திருக்கோவையார்/பதினென்காம் அதிகாரம் - இரவுக் குறி

விக்கிமூலம் இலிருந்து

பதினான்காம் அதிகாரம்
14. இரவுக் குறி

பேரின்பக் கிளவி
இரவுக் குறித்துறை முப்பத்தி மூன்றும்
அருளே சிவத்தோ(டு) ஆக்கியல் அருமை
தெரியவற் புறுத்திச் சிவனது கருணையின்
இச்சை பலவும் எடுத்தெடுத்(து) அருளல்.

1. இரவுக் குறி வேண்டல்
மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்(குஅம் பலத்(து)அமிர்தாய்
இருந்தனர் குன்றின்நின்(று) ஏங்கும் அருவிசென்(று) ஏர்திகழப்
பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனை இறும்பின்
விருந்தின் யான்உங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே. .. 148


கொளு
நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிற்(கு) உரைத்தது.

2. வழியருமை கூறி மறுத்தல்
விசும்பினுக்(கு) ஏணி நெறியன்ன சின்னெறி மேல்மழைதூங்(கு)
அசும்பினில் துன்னி அளைநுழைந் தால் ஒக்கும் ஐயமெய்யே
இசும் பினில் சிந்தைக்கும் ஏறற்(கு) அரி(து)எழில் அம்பலத்துப்
பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்(து)எம் வாழ்பதியே .. 149


கொளு
இரவரல் ஏந்தல் கருதி உரைப்பப்
பருவரல் பாங்கி அருமை உரைத்தது.

3. நின்று நெஞ்சுடைதல்
மாற்றேன் எனவந்த காலனை ஓலம் இடஅடர்த்த
கோலதேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி
மேல்தேன் விரும்பும் முடவனைப் போல மெலியும் நெஞ்சே
ஆற்றேன் அரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. .. 150


கொளு
பாங்கி விலங்கப் பருவரை நாடன்
நீங்கி விலங்காது நெஞ்சு டைந்தது.

4. இரவுக்குறி நேர்தல்
கூளி நிரைக்கநின்(று) அம்பலத்(து) ஆடி குறைகழற்கீழ்த்
தூளி நிறைத்த சுடர்முடி யோஇவள் தோள்நசையால்
ஆளி நிரைத்தடல் ஆனைகள் தேரும் இரவில்வந்து
மீளி யுரைத்தி வினையேன் உரைப்பதென் மெல்லியற்கே. .. 151


கொளு
தடவரை நாடன் தளர்வு தீர
மடநடைப் பாங்கி வகுத்துரைத்தது.

5. உட்கோள் வினாதல்
வரையன்(று) ஒருகால் இருகால் வளைய நிமிர்ந்துவட்கார்
நிரையன்(று) அழல்எழ எய்துநின் றோன்தில்லை அன்னநின்னூர்
விரையென்ன மென்னிழல் என்ன வெறியறு தாதிவர்போ(து)
உரையென்ன வோசிலம் பாநலம் பாவி ஒளிர்வனவே. .. 152


கொளு
நெறி விலக்(கு) உற்றவன் உறுதுயர் நோக்கி
யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.

6. உட்கொண்டு வினாதல்
செம்மலர் ஆயிரம் தூய்க்கரு மால்திருக் கண்அணியும்
மொய்ம்மலர் ஈர்ங்கழல் அம்பலத் தோன்மன்னு தென்மலயத்(து)
எம்மலர் சூடிநின்(று) எச்சாந்(து) அணிந்(து)என்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கண்நல் லாய்எல்லி வாய்நுமர் ஆடுவதே. .. 153


கொளு
தன்னை வினவத் தான்அவள் குறிப்பறிந்(து)
என்னை நின்னாட்(டு) இயல்அணி என்றது.

7. குறியிடங்கூறல்
பனைவளர் கைம்மாப் படாத்(து)அம் பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரல் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து
கனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும்
சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின்(று) ஆடும் செழும்பொழிலே. .. 154


கொளு
இரவுக் குறியிவண் என்று பாங்கி
அரவக் கழலவற்(கு) அறிய வுரைத்தது.

8. இரவுக் குறி ஏற்பித்தல்
மலவன் குரம்பையை மாற்றிஅம் மால்முதல் வானர்க்(கு) அப்பால்
செலஅன்பர்க்(கு) ஒக்கும் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ(டு)
அலவன் பயில்வது கண்(டு)அஞர் கூர்ந்(து)அயில் வேல்உரவோன்
செலஅந்தி வாய்க்கண் டனன்என்ன(து) ஆங்கொல்மன் சேர்துயிலே. .. 155


கொளு
அரவக் கழலவன் ஆற்றானென
இரவுக் குறி ஏற்பித்தது.

9. இரவரவு உரைத்தல்
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தரும்நம் குருமுடி வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச் சிங்கம்
வேட்டம் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. .. 156


கொளு
குருவரு குழலிக்(கு) இரவர வுரைத்தது.

10. ஏதங்கூறி மறுத்தல்
செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழல் ஏத்தலர்போல்
முழங்கார் அரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்இருள்வாய்
வழங்கா அதரின் வழங்கென்று மோஇன்(று)எம் வள்ளலையே. .. 157


கொளு
இழுக்கம் பெரி(து)இர வரின்என
அழுக்கம் எய்தி அரிவை உரைத்தது.

11. குறை நேர்தல்
ஓங்கும் ஒருவிடம் உண்(டு)அம் பலத்(து)உம்பர் உய்யஅன்று
தாங்கும் ஒருவன் தடவரை வாய்த்தழங் கும்அருவி
வீங்கும் கனைபுனல் வீழ்ந்(து)அன்(று) அழங்கப் பிடித்தெடுத்து
வாங்கும் அவர்க்(கு)அறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. .. 158


கொளு
அலைவேல் அண்ணல் நிலைமை கேட்டு
கொலைவேற் கண்ணி குறைந யந்தது.

12. குறை நேர்ந்தமை கூறல்
ஏனற் பசுங்கதிர் என்றூழ்க் கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா
யான்இற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச் சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லும் செல்லல்களே. .. 159


கொளு
குறைந யந்தனள் நெறிகு ழலியென
எறிவேல் அண்ணற்(கு) அறிய உரைத்தது.

13. வரவுணர்ந்து உரைத்தல்
முன்னும் ஒருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றும்இற்றால்
பின்னும் ஒருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்
துன்னுமோர் இன்பம்என் தோகைதம் தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னும் அரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. .. 160


கொளு
வளமயில் எடுப்ப இளமயிற் பாங்கி
செருவேல் அண்ணல் வரவு ரைத்தது.

14. தாய் துயில் அறிதல்
கூடார் அரண்எரி கூடக் கொடுஞ்சிலை கொண்டஅண்டன்
சேடார் மதின்மல்லல் தில்லைஅன் னாய்சிறு கண்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி ஊசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநம் சூழ்பொழிற்கே. .. 161


கொளு
ஊசல் மிசைவைத்(து) ஒள்அ மளியில்
தாய துதுயில் தான் அறிந்தது.

15. துயிலெடுத்துச் சேறல்
விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீர்உடுத்த
மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன் மிடற்றின்
வண்ணக் குவளை மலர்க்கின் றனசிவ வாண்மிளிர்நின்
கண்ணோர்க்கு மேற்கண்டு காண்வண்டு வாழும் கருங்குழலே. .. 162


கொளு
தாய்துயில் அறிந்(து)ஆய் தருபவள்
மெல்லியற்குச் சொல்லியது.

14. இடத்துய்த்து நீங்கல்
நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்(கு) எ·கம்
தந்தீ வரன்புலி யூரன்ன யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி வீயும் தருகுவனே. .. 163


கொளு
மைத்தடங் கண்ணியை உய்த்திடத்து ஒருபால்
நீங்கல் உற்ற பாங்கி பகர்ந்தது.

17. தளர்வகன்று உரைத்தல்
காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோன்அடைத்த
தாமரை இல்லின் இதழ்க்கத வம்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்(து)என் னோவந்து வைகி நயந்ததுவே. .. 164


கொளு
வடுவகிர் அனைய வரிநெடுங் கண்ணியைத்
நடுவரி அன்பொடு தளர்வகன்(று) உரைத்தது.

18. மருங்கணைதல்
அகலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்(து)அஞ் சனம்எழுதத்
தகிலும் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்
இகலும் அவரில் தளரும்இத் தேம்பல்இடைஞெமியப்
புகலும் மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. .. 165


கொளு
அன்பு மிகுதியின் அளவளாய் அவளைப்
பொன்புனை வேலோன் புகழ்ந்துரைத்தது.

19. முகங்கொண்டு மகிழ்தல்
அழுந்தேன் நரகத்து யானென்(று) இருப்பவந்(து) ஆண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப் புறவில் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம் இவள்யான் குருஉச்சுடர்கொண்(டு)
எழுந்(து)ஆங் கதுமலர்த் தும்உயர் வானத்(து) இளமதியே. .. 166


கொளு
முகையவிழ் குழலி முகமதி கண்டு
திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.

20. பள்ளியிடத்து உய்த்தல்
கரும்புறு நீலம் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ
அரும்பெறல் தோழிய(டு) ஆயத்து நாப்பண் அமரர்ஒன்னார்
இரும்புறு மாமதிப் பொன்இஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்(து)எம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. .. 167


கொளு
பிரிவது கருதிய பெருவரை நாடன்
ஒள்ளிழைப் பாங்கியடு பள்ளிகொள் கென்றது.

21. வரவு விலக்கல்
நற்பகல் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன
விற்பகைத்(து) ஓங்கும் புருவத்(து) இவளின் மெய்யேஎளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. .. 168


கொளு
தெய்வம் அன் னாளைத் திருந்(து)அமளி சேர்த்தி
மைவரை நாடனை வரவுவிலக் கியது.

22. ஆற்றாது உரைத்தல்
பைவாய் அரவுஅரை அம்பலத்(து) எம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கண் பெரும்பணைத் தோள்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை இன்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா(று) இருக்கும்என் றேநிற்ப(து) என்றும்என் இன்னுயிரே. .. 169


கொளு
வரைவு கடாய வாணுதல்தோழிக்(கு)
அருவரை நாடன் ஆற்றா(து) உரைத்தது.

23. இரக்கங்கூறி வரைவு கடாதல்
பைவாய் அரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால்
செவ்வாய் கருவுயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. .. 170


கொளு
அதிர்க ழலவன் அகன்றவழி
எதிர்வ(து) அறியா(து) இரங்கி உரைத்தது.

24. நிலவு வெளிப்பட வருந்தல்
நாகம் தொழஎழில் அம்பலம் நண்ணி நடம்வில்வோன்
நாகம் இதுமதி யேமதி யேநவில் வேற்கைஎங்கள்
நாகம் வரஎதிர் நாங்கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார்
நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. .. 171


கொளு
தனிவே லவற்குத் தந்தளர்(வு) அறியப்
பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.

25. அல்லகுறி அறிவித்தல்
மின்அங்(கு) அலரும் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்
என்அங்(கு) அலமரல் எய்திய தோஎழில் முத்தம்தொத்திப்
பொன்அங்(கு) அலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்
அன்னம் புலரும் அளவும் துயிலா(து) அழுங்கினவே. .. 172


கொளு
வள்ளி யன்னவள் அல்ல குறிப்பொடு
அறைப்புனல் துறைவற்குச் சிறைப்புறத்(து) உரைத்தது.

26. கடலிடை வைத்துத் துயர் அறிவித்தல்
சோத்துன் அடியம் என் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்(து)
ஏத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னாள் இவள்துவள
ஆர்த்துண் அமிழ்தும் திருவும் மதியும் இழந்தவம்நீ
பேர்த்தும் இரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. .. 173


கொளு
எறிகடல் மேல்வைத்து இரவரு துயரம்
அறைக ழலவற்(கு) அறிய உரைத்தது.

27. காமம் மிக்க கழிபடர் கிளவி
மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள்
ஏதுற்(று) அழிதிஎன் னீர்மன்னும் ஈர்ந்துறை வர்க்(கு) இவளோ
தீதுற்ற(து) என்னுக்(கு)என் னீர்இது வோநன்மை செப்புமினே. .. 174


கொளு
தாமம் மிக்க தாழ்குழல் ஏழை
காமம் மிக்க கழிபடர் கிளவி.

28. காப்புச் சிறைமிக்க கையறு கிளவி
இன்னற வார்பொழில் தில்லை நகரிறை சீர்விழவில்
பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின்
துன்னற வுய்க்கும்இல் லோரும் துயிலில் துறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரை தருமே. .. 175


கொளு
மெய்யறு காவலில் கையறு கிளவி.

29. ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவி
தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை
நீருறு கான்யா(று) அளவில் நீந்திவந் தால்நினது
போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுகம் அஞ்சிவரும்
சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. .. 176


கொளு
நாறு வார்குழல் நவ்வி நோக்கி
ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி.

30. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. .. 177


கொளு
மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையாறு எய்திடு கிளவி.

31. நிலைகண்டு உரைத்தல்
பற்றொன்றி லார்பற்றும் தில்லைப் பரன்பரம் குன்றில்நின்ற
புற்றொன்று அரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்
மற்றொன்று மாமலர் இட்டுன்னை வாழ்த்திவந் தித்திலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. .. 178


கொளு
நின்னின் அழிந்தனள் மின்னிடை மாதென
வரைவு தோன்ற வுரை செய்தது.

32. இரவுறு துயரம் கடலொடு சேர்த்தல்
பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந்(து) ஓலமிட்டுத்
தீங்கணைந் தோர்அல்லும் தேறாய் கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்உள ரோசென்(று) அகன்றவரே. .. 179


கொளு
எறிவேற் கண்ணி இரவரு துயரம்
செறிக டலிடைச் சேர்த்தி யுரைத்தது.

33. அலர் அறிவுறுத்தல்
அலர்ஆ யிரம்தந்து வந்தித்து மால்ஆ யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய் தாற்(கு)அள வில்ஒளிகள்
அலரா யிருக்கும் படைகொடுத் தோன்தில்லை யான்அருள்போன்(று)
அலராய் விளைகின்ற(து) அம்பல்கைம் மிக்(கு)ஐய மெய்யருளே. .. 180


கொளு
அலைவேல் அண்ணல் மனம கிழருள்
பலரால் அறியப் பட்ட(து) என்றது.