செயலும் செயல்திறனும்/தன் வலிமை அறிதல்

விக்கிமூலம் இலிருந்து

8. தன் வலிமை அறிதல்

1. அறியாமை

வலியறிதல் அதிகாரத்துள் திருவள்ளுவர் வினைவலியை அடுத்து, வினைசெய்யப் புகுவான் ஒருவன் அறிந்து கொள்ள வேண்டுவதாகக் குறிப்பிடுவது தன் வலிமையை அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்னும் அறிவையே மிகப்பலருக்குத் தன் வலிமை தெரியாது. கொஞ்சம் படித்தவனும் தனக்கு நிறையத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்பான். பிறரை விடத் தனக்கு அதிகமாகத் தெரியும் என்று நினைக்கும் அறியாமையே தலையாய அறியாமையாகும். இஃது, இந்தக் காற்றை நான் மட்டுந்தான் நுகர்கிறேன், இந்த வெயில் என்மேல் மட்டுந்தான் அடிக்கிறது. இப்படிப்பட்ட எண்ணத்தை நான் மட்டுந்தான் எண்ணமுடியும் என்று நினைப்பது போன்ற அறியாமையாகும். உலகில் படைக்கப்பெற்றுள்ள உயிர்கள் குறிப்பாக மாந்த உயிர்கள் அனைத்துக்கும் அறிவு, மன உணர்வு, இன்பதுன்ப நுகர்ச்சிகள் முதலிய அனைத்தும் பொதுவே. இயற்கை எல்லோருக்கும் தாயும் தந்தையும் இறைமையும் ஆகும். இந்நிலையில், நமக்கு மட்டுமே அறிவுண்டு என்று நினைப்பது போன்ற அறியாமை வேறிலது. இந்த உணர்வே அறிவின் தொடக்க உணர்வாகும். எனவே, நமக்கு எல்லாம் தெரியும் என்றோ, நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்றோ நினைக்கக் கூடாது. எல்லாவற்றிலும், நம்மைவிட வல்லவர்களும் இருக்கின்றார்கள். நல்லவர்களும் இருக்கின்றார்கள். இனி, அதற்காக நாம்தாம் எல்லோருக்கும் தாழ்ச்சி என்று நினைத்து விடவும் கூடாது. நம்மை விட வல்லவர்கள் எப்படி உண்டோ, அப்படியே நம்மை விட வல்லமை குறைந்தவர்கள் அல்லது நல்ல தன்மை குறைந்தவர்களும் உலகில் உளர். இப்படித்தான் ஒவ்வொருவரின் நிலையும். நாம் படித்த படிப்புக்கு அல்லது கற்ற கல்விக்குக் கீழே படித்தவர்களும் உண்டு. மிக மிக மேலாகப் படித்தவர்களும் உண்டு. இந்த ஏற்றத்தாழ்வு அவரவர்கள் முயற்சியால் வருவது. தொடக்கத்தில் எல்லோரும் ஒரு நிலையில்தான் இருந்தோம். பலர் பலபடியான சூழல்களால், முயற்சிகளால் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். பலர் நல்ல சூழல் வாய்க்காமையாலும் முயற்சியின்மையாலும் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்கள். எனவே, இதன் தொடக்கம், வேறுபாடு முடிவு இவை பற்றியெல்லாம் நாம் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிராமல், நம் அறிவு, முயற்சி,

உழைப்பு, ஊக்கம் இவற்றில் தாழாமல் ஈடுபட்டு முன்னேறுவதைப் பற்றியே சிந்திக்க வேண்டும். உலகில் சிறப்பான முயற்சி, ஊக்கமுடையவர்களே வெற்றி பெறுகிறார்கள். நாமும் எப்பொழுதும் ஊக்க முடையவர்களாக இருத்தல் வேண்டும்.

2. தன்னை அறிதல்

ஆனால், நம்மை, நம் முயற்சியை, நம் திறமையை அளவுக்கு மீறி மதிப்பிட்டு, ஒரு வினையில் செயலில் இறங்கிவிடக்கூடாது. நம் திறமையைச் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதில்தான் நம் வெற்றியே அடங்கியிருக்கிறது. தம் திறமையைச் சரியாக மதிப்பிடாமல் அளவுக்கு மீறித் தம் ஆற்றலை மதிப்பிட்டுத் தம் வலிமைக்கு மீறிய வினைகளில் இறங்கி, ஈடுபட்டு அவ்வினைகளின் சுமை தாளாமல் இடையில் அவற்றை விட்டு வெளியேறி, மனம் உடைந்து போனவர்கள் இவ்வுலகில் மிகப் பலர் என்று திருக்குறள் அறிவுறுத்துகின்றது.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்

(473)

3. உண்மையான திறமையும் அறிவும் மதிக்கப்பெறும்

உலகில் அளவுக்கு மீறிய போட்டிகளும், பொய்ம்மைகளும் என்றும் இருப்பது இயல்பு. இவற்றுக்கிடையில் நேர்மையாளர்களும், உண்மையாளர்களும் பின்தங்கிப் போவதும் ஒரு வகையில் உண்மை. ஆனால், அதற்காகத் திறமை என்றுமே மதிப்பிழந்து போய்விடாது. திறமைக்கும் அறிவாண்மைக்கும் என்றுமே மதிப்பு உண்டு. உண்மையான திறமையையும் பொய்யிலாத அறிவையும் உலகம் போற்றவே செய்யும். எனவே, திறமையுடையவர்கள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளும் பொழுது, தங்கள் தகுதி நிலைகளை ஒருவாறு தாங்களே உணர்ந்து வெளிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும் அளவுக்கு மீறித் தங்களை மதிப்பிட்டுக் கொள்ளக்கூடாது. அம்மதிப்பீட்டால் தங்களைத் தாங்களே வியந்து கொள்ளவும் அதனால் செருக்கடையவும் கட்டாது.

4. தன்னால் முடிந்ததில் ஈடுபடவேண்டும்

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும்.

(474)

தன்னை வியந்து அளவுக்கு மீறி ஒரு வினையிலீடு படுபவர்கள், அவ்வினை கெடுதலால், தாமும் விரைந்து கெடுவார்கள் என்று எச்சரிக்கை கொடுக்கின்றது இக்குறள். எனவே தன் வலிமையைத் தான் உணர்ந்து, தன்னால் முடிந்த வினைகளில் மட்டும் ஒருவன் ஈடுபட வேண்டும். இரவு பகலாகக் கண்விழித்துச் செய்யும் வினைகளில், அதற்குத்

தக உடல் வலிவற்றவன் ஈடுபடுதல் கூடாது. அப்படியே தன் அறிவுக்கு மிக மேம்பட்ட ஒரு துறையைப் பற்றி ஒருவன் ஒரு நூலெழுதுவானானால், அந்நூலை உலகம் மதிக்காது. பெருமைப்பட நினைக்காது. மாறாக இழிவாகவே கருதும்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்

கொள்ளா அறிவுடை யார்

(404)

போதுமான நூலறிவின்றி, ஒரு துறையில் ஈடுபடுதல் அல்லது அறிந்தார் அவையின் கண் அது பற்றிப் பேசுதல், அரங்கின்றி வட்டாடுதல் ('தாயம்' போலும் விளையாட்டு) போன்றது என்பர் திருவள்ளுவர்.

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல்

(401)

5. தெரியாததில் ஈடுபடவே கூடாது

மேலும் ஒன்றைச் சரிவரக் கல்லாமல், அது கல்வியோ தொழிலோ எதுவாகட்டும், ஒன்றில் ஈடுபட்டு ஒழுகுதல் அல்லது தோல்வியுறுதல், உலகினரை இவனுக்கு ஒன்றுந் தெரியாது என்று அவனுக்குள்ள இயல்பான அறிவு நிலையைக் கூடக் குறைத்து மதிப்பிட்டு, ஐயம் கொள்ளச் செய்துவிடும்.

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.

(845)

எனவே, நம் அறிவையும், திறமையையும் அளவிறந்து, மிகுதியாக மதிப்பிட்டுக் கொண்டு எந்தச் செயலிலும் இறங்கிவிடக் கூடாது. நமக்குத் தெரிந்த நம்மால் முடிந்த, தம் வலிமைக்குப் பொருந்திய செயல்களிலேயே, நாம் துணிந்து இறங்குதல் வேண்டும். இக்காலத்தில் ஏற்படும் வினைக் கோளாறுகளில் முக்காற் பங்கு இத் தவறான மதிப்பீடுகளாலேயே ஏற்படுவதாகும் என்று அறிதல் வேண்டும். தன் வலியறிதல் அறியாமை, செருக்கு ஆகியவற்றின் கரணியமாக மிகுதியும் தவறாக உணரப் பெறும் உணர்வாகலின், இதை முதலில் நாம் நன்கு உணர்ந்து செயல்படுதல் இன்றியமையாதது என்க.