தந்தையும் மகளும்/160

விக்கிமூலம் இலிருந்து


160அப்பா! சில பிராணிகள் உணவு உண்ணாமல் வாழ முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்தப் பிராணியும் உயிருடன் இருக்க வேண்டுமானால் அதற்கு உணவு வேண்டியது இன்றியமையாததாகும். உணவு தான் உடம்பில் உண்டாகும் தேய்மானததைச் சரியாக்கும், வேலை செய்வதற்கு வேண்டிய சக்தியையும் உஷ்ணத்தையும் கொடுக்கும்.

ஆயினும் குளிர் தேசத்திலுள்ள சில பிராணிகள் குளிர் காலத்தில் உணவு உண்ணாமலே சுருண்டு ஒடுங்கித் தூங்கிவிடுகின்றன. அந்தக் காலத்தில் அவற்றின் உறுப்புக்கள் மெதுவாக வேலை செய்வதால் அவை உடம்பில் சேமித்து வைத்துள்ள கொழுப்புச் சத்தே அவற்றிற்குப் போதுமான போஷணையைத் தந்துவிடுகிறது. அவை குளிர்காலம் போனதும் முன்போல் உயிர்வாழ ஆரம்பித்துவிடுகின்றன.

ஆனால் இவை உணவில்லாமல் உறங்குவது சில மாதங்கள் மட்டுமே. அந்தக் காலத்துக்குப் பின்னும் உணவு உண்ணாமல் போகுமானால் அவை இறந்து போகும். ஆனால் "தார்டிகிரேடா" என்று ஒருவகைச் சிலந்தி யிருக்கிறது. அது ஈரமான இடங்களிலேயே வசிக்கும், ஆயினும் அந்த இடங்களுக்கு அதிலுள்ள காற்றும் ஈரப்பசையே யில்லாத படி உலர்ந்து விடுமானால் அந்தச் சிறு பிராணியும் உயிர் இருப்பதாகச் சொல்ல முடியாத அளவு உலர்ந்துபோகும். நன்றாய்க் காய்ந்த வற்றல் போல் தோன்றும். அவ்விதமாக ஆகிப் பல ஆண்டுகள் ஆனபின் அதை நீரில் போட்டால் அது நீரைக் குடித்துப் பருத்து அசைய ஆரம்பிக்கும். ஒரு மணி நேரத்தில் எப்போதும்போல் நகர்ந்து செல்லும்.

சில நத்தைகளும் இவ்விதம் உயிர் வாழ்வதுண்டு 1846ம் ஆண்டில் எகிப்து நாட்டிலிருந்து ஒரு மண்கட்டி கொண்டுவந்து லண்டன் பொருட்காட்சிச் சாலையில் வைத்திருந்தார்கள், அதில் ஒரு நத்தைக்கூடு ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த நத்தைக்கூடு நான்கு ஆண்டுகள் சென்த பின் அசைய ஆரம்பித்தது. அதனுள் உறங்கிக்கொண்டிருந்த நத்தை விழித்து எழுந்து வெளியே தலையை நீட்டிற்று. மண் கட்டியிலிருந்து பிரிந்து எடுத்து வைத்திருந்தபொழுது அது நீண்டநாள் உயிருடனிருந்ததாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/160&oldid=1538468" இலிருந்து மீள்விக்கப்பட்டது