தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/040-066

விக்கிமூலம் இலிருந்து

வேலையிலிருந்து ஓய்வு பெறுதல்

1919-ஆம் ஆண்டு ஆசிரியர் சென்னை மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகள் இருக்கவேண்டுமென்று பலரும் விரும்பினாலும் ஆசிரியர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டார். கல்லூரி முதல்வரிடம் விடைபெற்றுக்கொள்ளும் போது, "இதுவரை இந்தக் கல்லூரியில் சிறந்த தமிழாசிரியர்கள் இருந்து வந்ததுபோலப் பின்னும் திறமை வாய்ந்த நல்லவர் ஒருவர் நியமிக்கப் பெறுதல் வேண்டும்" என்று தெரிவித்துக் கொண்டார். உடனே முதல்வர், தாங்களே அப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தரவேண்டும்' என்று சொல்ல, ஆசிரியர் இ. வை. அனந்தராமையர் பெயரைத் தெரிவித்தார். ஆசிரியர் விருப்பப்படி அவரையே சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் ஆசிரியராக ஆக்கினார்கள்.