செயலும் செயல்திறனும்/தாழாது உழைத்தல்

விக்கிமூலம் இலிருந்து

16. தாழாது உழைத்தல்

1. உழைப்பின் பெருமை

உழைப்பு, செயல், தொழில், தொண்டு, பணி ஆகிய சொற்கள் யாவும் உழவுத் தொழிலையே அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சொற்களாகும். அவற்றுக்குரிய மூலங்கள் உழு, செய், தொள், பள் ஆகியனவாம். உழு-உழை செய் நிலம் செயல் தொள். தொளுதொடு தோண்டு; பள் - பள்ளம் பள்ளு - பண்ணு - பணி ஆகிய சொல் தோற்றங்களைக் கவனித்தால் அவை விளங்கும். இவை முதலில் மாந்தன் உழவையே முதல் தொழிலாகச் செய்தான் என்பதையும், அதைச் செய்தவன் தமிழனே என்பதையும் வரலாற்றடிப்படையில் உணர்த்தும். எனவே மாந்தனின் முதல் உழைப்பு உழவையே அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

நிலத்தை உழவு செய்து, பண்படுத்தி, விளைவு செய்வதற்கு நாம் எவ்வளவு உழைக்க வேண்டியிருக்குமோ அவ்வளவு உழைப்பை நாம் பிறவற்றிற்கும் தரவேண்டியிருக்கும். உலகில் எந்தச் செயலானாலும் சரி, அதற்கு உள்ள உறுதியையும், அறிவுழைப்பையும், உடல் உழைப்பையும் தந்தாக வேண்டும். உழைக்காமல் யாரும் உய்ய முடியாது. எனவே, அனைவருமே ஒவ்வொரு வகையில் உழைத்தாக வேண்டும். இனி, ஒரு குறிப்பிட்ட செயலுக்குக் குறிப்பிட்ட அளவு உழைப்பைத் தந்தாக வேண்டும். குறிப்பிட்ட அளவு உழைக்கவில்லை யானால், குறிப்பிட்ட அளவு பயனை எய்த முடியாது. எனவே, இவ்வுலகில் பிறந்த அனைவருக்குமே உழைப்பு தேவை.

இனி, உழைப்பில்லா விட்டால், உடல் நலிவடைந்துவிடும்; உடல்கெடும், நோயுறும். உடல் நோயுற்றால், உள்ள உறுதியும் தளரும்; உள்ளம் தளர்வுற்றால், அறிவால் பயனிராது அறிவுணர்வும் கெடும். ஆகவே, உடலுழைப்பால்தான் உள்ளமும், அறிவும் உறதிப்படும். அதே போல் உள்ள உறுதியாலும், அறிவுறுதியாலும், உடலும் ஊக்கமுறும். இந்நிலைகளை முன்னரே விளக்கியுள்ளோம். இத்தலைப்பில் இவற்றை இன்னுங் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

2. இருவகை உழைப்பு

உழைப்பு இருவகைப்படும் அறிவுழைப்பு உடலுழைப்பு என்பன

அவை. ஒன்றைப் பற்றிய நன்மை, தீமை, பயன், இழப்பு, பெருமை, சிறுமை ஆகியனபற்றி அறிந்து கொள்ளும் முயற்சி அறிவுழைப்பின் பாற்படும். இனி அறிந்து கொண்ட அறிவைச் செயல்படுத்துவதற்கான முயற்சி உடலுழைப்பின் பாற்படும். எனவே ஒரு செயலைச் செய்வதற்கு இவ்விரண்டு வகையான உழைப்பும் தேவை. இரண்டு முயற்சிகளையும் ஒருவரே செய்யலாம்; அல்லது தனித்தனியாக இருவரும் செய்யலாம்.

ஒரு செயலைச் செய்வதற்கு முன் அச்செயலைப் பற்றிய அனைத்து. நிலை அறிவையும் ஒருவர் பெற்றிருந்தால்தான் அச்செயலை அவரால் செப்பமாகவும் திட்பமாகவும் நுட்பமாகவும் செய்ய முடியும். செயல் அறிவு வேறு; செயல் திறன் வேறு. ஒரு செயலைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அறிவு செயலறிவு. இதை ஆங்கிலத்தில் தியரி (Theory) என்பர். தெரிந்து கொண்ட அறிவைச் செயலாகச் செய்யும்பொழுது செயலாகிவிடுகிறது. இதை ஆங்கிலத்தில் பிராக்டிக்கல் (Practical) என்பர்.

செயலறிவு கல்வியால் அல்லது கேள்வியால் வரும். ஒன்றைச் செய்யத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதற்குரிய நூல்களைக் கற்க வேண்டும். அல்லது அச்செயலைச் செய்யத் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டு வழியாகவும் அல்லாமல் ஒருவர் ஒரு செயலைச் செய்துவிட முடியாது.

3. அறிவு பெறும் ஐந்து வழிகள்

பொதுவாகவே ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவு பெறுவதற்கு ஐந்து வழிகள் உண்டு. அவை காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்பன. காட்சி என்பது ஒருவர் ஒன்றைக் கண்ணால் கண்டு அறிதல். கேள்வி என்பது ஒன்றைப் பிறர் சொல்லக் கேட்டு அறிதல். உசாவல் என்பது ஒன்றைப் பற்றி ஒருவரிடம் உசாவி (விசாரித்து அறிதல். கல்வி என்பது ஒன்றைப் பற்றி அதன் தொடர்பான நூலைப் படித்து அறிதல். பாடு என்பது, ஒருவர் ஒரு செயலில் நேரடியாக ஈடுபட்டு அறிந்து கொள்ளுதல் இதைப் பட்டறிவு என்றும் சொல்லலாம். ஒரு செயலைப் பற்றிய முயற்சியை ஒருவர், இந்த ஐந்து வகைகளில் ஒன்றின் வழியாகத்தான் தொடங்க வேண்டும். இவற்றுள் எதன் வழியாகவும் ஒருவர் ஒன்றைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளாமல், எந்தச் செயலையும் தெரிந்து கொள்ளவும் முடியாது செய்து விடவும் முடியாது. அதைத் திறமையாகச் செய்வதென்பது வேறு செய்தி. அஃது அவர் அறிவையும், கூர்மைத் திறனையும், ஊக்கத்தையும், விடாமுயற்சியையும், பொறுமையையும், மணஞ் சலியாமையையும் பொறுத்தது.

இனி, ஒருவர், மேலே சொல்லப்பெற்ற ஐந்து வழிகளில் ஒன்றின் வழியாக மட்டுமே ஒரு செயலைத் தெரிந்து கொண்டு செய்வது என்பது அத்துணைச் சிறப்பன்று. கண்ணால் காண்பதால் மட்டுமே ஒருவர்

ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் அச்செயலும் எளிமையான செயலாகவே இருக்கும்; மண்வெட்டியைப் பிடித்து மண்ணை வெட்டுவது, செடிகளை நடுவது, மரத்தை அறுப்பது போலும் எளிய, அறிவுத்திறன் மிக வேண்டாத செயல்களை ஒருவர், பிறர் செய்வதைக் கண்ணால் கண்டவுடன் செய்யலாம். ஆனால் எல்லாத் தொழில்களையுமே அவ்வாறு செய்துவிட முடியாது. சில தொழில்களைப் பற்றி அவற்றை அறிந்தவர்கள் சொல்வதைக் கேட்டும் செய்ய வேண்டும். இனி, இன்னும் சில தொழில்களை அவர்கள் சொல்லுவதோடு மட்டும் அல்லாமல் நாம் உசாவியும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும் இப்படி ஐந்து வழிகளாகவும் தெரிந்துகொண்ட செயலறிவே, ஒரு செயலைச் சரியாகச் செய்வதற்கு உதவும். அந்த வகை எண்ணிக்கைகளின் கூடுதலுக்கும் குறைவுக்கும் ஏற்ற வகையில், ஒருவர் பெறுகின்ற செயல்திறனும் கூடுதலாகவோ குறைவாகவோதான் அமைய முடியும்.

4. மன விருப்பம் தேவை

அடுத்து, ஒருவர் பெற்ற அறிவுத்திறனை ஒட்டிச் செயல் திறன் அமையும் என்றாலும், செயலில் இறங்கியபின் அவரின் உடல் திறனும், உள்ள உறுதியும், அவரின் செயல்திறனுக்கு உந்து விசைகளாக அமைய வேண்டும். செயலறிவு செயலில் ஊன்றுவதற்கு மனஉணர்வு முகாமையானது. மனவிருப்பமின்றி எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. மனவிருப்பமே மன ஊக்கமாகவும் மன உறுதியாகவும் செயல்படும். இனி, செயலறிவும், மன விருப்பமும் அல்லது ஊக்கமும் இருந்தாலும், உடல் அதற்கு ஒத்துழைப்புத் தரவில்லையானால் செயல்திறம் ஏற்பட வழியில்லை.

எனவே, நாம் முன்பே கூறியவாறு, ஒரு செயல் சிறப்புற அமைய வேண்டுமாயின், மேற்காட்டிய ஐந்து வகையானும் பெற்ற செயலறிவும், அதற்கு உந்து விசையாக அமையும் உள்ளத்தின் ஊக்கமும், அவையிரண்டுக்கும் உறுதுணையாக நின்றியங்கும் உடல்திறனும் அல்லது உறுதியுமே ஒரு செயலின் செப்ப, திட்ப நுட்பங்களுக்குக் காரணங்களாக அமையமுடியும் என்பதை உய்த்துணர்தல் வேண்டும். இதற்கு ஓர் உவமை கூறவேண்டுமானால், ஒரு பேருந்து இயக்கத்தைச் சொல்லலாம். பேருந்து ஒட்டுவதை ஒருவர் அறிந்திருப்பது செயல்திறம், அதற்குக் கன்னெயாக பெட்ரோலாக இருப்பது உள்ள ஊக்கம். பேருந்து அனைத்துக் கருவிகளுடனும் சரியான இயக்கத்திற்குப் பொருத்தமாக அமைந்திருப்பது உடல்திறன். இந்த மூன்று நிலைகளும் சரியாக இருக்குமானால், பேருந்தும் சரியாக செயல்படுகிறது.

ஆகவே, தாழாது உழைத்தல் என்னும் தலைப்பு ஏறத்தாழ ஒருவரின்

உடலியக்கத்தையே வெளிப்படையாகக் குறிப்பு தென்றாலும், அவ்வுழைப்பிற்குப் பின்னால், உள்ளமும், அறிவும் செயல்படுவதைக் கட்டாயம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

5. உழைப்பும் ஓய்வும்

பெரும்பாலும் செயல்கள் அனைத்துமே உடல் இயக்க அடிப்படையிலேயே அமைகின்றன. அறிவு உழைப்பானாலும், உடல் உழைப்பானாலும், அனைத்து முயற்சிகளுக்கும் உடலே களமாக அமைவதால், உடல் நலத்தின் அடிப்படையிலேயே செயல்கள் சிறந்து விளங்குகின்றன. உடல் நலிவுற்றவர் அல்லது நோயுற்றவர் எவ்வளவு அறிவுத் திறன் கொண்டிருந்தாலும் அவ்வறிவு செயலாக மலர்வதில்லை.

இவ்விடத்தில் இன்னொன்றை நாம் நன்கு விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். உழைப்பினால் உடல் என்றும் ஊறுபடுவதில்லை. கடுமையான உழைப்பிற்குப் பின்னர் கூட உடலுக்குத் தேவையான ஒய்வெடுத்துக் கொண்டால் உடல் நலம் கெடாததுடன் மேலும் அஃது உழைக்கவும் போதுமான உறுதி பெற்றுவிடுவதைப் பலரும் அறிந்திருக்கலாம். இந்த இயற்கை கூறை அனைவரும் நன்கு தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து (486)
தூங்குக தூங்கிச் செயற்பால (672)

என்னும் குறட்பாக்களில் இக்கருத்தும் ஓரளவு உட்பொருளாக ஒலிப்பதைக் காணலாம்.

இவ்வளவும் ஏன் இங்குச் சொல்லப் பெறுகின்றதெனில், செயல் வெற்றிக்குத் தாழாத உழைப்பு என்னும் அடிப்படையில், உடலை அளவுக்கு மீறி வருத்திக் கொண்டு செய்யும் செயல் என்று தவறாகக் கருதிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே ஆகும். தாழாமை எனில் காலந் தாழ்த்தாமை, முயற்சியில் குறைவு படாமை என்னும் பொருள்களே கொள்ளப்பெறுவன ஆகையால், ஓய்வில்லாமலேயே உழைத்து உடலை நலிவித்துக் கொள்ளுதல் என்று எவரும் கருதிக் கொள்ளுதல் வேண்டா என்க.

6. முயற்சி முயற்சி, முயற்சி

ஒரு செயலைச் செய்கின்ற முயற்சி பலவகையிலும் தாழ்வுப்பட்டு விடலாம். அதற்குக் காரணம் எடுத்தவுடனேயே வெற்றிக் கிட்டாமை, எதிர்ப்புகள் சூழ்தல், பொருள் இழப்பு, உடல் நலிவு, வரவேற்பின்மை, அருமையுடைமை துன்பம் சூழ்தல் முதலியவை ஆகும். எனினும், இந்நிலைகளிலெல்லாம் அறிவானும், மனத்தானும் உடலானும் உறுதி

தளராமல், செயல் வெற்றியடையும் வரை மீண்டும் மீண்டும் முயற்சியுடன் உழைத்தல் வேண்டும் என்பதையே அனைவரும் உணர்தல் வேண்டும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

(616)



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

(629)



ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துளுற்று பவர்

(620)

என்னும் குறட்பாக்களில் திருவள்ளுவப் பேராசான் முயற்சிக்கும் உழைப்பிற்கும் எத்துணை ஊக்கம் காட்டுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இனி, ஒரு செயலைச் செய்வதற்குப் பலரும் துணை ந நிற்கலாம், அவர்களெல்லாரும் துணை நிற்கின்றாரே, என்று எண்ணிக் கூட அம்முயற்சியிலும் உழைப்பிலும் தாழ்ச்சி காட்டிவிடக் கூடாது. அவ்வாறு மெத்தனமாக விட்டுவிடுவது அவ்வினையையே ஊறு படுத்திவிடும் என்பார் மெய்யுணர்வாசான்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்

(468)

இங்கு பொத்துப்படும் என்பதற்கு அவ்வாறான முயற்சி நெகிழ்வால் அல்லது தளர்ச்சியால், செயல் வெற்றி பெறாதது மட்டுமன்று, தோல்வியும் இழுக்கும் ஏற்பட்டுவிடும் என்பது பொருள். அஃதாவது ஊதியம் வராதது மட்டுமன்று, இழப்பும் ஏற்படும் என்பதாகும். எனவே, எந்தச் சூழலிலும் முயற்சியும் அதனடிப்படையிலான உழைப்பும் தாழ்ச்சியுறவே கூடாது என்று அறிக.

7. இழப்பால் சோர்வுறுதல் கூடாது

இனி, ஏதோ ஒரு காரணத்தால் நாம் தொடங்கிய வினையில் நாம் எதிர்பார்த்த இழப்பும் வரலாம். அவ்விடத்திலும் நாம் ஊக்கத்தையும் உழைப்பையும் தாழ்த்திக் கொள்ளுதல், தளர்த்தி விடுதல் கூடாது. ஆக்கம் வராமைக்கும் அல்லது இழப்புக்கும் உரிய காரணத்தை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்து, மேலும் அத்துறையில் அல்லது செயலில் தாழ்ச்சியுறாது உழைத்தால், கட்டாயம் நாம் விரும்பிய ஆக்கம் வரவே

செய்யும்; அல்லது இழப்பாவது தவிர்ந்து போகலாம்.

ஊதியம் வரவில்லையே என்று யாரும் இடிந்துபோய் விடக்கூடாது. ஊக்கத்துடன் மேலும் உழைத்தல் வேண்டும்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்; ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

(593)

என்பார் பேராசான். 'சிதைவிடத்து ஒல்கார் உரவோர்' (597) அஃதாவது பயன் சிதைந்தவிடத்து, அல்லது இழப்பு நேர்ந்தவிடத்து, உள்ளம் குறுகி, உழைப்பைத் தாழ்த்திக் கொள்ளமாட்டார்கள். உள்ளம் உறுதியுடையவர்கள் என்று மேலும் உழைப்புக்கு வலிவு சேர்ப்பார் அவர்.

எனவே, ஒரு செயல் வெற்றிக்குத் தாழ்ச்சியற்ற உழைப்பே முதலிலும் முடிவிலும் வேண்டற்பாலது என்று அறிந்து கொள்க. நம்மில் சிலர், புதிதாக ஒரு செயலில் ஈடுபடும்போது மிகவும் ஆர்வம் காரணமாக, மிக முடுக்கத்துடன் ஈடுபடுவர். பின் போகப் போக ஆர்வம் குன்றிச் செயலில் தொய்வு அடைந்துவிடுவர். முயற்சியில் தாழ்ந்துவிடுவர். இது பெரும்பாலான மக்களிடம் இயல்பாக இருக்கின்ற உணர்ச்சியாகும். எனவேதான் எடுத்துக்கொண்ட வினையில் பலர் தோல்வியுற்று விடுகின்றனர்.

8. நிலையான தொடர்ந்த முயற்சி தேவை

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்

நீள்வினையால் நீளும் குடி

(1202)

என்னும் திருக்குறளில் திருவள்ளுவப் பேராசான் ஒரு செயல் நீளச் செய்யப்பெறுதல் வேண்டும் என்பார். தொடர்ந்து, ஒரே உறுதியுடனும், ஊக்கத்துடனும் செய்யப் பெறுவதன் வழியாகத்தான், ஒரு செயல் முழு வெற்றி பெறும் என்பதைக் கட்டாயம் நாம் நினைவில் வைத்திருத்தல் வேண்டும்.

சிலர் ஏதாவது ஒரு வாணிகத்தில் தொடக்கத்தில் ஈடுபடுவார்கள். சில மாதங்கள் கழித்துப் பார்த்தால், தொடங்கிய வாணிகத்தை விட்டுவிட்டு, வேறொரு வாணிகத்தில் ஈடுபட்டிருப்பார்கள். காரணம் கேட்டால், அந்த வாணிகத்தில் அவ்வளவாகப் பயன் கிடைக்கவில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் புதிய வாணிகத்திலும் நெடுநாள்கள் அவர்கள் தங்கியிருப்பதில்லை. ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து அவர்களைப் பார்த்தால், வாணிகத்தையே விட்டுவிட்டு, ஏதாவது ஒரு

பள்ளிக்கூடம் தொடங்கி யிருப்பார்கள். இவ்வாறு நம்மில் நிறைய பேர்கள் நிலையான முயற்சியில்லாமல் இருப்பதைக் காணலாம். இம்முறைகள் அனைத்துமே சரியென்றோ தவறென்றோ சொல்ல முடியாவிட்டாலும், நம் அறிவுக்கும் திறனுக்கும், கைப்பொருளுக்கும், சூழலுக்கும் ஏற்ற ஒரு செயலை, முன்பே நன்கு எண்ணி, ஏற்றுக் கொண்டால், அதிலேயே முழு முயற்சியுடனும், தொய்வில்லாமலும், தாழ்வுறாமலும் ஈடுபட்டு வெற்றி காண முடியும். ஆழ எண்ணிப் பாராமல் ஒரு முயற்சியில் திடுமென ஈடுபடுபவர்கள்தாம் அடிக்கடி தம் ஈடுபாட்டை எளிதாக மாற்றிவிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். செயல்நிலையில் இந்த நடைமுறை மிகமிகத் தவறானதும், பயன்தராததும், சிறுசிறு இழப்புகளை உண்டாக்கக் கூடியதுமாகும்.

9. பணம் மட்டுமே போதாது

ஒரு செயலில் ஈடுபடும்போது, ஒரு சிறு தொகையை அதற்காகச் செலவிட வேண்டிவரும். பின் அதிலிருந்து வேறு செயலுக்கு மாறும்பொழுது, முன்னர் ஈடுபடுத்திய சிறு தொகையும் அவ்வகையில் செலவான காலமும் வீணாகப் போகின்றன. எனவே, ஒரு செயலில் இறங்கும்பொழுதே நமக்கு அச்செயல் ஏற்றதுதானா, நம் அறிவுக்குப் பொருந்தியதா, அல்லது அந்தச் செயலுக்கு நாம் ஏற்றவரா, அதற்குரிய அறிவு நமக்கு இருக்கிறதா, என்றபடியெல்லாம் நாம் எண்ணிப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஒன்றுமே எண்ணிப் பாராமல் திடுமென நாம் எந்தச் செயலிலும் பணம் உள்ளதென்றோ, போதுமான துணை உள்ளதென்றோ உடனே ஈடுபட்டுவிடக் கூடாது. எந்த அளவு பணமிருந்தாலும், துணையிருந்தாலும் நமக்கு அச்செயலைப் பற்றிய அறிவு கொஞ்சமேனும் இருத்தல் வேண்டும். நீந்தத் தெரிந்தவன் உதவியுடன் நாம் ஓர் ஆற்றைக் கடப்பதாக வைத்துக் கொள்வோம். தவிர்க்கவே முடியாத நிலையில் நாம் ஒருமுறை இருமுறை அப்படிப் போகலாம். ஆனால் அப்படி ஆற்றைக் கடந்து கடந்து போய்த்தான் ஒரு வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று வந்தால் கட்டாயம் நாம் நீந்தத் தெரிந்து கொண்டுதான் அதில் ஈடுபட வேண்டும். இல்லெனில் என்றைக்கோ ஒரு நாள் நாம் ஆற்றில் முழுகி உயிரையே இழந்து போகும்படி ஆகிவிடும்.

10. பின்னர் வருந்தும்படி செய்யற்க

ஆனாலும் சில நேரங்களில் வேறு வழியில்லாமல் நாம் முன் பின் எண்ணிப் பாராமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டிய கட்டாயச்

சூழல் ஒன்று வரும். எனவே அச்செயலில் இறங்கி விடுவோம். அதன் பிறகு, எதற்கடா இச்செயலில் இறங்கினோம் என்று வருந்தும்படி ஆகிவிடும். எனவே, அதை விட்டுவிட்டு வேறொரு செயலில் ஈடுபட முற்படுவோம். ஆனால், அவ்வாறு இரண்டாம் முறை ஈடுபடும் பொழுதாவது முதல் செயலில் எண்ணிப் பாராமல் இறங்கியது போல, ஈடுபட்டு விடக்கூடாது. இதில் கட்டாயம் ஒரு முறைக்குப் பலமுறை நன்றாக எண்ணிப் பார்த்து இறங்குதல் வேண்டும். இல்லெனில் இதிலும் அதே வகையான பொருள் இழப்பும் கால இழப்பும் ஏற்படலாம். அவை முன்னிலும் அதிக அளவினவாகவும் இருக்கலாம். இஃது அறியாமை அன்றோ? இதனைத் திருக்குறள் மிக அருமையாகவும் உணரும்படியாகவும் எச்சரிக்கை செய்து கூறுகிறது.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

(655)

'இவ்வினையை ஏன் செய்தோம்' என்று பின்னர் வருந்தும்படி ஒன்றைச் செய்ய வேண்டாம். அவ்வாறு அறியாமையாலும், அதிவிரைவாலும், அன்றைய தேவையாலும் அவ்வாறு செய்ய நேர்ந்துவிட்டாலும், மீண்டும் அவ்வாறு, பின்னர், வருந்தும்படியான செயற்பாடுகளைச் செய்ய முற்பட வேண்டாம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை ஒருவன் ஒரு கல்லில் ஒருமுறை இடித்துக் கொள்வது பிழையன்று. அஃது அறியாமையாகக் கூட இருக்கலாம். ஆனால் அதே கல்லில் பிறிதொரு முறையும் பின் பலமுறையும் இடித்துக் கொள்வது பேதைமையும் பிழையும் குற்றமுமாகும். இவ்விடத்தில் அறியாமைக்கும் பேதைமைக்கும் விளக்கம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அறியாமை என்பது ஒன்றைத் தெரிந்து கொள்ளாமை ஆகும். பேதைமை என்பது ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலாமை ஆகும். அறியாதவன் பின்னர் தானேசுட அறிந்து கொள்ளலாம். அல்லது ஒருவன் அறிவித்தால் அறிந்து கொள்ள இயலும். ஆனால் பேதைமையான ஒருவன் என்றும் அறிந்து கொள்ளவே இயலாது. பேதைக்குச் சொன்னாலும் தோன்றது உணர்வு. இனி, திருவள்ளுவர், பேதைமைக்கு மிகத் தெளிவான இலக்கணம் கூறுவார். அஃதாவது இழப்பை வருவித்துக் கொண்டு, ஊதியத்தைப் போகவிடுவது பேதைமை என்பர்.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங் கொண்டு

ஊதியம் போக விடல்

(831)

ஒருமுறை ஒரு செயலில் இறங்கி அதனால் தொல்லைப் படுவது அறியாமை என்று கொண்டால், மறுமுறை அதே போலும் செயலில் இறங்கி இடர்ப்படுவது பேதைமை ஆகுமன்றோ? எனவே, ஒரு செயலில் முன்பின் ஆராயாமல் இறங்குவது எத்துணையளவு தவறானது என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

இனி, தாழாது உழைத்தல் என்னுந் தலைப்பின்கண் இதனை ஏன் இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறினோம் என்றால், ஒருவர் தமக்குத் தெரியாத ஒரு செயலில் எத்துணைதாம் முயற்சி கெடாமல் உழைத்தாலும், அது தமக்குப் பொருந்தாத செயலாக இருப்பதால், அதில் பயன்பெறுவது கடினமானதாகவே இருக்கும் என்பதால் என்க. எனவே, ஒருவர் ஒரு செயலில் மிக எண்ணிப் பார்த்து இறங்க வேண்டும் என்பதும், அவ்வாறு இறங்கிய செயலில், கொஞ்சமும் பின்வாங்காது, தாழ்ச்சியுறாமல் உழைத்தல் வேண்டும் என்பதும் அதுவே முகாமையானதாகும் என்பதும் உணரப்பட வேண்டியனவாகும்.