தமிழில் சிறு பத்திரிகைகள்/நீலக்குயில்

விக்கிமூலம் இலிருந்து

15. நீலக்குயில்


கோவில்பட்டியில் ஒரு சிறு பத்திரிகை தோன்றியது, 1974-ல். ‘நீலக்குயில்' என்பது அதன் பெயர். எஸ். அண்ணாமலை அதன் ஆசிரியரும் வெளியிடுபவருமாக இருந்தார்.

‘உண்மை இலக்கியங்களுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் வெளியிடப்படுவதுதான் இந்த இலக்கியப் பத்திரிகை' என்று அதன் முதல் இதழில் அறிவிக்கப்பட்டது.

அண்ணாமலை எழுத்தாளர் இல்லை. கோவில்பட்டியில் வியாபாரப் பிரமுகர்களில் ஒருவர். அவ்வூருக்கு அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் வசிக்கும் கி. ராஜநாராயணன் அவருக்கு நல்ல நண்பர். காலம் சென்ற கு. அழகிரிசாமியையும் அவர் அறிவார். ஆகவே, இயல்பாக அவருக்கு இலக்கியத்தில் ஒரு ஈடுபாடு இருந்தது. கோவில் பட்டியில் வளர்ந்து கொண்டிருந்த இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். இதனால் எல்லாம், 'ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும்' என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டிருந்தது.

தனது பத்திரிகைக்கு 'நீலக்குயில்' என்ற பெயரை வைக்க வேண்டும் எனும் ஆசை அவருக்கு ஏற்பட்டது. மகாகவி பாரதி 'குயில் பாட்டில் இந்தச் சொல்லை உபயோகித்து இருக்கிறார்' என்பதனால் அல்ல. அந்தக் காலத்தில் நீலக்குயில் என்றொரு மலையாள சினிமாப் படம் வெற்றிகரமாக ஓடிப் பெயர் பெற்றிருந்தது. இதன் கதை, நடிப்பு, இனிய பாடல்களினால் மிகப் பலரது கவனத்தையும் அந்தப் படம் ஈர்த்திருந்தது. அண்ணாமலையும் வசீகரிக்கப்பட்டிருந்தார். 'நீலக்குயில்' என்ற சொல் அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. ஆகவே, அவர் தமது பத்திரிகைக்கு அந்தப் பெயரையே வைத்துவிட்டார்.

‘நீலக்குயில்' முதலாவது இதழ் 1974 மே 1-ம் தேதி வந்தது. காசி விஸ்வநாதன், தேவதச்சன், பரணிகுமார், பானு கவிதைகள் (புதுக் கவிதை), பூ மணி, கௌரிஷங்கர் கதைகள், 'குறியீட்டுக் கொள்கை ( ஸிம்பலிஸிம்) பற்றிய ஒரு கட்டுரை (கோபி எழுதியது ) அதில் இடம் பெற்றிருந்தன. விகடன் அளவில் 22 பக்கங்கள். தனி அட்டை கிடையாது.

இலக்கியப் பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களை அண்ணாமலை அறிந்திருந்தார். -

‘இலக்கியப் பத்திரிகைகளுக்கே உரிய எல்லாப் பிரச்னைகளும் நீலக்குயிலுக்கும் உண்டு. எல்லா வழிகளிலும் நீங்கள் இந்தப் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவுங்கள். இது மாதிரி பத்திரிகைகள் கஷ்டப்படுவது நல்ல படைப்புகளுக்காகவும்தான். அதனால் படைப்புகர்த்தாக்கள் தங்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

வழக்கம்போல் வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் சந்தாக்களை அனுப்பி உதவுங்கள். அதுவே பத்திரிகையின் முழு ஆதாரம். மீண்டும் மீண்டும் சந்தாக்களுக்காகவும் தரமான படைப்புகளுக்காகவும் எங்களை வேண்டுகோள் விடுக்கும் நிலையில் வைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன், உங்கள்-

இந்த அறிவிப்பு முதல் இதழின் முதல் பக்கத்தில் அச்சாகியிருந்தது.

'நீலக்குயில்' முதலாவது இதழ் எழுத்தாளர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தந்தது என்றே சொல்ல வேண்டும். ஆசிரியருக்கு வந்த கடிதங்கள் இதை நிரூபித்தன. படைப்பாளிகள் பலர் அதற்கு ஒத்துழைப்பு தர முன்வந்தனர்.

புதுக் கவிதை, சிறுகதை, கட்டுரைகளில் 'நீலக்குயில்' கவனம் செலுத்தியது.

நீல. பத்மநாபன், துரை சீனிச்சாமி, கல்யாண்ஜி, கே. ராஜகோபால், சி. ஆர். ரவீந்திரன், ந. ஜயபாஸ்கரன், ஷண்முக சுப்பையா, சே. சேவற் கொடியோன், தேவதேவன், தேவதச்சன் மற்றும் பலரது கவிதைகள் இப்பத்திரிகையில் பிரசுரமாயின. இலங்கை எழுத்தாளர் சிறீபதி புதுக் கவிதை பற்றி எழுதிய கட்டுரையையும் இது வெளியிட்டுள்ளது.

நகுலன் அஞ்சலி என்ற தலைப்பில் படைத்த ஒரு நீண்ட கவிதை-சோதனை முயற்சி-தொடர்ந்து வெளிவந்தது.

கி. ராஜநாராயணன், பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், நீல. பத்மநாபன், மாலன், வா. மூர்த்தி, ஸிந்துஜா, இரா. கதைப்பித்தன், காசியபன் மற்றும் பல புதிய எழுத்தாளர்கள் கதைகள் எழுதியுள்ளனர்.

வல்லிக்கண்ணன் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்தன. ஒரு கதையும் அச்சாயிற்று.

காரை சிபி, தமிழவன் கட்டுரைகளையும் நீலக்குயில் வெளியிட்டுள்ளது. விமர்சனக் கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியது. அந்தச் சமயத்தில் வெளிவந்த அநேக புத்தகங்களைப் பற்றிய விரிவான, நேர்மையான அபிப்பிராயங்களை எழுத்தாளர்கள் கட்டுரையாக்கியிருக்கிறார்கள்.

முதல் இதழில் வெளியான 'ஸிம்பலிலம்' கட்டுரையைத் தொடர்ந்து இதர பல 'இசம்'கள் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தால் பயனுள்ளதாக அமைந்திருக்கும். அத்தகைய கட்டுரை அப்புறம் வரவேயில்லை.

அதேபோல, முக்கியமான ஒரு விஷயம்-எழுதப்பட வேண்டிய ஒரு ஆய்வு-குறித்து இரண்டாவது இதழில் அறிவிப்பு வந்தது.

‘சிறுகதை : சில புதிய சேர்க்கைகள், (ஆய்வுத்தொடர் ) கோ. ராஜராம் எடுத்துப் பேசும் இளைய முகங்கள்; அஸ்வகோஷ், வண்ணதாசன், பூமணி, ம. ராஜாராம், வண்ண நிலவன், சா. கந்தசாமி.'

எதிர்பார்க்க வைத்த இந்த அறிவிப்பு பின்னர் செயல் மலர்ச்சி பெறவில்லை. இப்படி ஒரு ஆய்வு வந்திருந்தால், நீலக்குயிலின் இலக்கியத் தரம் சிறப்புற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிய முறையான ஆய்வு இலக்கியப் பத்திரிகைகளில் எழுதப்பட்டதேயில்லை. 'கிராம ஊழிய' னில் சில கதாசிரியர்கள் பற்றிய கட்டுரைகள் வந்தன. 'எழுத்து' மணிக் கொடிப் படைப்பாளர்கள் சிலரைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை வெளியிட்டது. தி. க. சிவசங்கரன் 'மணிக்கொடி எழுத்தாளர்கள்' பற்றி தாமரையில் தொடர்ந்து விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். இவை தவிர வேறு முயற்சிகள் இலக்கியப் பத்திரிகைகளிலும், பிற்காலத்திய சிறு பத்திரிகைகளிலும் செய்யப்படவேயில்லை. இது பெரும் குறை ஆகும்.

நீலக்குயில் சரியான பாதையில் முன்னேற ஆசைப்பட்டதை அதன் அறிவிப்பு வெளிப்படுத்தியது. ஆயினும், ஆய்வு இடம் பெறவில்லை.

கி. ராஜநாராயணன் சேகரித்த தமிழ்நாட்டு நாடோடிப் பாடல்கள் சில இதழ்களில் வெளிவந்தன. ஆராமுதம் எழுதிய ஒரு நாடகமும் வெளிவந்திருக்கிறது. சோவியத் சிறுகதைகள் சிலவற்றையும் பிரசுரித்துள்ளது 'நீலக்குயில்.’

முற்றிலும் புதுமையான ஒரு காரியத்தைச் செய்து அது விசேஷப் பாராட்டுதல்களைப் பெற்றது. முதல் ஆண்டு முடிந்ததும், இரண்டாவது ஆண்டின் முதல் இதழை (மே 1975) 'கடித இலக்கியச் சிறப்பிதழ்’ ஆகத் தயாரித்தது அது.

‘தமிழ் இலக்கிய வகைகளில், புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலில் செய்யப்பட்ட முயற்சியே இந்தக் கடித இலக்கியச் சிறப்பிதழ் இதில் வெளியாகியுள்ள கடிதங்களை எழுதியுள்ளவர்கள், தங்களது இலக்கிய அனுபவத்தால், எழுத்தாற்றலால், தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளவர்கள். நமது பெரு மதிப்புக்கும் பேரன்புக்கும் உரியவர்கள். இதில் வெளியாகியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில், மிகச் சிறப்பாக, அருமையாக எழுதப்பட்டுள்ளதால், இவற்றை இங்கு வெளியிடுவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறோம்' என்று நீலக்குயில் பெருமையுடன் வெளியிட்ட 18-வது இதழில், ரசிகமணி டி. கே. சி. ஸ்ரீமான் வி. வி. சீனிவாச அய்யங்காருக்கு எழுதியது; ராஜாஜி டி. கே. சி. க்கு எழுதியவை; நீதிபதி எஸ். மஹாராஜன் டி. கே. சி. க்கு எழுதியது; கி. ராஜநாராயணன், ஆ. மாதவன், தீப. நடராஜன், டி. எஸ். சேதுராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, கல்யாண்ஜி, வண்ண நிலவன் கடிதங்கள் உள்ளன. ரசமான, புதுமையான, இனிய கடிதங்கள் அவை.

மாத இதழாகத் தயாரிக்கப்பட்ட நீலக்குயில் கால ஓட்டத்தில் தாமதமாக வெளிவருவது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது. அதன் மூன்றாம் ஆண்டில் அது காலாண்டு ஏடு ஆக மாற்றப்பட்டது.

22-வது இதழில் இம்மாற்றம் அறிவிக்கப்பட்டது. அதையும் மிடுக்குடன்தான் செய்திருக்கிறது-

'புதிய உத்வேகம்'

'அச்சகத்தை நவீனப்படுத்துவதில் ஏற்பட்ட கால தாமதம், நமது சொந்த சோம்பேறித்தனங்கள், பொதுவாகத் தமிழ் இலக்கிய உலகில் நிலவிவரும் மந்த நிலைமை ஆகியவை நீலக்குயிலைக் காலாண்டு இதழாக மாற்றிவிட்டன.

இலக்கிய உலகில் ஒரு காலகட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு, அல்லது பத்திரிகையைச் சாதாரணமாக வெளியிட்டதையே ஒரு பெருமையாக ஏற்றுக் கொண்டு, பின்னர் திடீரென்று நிறுத்திவிடுவதற்காக நீலக்குயில் துவக்கப்படவில்லை. அதன் எதிர்காலத் திட்டங்கள் விரிவானது. ஆனால், விரைவானதல்ல. நீலக்குயில் மெய்யிலக்கியங்களின் மேடை என்பதில்தான் அது பெருமைப்பட விரும்புகிறதேயன்றி, மாத இதழா அல்லது காலாண்டு இதழா என்பதில் இல்லை.

தேவையும் அவசியமும் ஏற்படும்போது இது போன்ற இன்னொரு அறிக்கையின் மூலம் மறுபடியும் மாத இதழாக மாற்றிவிடுவது என்பது என்றேனும் ஒருநாள் எதிர்பார்க்க வேண்டியதே.'

எதிர்பார்க்கச் சொல்வதை 'நீலக்குயில்' நிச்சயமாகச் செய்யாது என்பதையே காலம் மீண்டும் நிரூபித்தது.

23-வது இதழ் தரமான தயாரிப்பாக அமைந்திருந்தது.

‘சிறந்த எழுத்துக்களைப் படைத்த பசித்த வயிறுகள்'-ஒரு குறிப்பு: ஏ. ஏ. ஹெச். கே. கோரி கவிதை வல்லிக்கண்ணன் கதை 'ரசிகன்', அகல்யாவின் அபிப்பிராயங்கள்; சோவியத் வீர விருது பெற்ற தென்னிந்தியர் பற்றிய ஏ. ஏஸ். மூர்த்தி கட்டுரை, ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் நாவலிலிருந்து சில பக்கங்கள், உமாபதி கவிதை 'என் தம்பி'-இவை இவ் இதழில் உள்ளன.

'கோபல்ல கிராமம்' நாவல் பற்றி நகுலன் எழுதிய மதிப்புரை சீனக் கவிஞன் வாங் வெய் கவிதைகள்; துரை சீனிச்சாமி தமிழில்; மற்றும் சில கதைகள் ஆகியவற்றைத் தாங்கி வந்த 24-வது இதழ் தான் (அக்டோபர் 1976) கடைசியாக வெளிவந்த இதழாகும்.

25-வது இதழ் தயாரிக்கப்பட்டது. ஆனாலும் அதை திரு. அண்ணாமலை வாசகர்களுக்கு அனுப்பவேயில்லை. பத்திரிகைப் பிரசுரம்

அவருக்கே அலுத்துவிட்டது போலும்.