சங்க இலக்கியத் தாவரங்கள்/095-150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 

வள்ளை
ஐபோமியா ரெப்டன்ஸ் (Ipomoea reptans,Poir.)

வள்ளை இலக்கியம்

‘வள்ளை’ என்பது தண்ணிரில் மிக நீண்டு வளரும் கொடி. இக்கொடியின் தண்டில் சிறு துளை இருக்கும். இதனைப் பரணர்,

“அம்தூம்பு வள்ளை அழற்கொடி மயக்கி
-அகநா. 376 : 14


என்று பாடுகின்றார். இதன் இலைகளைச் சமைத்துண்ண மகளிர் கொய்வர்.

“வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்”-பதிற். 29 : 2

இக்கொடி நீர் வயலிலும் வளரும் என்பதைப் புறநானூறு கூறும். (புற. 399 : 6).

இக்கொடியில் ஊதா நிறமான மலர்கள் பூக்கும். வள்ளையின் கொடி வளைந்து (புறநா. 16 : 13) நெளிந்து, நீண்டு வளருமாதலின், (மது. கா. 255) இதனையே மகளிர் காதுக்கு உவமையாகக் கூறுகின்றது. பிற்கால இலக்கியம்.[1]

நிகண்டுகள் இதற்குத் ‘தாளிகம்’ என்ற ஒரு பெயரைச் சூட்டுகின்றன.

வள்ளை தாவர அறிவியல்

|

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
(Bicarpellatae)
தாவரக் குடும்பம் : கன்வால்வுலேசி (convolvulaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஐபோமியா (Ipomoea)
தாவரச் சிற்றினப் பெயர் : ரெப்டன்ஸ் (reptans)
இது முன்னர் அக்குவாட்டிககா (aquatica) எனப்பட்டது.
சங்க இலக்கியப் பெயர் : வள்ளை
தாவர இயல்பு : நீர்க் கொடி. சுற்றிச் சுழன்று, வளைந்து, நெளிந்து, நீண்டு, நீரில் மிதந்து வளரும். ஒராண்டு வாழும் இயல்பிற்று. கொடித்தண்டில் சிறு துளையிருக்கும்.
இலை : தனியிலை. நீண்ட இலைக் காம்பு மூன்று பிளவானது. அடியில் உள்ள இரு பிளவுகள் 3 அங்குல அகலமானவை. நுனியில் உள்ள நீண்ட பிளவு 5 அங். நீளம் வரையிருக்கும்.
மஞ்சரி : நுனி வளராப் பூந்துணர்.
மலர் : ஊதா நிறமானது. புனல் வடிவானது. உட்புறக் கழுத்து சற்றுக் கருநீலமாக இருக்கும். அழகிய மலர்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள். 2-3 அங்குலமுள்ள முட்டை வடிவானவை.
அல்லி வட்டம் : புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் போன்றும், மேலே ஊதா நிற மடல் விரிந்தும் அழகாகத் தோன்றும்.
மகரந்த வட்டம் : 5 மெல்லிய தாதிழைகள் அகவிதழ்களின் உள்ளே காணப்படும் தாதிழை
கள் ஐந்தும் ஒரே மாதிரியில்லை. தாதுப் பைகள் நீளமானவை. தாதுவின் புறத்தே நுண்ணிய முட்கள் செறிந்திருக்கும்.
சூலக வட்டம் : இரு செல் உடையது. நான்கு சூல்கள் சூல் தண்டு மெல்லியது. சூல்முடி உருண்டை வடிவானது. இரு பிளவானது
கனி : பளபளப்பான, நுண்மயிர் போர்த்திய 4-6 விதைகள் உண்டாகும். 2 வித்திலைகள் இரு பிளவானவை வளைந்து அமுங்கியிருக்கும். 4-6 வால்வுகளை உடைய காப்சூல் (உலர் கனி)

இதன் இலைகளை உணவாகக் கொள்வதுண்டு. தண்டில் சிறு துளை இருத்தலின் இக்கொடி நீரில் மிதந்து வளரும். இத்துளை உள்ள உண்மையைப் புலவர்கள் கூறுவர்.



  1. “வள்ளைத்தாள் போல் வடிகாது இலைகாண்”
    -மணிமே. 25 : 5