கொல்லிமலைக் குள்ளன்/14

விக்கிமூலம் இலிருந்து

14

ங்கமணியின் முகத்திலும், சுந்தரத்தின் முகத்திலும் கவலை படிந்திருந்தது. மருதாசலமும் தில்லைநாயகமும் தைரியங் கூற முயன்றார்கள். ஆனால், அவர்களால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. “என் உயிரைக் காப்பாற்றிய இந்தப் பையனின் தங்கைக்கே ஆபத்து. வந்துவிட்டதே” என்று மருதாசலம் மனம் பதைத்தான்.

“இந்தப் பக்கத்திலே புலியெல்லாம் இருக்குமா?” என்று சுந்தரம் தயங்கித் தயங்கிக் கேட்டான். அவனுக்குத் தங்கமணியிடத்திலும், கண்ணகியிடத்திலும் எத்தனை அன்பு இருந்தது என்பது அப்போது வெளிப்பட்டது. அவன் கேலியாகப் பேசிக் கொண்டிருந்த காலத்திலெல்லாம் அந்த அன்பு அவ்வளவு நன்றாக வெளியில் தெரியவில்லை. சுந்தரத்தின் கண்கள் கலங்கின. அவன் ஏக்கத்தோடு தில்லைநாயகத்தின் பதிலை எதிர்பார்த்து நின்றான்.

“இங்கே சிறுத்தைப் புலிதான் உண்டு; அதுவும் பகல் நேரத்திலே வராது” என்று மருதாசலம் யோசனை செய்து கொண்டே பதிலளித்தான்.

“மணி, அத்தைக்கு என்னடா பதில் சொல்வது? இப்படி ஏமாந்து இருந்துவிட்டோமே!” என்று தொண்டை விக்க விக்கச் சுந்தரம் கூறினான்.

“சுந்தரம், நாம் சோர்வடையாமல் தேடிப் பார்ப்போம். மனம் கலங்கினால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. அம்மாளும் அப்படித்தான் கடிதத்தில் எழுதியிருக்கிறார்கள்” என்று தங்கமணி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் வகை யில் சுந்தரத்தைப் பார்த்துச் சொன்னான். இந்தச் சமயத்தில் மருதாசலம் நாவல் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்த பக்கமாக ஓடினான். அந்தப் பக்கத்தில் அதிக தூரம் போய் அவர்கள் தேடவில்லை. மருதாசலம் அங்கே இருந்த ஏதோ ஒரு இடத்தை நினைத்துக்கொண்டு ஓட்டமாகச் சென்றான்.

கொஞ்ச நேரத்தில் குதூகலமாக அவன் உரத்துக் கூவுகின்ற சத்தம் கேட்டது. “எல்லாரும் இங்கே வாருங்கள்” என்று அவன் கூவிக்கொண்டே திரும்பி ஓடி வந்தான். அவனை நோக்கி மற்ற மூவரும் பாய்ந்து சென்றனர். மருதாசலம் முன்னால் வழி காட்டிக்கொண்டே ஓட, மற்றவர்கள் பின்

பின்தொடர்ந்தனர். அங்கே ஓரிடத்திலே உயர்ந்திருந்த ஒரு மலைப்பகுதியினின்று சிறிய அருவியொன்று சலசலவென்று சத்தமிட்டுக் கொண்டு விழுந்துகொண்டிருந்தது. அதற்கு எதிரிலே ஒரு பாறை அருவியை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பறையின் அடியிலே படுப்பதற்கு வசதியாக ஒதுக்கிடமும் நிழலும் இருந்தன. கண்ணகி அங்கே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஜின்காவும் பக்கத்திலே படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. கண்ணகியின் தலைமாட்டிலே நாவற் பழங்கள் குவியலாகக் கிடந்தன.

உடனே எல்லாருக்கும் நிலைமை விளங்கிவிட்டது. குகையை விட்டு வெளியே வந்த கண்ணகிக்கு ஜின்கா ஒவ்வொரு நாவல் மரமாகத் தாவி நாவற்பழம் போட்டிருக் கிறது. அவற்றையெல்லாம் தின்றுகொண்டும், கைக்குட்டையிலே சேர்த்து வைத்துக்கொண்டும் கண்ணகி கொஞ்சம் கொஞ்சமாக அதுவரையிலும் வந்துவிட்டாள் பிறகு. நீர் வீழ்ச்சியைக் கண்டதும் அதைப் பார்த்துக்கொண்டே பாறையின் அடியில் உட்கார்ந்து பழங்களைத் தின்று கொண்டிருத்திருக்கிறாள். இரவெல்லாம் சரியாகத் தூங்காததால் அவளுக்கு நல்ல தூக்கம் வந்துவிட்டது. நீர்வீழ்ச்சியின் சலசலப்புச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே அவள் படுத்துத் தூங்கி விட்டாள். ஜின்காவோ இரவெல்லாம் கண்மூடவேயில்லை. அதனால் அதுவும் கண்ணகியின் பக்கத்திலே படுத்துத் தூங்கிவிட்டது.

“கண்ணகி!” என்று சுந்தரம் சிரித்துக்கொண்டே கூவினான். “ஜின்கா! உனக்குமா தூக்கம்?” என்று தங்கமணி குதூகலமாக முழங்கினான். கண்ணகி திடுக்கிட்டெழுந்தாள். ஜின்காவும் எழுந்து, குற்றம் செய்துவிட்டதைப் போல எல்லாரையும் பார்த்துப் பார்த்து விழித்தது.

பிறகு, அனைவரும் உற்சாகமாகக் குகையை நோக்கிச் சென்றார்கள். ஒருவிதமான கவலையும் இல்லாமல் நன்றாக உணவருந்தினார்கள். தில்லைநாயகம் செய்த சமையல் அவர்களுக்கு அவ்வளவு சுவையாக இருக்கவில்லையென்றாலும் பசி மிகுதியால் சுவையை அவர்கள் கவனிக்கவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் மருதாசலம் குறிப்பிட்ட ரகசிய குகையைப் பார்க்க வேண்டுமென்று எல்லாரும் ஆவலோடு புறப்பட்டார்கள்.

“கையிலே ஊன்றுகோல் இல்லாமல் அந்த வழியிலே போக முடியாது. ஆளுக்கொரு தடி வெட்டிக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே மருதாசலம், வழியிலிருந்த ஒரு மூங்கிற்பு தரில் மூங்கிற்கழிகளை வெட்டி எடுத்தான். அந்தக் கழிகளைப் பிடித்துக்கொண்டு மருதாசலம் முன்னே செல்ல, மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள். கண்ணகிக்கு உதவியாக இருக்கத் தில்லைநாயகம் அவளுக்கு முன்னால் அவள் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். மலைச்சரிவிலே மலையை ஒட்டினாற்போல அந்த வழி சென்றது. மேலே உயர்ந்த மலையும், கீழே கிடுகிடு பள்ளத்தாக்கும் இருந்தன. கொஞ்சம் தவறினால் அப்பள்ளத்தாக்கில் விழுந்து மடியவேண்டியதுதான். அதனால் மருதாசலம் எச்சரிக்கை செய்துகொண்டே, மெதுவாக நடந்தான். சில இடங்களில் பாறைகளைப் பிடித்துக் கொண்டு ஆள் உயரத்திற்கு இறங்க வேண்டியிருந்தது. சில இடங்களில் அதைப் போலவே ஏற வேண்டியிருந்தது. மூங்கிற் கழியை ஊன்றிக்கொண்டு எல்லாரும் அடிமேல் அடி எடுத்து வைத்து நடத்தார்கள். இப்படி நடப்பதில் ஜின்காவிற்குத் தான் கொண்டாட்டம். ஏனென்றால், அதற்கு இப்படிப்பட்ட வழியெல்லாம் லட்சியமேயில்லை.

இவ்வாறு அவர்கள் சுமார் 500 கஜம் நடந்து சென்றார்கள். அங்கே ஓரிடத்தில் சற்று விசாலமான இடம் இருந்தது. அங்கே மலைப்பகுதியிலே ஒரு வளைவு இருந்தது. அதன் வலப்பக்கத்து மூலையிலே குகை தொடங்கிற்று. குகையின் வாயிலில் இழைத்து வழவழப்பாகாத காட்டு மரப்பலகைகளால் செய்த கதவொன்று இருந்தது. ஆனால், அது குகையோடு பொருத்தப்படவில்லை. அதைக்கொண்டு குகைக் கதவை மூடி, அதன் மத்தியிலே பொருத்தப்பட்ட குறுக்குச் சட்டத்தால் வெளிப் பக்கத்திலிருந்து குறுக்காக மாட்டிவிடலாம். அப்படி மாட்டிவிட்டால் கதவை உள்ளிருந்து திறக்க முடியாது. வெளியிலிருந்து வேண்டுமானால் குறுக்குச் சட்டத்தை நேராக நிமிர்த்திவிட்டுக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகலாம். மற்றபடி அதில் பூட்டு ஒன்றும் இல்லை.

மருதாசலம் குறுக்குச் சட்டத்தை நிமிர்த்தி வைத்துக் கதவை ஒரு ஓரமாகத் தள்ளி வைத்தான், எல்லாரும் ஆவலோடும், சற்று அச்சத்தோடும் உள்ளே சென்றனர். உள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரமான பிறகு தான் அவர்களால் ஓரளவு உட்புறத்தைப் பார்க்க முடிந்தது.

அது ஒரு விசாலமான குகை. ஆனால், உட்பகுதி ஒழுங்கற்றதாக இருந்தது. பல இடங்களிலே பாறைகள் குறுக்கும் நெடுக்குமாக நீட்டிக்கொண்டிருந்தன. அடித்தளமும் சமனாக இல்லை. பல இடங்களிலே சிறு சிறு குண்டுக் கற்களும், வெவ்வேறு வடிவங்களில் உள்ள பாறைகளும் மேலே துறுத்திக் கொண்டு நின்றன. அந்த இடத்தை ஒழுங்கு செய்ய எவ்வித முயற்சியும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. மலைப்பகுதியிலே இயற்கையாக ஏற்பட்டிருந்த குகை அது. ஓரிடத்திலே சுமார் பத்து அடி உயரத்தில் பாறைக்கு இடையிலே சிறு சிறு பிளவுகள் இருந்தன. அவற்றின் வழியாகச் சூரிய கிரணங்கள் இலேசாக உள்ளே நுழைந்து, மேல்பகுதியில் வெளிச்சத்தை உண்டாக்கின. அந்தப் பிளவுள்ள பகுதி மலைபின் வெளிப்பகுதியாகும். உட்பகுதியிலே ஓரிடத்தில் குகை சற்றே உள்ளே செல்லுவது போல இருந்தது. அங்கு ஒரே இருட்டாக இருந்ததாலும், நீர் கசிந்துகொண்டிருந்ததாலும் இவர்கள் அதற்குள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

“மலை இடுக்கில் அறிக்கொண்டு எங்கிருந்தோ நீர் சொட்டுகிறது. அங்கே வேறொன்றும் இருக்க முடியாது. நானும் அங்கு போய்ப் பார்த்ததில்லை. ஆனால் இதோ, இந்தப் பக்கம் வாருங்கள். இங்கேதான் வேறொரு உட்குகை இருக்கிறது” என்று கூறிக்கொண்டே மருதாசலம் மலையின் உட்பகுதியில் வேறொரு இடத்திற்குச் சென்றான். அங்கே முன்னால் துறுத்திக்கொண்டிருந்த ஒரு கரடுமுரடான கல்லின் மீது லாந்தர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் தீப்பெட்டியும் தயாராக இருந்தது. மருதாசலம் அந்த லாந்தரை ஏற்றினான். அதன் உதவியால் பார்க்கும்போது பக்கத்திலேயே வேறொரு கதவு இருந்தது. இந்தக் கதவிற்கும் பூட்டில்லை. வெளிக்கதவைப் போலவே மத்தியிலே சங்கிலியைக்கொண்டு பிணைக்கப்பட்ட குறுக்குச் சட்டம் இருந்தது. எளிதாகக் கதவைத் திறக்கவும், மூடவும் முடியுமாறு கீல் வைக்கப் பட்டிருந்தது. மருதாசலம் குறுக்குச் சட்டத்தை நிமிர்த்திக் கதவைத் தள்ளினான். கதவு உட்பக்கமாகத் திறந்தது. எல்லாரும் அதற்குள் நுழைந்தனர். மருதாசலம் லாந்தரின் உதவியைக்கொண்டு அந்தக் குகையின் ஒவ்வொரு பகுதியையும் காட்டினான். அங்கேசிறியதும் பெரியதுமாகப் பல செப்புச் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன; அண்மையில் களவுபோன நடராஜர் சிலையும் இருப்பதைக் கண்டு தங்கமணியும் சுந்தரமும் மிகுந்த மகிழ்ச்சிபோடு துள்ளிக் குதித்தார்கள்.

“இது தான் அந்தச்சிலை” என்று சுந்தரம் குதூகலத்தோடு கூவினான். “இதையா கலைக்கூடத்திலிருந்து அந்தக் குள்ளன் திருடிக்கொண்டு வந்துவிட்டான்?” என்று கண்ணகி வியப்போடு கேட்டாள். “இதுவேதான் அந்த உலகப் புகழ்பெற்ற சிலை” என்று தங்கமணி அந்தச் சிலையின் அருகில் உட்கார்ந்து. அதை உற்றுப் பார்த்துக்கொண்டே பதிலளித்தான்.

ஜின்காவிற்குக் கொஞ்ச நேரத்திற்குமேல் அந்த இடம் உற்சாகமளிக்கவில்லை. சிலைகளைப் பார்ப்பதில் அதற்கு அத்தனை ஆவல் இருக்கவில்லை. அது மெதுவாக வெளிக் குகைக்கு வந்து, அங்கே வெளிச்சம் கொஞ்சமாக உள்ளே வரும் துவாரத்தின் பக்கத்திலே அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்த துரிஞ்சில்களைப் பார்த்துக்கொண்டிருந்தது. இருட்டிலே குகைகளின் சுவர்களில் மோதாமல் பறக்கும் அவற்றை அது ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே ஒரு உயரமான கல்லின்மேல் ஏறிப் படுத்துக்கொண்டது. சிலைகளை யெல்லாம் பார்க்கும் அதிசயத்திலே மற்றவர்கள் ஜின்கா வெளிக்குகைக்கு வந்ததைக் கவனிக்கவில்லை. அவர்கள் நாட்டமெல்லாம் சிலைகளின் மேலேயே இருந்தது.

எதிர்பாராத வகையிலே அந்த உட்குகையின் கதவின் அருகிருந்து கொல்லிமலைக் குள்ளனின் கோபச்சிரிப்புக் கேட்டது. “ஆகா, இங்கேயே வந்து அகப்பட்டுக்கொண்டீர்களா? கிடங்கள் உள்ளேயே” என்று கூறிவிட்டு, அவன் உட்குகையின் கதவை மூடிக் குறுக்குச் சட்டத்தை நன்றாகப் பொருத்தி வைத்தான்.

“அண்ணா, அண்ணா, ஏமாந்து போனோம்” என்று கண்ணகி அலறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/14&oldid=1101591" இலிருந்து மீள்விக்கப்பட்டது