செயலும் செயல்திறனும்/முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து

24. முடிவுரை

1. சில ஏற்றத்தாழ்வுகள்

இதுவரை கூறப்பெற்ற செய்திகளில், பெரும்பாலும் செயல் கூறுகளான அனைத்தையும் ஒருவாறு நாம் அடக்கிக் கூறியுள்ளோம். இவற்றுள் ஒவ்வொரு கூறும் இன்றியமையாததே. ஒன்று சிறந்து ஒன்று தவிர்ந்தாலும், அல்லது ஒன்றில் கவனம் செலுத்தி ஒன்றில் கவனம் குறைந்தாலும், நாம் எடுத்துக் கொண்ட செயலில், அந்த அளவு குறைகள் நேர்ந்துவிடவே செய்யும். எனவே, போதுமான அளவில் அனைத்துக் கூறுகளிலும் ஒருவர் முழு அளவிலான செய்திகளையும் நன்கு தெரிந்து கொள்வதுடன், அவற்றுள் முழுக் கவனமும் கருத்தும் கொள்ளுதல் மிகவும் நல்லது. அல்லாக்கால் செயல் விளைவுகளுள் குறைகள் ஏற்படுவதைத் தடுக்க இயலாது. அவ்வாறு குறைகள் நேருங்கால், அவை எந்தக் கோணங்களில் நாம் கவனம் செலுத்தாமையால் நேர்ந்துள்ளன என்று தீவிரமாக ஆய்ந்து தெளிந்து கொண்டு, அவற்றைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதே எச்சரிக்கையான, செயற்கடமையாகும்.

2. அகலக்கால் வையாதே

செயலடிப்படையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுவன இங்குக் கூறப்பெற்றவற்றினும் இன்னும் கூடுதலாகவே இருக்கலாம். ஆனால் அவை யாவற்றினும் பொதுவான ஓர் உண்மை யாதெனில், ஒன்றுக்கு மேற்பட்ட பலவற்றுள்ளும் அகலக்கால் வைத்துத் தோல்வியுறுவதைவிட, ஏதோ நமக்குப் பொருந்திய ஒன்றினுள் ஆழக்கால் வைத்து வெற்றி பெறுவதே சிறந்ததும் தக்கதும் ஆகும் என்பதைச் செயலுக்கு முன் வரும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது தேவையானதாகும்.

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை;

போகாறு அகலாக் கடை -

(478)

என்னுங் குறள் மொழி இவ்வகையிலும் பொருத்தமுடையதே.

இனி, இறுதியாக, ஒரு செயலைப் பற்றி எண்ணுவது எவ்வளவு எளிது; அதைச் செய்வது எவ்வளவு கடினமானது என்பதைப் பெரும்பாலும் அனைவருமே அறிந்திருப்பர். நாம் இயற்கையாகவே

ஒவ்வொன்றில், ஒரு சிலர் சிலவற்றில் திறமையும் ஆர்வமும் உடையவராகவே இருப்போம். அந்த நிலையை முதலில் நாம் தெரிந்து கொண்டே பிறகு அனைத்து நிலைகளிலும் முனைந்து போக வேண்டும்.

அடுத்து, இன்னொன்று. நாம் எப்படி தேவையானதைப் பயனுடையதைக் கற்க வேண்டுமோ, அவ்வாறே நமக்கும் பிறர்க்கும் தேவையான பயனுடைய செயல்களையே செய்ய முனைதல் வேண்டும்.

"செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்

(486)

வெறும் பணநோக்கம் கொண்டுமட்டும் செயல்களைச் செய்ய எண்ணிவிடக் கூடாது. மாந்தன் தன் அரிய பிறப்பைப் பணத்தைத் தேடுவதிலேயே அழித்துக் கொள்ளக் கூடாது. மாந்தன் உயர்ந்த பிறப்புடையவன். அவன் வாழ்க்கையும் உயர்ந்ததாகவே இருக்க வேண்டும். பணத்தை ஈட்டுவதும் அதைச் செலவழிப்பதுமே வாழ்க்கை ஆகாது.

பொருட் செல்வம் யூரியார் கண்ணும் உள

(412)

என்பர் குறளாசான்,

இதைவிட உயர்ந்த குறிக்கோளுக்காகவே ஒவ்வொருவரும் உளர்.

3. பிறவிப் பயன்

நம் அனைவர்க்கும் வாழ்க்கையின் பொதுவான குறிக்கோள் உயிர்மலர்ச்சியே. இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிர்களையும் பார்க்கின்ற பொழுது, அவை எல்லாவற்றுள்ளும் மாந்த உயிரே சிறந்து விளங்குவதை நாம் காண்பதிலிருந்து, மலர்ச்சியுற்ற உயிர்க்கும் மலர்ச்சியற்ற உயிர்க்கும் உள்ள வேறுபாடுகளையும் சிறப்புகளையும் நாம் அறிய முடிகிறது. ஆனால் அவற்றை அறிந்த பின்னரும் நாம் வெறும் உணவுக்காகவும், இன்பத்திற்காகவும் அவற்றை உண்டாக்கிக் கொள்ளும் பொருட்டுப் பணத்திற்காகவுமே நாம் வாழ்கிறதாக இருத்தல் கூடாது. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இல்லாத உயிர் மலர்ச்சி நமக்கு இருப்பது, அவற்றைப் போலவே வாழ வேண்டும் என்பதற்காக அன்று. அவற்றினும் உயர்ந்த குறிக்கோளுடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்தாக வேண்டும். இல்லெனில் நம் பிறவி பயனற்றதாகவே கருதப் பெறும்.

எனவே, உயர்ந்த உயிர் இயக்ககத்திற்கு நிலைக்களன்களாக அமைந்த நம் உணர்வு. அறிவு, குறிக்கோள் ஆகியவை, நம் வாழ்வைப்

பயனுடையதாகச் செய்தல் வேண்டும். அந்தப் பயன் நோக்கிய செயல்களையே நாம் முனைந்து செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் நாமும் பிறரும் பயன்பெற முடியும்.

ஒரு செயலால் விளையும் நன்மையும் தீமையும் எண்ணி ஆராய்ந்து, அனைவர்க்கும் நலம் தருகின்ற செயல்களையே, அந்த நலனுக்கேற்ற அளவு முயற்சிகளுடன் செய்தல் வேண்டும் என்பது முன்னரே கூறப்பெற்றுள்ளது.

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த

தன்மையான் ஆளப் படும்.

(511)

முடிவாக நாம் ஒவ்வொருவரும் ஒரு செயலைச் செய்தே ஆகல் வேண்டும். அதையே திறம் உடையதாகச் செய்தல் வேண்டும். அது மட்டும் அன்று. அதையே பயனுடையதாகவும் செய்தல் வேண்டும். இனி, அனைத்திலும் பயனுடைய செயலையே திறம் உடையதாகச் செய்தலை வாழ்க்கைக் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

இனி, இத்தொடர் கட்டுரையை முடிப்பதற்கு முன், ஒரு செயல் எத்துணைக் கருத்தோடும் முன்னெச்சரிக்கையோடும் செய்யப் பெறுதல் வேண்டும் என்பதை இவ்வுலகின் அருஞ்செயல் ஒன்றை எடுத்துக் காட்டி விளக்குவதுடன், செயலருமை என்பதும் செயல்திறம் என்பதும் எத்தகையன என்பதையும் உணர்த்திக் காட்டுவோம்.

x`