செயலும் செயல்திறனும்/செயல்திறத்திற்கோர் எடுத்துக்காட்டு

விக்கிமூலம் இலிருந்து

25. செயல்திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு

1. அருஞ்செயல்கள்

இவ்வுலகின்கண், மாந்த இனத்திற்கு அறிவு மலர்ச்சியுறாத காலத்திலும் சரி, அறிவு மலர்ச்சியுற்ற காலத்திலும் சரி, எத்தனையோ வகையான அருஞ்செயல்கள் நிகழ்ந்திருக்கின்றன. உடல் திறத்தாலும், அறிவுத் திறத்தாலும், உள்ளத்திறத்தாலும் இம்மூன்றுஞ் சேர்ந்த ஆளுமைத் திறத்தாலும் மாந்தன் பற்பல அருஞ்செயல்களைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் ஆற்றியிருக்கின்றான். அவற்றுள் நாம் வியக்கத் தக்கனவும், எண்ணி மகிழத் தக்கனவும், எடுத்துக்காட்டாகக் கருதிப் பார்க்கத் தக்கனவும், பின்பற்றத் தக்கனவும் ஏராளம்.

2. திறன் மிக்கச் செயல்கள்

மாந்தனால் தனித்துச் செய்யப்பெறும் செயல்கள் ஒரு மாந்தனின் தனித்திறனை, அவன் அறிவாற்றலை, ஊக்க உணர்வினை, செயல் திறத்தைப் புலப்படுத்துவனவாகும். மாந்தர்களின் கூட்டுச் செயல்களோ, அனைவரின் ஒன்று சேர்ந்த திறன்களையும் கூட்டுணர்வையும் புலப்படுத்துவனவாகும். அத்தகைய கூட்டுச் செயல்களைச் செய்கின்றன பொழுது, அனைவரின் மனவுணர்வும், செயல் நோக்கமும், அறிவுத் திறனும் ஒன்றுபட்டு ஒருமுக எண்ணத்துடன் இயங்குதல் வேண்டும். பலபேர்கள் இணைந்து செயல்படும் பொழுது ஒருவர் செய்கின்ற பிழை அனைத்துத் திறப்பாடுகளையும் கெடுத்துவிடுவதுண்டு. அதேபோல் ஒருவர் திறன் பலருக்கும் பெருமை சேர்ப்பதும் உண்டு. உலகின் பெரும்பாலான செயல்கள் கூட்டுச் செயல்களே ஆகும். உலகமே கூட்டுச் செயலால் உருவாவதுதான். ஒரு செயலுக்கு ஒரு வகையான அறிவுத் திறனே போதுவதில்லை. பல்வேறு வகைப்பட்ட அறிவுத் திறன், உணர்வுத் திறன், உழைப்புத் திறன், செயல்திறன் ஆகியவற்றாலேயே செயல்கள் நிகழ்கின்றன; அல்லது நிகழ்த்தப் பெறுகின்றன. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், அறிவியல் கூறுகளில், இயல்பியல், வேதியியல், பொறியியல், தொழிலியல், தொழில்நுட்பவியல், நிலவியல், மண்ணியல், விண்ணியல், கலையியல் போலும் அனைத்து அறிவுக் கூறுகளும் இணைந்து இயங்கும் செயல்பாடுகள் மிகு திறம் வாய்ந்தவை.

விண்ணில் ஏவும் செயற்கைக் கோள் போன்றவற்றிற்கு இவ்வனைத்தும் அறிவுக் கூறுகளும் இயைந்து இயங்குதல் எத்துணை இன்றியமையாதது என்பதை எண்ணிப் பாருங்கள்.

அவ்வாறு அனைத்துக் கூறுகளும் இணைந்து இயங்கிய ஒரு செயல் திறன் நாம் சிறிதே ஆழமாகக் காட்டுவதன் வழியாக, ஒரு செயல் வெற்றியுற முழுமையும் எத்தனை வகையான அறிவு முயற்சிகள் தேவை என்பதையும், அவை எவ்வெவ்வாறு ஒன்றினோடொன்று இயைந்து, இயங்க வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

3. திறன்கள் இயைந்து இயங்க வேண்டும்

அமெரிக்காவில், நியூயார்க்குத் துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டினரை வரவேற்குமாறு, அதன் அருகிலுள்ள பெட்லோ தீவில் உள்ள உரிமைச் சிலை செய்யப்பெற்ற செயல்திறத்தை நாம் கொஞ்சம் நினைவு கூர்தல் வேண்டும்.

பேரழகும், பெருமிதமும் பொழிந்து தோன்றும் ஒர் உரிமைப் பெண் போலும் வடிவமைந்த அந்த உரிமைச் சிலை (Liberty Statue) செய்வதிலும், அதை அங்கு கொண்டு வந்து நிறுவுவதிலும்தான் எத்துணை அறிவியல் திறம், மாந்த அறிவு, உடலுழைப்பு, தொழில்நுட்பம், கலைத்திறம், பொறியியல், வேதியல், கணக்கியல் முதலிய ஆற்றல்கள் செயல்பட்டிருக்கின்றன என்பதை எண்ணுகையில் மாந்தமனம் வியப்பிலும் வியப்பு எய்திக் களிக்கிறது.

அந்தச் சிலையை உருவாக்குவதில்தான் எத்தனைப் பேரறிஞர்கள், செயலறிவுடையவர்கள், பொறியியல் வல்லுநர்கள், கலைஞர்கள், தொழிலாற்றல் உடையவர்கள், தொழில் நுட்பம் சான்றவர்கள், அறிவியலாளர்கள் போன்றவர்கள் இரவும் பகலும் ஏறத்தாழ ஒன்பதாண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. அதில் தாம் எத்தனைச் சிக்கல்கள்; இடர்ப்பாடுகள்; துன்பங்கள் துயரங்கள் அப்பப்பா!

ஒரே ஒரு சிலையை உருவாக்குவதில் இத்தனைச் சிக்கல்களா? இத்தனை நுட்பங்களா? இத்தனை அறிவாற்றல்களா? பல்வேறுபட்ட அத்தனை அறிவாற்றல்களும் ஒருங்கிணைந்து, ஒன்றுக்கொன்று மாறுபடாமலும் வேறுபடாமலும் இயங்க வேண்டியுள்ளனவே. இத்தனைக்கும் உயிரற்ற சிலை அது. உடலியக்க உள்ளுறுப்புகள் அனைத்தும் அற்ற உள்ளே ஒன்றுமில்லாமல், புறத்தோலாக மட்டும் ஒரு மாழைத்தகடு போர்த்தப் பெற்ற சிலைக்கே இத்தனை அறிவுத் திறன்கள் தேவைப்படுமானால், ஓர் உயிருள்ள உடலை - அவ்வாறு

வேறுவேறான பல்லாயிரங்கோடி உயிருள்ள உடல்கள் சான்ற இவ்வுலகத்தை இவ்வுலகம் போலும் பல்லாயிரங்கோடி உலகங்களை உள்ளடக்கிய இப்புடவியைக் கட்டமைக்க - இயக்க - எத்தனை ஆயிரம் அறிவுத் திறன்களும் செயலறிவுகளும், அவற்றுடன் எத்தனை எத்தனை இயற்கையியல், உயிரியல் இயக்கத்திறன்களும் தேவை? அவை அனைத்தையும் பெற்றிருப்பவர் யாரோ? அல்லது எதுவோ? அஃது எங்கோ? இவ்வினாக்கள் அனைத்திற்கும் வெறும் இயற்கை என்னும் ஒரு சொல்லில் விடை கூறிவிட்டு அடங்கி விடுமாறு, நம் அறிவுணர்வு நிறைவடைவதில்லையன்றோ?

ஒரு செயல் என்றால் என்ன? அஃது எண்ணத்தில் தோன்றிக் கருத்தில் கருக்கொண்டு, நுண் பொருளாய் உருக்கொண்டு, உணர்வு வடிவமாகி நின்று, அந்த வடிவம் பருப்பொருளாய்ச் செயலுக்கு வருவதற்குள் நேரும் இயற்கை இடையூறுகள் எத்தனை? தடைகள் எவ்வளவு? அம்மவோ, நினைக்கவும் அறிவு நிலைக்குத்திப் போகின்றதே!

இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால்,

சொல்லுதல் யார்க்கும் எளிது; அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

(664)

என்னும் மெய்க்கூற்றில்தான் எத்துணை உண்மை விளங்குன்றது. மேலோட்டமாய் ஒரு வகைப் பொருளைத் தரும் இவ்வரிய திருக்குறளடிகள் ஆழமாய்ப் பார்ப்பவர்க்கு எத்துணை விரிந்த வியத்தகு பொருளைத் தருகின்றது.

பொதுவாகவே பிரெஞ்சு நாட்டு மக்கள் வேறெந்த நாட்டினரையும் விடக் கலையுணர்வு மிக்கவர்கள், என்பதை அந்நாட்டில் சந்து சதுக்கங்களிளும், மூலை முடுக்குகளிலும், புல்வெளிகளிலும் பூங்காக்களிலும், நீர் நிலைகளிலும், வாவிகளிலும், கட்டட முகப்புகளிலும் கலையொழுகும் கட்டட உட்புற மேல் வளைவுகளிலும், சிறியனவாகவும் பெரியனவாகவும் மலிந்து கிடக்கும் செதுக்குச் சிற்பங்களையும் வண்ண ஒவியங்களையும் பார்த்தாலே கண்டு கொள்ளலாம்.

எனவேதான் அமெரிக்கப் பெட்லோ தீவில் உள்ள உரிமைப் பெண்மணியின் சிலை செய்யும் பொறுப்பைப் பிரடரிக் அகஸ்டெபர்தோல்டி என்னும் பிரெஞ்சு நாட்டுச் சிற்பி மனமுவந்து ஏற்றுக் கொண்டார். முதலில் இப்படி உரிமையின் வடிவமாக ஒரு சிலை செய்ய வேண்டும் என்னும் கருத்தினை வெளிப்படுத்தியவர் அமெரிக்க நாட்டின் பெரும் புகழ் வரலாற்றிஞரும் சட்ட வல்லுநருமான எட்வர்ட் டி லாபோலே என்பவரே யாவர். 1865 இல்

வெளிப்படுத்தப்பெற்ற இக்கருத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று எண்ணிய பிரெஞ்சுச் சிற்பி, 1871 இல் நியூயார்க்கு சென்று இட அமைப்பையும் அங்கு வைக்கப்பெறும் சிலையின் பெருமாண்ட அளவையும் கணித்து வந்தார்.

எகிப்து நாட்டில் உள்ள மிகு பெயர் பெற்ற பாறாங்கல் உருவங்கள் அச்சிற்பியின் மனத்தில் சிலைக்கு ஒரு பெரும வடிவத்தையும் உருவத்தின் அளவையும் தோற்றுவித்தன. மற்றும் சிலைப் பிராட்டியின் உருவத்திற்கேற்ற முக அமைப்புக்குச் சிற்பி, தம் அன்னையார் முகத் தோற்றத்தையும், உடல் வடிவத்திற்குத் தம் காதலியின் எழில் வடிவத்தையும் இணைத்துக் கற்பனை செய்து வைத்துக் கொண்டார். மேலும் இவ்வுரிமைக் கன்னியின் சிலை கலங்கரை விளக்கமாகவும் பயன்பட வேண்டும் என்று கருதப்பட்டதையும் நினைவில் இருத்திக் கொண்டார்.

அமைக்க விருந்த சிலை, பீடம் ஆகியவற்றுடன் கலங்கரை விளக்கை ஏந்தியிருக்க வேண்டிய வலக்கை வரை, உயரம் 300 அடிகள் இருக்க வேண்டும் என்றும், இவற்றுள் சிலையின் உயரம் மட்டும் 15 அடி இருக்க வேண்டும் என்றும் சிற்பி தன் மனத்துள் திட்டமிட்டுக் கொண்டார். சிலையைத் தாங்குவதற்கு உள்ள பீடம் 89 அடி. அதற்கடியில் உள்ள தளம் 6 அடி உயரமுள்ள கருங்கல்லால் அமைய வேண்டியது. உலகிலேயே இதுதான் மிக உயரமான சிலையாக இருக்க வேண்டும் என்றும் சிற்பி உறுதிப்படுத்திக் கொண்டார்.

சிலை வடித்து, உருவாக்கிய பணி தலைசிறந்த ஒரு தொழில்நுட்பப் பணியாகும் என்பதை அனைத்துத் துறை அறிஞர்களுமே ஒப்புவர்.

1875 ஆம் ஆண்டின் இறுதியில், சிற்பி பர்தோல்டி தம் உள்ளத்தில் கருவாகித் திருவாகி நின்ற சிலைக்கு 4 அடி உயரமுள்ள களிமண் மாதிரி உருவம் ஒந்றை உருவாக்கினார். அம்மாதிரிச் சிலையின் சாயல் வடிவத்திற்கு ஒரு பிரெஞ்சு அழகி ஒருத்தியின் சாயல் (Style) அமைப்புப் பயன்படுத்தப் பெற்றது. வடிவத்தைச் சிற்பி, தாம் எண்ணிய அளவிற்குத் திருத்தமாக அமைத்துக் கொண்டபின், அதனினும் பெரிய வடிவத்தை வெள்ளைக் களியத்தில் (Plaster of Paris) வடித்தெடுத்தார். பின்னர் அதையும் சீர்திருத்தி, அதனினும் பெரிய வடிவம் என இப்படியாக இறுதியில் 36 அடி உயரமுள்ள மிகத் திருந்திய வடிவம் கொண்ட ஒரு சிலையை வெள்ளைக் களியத்திலே செய்து முடித்தார். இவ்வாறு - - கொண்ட ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒன்பதினாயிரம் (9000) கோண, பரும, நுட்ப அளவைகளை எடுக்க வேண்டியிருந்தது.

அவ்வாறாக இறுதிப்படுத்தப் பெற்ற 36 அடி உயரமுள்ள வெள்ளைக் களியத்தால் ஆன உரிமைப் பிராட்டியின் மாதிரிச் சிலையைப், பர்தோல்டியும் அவருடைய தொழில்நுட்ப உதவியாளர்களும் 300 பகுதிகளாக அறுத்துக் கூறு போட்டுத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்தெடுத்துக் கொண்டனர். பின்னர் ஒவொரு கூறையும் அதே வடிவ அமைப்பில் நான்கு மடங்கு பெரிதாகச் செய்து கொண்டனர். அவ் வடிவங்களும் வெள்ளைக் களியத்தாலேயே செய்யப் பெற்றன.

அவ் வடிவங்கள் செப்பப்படுத்தப் பெற்று, அவற்றை ஒன்றிணையும்படி தழுவி அணைத்து நிற்க, தச்சர்கள் பெரும்பெரும் மரச் சட்டங்களைச் செய்து கொண்டனர். அதனையடுத்து, அவற்றைப் போர்த்துவதற்குக் கொல்லர்கள் மாழைத் தோல் (Metal) தகட்டை உருவாக்க முனைந்தனர். இதற்காக முதலில் பர்தோல்டி வெண்கலத்தைப் பயன்படுத்தக் கருதினார். ஆனால் அது மிகக் கடினமானதாக இருக்கும் எனக் கருதிப் பின்னர் செம்பைப் பயன்படுத்தினார்.

துண்டுத் துண்டாக உருவாக்கப் பெற்ற அம்முந்நூறு செப்புத் தகடுகளும் இலக்கம் செப்புத் திருகாணிகளால் இணைக்கப்பட வேண்டும். பின்னர் சிலையைத் தாங்குவதற்கு 89 அடி உயரமுள்ள பீடமும், அதற்கு அடியாக 6 அடி உயரமுள்ள கருங்கல் தளமும் வரையறுத்துக் கொள்ளப் பெற்றன.

அதன் பின்னர் இன்னொரு சிக்கலுக்கு வழி காண முற்பட்டனர். உடலைத் தாங்கி நிற்க முதுகதந்தண்டு உதவுவது போல், சிலையை உள்முகமாக நிமிர்ந்து நிற்கச் செய்ய முதுகந்தண்டு போல் பயன்படும் ஒர் இரும்புச் சட்டம் ஒன்று சிலையின் உயரத்திற்குத் தேவைப்பட்டது.

இதற்கென அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈஃபில் என்னும் பொறியியல் வல்லுநரைப் பர்தோல்டி அழைத்துக் கலந்து பேசி முடிவெடுத்தார். பாரீசு நகரில் சீன் ஆற்றங்கரையில் உள்ள உலகப் புகழ்ப்பெற்ற ஈஃபில் இரும்புக் கோபுரத்தைக் கட்டி பெருமை பெற்றவர் அவர். அதனாலேயே அக்கோபுரத்திற்கு (ஈஃபில் கோபுரம்) என்று பெயர் வந்தது. ஆனால் எல்லாவற்றையும் விட அவருடைய சிறப்புப் படைப்பு இந்தச் சிலையின் மேல் பகுதியாக விருக்கும் செம்புத் தோலைத் தாங்குவதற்கான ஓர் இரும்புச் சட்டகத்தினை உருவாக்கியதே ஆகும்.

மேல் தோல் மெல்லியதாக இருப்பினும் அதன் மொத்த எடை 2 இலக்கம் தூக்கு (Pound) ஆகும். (ஏறத்தாழ 89.5 கல்லெடை) இவ்விரும்புச் சட்டகத்தை நியூயார்க்குத் துறைமுகத்தில் அடிக்கும் கொடுங்காற்றை எதிர்த்து நிற்கும் வலுவுடையதாகவும், நிலத்தின் ஈர்ப்பாற்றலுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாகவும் அமைக்க வேண்டியிருந்தது. இவற்றைக் கருத்தில் கொண்டு சிலையின் செப்புத் தோலைத் தாங்குவதற்கு ஈஃபில் மிகவும் அறிவு நுட்பமாக இரும்புப் பாளங்களைப் பயன்படுத்திச் சிலந்தி வலைபோல், சிலையின் உட்புற வளைவு சுழிவுகளுக்கு ஏற்றவாறு பின்னியிருந்தார். ஒவ்வோர் இரும்புப் பாளமும் இரண்டு விரலம் (அங்குலம்) அகலமும், அரை விரலத்திற்கு மேல் கனமும் உடையது. இந்தப் பாளங்கள் தோலுடன் ‘சாடில்சு’ என்று கூறப்படும் செம்பு இணைப்பட்டைகளால் இணைக்கப்பட்டன. இப்பட்டைகள் பாளங்களுக்கு மேலாக வந்து அந்தந்த இடத்தில் திருகாணிகளால் பொருத்தப்பட்டன. இவ்வாறு ஏறத்தாழ 1500 இணைப் பட்டைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வமைப்பால், தட்டையான பாளங்கள் காற்று அடிக்கும் போது, தாராளமாக அசைந்து கொடுக்கவும், தகட்டுத் தோலும் காற்றுக்கு ஏற்றவாறு இயங்கவும் முடியும். மேலும் தட்வெப்ப நிலையின் மாறுதல்களுக்கு ஏற்ப விரிவடையவோ சுருங்கவோ இயலும்.

இவ்வாறு சிலையின் மாதிரி வடிவம் தொடங்கி அதன் முழுவடிவமும் திருத்தமாக உருவாக ஒன்பது ஆண்டுகள் ஆயின. சிலை அழகு கொழித்தது. அமைதி, அருள், நம்பிக்கை, பெருமிதம், வாழ்க்கை ஆர்வம் - அனைத்து உணர்வுகளும் முகத்தில் தவழுகின்றன. உடலை முழு உரிமையில் இருக்கச் செய்யும் அழுத்திப் பிடிக்காத தொளதொளத்த மேலாடை சிலைப் பெருமாட்டியின் ஓங்கி உயர்த்திய வலக்கையில் கதிரொளி வீசும் எரிசுடர். அது கலங்கரை விளக்கமாகப் பயன்பட்டது. இடக்கையில் அரசியல் அமைப்பை மக்களுக்கு உரிமையாக்கும் வகையில் பொத்தகம் ஒன்று. பக்கவாட்டிலே அணைந்தவாறு, தலையில் உலகின் ஏழு கண்டங்களையும் ஏழு கடல்களையும் குறிக்கின்ற வகையில் ஏழு கதிர்வீச்சுகள் கொண்ட அழகிய மகுடம், அத்தனையும் சிலையின் அழகுக்கு அழகு ஊட்டின.

சிலை உருவாகி வருகையில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் பாரீசு நகர மக்களும் பிற நாட்டினரும் நூற்றுக் கணக்கில் வந்து பார்த்த வண்ணமேயிருந்து வந்தனர். சிலையின் இறுதி வடிவம் கூரைக்கு மேல் போய்விட்டது.

சிலையின் எடை 280 கல்லெடை (Ton) ஆகியது. இது பிரெஞ்சு நாட்டு மக்கள் அமெரிக்கா நாட்டு மக்களுக்குத் தரும் அன்பளிப்பாகக் கருதப்பட்டது. 1884 ஆம் ஆண்டு சூலை மாதம் 4 ஆம் பக்கல் ஒரு மாபெரும் மக்கள் விழாவில் அமெரிக்கத் துரதரிடம் சிலை வழங்கப்பட்டது.

பரிசாக வழங்கப்பெற்ற அந்த உரிமைக் கன்னியின் சிலையைப் பல கூறுகளாக்கினர். சிலையின் செப்புத் தோல் 300 பகுதிகளாகப் பிரிக்கப்பெற்று, அவை மட்டும் 49 பெரும் பெட்டிகளில் மிகவும் காப்பாகச் சிப்பம் செய்யப்பட்டன. சிலையின் இருப்புச் சட்டங்கள் இணைப்புகள் கழற்றப்பெற்று 36 பெட்டிகளில் அடைக்கப்பெற்றன. அப்பெட்டிகளை இழு வண்டிகள், தொடர்வண்டி, போர்க்கப்பல் ஆகியவற்றின் வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறு அமெரிக்கா வந்த சிலை 1886இல் பெட்லோ தீவில் நிறுவப்பெற்றது. பெட்லோ தீவு அதன் பின் உரிமைச் சிலைத் தீவு (Liberty Island) என்றே அழைக்கப்பெறுகிறது.

பயணத்தின்போது எதிர்பாராத வகையில் சிலையின் சில உறுப்புகள் உருமாறிப் போயிருந்தனவாம். இந்நிலை சிலையை அரும்பாடுபட்டு உருவாக்கிய சிற்பிக்கும் பிரெஞ்சு மக்களுக்கும் பெரும் வருத்தத்தைத் தந்தது. இதன் மேலும் ஏற்பட்ட சில விளைவுகள் அவர்களுக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினது போல் பெருந்துயரைத் தந்தது.

சிலையைப் பெட்லோ தீவில் பொருத்துகையில் அமெரிக்கத் தொழிலாளர்களின் கவனக் குறைவினாலும், பொறுப்பின்மையாலும், செயல்திறக் குறைபாட்டினாலும், உறுப்புகளின் பொருத்துத் திருகாணிகளை அந்தந்தத் தொளைகளில் சரியாகப் பொருந்தாமையாலும் சிலையில் பலவகையான மாற்றச் சிதைவுகள் காலப்போக்கில் ஏற்பட்டன. அவை,

1. உரிமைப் பெருமாட்டியின் தலை, ஈஃபில் அமைந்திருந்த இடத்தைவிட்டு 2 அடி தள்ளிப் போய்விட்டது. இதனால் சிலையின் பீடத்திற்குத் தேவையற்ற அழுத்தம் உண்டாயிற்று. தலையின் தோற்றத்திலும் எழில் குறைந்தது.

2. சிலையின் நடுக்கட்டமைப்பிலும் தொழிலாளர்கள் செய்த தவறுகளால், மகுடத்தில் உள்ள ஒரு கம்பி, சிலையின் கையை இடித்துக் கொண்டு செப்புத் தோலில் தொளையை உண்டு பண்ணியது.

3. மகுடத்தைத் தாங்கிக் கொண்டிருந்த இரும்புச் சட்டம் தேய்ந்து போயிருந்தது. 4. தலையை அமைத்த வளைவுகள் சரியான நிலையில் இருக்கவில்லை.

5. நடுத்தண்டுக்கு அடிப்படையான கம்பிகள் நன்கு செயல்படவில்லை. ஒரு கம்பி சரியான விறைப்பில் இல்லை. அவற்றில் இரண்டு சிலையின் விலா எலும்புகளை அழுத்திக் கொண்டிருந்தன.

இவ்வாறாகப் பல சிதைவுகள் செயலின் திறப்பாட்டைக் குறைவுப்படுத்திக் காட்டியதில் வியப்பில்லையன்றோ?

இனி, கடந்த 1985 ஆம் ஆண்டில் சிலைக்கு 100 ஆண்டு முடிவடைந்தது. அந்த ஆண்டில் சிலையின் பேணுகைப் பொறுப்பை ஏற்றிருந்த தேசிய பூங்காப் பேணுகை நிறுவனம், பல்திற வல்லுநர்களைக் கொண்டு ஆய்ந்ததில் பெரும் கவலை கொண்டது. ஏன் தெரியுமா? சிலைச் சீமாட்டி பலவகையிலும் நோயுற்றிருந்தாள்.

மக்களுக்கு நோய்வந்தால், மருத்துவர் நோயாளிகளிடமிருந்து எவ்வளவு புலனங்களைப் பெற முடியுமோ, அவ்வளவையும் பெறுவது போலவே, உரிமைச் சிலைக்கு ஏற்பட்ட சிதைவு நோய்க்கும் கட்டடக்கலை, பொறியியற் கலை மற்றும் கலைத்துறை வல்லுநர்களான மருத்துவர்களும், வண்டி வண்டியாக ஆய்வுக் கருவிகளைக் கொண்டு வந்து, சிலையின் உயிர்நாடிகள் போன்ற உறுப்புகளை ஆய்வு செய்தனர்.

சிலையின் சட்டம் போலவே 8 அடி உயரமுள்ள மாதிரி ஒன்றை அமைத்து, ஒரு கணிப்பொறி மாதிரி ஒன்றையும் உருவாக்கினர். பின்னர் கணிப்பொறிக்குச் சில பல கட்டளைகளை வழங்கினர். அதன் பின்னர் தொழிலாளர்கள் சிலையைச் சுற்றிச் சாரங்களை அமைத்தனர். இஃது எளிதான பணியன்று. 300 அடி உயரமுள்ள சிலைக்குச் சாரங்கள் அமைப்பது தொழில்நுட்பம் மிகுந்த கடினமான பணியாகும். அதுவும் சிலையின் பழுதுபார்ப்பு முடியும் வரை, சாரங்கள் துரு ஏறாமல் இருக்க வேண்டும். இனி, சாரமும் சிலையை எங்கும் தொடாமல், அதைச் சுற்றியிருக்கவும் வேண்டும்.

1980-ஆம் ஆண்டுதான், அஃதாவது சிலை நிறுவிய 94 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், பெரும் குளறுபாடு அடைந்திருப்பது கண்டுபிடிக்கப் பெற்றது. மொத்தம 13 இடங்கள் சேதமுற்றிருப்பது, அறிந்து கொள்ளப் பெற்றது.

சிலையின் தோல் செம்பினால் ஆனது.எனவே காலத்தால் செம்பு களிம்பு பிடித்துவிட்டது. நிறமும்மாறிவிட்டது. தோலுக்குள்ளே எலும்புக் கூடாக நின்று, அதை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது இரும்புச் சட்டம். நாளடைவில், கடலினது உப்புக்காற்றினாலும், தட்பவெப்ப மாறுதல்களினாலும் இரும்புச் சட்டத்தில் துரு ஏறி அரிப்பு ஏற்பட்டு விட்டது. சிலைக்கே மூலமாகவுள்ள செம்புத் தோலும், அதை வடிவப்படுத்தித் தாங்கிக் கொண்டிருக்கும் இருப்புச் சட்டமும், உடனடியாகப் பழுது பார்க்காமற் போனால், போகப் போகச் சிலை மிகுந்த கேடுகளுக்கு ஆளாகும் என்று அஞ்சப்பட்டது.

செம்பும், இரும்பும் தனித்தனியே இருந்த நிலையில் இத்தகைய இயற்கைத் தாக்கங்களுக்கு ஆளானதுடன் இரண்டும் இணைந்திருந்த சில இடங்கள் மின்வேதியல் (Electrolysis) மாற்றங்களாலும் காற்று, மழை, வெப்பம் ஆகியவற்றின் தாக்கங்களாலும் மிகவும் சேதமுற்றுப் போயின சிலையின் கைநுனியில் கலங்கரை விளக்கம் வைக்கப்பெற்றிருந்தது. அதிலுள்ள சுடருக்காக வைக்கப்பெற்றிருந்த கண்ணாடித்துண்டுகளைக் கோத்து வைத்துள்ள செப்புத் தகடுகளில் தாம் அம்மின்வேதியல் தாக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தன.

சிலையின் சுடர் தாங்கும் கையும் மிகவும் பழுதடைந்திருந்தது. வல்லுநர்கள், அதன் சேதம் எத்தகையது என்று ஆய்ந்து அறிந்த பின்னர், சேதம் அதிகமாக இருந்தால் இப்பொழுதுள்ள கையை அகற்றிவிட்டுப் புதிய கையும் சட்டமும் பொருத்த வேண்டியிருக்கும்.

சுடர்பற்றி இப்போது உறுதியாகச் சொல்வதற்கில்லை. உள்ளே இருக்கும் இரும்பு அமைப்பும் தீக்கொழுந்தும், அழகு நகை வேலைகளும் பழுது பார்க்க முடியாத அளவுக்குச் சேதமடைந்துள்ளன. சுடர் அகற்றப்பட வேண்டுமா என்பது முடிவாகவில்லை. புதிய சுடர் நீர்புகாத வண்ணம் அமைக்கப்படும். செம்பில் அமைத்துத் தங்கப்பூச்சு பூசலாம் என்பது அண்மைத் திட்டமாகும். மக்கள் சுடரைப் பார்க்க மேடை (பால்கனி ஒன்று இருந்தது. அது 1916 இல் மூடப்பட்டது. நியூசெர்சியில் இருந்த வெடிமருந்து ஆலை வெடித்தபோது சிலையின் கையிலிருந்து 100 திருகாணிகள் வெளியேறின.

பழுதுபார்ப்புட்டபணிகளால் உரிமைச் செல்வியின் வெளிப்புறத் தோற்றத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. இன்று எப்படி பெருமிதமாகவும் பேரெழிலோடும் காட்சியளிக்கின்றாளோ, அப்படியே இருந்து வருவாள் என்று உறுதி-கூறுகிறார். தேசியப் பூங்காப் பராமரிப்புக் குழுமத்தின் இயக்குநர் ரசல் இ. டிக்கெர்சன்.

சிலைக்குள்ளே சாயம் அகற்றும் பணியுடன் வேலை தொடங்கும். சிலைக்கு இதுவரை 12 தடவைகள் சாயம் பூசப்பெற்றிருக்கிறது. தட்பவெப்ப நிலையினால் தோல் எவ்வளவு சேதம் அடைந்திருக்கிறது என்பததையும் அவர்கள் அறிவர். நியூயார்க்கு துறைமுகத்தின் நடுவில் 100 ஆண்டுக்காலம் கழித்திருக்கும் உரிமைச் செல்விச் சிலையின் செம்பு தேய்வு அடைந்து எடை மிகவும் குறைந்து போயிருக்கும் என்று நினைத்தனர். ஆனால் 10 விழுக்காடு தான் தேய்மானம் அடைந்துள்ளது என்பதை 1981 இல் நடத்திய ஆய்வு புலப்படுத்தியிருந்தது.

பழுது பார்ப்பதில்தான் மிகவும் பெரிய அளவு பணி காத்திருந்தது. 1300 க்கும் அதிகமான பாளங்கள் ஏறத்தாழ 5000 தூக்கு (Pound) எடையுள்ளவை - நிலைவெள்ளி (எவர்சில்வர்) கொண்டு உருவாக்கப்பெறும் காரணம் இது துருப்பிடிக்காது. ஆனால் உறுப்புகள் அனைத்தும் மூல உறுப்புகளைப் போலவே இருக்கும். புதிய பாளங்கள் தளத்திலேயே உருவாக்கப் பெறும். அவை இரும்பு பாளங்களைப் போலவே அமையும். சிலையின் அருகில் இட நெருக்கடியிருப்பதால், ஒரு சமையத்தில் தொழிலாளர்கள் ஒரு சிலரே வேலை செய்ய முடியும். இதனால் காலத் தாழ்த்தம் ஏற்படும்.

பழுதுபார்ப்புப் பணி நடந்து கொண்டிருக்கையிலே சிலை நல்ல நிலையில் இருக்க, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்பாடு செய்யும் ‘சூழ்நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு’ ஒன்று பொருத்தப்படும். பார்வையாளர்கள் வந்த வண்ணம் இருப்பதால் சிக்கல் அதிகப்படுகிறது. அவர்களுடைய மூச்சுக் காற்று ஈரத்தை அதிகப்படுத்துகிறது. உடம்பின் சூடும் வெப்ப நிலையை உயர்த்துகிறது. பழுது பார்க்கப்படும் பொழுது கடந்த ஆண்டு மட்டும் 20 இலக்கம் பேர் சிலையைச் சுற்றிப் பார்த்தனர். இந்தப் பழுது பார்ப்புக்கென ஆகும் செலவு மொத்தம் 3 கோடியே 90 இலக்கம் டாலர், என மதிப்பிடப்பெற்றுள்ளது.

(இவ்வுரிமைச் சிலை பற்றிய செய்திகள் அனைத்தும் ‘டாம் பர்ரோ’ அவர்களின் கட்டுரையையும் தினமணி மொழி பெயர்ப்பையும் (23-7-1985) அடிப்படையாகக் கொண்டவை)

4. இறுதிவரை

இங்கு, செயல் திறத்திற்கோர் எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்ற இவ்வுரிமைச் சிலை செய்யப்பெற்ற வகையில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள், செயற்பாடுகள் மிகப் பலவாகும். அவற்றையெல்லாம் முறைப்பட எண்ணிப் பார்த்து முடிவு செய்தல் வேண்டும்.

அது செய்யப்படுமுன் அதுபற்றிச் சிற்பிக்குத் தோன்றிய எண்ணம், கற்பனை ஆகியவற்றையும், அச்சிலை இருக்க வேண்டிய அமைப்பு, உருவம், சாயல், முகவெழில் முதலியவற்றையும் எவ்வாறு சிந்தித்து அமைத்துக் கொண்டாரோ, அவ்வடிநிலைச் சிந்தனை, அனைத்துநிலைச் செயற்பாடுகளுக்கும் மிகவும் தேவை.

அதன்பின்னர், அவர் சிந்தித்த செயல்முறை வடிவமைப்பு, அதற்குத் தேர்ந்து கொண்ட மூலப் பொருள்கள், அவற்றை உருவாக்க வேண்டிய வழி, வகைகள் ஆகியவற்றையும் கருதிப் பார்த்தல் வேண்டும்.

அவ்வெவ்வேறு வகைச் செயல்களுக்கெல்லாம் உரிய அறிவுத் திறவோரையும், கலைத்திறவோரையும், தொழில் திறவோரையும் அவர்களைக் கொண்டு செய்விக்கும் ஆக்க விளக்கங்களையும் நாம் படிப்படியாக, ஒன்று விடாமல் எண்ணிப் பார்ப்பது நலம்.

இனி, இவ்வுரிமைச் சிலையின் செயல் திறத்தால் நாம் இறுதியாக உணர வேண்டிய செய்திகள் இவை.

1 எவ்வகைச் செயலையும் செய்து முடிப்பதற்குரிய அறிவாற்றலையும் செயல்திறனையும் மாந்தர் இயற்கையாகவே பெற்றிருந்தனர்.

2. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில்தான் வேறுபடுகின்றனர்.

3. செயல்களை எல்லாருமே செய்வர். ஆனால் சிறப்பான செயல்களைச் சிறப்பானவர்களே செய்வர். இதை,

பெருமை யுடையவர் ஆற்றுவார், ஆற்றின்
அருமையுடைய செயல் (975)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். (676)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு. (470)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். (664)

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. (661)

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505)

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். (462)

என்பன போன்ற திருவள்ளுவப் பெருமானின் வாய்மொழிகள் மெய்ப்பிக்கின்றன. இனி,

4. செயல்களைச் செய்வதில் திறமை மட்டுமில்லை; ஆனால், விருப்பம், பொறுமை, பெருமை, நல்லுணர்வு, உயர்நோக்கம் ஆகியனவும் ஒருவர்க்கு உள்ளத்தின் அளவாக அமைந்திருத்தல் வேண்டும்.

5. ஒருவர் செய்யும் செயலை இன்னொருவர் அதே போலவே செய்வார் என்று எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர் முன்னவரினும் மேலாகவும் செய்யலாம்; கீழாகவும் செய்யலாம்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர் (514)

என்னும் திருக்குறளை ஒர்க. இறுதியான செயல் முடிவு அவரவர் திறப்பாட்டையே பொறுத்தது. ஒவ்வொருவரும் ஒரு செயலை ஒவ்வொரு வகையாகவே செய்வர்.

6. இனி, ஒவ்வொரு செயலும் ஒவ்வொரிடத்தும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு வகையாகவே அமையும், மக்கள் முகங்கள், தோற்றங்கள், குணநலன்கள் வேறுபடுவன போல் செயல்களும் வேறுபடுகின்றன; திறன்களும் வேறுபடுகின்றன.

7. கொடுத்துச் செய்வதினும் எடுத்துச் செய்வதேமேல்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
தெரிந்தான்என் றேவற்பாற் றன்று. (515)

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல். (516)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)

8. இனி ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் இடத்தேர்வும் காலத்தேர்வும் மிக இன்றியமையாதன. எந்தச் செயலையும் எந்தவிடத்திலும் எந்தக் காலத்திலும் செய்துவிடமுடியாது. சில செயல்களைச் சில இடத்திலேயே செய்ய முடியும்; அது போல் சில செயல்களைச் சில காலத்திலேயே செய்யமுடியும்.

குளம்பி (காப்பி)ச் செடியை வயலிலோ, கரும்பை மலைப் பகுதியிலோ விளைவிக்க முடியாது.

நெல்லைக் கோடையிலோ, பலாவைப் பணிகாலத்திலோ விளைவிக்க இயலாது. எனவே,

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது. (491)

அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483)

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின். (484)

9. அடுத்து, எந்த ஒரு செயலும் எண்ணம், கற்பனை, தேர்வு, கருவி, தொடக்கம், இயைபு, முடிவு பயன் என்னும் எட்டுக் கூறுகளில் அடங்கும். அவற்றுள்,

எண்ணம் என்பது, ஒரு செயலைப் பற்றி எண்ணுவது, என்ன செய்வது, எதற்குச் செய்வது, ஏன் அதையே செய்வது, எப்படிச் செய்வது, எப்பொழுது செய்வது, எவ்விடத்தில் செய்வது, எவரைக் கொண்டு செய்வது என்பனபோல் எண்ணிப் பார்ப்பது எண்ணம்.

கற்பனை என்பது, கற்பித்துக் கொள்வது. அச்செயல் இப்படியிப்படி அமைத்ல் வேண்டும். இன்னின்ன கூறுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதனுடைய அமைப்பு இப்படி, செயற்பாடு இப்படி என்பனபோல் கற்பித்துப் பார்ப்பது கற்பனை.

தேர்வு என்பது, முடிவாக இத்ைத்தான் செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது. இதைத்தான் இப்படித் தான், இன்னவகையாகத்தான், இந்த இடத்தில்தான், இந்தக் காலத்தில்தான், இவரைக் கொண்டுதான்

என்று முடிவு செய்வது தேர்வு.

கருவி என்பது, அச்செயலுக்குரிய பொருள், மூல துணைக்கருவிகள், வினையாட்கள் ஆகிய பொருள்கள். இவ்வளவு பொருள் வேண்டும்; இத்தனைப் பெருங்கருவிகள். சிறுகருவிகள், இன்னின்ன வினைக்கு இவ்வத்திறனுடைய ஆள்கள் வேண்டும் எந்பதும் அவர்களை அணியப்படுத்துவதும் ஆகும்.

தொடக்கம் என்பது அவ்வினையைத் தொடங்கும் இடம் காலம் இவற்றை ஆராய்ந்து செயலைத் தொடங்குவது.

இயைபு என்பது, அசெயலை இன்னின்ன வகையால் இன்னின்ன துணைவினைகளால், இவ்விவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும்.

முடிவு என்பது, அச்செயலை இந்திந்த முடிவுத் திறனுடன் செய்து நிறைவு செய்வது.

பயன் என்பது, எந்தக் காரணத்திற்காக, அச்செயலைத் தொடங்க எண்ணினோமோ அது முற்றுப் பெற்று, அதன் விலைவைத் தருவது.

10. இனி செயல் என்பது பொதுவானது; எல்லார்க்கும் உரியது; எல்லாராலும் செய்யப் பெறுவது. செயல்திறம் என்பது ஒரு செயலைத் திறம்பெறச் செய்வது; சிறப்பானது, ஒரு சிலராலேயே செய்ய இயல்வது. எல்லாரிடமும் செயல் இருக்கலாம் திறம் இருத்தல் அரிது. ஒரு செயலை ஒட்பம் நுட்பம், திட்பம், செப்பம் ஆகியதுண்திறன்களோடு இடைமுறிவின்றித் தொய்வின்றி, நெகிழ்ச்சியின்றி, இடையீடின்றிப் பழுதின்றிப் பயன்தருமாறு செய்வது அரிதினும் அரிதாகும். அவ்வாறு செய்யத் திறன் பெற்றவர்களே எல்லார்க்கும் வழிகாட்டிகளாகவும் முந்து திறன் உடையவர்களாகவும் கருதப் பெறுவர்.

கருமம் செயலொருவன் கைதுவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில். (1021)


முற்றும்
இந்நூலுள் எடுத்துக்காட்டப்பெற்ற திருக்குறள்மணிகள் (அகர வரிசையில்)
அச்சமே அறனறிந்து மூத்
அஞ்சாமையல் அறனீனும்
அடுக்கிய கோடி அறிதோறும்
அமைந்தாங்கு அறிந்தாற்றி
அரங்கின்றி அறிவுடையார் ஆவ
அரம்போலும் அறிவுடையார் எல்
அரிய என்று அறிவுரு
அரியவற்றுள் அற்கா
அருள்இல்லார்க்கு அற்றது
அருட்செல்வம் அற்றால் அளவு
அரும்பயன் அற்றேமென்று
அருமை உடைத்தென்று அன்பறிவு ஆ
அருவினை என்ப அன்பிலார்
அருளொடும் அன்பின் வழியது
அல்லவை அன்ஸாரீஇ
அவாஇல் அஃகாமை
அவா எனப அஃகியகன்ற
அவா வினை ஆகாறு அளவிட்டி
அவையறிந்து ஆக்கம் அதர்
அவ்விய நெஞ் ஆக்கம் இழந்
அழக் கொண்ட ஆக்கம் கருதி
அழச்சொல்லி ஆக்கம் அறிவினர்
அழிவது உம் ஆள் வினையும்
அளவல்ல ஆற்றின் அளவு-ஈக
அளவறிந்தார் ஆற்றின் அளவு-கற்க
அளவறிந்து ஆற்றின் வருந்தா
அளவின் கண் இடுக்கண் படினும்
அறஞ்சாரா இடுக்கண் வருங்கால்
அறனறிந்து ஆன் இடும்பைக்கு
இதனை இதனால் உள்ளற்க உள்ளம்
இருள்சேர் உறின் உயிர்
இலக்கம் உறின் நட்டு
இலமென்று வெஃகுதல் உற்ற நோய்
இலன் என்று ஊக்கமுடயான்
இலன் என்னும் ஊதியம்
இல்வாழ்வான் ஊழையும்
இழிவறிந்து எண்ணித் துணிக
இழுக்கல் எண்ணிய எண்
இளிவரின் எண்ணியார் எண்ணம்
இறப்பே புரிந்த எண்ணென்ப
இறலினும் எதிரதாக்
இங்பிறந்தார் எய்தற்கரியது
இனம் போன்று எல்லைக் கண்
இன்பத்துள் இன்பம் எள்ளாத எண்ணி
இன்பம் விழையான் எற்றென்று
இன்மை ஒருவற்கு எனைத்திட்பம்
இன்றியமையா எனைவகையான
இன்னாமை என்றும் ஒருவுதல்
இன்பம் ஏரினும் நன்றால்
ஈட்டம் இவறி ஒத்ததறிவான்
ஈதல் இசைபட ஒருபொழுதும்
ஈத்துவக்கும் ஒருமை மகளிரே
ஈன்ற பொழுதின் ஒல்லும் வாய்
ஈன்றாள் பசி ஒல்வது அறிவது
உடம்பாடு இலா ஒழுக்கமும்
உடைதம் ஒளி ஒருவற்கு
உடையர் ஒன்னார்த்
உரமொருவற்கு ஓஒதல் வேண்டும்
உரன் நசைஇ கடலோடா
உலைவிடத்து
உள்ளம் இலாதவர்
கடனறிந்து செய்க பொருளை
கடிந்த கடிந் செய்தக்க
கடைக்கொட்க செய்வானை நாடி
கருமத்தால் செய்வினை
கருமம் செய செல்லான் கிழவன்
கருவியும் காலமும் சென்றவிடத்தான்
கலங்காது சொல்லுதல்
கல்லாத ஞாலம் கருதினும்
கல்லாதான் ஒட்பம் தக்கார் இனத்த
களவினால் தக்கார் தகவிலர்
களவென்னும் தலையின் இழிந்த
கற்றிலனுயினும் தவம் செய்வார்
காலம்கருதியிருப்ப தீயளவன்றி
குடிப்பிறந்துதன் தீவினையார்
குறிப்பில் குறிப்புணர் துணைநலம்
குன்றேறி துறந்தார் படிவத்த
கூற்றுடன்று துன்பம் உறவரினும்
கேடும் பெருக்கமும் தூங்குக தூங்கி
கொக்கொக்க தெய்வத்தான்
கொடுத்தும் தெரிந்த
கொலையிற் கொடியார் தெருளாதான்
சலத்தால் தெளிவிலதனை
சலம் பற்றிச் தேரான் தெளிவும்
சாதலின் இன்னாத தொடங்கற்க
சிதைவிடத்து நகையுள்ளும்
சிறப்பீனும் நகைவகைய
சிற்றின்பம் நடுவின்றி
சீரினும் சீரல்ல நயனிலன்
சூழ்ச்சி முடிவு செப்பம் உடை நல்லாறெனினும்
செயற்கரிய செய் நவில்தொறும்
முன்னுரை நன்மையும்
நன்றாங்கால்
நன்றேதரினும் மருந்தென
நாச்செற்று மருவுக
நிலத்தியல்பால் மறவற்க
நிலத்தில் கிடந்தமை மனத்தானாம்
நிறைநீர மனத்துளது
நெடும் புனலுள் மனம் தூயார்
படுபயன் மனந்துய்மை
பணிவுடையன் மாறுபாடு
பண்பிலான் பெற்ற மிகல் மேவல்
பண்புடையார் முகத்தின் இனிய
பயன்பமரம் முடிவும் இடையூறும்
பருகுவார் முயற்சி திருவினை
பலநல்ல முன்னுறக் காவாது
பழிமலைந்து வகுத்தான்
பழுதெண்ணும் வசையிலா
புகழ்ந்தவை வசையொழிய
புறந்துய்மை வருமுன்னர்
பெருமை உடைய வழங்குவது
பெருமைக்கும் வியவற்க
பேதை பெருங் விளிந்தாரின்
பேதைமை என்ப வினைக்கண் வினை
பேதைமையுள் வினைக்குரிமை
பொய்படும் வினைத்திட்டம்
பொருட்பொருளார் வினையால் வினையாக்கி
பொருளென்னும் வினைவலியும்
பொருள்கருவி வெள்ளத்தனைய இடும்பை
பொள்ளென வெள்ளத்தனைய மலர்
பெறியின்மை மக்களே வையத்துள்
போல்வர்
மடுத்தவாய்
மதிநுட்பம்
மருந்தாகி