தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/017-066

விக்கிமூலம் இலிருந்து

பத்துப்பாட்டுப் பதிப்பு

சீவக சிந்தாமணியைப் பதிப்பித்த கையோடு இவர் பத்துப்பாட்டை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். சீவக சிந்தாமணி, காவியம்; பத்துப்பாட்டு, கடைச் சங்க நூல். அதன் இயல்பை நன்கு தெரிந்துகொள்வதற்கு, பல இடங்களுக்கும் சென்று அதன் ஏட்டுச் சுவடிகள் பலவற்றைத் தேடிச் சேகரித்தார்.

பத்துப்பாட்டு ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆசிரியப் பெருமானிடம் பொறாமை கொண்டிருந்த சிலர் சீவகசிந்தாமணிபற்றிக் கண்டனக் கடிதங்களை எழுதினார்கள். சைவ மடத்தில் இருந்து வளர்ந்த ஒருவர் ஜைன நூலைப் பதிப்பிக்கலாமா என்று கேட்டிருந்தார்கள். ஆசிரியர் பதிப்பித்த சீவகசிந்தாமணியில் பிழை எனக் கண்டனக்காரர்கள் கூறியதற்கு ஆசிரியர் பதில் எழுதினார். அதை ஆசிரியரோடு கல்லூரியில் பணியாற்றிவந்த பேராசிரியர் சாது சேஷையரிடம் இவர் காட்டினார். அதை வாங்கிப் படித்துப் பார்த்த அவர், அதனை வெளியிடச் சொல்லுவார் என ஆசிரியப் பெருமான் நினைத்தார். ஆனால் சாது சேஷையர் அந்தக் காகிதங்களைக் கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டு, "இப்படிப்பட்ட கண்டனங்களுக்குப் பதில் எழுதுவதற்கு முயலக் கூடாது. அப்படிச் செய்தால் கண்டனம் எழுதுபவர்கள் பெருமை அதிகமாகிவிடும். உங்கள் வேலைகளுக்குத் தடங்கல் உண்டாகும்" என்று சொன்னார் .

ஒவ்வொரு நாளும் இரவு வெகுநேரம் வரைக்கும் ஆசிரியப் பெருமான் பத்துப்பாட்டைப் படித்தார். பல நண்பர்களுடைய பொருள் உதவியை மேற்கொண்டு அதைப் பதிப்பிக்கத் தொடங்கினார். சென்னைக்கு வந்து ஓர் அச்சுக் கூடத்தில் அதைக் கொடுத்து அச்சிடத் தொடங்கினார். அப்போது பத்துப்பாட்டின் மூலம் கிடைக்கவில்லை. நச்சினார்க்கினியர் உரையை வைத்துக்கொண்டே ஒருவாறு மூலத்தைச் செப்பம் செய்து உருவாக்கி அச்சிடக்கொடுத்தார். 1889-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பத்துப்பாட்டு அச்சிட்டு நிறைவேறியது. ஆறு மாதங்கள் அந்த வேலை நடைபெற்றது.