில் ஆஞ்சநேயர் கோயிலிலுள்ள ஆஞ்சநேயரின் கருங்கற்சிலை முதலியவை மிகவும் குறிப்பிடத்தக்கன. மாதிரிக்காக, நரசிங்க முனையரையரின் உருவச்சிலையின் படமும், திருவதிகைக்கோயில் கருவறை விமானப்படமும் மேலே காட்டப்டபெற்றுள்ளன.

இந்த உலோகச்சிலை நரசிங்க முனையரையர் என்னும் அரசர்க்கு உரிய எல்லாவகையான ஒப்பனைகளும் அமையப் பெற்று மிகவும் பொலிவுடன் திகழ்வதைக் காணலாம். திருநாவலூர்க் கோயிலிலுள்ள சுந்தரர், பரவையார், சங்கிலியார் ஆகிய மூவரின் உலோகச் சிலைகள் மிக மிகப் பொலிவுடன் விளங்குகின்றன. சுந்தரர் என்றால் சுந்தரரே தான் (அழகரே தான்).

இந்த விமானம் பற்றிய செய்திகளை இந்நூலில் ‘கெடிலக்கரை ஊர்கள் - திருவதிகை’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம். இது பல்லவர் கால வேலைப் பாடுடையது. இதன் அடிப்பகுதி கருங்கல்லாலானது; அக்கருங்கல் நிலையின் மேல் தேர் போன்ற தோற்றத்தில் விமானம் செங்கல்லாலும் சுதையாலும் அமைக்கப்பட்டிருக்கிறது. விமானத்தைச் சுற்றிலும்

கெ.32 அடியிலிருந்து முடிவரைக்கும் சுதையாலான உருவங்கள் கண்கட்குத் தெவிட்டா விருந்து அளித்துக் கொண்டிருக்கின்றன. விமானத்தின் உச்சி நிழல் நிலத்தில் விழாவாறு அடிப்படை அமைத்துக் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கெடிலநாட்டுச் சிற்பக்கலைச் செல்வத்திற்கு இன்னும் எத்தனையோ சான்றுகள் உள.

கைவினைப் பொருள்கள்

வரலாற்றுக் காலத்திற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் முற்பட்ட கற்காலம் (Stone Age), உலோக காலம் (Metal Age) ஆகிய காலங்களிலேயே கெடில நாட்டு மக்கள் கல்லாலும் இரும்பு முதலிய உலோகங்களாலும் கருவிகள் செய்து பயன்படுத்தி வாழ்ந்தனர். அத்தகு கருவிகள் நிலத்திலிருந்து கிடைத்துள்ளன - என்னும் செய்தி இந்நூலில் ‘கெடில நாட்டு வரலாறு’ என்னும் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு, கெடில நாட்டின் கைவினைக் கம்மியக் கலையின் சிறப்பை உய்த்துணரலாம்.

இவ்வாறு இன்னும் கணிதம், வானவியல், மருத்துவம், முதலிய பல்வேறு கல்வி - கலைத்துறைகளிலும் இந்நாடு நெடுநாளாய்ச் சிறப்புற்று வருகிறது.


  1. பெரியபுராணம் - திருநாவுக்கரசர் - 39.