தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/முகவுரை

விக்கிமூலம் இலிருந்து

முகவுரை

1970-73 காலப்பகுதியில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக எமது தந்தையார் இருந்தார். இந்தக் காலத்தின் இடைப்பட்ட ஆண்டான 1971இல் 'சங்கரதாஸ் சுவாமிகள் நினைவுச் சொற்பொழிவை' அங்கு நிகழ்த்தியுள்ளார். இச்சொற்பொழிவில் 'தமிழ்நாடக வரலாறு' என்ற ஒரு கட்டுரையையும் சங்கரதாச சுவாமிகள் - நாடக ஆசிரியர் என்ற தலைப்பிட்டு இன்னொரு கட்டுரையையும் சமர்ப்பித்திருந்தார்.

இதற்குப்பின் தந்தையார் எழுதியிருந்த பல நூல்களும் வெளிவந்தபோதும், முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்மால் வெளியிடப்பெறாமல் மறக்கப்பட்டிருந்த கட்டுரைகள் இவையாகும். இவை மட்டுமன்றித் தந்தையாரால் எழுதப்பெற்று, நூலாக வெளிவராத இன்னும்பல கட்டுரைகளும் இருக்கின்றன. நாளடைவில் அவற்றையும் தொகுத்து நூல்வடிவில் வெளிக்கொண்டுவர, தந்தையாரின் ஆசிகளும் இறைவனின் திருவருளும், நண்பர்களின் உதவியும் துணை நிற்கும் என்றே நம்புகிறோம்.

இவ்விரு கட்டுரைகளும் முத்தமிழில் ஒன்றான நாடகம் சார்ந்து இருந்ததால் தனி நூலாகப் பிரசுரிக்கும் எண்ணம் எழுந்தது. எனவேதான் "தமிழ்நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்” என்று தலைப்பிட்டு இதனை வெளியிட விரும்பினோம். எங்கள் எண்ணத்தை நிறைவேற்ற முனைவர். ம.ரா.போ. குருசாமி, முனைவர். தெ. ஞானசுந்தரம், டாக்டர், என். சிவராசன், திரு. கெளரிசங்கர் (அங்கிள்), யாழ்ப்பாணம் ச. மார்க்கண்டு ஆகியோர் உதவினார்கள். அவர்களுக்கு எம் நன்றிகள்.

மேலும் இந்நூலுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அணிந்துரை வேண்டி, 'நாடகக் காவலர்' ஆர்.எஸ். மனோகர் அவர்களை அணுகினோம். மிகுந்த மனநிறைவோடும் மிக விரைவாகவும் நூல் பிரதியை வாசித்து அணிந்துரையை அளித்தார்கள். அவரின் ஒத்துழைப்பிற்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பதோடு, நீண்ட காலத்திற்கு நாடகச் சேவை செய்ய இறைவன் அருள்வான் என வாழ்த்தினையும் தெரிவிக்கின்றோம்.

தந்தையாரின் முப்பது நூல்களுக்குமேல் வெளியிட்டிருக்கின்ற கங்கை புத்தக நிலையத்தார் இதனையும் வெளியிடுகிறார்கள். நிறுவனர் பெரியவர் வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும், திருநாவு. இராமநாதன் அவர்களுக்கும் எங்கள் நன்றி உரித்தாகிறது. தந்தையாரின் ஆசீர்வாதம் அவர்களுக்கு என்றும் உண்டு.

அ.ச.ஞா. குடும்பத்தினர்.

11.11.2002
19, டாக்டர் நடேசன் சாலை,
அசோக்நகர், சென்னை - 83.