கொல்லிமலைக் குள்ளன்/15

விக்கிமூலம் இலிருந்து

15
கொல்லிமலைக் குள்ளனுக்குத் தன் எண்ணமெல்லாம் எதிர்பாராத விதமாகப் பலித்துவிட்டதென்று பூரிப்பு உண்டாயிற்று. அவன் வாய்விட்டு உரக்கச் சிரித்தான். ஆனால், இந்தப் பூரிப்பும், சிரிப்பும் அடுத்த விநாடியிலேயே மறைந்து விட்டன. அவன் உட்குகையின் கதவை மூடிக் குறுக்குச் சட்டத்தைப் போட்டதை வெளிக்குகையின் ஒரு சுவரோரத்தில் பாறைமீது உட்கார்ந்து துரிஞ்சில்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஜின்கா பார்த்தது; கண்ணகி அலறியதும் கேட்டது. அதற்கு அடக்க முடியாத கோபம் உண்டாயிற்று. அது ஒரே தாவல் தாவி, குள்ளனின் நெஞ்சின்மீது ஏறி,


தலையை இறுக இருகைகளாலும் கட்டிப் பிடித்துக்கொண்டு, அவன் மூக்கைப் பிடித்துத் தன் கூர்மையான பற்களால் கடித்தது. அதே சமயத்தில் பயங்கரமாகக் கூச்சலிட்டது.

இப்படிப்பட்ட தாக்குதலைக் குள்ளன் எதிர்பார்க்கவே இல்லை. தன்னைத் தாக்கியதுகூட என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை. குகையில் வாசம் செய்த பேயோ, பூதமோ தன்னைத் தாக்குவதாக அவன் பயந்து வெலவெலத்துப் போனான். அவன் மூக்கிலிருந்து ரத்தம் பீரிட்டு வழிந்து சட்டையெல்லாம் நனைந்தது. அவன் இரண்டு கைகளாலும் ஜின்காவைப் பிடித்து உதறித் தள்ளினான். அப்படி உதறித் தள்ளும்போது அவன் தள்ளாடித் தடுமாறினான். அவன் கால்கள் நடுங்கின. அவனால் நிற்கமுடியவில்லை. அப்படியே அவன் முன்னால் சாய்ந்து விழுந்தான். முன்னால் நீட்டிக் கொண்டிருந்த கல்லிலே அவன் நெற்றி படீரென்று மோதிற்று. நெற்றியிலிருந்தும் ரத்தம் பீரிட்டுப் பொங்கத் தொடங்கியது. அடிபட்ட அதிர்ச்சியால் அவன் மூர்ச்சையடைந்து குகைக்குள்ளே தொப்பென்று விழுந்தான்.

ஜின்கா உடனே குறுக்குச் சட்டத்தை நேராக நிமிர்த்தி, உட்குகையின் கதவைத் திறந்தது. தங்கமணி முதலியவர்கள் பெருமகிழ்ச்சியோடு வெளியே வந்தார்கள். மருதாசலத்திற்கும், தில்லைநாயகத்திற்கும் அப்போதும் அச்சம் நீங்கவில்லை. கொல்லிமலைக் குள்ளன் கைகால்களை அசைக்காமல் கட்டைபோலக் கிடப்பதை லாந்தர் வெளிச்சத்தில் பார்த்தபிறகுதான் அவர்களுக்குக் கொஞ்சம் துணிச்சல் உண்டாயிற்று.

தங்கமணி எல்லாரையும் வெளியே வருமாறு சமிக்ஞை செய்தான். எல்லாரும் விரைவாக வெளியேறினர். வெளிக் குகையின் கதவைத் தங்கமணி நன்றாக மூடப்போனான். மருதாசலம் அவனுக்கு உதவியாக நின்று, கதவைக் குகையின் வாயிலில் ஒழுங்காகப் பொருத்தி வைத்தான். உடனே தங்கமணி அந்தக் குறுக்குச் சட்டத்தைக் குகையின் வாயிலில் உள்ள பாறைகளில் நன்றாகப் பொருந்தும்படி குறுக்காகத் திருப்பி வைத்தான். “இனி உள்ளேயிருந்து கதவைத் திறக்கவே முடியாது. நம்மையெல்லாம் சிறைப்பிடிக்க நினைத்த அந்தத் திருடன் உள்ளேயே கிடக்கட்டும். இனிமேல் நாம் அதிவிரைவாக எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். செல்லுங்கள்” என்று அவன் மற்றவர்களை நோக்கிக் கூறினான். அவர்கள் வந்த வழியாகவே திரும்பிச் செல்லலாயினர்.

மருதாசலம் நடந்தான். அவனுக்குப் பின்னால் தங்கமணியும், சுந்தரமும் சென்றனர். கண்ணகியின் கையைப் பிடித்தவாறு தில்லைநாயகம் கடைசியில் வந்தான். மூங்கிற் குச்சிகளைப் பழையபடி தரையில் ஊன்றிக்கொண்டு எல்லோரும் நடந்தனர். ஜின்கா இப்பொழுது தங்கமணியின் தோள்மேல் ஏறிக்கொண்டது.

“ஜின்கா, பலே பலே! பேஷ்டா! நீ தங்கமணிக்குச் சரியான ஜோடி” என்று சுந்தரம் குதூகலத்தோடு ஜின்காவைத் தட்டிக் கொடுத்துக்கொண்டே நடந்தான்.

“இந்தக் குரங்கு தான் நம்மையெல்லாம் காப்பாற்றியது. அதைத் தினமும் நான் நினைத்துக் கும்பிடுவேன்” என்று தில்லை நாயகம் தழுதழுத்த குரலில் மிகுந்த அன்போடு சொன்னார்.

“அம்மாவிடம் சொல்லி நான் ஜின்காவிற்குப் பிடித்த பலகாரமெல்லாம் செய்து போடுவேன்” என்று கண்ணகி உற்சாகத்தோடு தெரிவித்தாள்.

“முதலில் நாம் அப்பாவைக் கண்டுபிடிக்க வேண்டும். அவரிடத்திலே இந்தக் கொல்லிமலைக்குள்ளனை ஒப்படைக்க வேண்டும். பிறகு, கூடல் பட்டணம் போய், அம்மாவைச் சந்திக்க வேண்டும். அப்புறந்தான் பலகாரத்தைப் பற்றியெல்லாம் நினைக்க வேண்டும். இப்போது வேகமாக நடவுங்கள்” என்று துரிதப்படுத்தினான் தங்கமணி.

“உன்னுடைய அவசரத்திலே கால் தடுக்கிவிடப் போகிறது. அப்படித் தடுக்கிவிட்டால் பிறகு எந்தக் காரியமும் செய்ய முடியாது. எலும்பைப் பொறுக்கி எடுக்க வேண்டிய காரியந்தான் செய்ய வேண்டி வரும்” என்று எச்சரித்தான் சுந்தரம். ஆனால், அவனும் வேகமாகத்தான் காலெடுத்து வைத்தான். கொஞ்சநேரத்தில் அவர்கள் தில்லைநாயகத்தின் சமையல் குகைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்தக் குகையில் நுழையும்போதே குள்ளன் இங்கு எப்படித் திடீரென்று வந்தான்?” என்று யோசனையில் ஆழ்ந்தவாறே தங்கமணி கேட்டான்.

“அவன் நினைத்தால் வந்துவிடுவான். அதிலெல்லாம் அவன் பலே கெட்டிக்காரன்” என்று மருதாசலம் பதில் சொன்னான்.

“வஞ்சியாற்றின் வழியாக அவர் பரிசலில் வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த மலைக்குத் தெற்கில் உள்ள ஏரியில் பரிசல் போட்டு வந்திருக்கவேண்டும். இந்த இடத்திற்கு வர இந்த இரண்டு வழிகள் தாம் உண்டு. இரண்டும் ரகசியமான வழிகள் தாம். எங்களுக்குமட்டுத் தெரியும்” என் தில்லைநாயகம் தெரிவித்தார்.

“வஞ்சியாற்றின் வழியாக வந்திருந்தால் அவன் எப்படி மேலே ஏற முடியும்? நூலேணியைக் கீழே விட யாரு இல்லையே!” என்று சுந்தரம் கேட்டான்.

“நாம் வரும்போது கீழே விட்ட நூலேணியை மேலே இழுத்து வைக்க மறந்துவிட்டோம்” என்று மருதாசலம் கூறினான்.

இந்தச் சமயத்திலே யாரோ சீழ்க்கையடிக்கும் ஓர் கேட்டது. “பரிசலில் யாரோ வந்திருக்கிறார்கள். எங்கள் எஜமானரோடு வந்தவர்களாக இருக்கலாம்” என்று கவலையோடு தில்லைநாயகம் சொன்னார்.

இதையெல்லாம் கவனத்தோடு கேட்டுக்கொண்டிருத் தங்கமணி, “இங்கிருந்தபடியே யாருக்கும் தெரியாமல் அந்த பரிசலில் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.

“அதோ! அந்தக் குன்றின் மேலே ஏறினால் மறைவா நின்று நன்றாகப் பார்க்கலாம்” என்று தில்லைநாயகம் கூறவே உடனே தங்கமணி, “மருதாசலம், நீ ஓடிப்போய்ப் பார்த்த வா. அவர்கள் உன்னைப் பார்க்காமல் எச்சரிக்கையாக இரு” என்றான். மருதாசலம் ஒரே ஓட்டமாக ஓடிப்போய்ப் பார்த்து விட்டுத் திரும்பினான். “பரிசலைக் கரையில் இழுத்துவிட்டுவிட்டு அங்கே ஐந்துபேர் உட்கார்ந்து இருக்கிறார்கள்” என்று அவர் மூச்சு இரைக்க இரைக்கத் தெரிவித்தான். அந்தச் சமயத்தில் மறுபடியும் சீழ்க்கை ஒலி கேட்டது.

“மேலே வரலாமா? என்று அவர்கள் கேட்கிறார்கள் இந்தச் சீழ்க்கைக்கு இது தான் அர்த்தம்” என்று தில்லைநாயகம் பயந்த குரலில் சொன்னார்.

“அவர்களை மேலே வரும்படி நீ பதில் சீழ்க்கை அடி” என்று தங்கமணி கூறினான்.

“ஐயோ, வேண்டவே வேண்டாம். அந்த ஐந்து பேரும் வந்தால் அப்புறம் நம் பாடு திண்டாட்டந்தான்” என்று தில்லைநாயகம் அவசரமாகத் தெரிவித்தார்.

“எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. அந்தப் பரிசலில் கட்டுண்டு கிடப்பவர் எங்கள் அப்பாவாகத்தான் இருக்க வேண்டும். அவரைக் கட்டி எடுத்துக்கொண்டு குள்ளன் தச்சுப் பட்டறைக்குப் போக ஆள்களோடு வந்திருக்கிறான். போகும் வழியிலே ஏதோ ஒன்றை மனத்தில் கொண்டு அவன் அந்த ரகசியக் குகைக்குச் செல்லத் தனியாக மேலே வந்திருக்கிறான், அவன் எதற்காக வந்தானென்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும் ரகசியக் குகையில் அவனுக்கு ஏதோ வேலை இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தான் அவன் யாரையும் துணைக்கு அழைக்காமல் வந்திருக்கிறான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்துவிடுவதாகவும் அந்த ஆள்களிடம் சொல்லி வந்திருக்க வேண்டும். அவன் இவ்வளவு நேரமாகியும் திரும்பாததனால் தான் அவர்கள் சீழ்க்கையடிக்கிறார்கள்” பன்று தங்கமணி தன் கருத்தை எல்லாருக்கும் தெரியுமாறு வெளியிட்டான்.

“ஆமாம். அதற்காக அந்தத் தடியர்களை இங்கு எதற்காக வரும்படி சொல்ல வேண்டும்?” என்று சுந்தரம் கேட்டான்.

“நாம் வரச்சொல்லாவிட்டாலும் இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, அவர்கள் மேலே வரத்தான் செய்வார்கள். அப்படி வந்தால் அவர்கள் சந்தேகத்தோடுதான் வருவார்கள். அப்படி அவர்கள் சந்தேகப்படுவது நமக்கு நல்லதல்ல” என்று தங்கமணி ஆழ்ந்த சிந்தனையோடு பதில் சொன்னான். ஆனால், அவனுடைய கருத்து ஒருவருக்கும் புரியவில்லை.

“நூலேணியை மேலே இழுத்துவிடுகிறேன். அப்போது அவர்கள் வர முடியாது” என்று மருதாசலம் உற்சாகத்தோடு சொல்லிக்கொண்டே குகையை விட்டுப் புறப்பட்டான்.

“வேண்டாம், வேண்டாம். அவர்களை மேலே வரும்படி செய்வது தான் நல்லது” என்று மருதாசலத்தைத் தடுத்துவிட்டு, தங்கமணி தில்லைநாயகத்தின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னான். அதைக் கேட்டதும் தில்லைநாயகத்தின் முகம் மலர்ந்தது. அவர் தங்கமணியைத் தட்டிக் கொடுத்துவிட்டு, குகையின் வெளியே வந்து, பரிசலில் உள்ளவர்களை மேலே வருமாறு சீழ்க்கையடித்தார்.

தில்லைநாயகத்தைத் தொடர்ந்து மற்றவர்களும் வெளியே வந்தார்கள். ஜின்கா தங்கமணியின் கருத்தை அறிந்துகொள்ள முடியாமல் திகைப்போடு அவன் தோள்மேல் ஏறிக்கொண்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/15&oldid=1101602" இலிருந்து மீள்விக்கப்பட்டது