திருக்குறள் மணக்குடவருரை/கடவுள் வாழ்த்து

விக்கிமூலம் இலிருந்து
 

திருவள்ளுவர்
திருக்குறள்.
மணக்குடவருரை.

 

அறத்துப்பால்.

 

பாயிரம்.

[பாயிரமாவது, நூன்முகம்.]

முதலாவது.--கடவுள் வாழ்த்து,

[கடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்தும் வாழ்த்து.)

கர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதன் பொருள்:- எழுத்தெல்லாம் அகரம் முதல - எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; (அவ்வண்ணமே), உலகு ஆதிபகவன் முதற்று - உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து,

உலககாரணன் ஆதிபகவ னென்றார்.

ற்றதனா லாய பயனென்கொல், வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?

இ-ள்:- கற்றதனால் ஆய பயன் என் - (மேற்கூறிய எழுத்தினானாகிய சொற்களையெல்லாம்) கற்றதனானாகிய பயன் (வேறு)யாது, வால் அறிவன் நற் றாள் தொழார் எனின் - விளங்கின அறிவினையுடையவன் திருவடியைத் தொழாராயின்? [கொல்- அசை.]

சொல்லினானே பொருள் அறியப்படுமாதலான், அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடு பெறலாகும். "கற்பக் கழிமட மஃகும்" என்றாரு முளர்.

மீண்டும் வணக்கம் கூறிய தெற்றுக் கென்றார்க்கு, கற்றதனால் பயன் இது வென்பதூஉம், வேறு வேறு பயன் இல்லை யென்பதூஉம் கூறிற்று.

லர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.

இ-ள்:- மலர் மிசை ஏகினான் மாண் அடி சோந்தார் - மலரின் மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திரு வடியைக் சோந்தவரன்றே, நிலம்மிசை நீடு வாழ்வார் - நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். [சோந்தவரன்றே-சோந்தவரே, அன்று - அசை.]

நிலமென்று பொதுப்படக் கூறியவதனான், இவ்வுலகின்கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும்.

'தொழுதாற் பயன் என்னை' என்றாக்குப் போகம் நுகர்தலும், வீடு பெறுதலும் என்று கூறுவார், முற்படப் போகம் நுகர்வா ரென்று கூறினர்.

னக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்,
மனக்கவலை மாற்றல் அரிது,

இ ள்:- தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), மனக்கவலை மாற்றல் அரிது-மனத்து உண்டாம் கவலையை மாற்றுதல் அரிது. [நிகர் - ஒப்பு.] வீடுபெறலாவது, அவலக் கவலைக் கையாற்றின் நீங்கிப் புண்ணிய பாவ மென்னும் இரண்டினையும் சாராமல், சாதலும் பிறத்தலு மில்லாததொரு தன்மையை யெய்துதல், [அவலம் - கிலேசம். கையாறு - துன்பம்].

வீடு பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார், அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலில்,

றவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்,
பிறவாழி நீந்தல் அரிது,

இ-ள்:- அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறமாகிய கடலை யுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க் கல்லது (ஒழிந்த பேர்களுக்கு), பிற ஆழி நீந்தல் அரிது - பிற ஆழியை நீந்தல் ஆகாது. [பிற ஆழி - காமமும் பொருளும்.]

அவலம் நீங்கப்பெறுதல் அரிது என்றவாறு.

இது காமமும் பொருளும் பற்றிவரும் அவலம் கெடு மென்றது.

வேண்டுதல் வேண்டாமை யில்லான் அடிசேர்ந்தார்
யாண்டும் இடும்பை யிலர்,

இ-ள்:- வேண்டுதல் வேண்டாமை இல்லான் அடி - இன்பமும் வெகுளியும் இல்லாதானது திருவடியை, சேர்ந்தார் - சேர்ந்தவர், யாண்டும் இடும்பை இலர் - எவ்விடத்தும் துன்பம் இல்லா தவர்.

காமமும் கோபமும் ஆகா என்றற்கு "வேண்டுதல் வேண்டாமை யில்லான்” என்று பெயரிட்டார். (இன்பமும் வெகுளியும் - காமமும் கோபமும்].

இது, கையாறு கெடு மென்றது.

ருள்சேர் இருவினையுஞ் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு,

இ-ள்:- இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினை யென்னும் இரண்டு வினைகளும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு - தலைவனதாகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு,

இது, புண்ணிய பாவங்கள் சேராவென்றது. ௭.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார், நீடுவாழ் வார்.

இ-ள்:- பொறிவாயில் ஐந்து அவித்தான் - (மெய் - வாய் - கண் - மூக்கு - செவி என்னும் ஐம்) பொறிகளின் வழியாக வரும் (ஊறு - சுவை - ஒளி - நாற்றம் - ஓசை என்னும்) ஐந்தின் கண்ணும் செல்லும் மனநிகழ்ச்சியை அடக்கினானது , பொய்தீர ஒழுக்க நெறி நின்றா - பொய்யற்ற ஒழுக்க நெறியிலே நின்றாரன்றே, நீடுவாழ் வார்-நெடிதுவாழ்வார்,

இது, சாவு இல்லை யென்றது. ௮.

பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார்
இறைவனடி சேரா தவர்.

இ-ள்:- (இறைவன் அடி சேர்ந்தவர்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவனது அடியைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலை நீந்தி யேறுவர், இறைவன் அடி சேராதார் நீந்தார் - இறைவனது அடியைச் சேராதவா அதனுள் அழுந்துவா.

இது, பிறவி இல்லை யென்றது. ௯.

கோளில் பொறியின் குணமிலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை,

இ-ள்:- கோள் இல் பொறியின் - அறிவு இல்லாத (பொறிகளையுடைய) பாவைகள்போல், குணம் இல - ஒரு குணமும் உடையனவல்ல. எண்குணத்தான் தாளை-எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலை-வணங்காத தலை யினையுடைய உடம்புகள், [வணங்காத என்பது ஈறு கேட்டு நின்றது.]

அவை உயிருண்டாகில் வணங்கும். அவை வணங்காமையால் அவற்றை இழித்து உடம்புக ளென்றார்.

இது, வணங்காத உடம்புகள் பிணங்க ளென்றது. ௧0.