திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/எஸ்தர் (கிரேக்கம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"மன்னரும் ஆமானும் அரசியோடு விருந்துக்குச் சென்றனர். இரண்டாம் நாளும் மன்னர் திராட்சை மதுவை அருந்தியவாறே அரசியிடம், 'எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்? உன் வேண்டுகோளும் விருப்பமும் என்ன? என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன்' என்றார்." - எஸ்தர் (கி) 7:1-2.


எஸ்தர் (கிரேக்கம்) (The Book of Esther [Greek])[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

எஸ்தர் அளித்த இரண்டாம் விருந்து[தொகு]


1 மன்னரும் ஆமானும் அரசியோடு விருந்துக்குச் சென்றனர்.
2 இரண்டாம் நாளும் மன்னர் திராட்சை மதுவை அருந்தியவாறே அரசியிடம்,
"எஸ்தர், உனக்கு என்ன வேண்டும்?
உன் வேண்டுகோளும் விருப்பமும் என்ன?
என் பேரரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குக் கொடுப்பேன்" என்றார்.


3 அதற்கு எஸ்தர் மறுமொழியாக,
"மன்னரே, உமக்கு விருப்பமானால், என் உயிரையும் என் மக்களின் உயிரையும் காப்பாற்றும்.
இதுவே என் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும்.
4 நானும் என் மக்களும் அழிவுக்கும் சூறையாடலுக்கும்
அடிமைத்தனத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோம்.
நாங்களும் எங்கள் புதல்வர் புதல்வியரும் அடிமைகளாக்கப்பட்டுள்ளோம்.
இதுவரை நான் பேசாதிருந்தேன்.
ஆனால் சதிகாரன் மன்னரின் அரண்மனையில் இருக்கத் தகுதியற்றவன்" என்று கூறினார்.
5 "இத்தகைய செயலைச் செய்யத் துணிந்தவன் யார்?"
என்று மன்னர் வினவினார்.
6 "அந்தப் பகைவன் தீயவனாகிய இந்த ஆமான்தான்" என்று எஸ்தர் பதிலுரைத்தார்.
மன்னரின் முன்னிலையிலும் அரசியின் முன்னிலையிலும் ஆமான் திகைத்து நின்றான்.


7 மன்னர் விருந்திலிருந்து எழுந்து தோட்டத்துக்குச் சென்றார்.
ஆமானோ தான் மிக இக்கட்டான நிலையில் இருந்ததை உணர்ந்து,
அரசியிடம் கெஞ்சி மன்றாடத் தொடங்கினான்.

ஆமான் பெற்ற தண்டனை[தொகு]


8 மன்னர் தோட்டத்திலிருந்து திரும்பியபோது,
ஆமான் எஸ்தரின் மஞ்சத்தின்மீது விழுந்தபடி
அவரிடம் கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்தான்.
"என்ன! எனது வீட்டிலேயே என் மனைவியைக்
கெடுக்கத் துணிந்தாயோ?" என்றார் மன்னர்.
இதைக் கேட்டதும் ஆமானின் முகம் வாடியது.
9 அப்போது அண்ணகர்களுள் ஒருவராகிய புகத்தான்,
"மன்னருக்கு எதிரான சூழ்ச்சியைப் பற்றி எச்சரித்த மொர்தெக்காயைக் கொல்வதற்காக
ஆமான் ஒரு தூக்குமரத்தையே ஏற்பாடு செய்துள்ளார்.
ஐம்பது முழம் உயருமுள்ள அந்தத் தூக்குமரம்
ஆமான் வீட்டில் உள்ளது" என்று மன்னரிடம் கூறினார்.
"அவனை அதிலேயே தூக்கிலிடுங்கள்" என்று மன்னர் கட்டளையிட்டார்.
10 இவ்வாறு மொர்தெக்காயைக் கொல்ல ஆமான் ஏற்பாடு செய்திருந்த தூக்குமரத்தில்
அவனே தூக்கிலிடப்பட்டான்.
பின்னர் மன்னரின் சீற்றம் தணிந்தது.


அதிகாரம் 8[தொகு]

யூதர்கள் பெற்ற சலுகைகள்[தொகு]


1 சதிகாரனாகிய ஆமானின் சொத்துகள் அனைத்தையும்
அர்த்தக்சஸ்தா மன்னர் அன்றே எஸ்தருக்கு வழங்கினார்.
மோர்தெக்காய் தமக்கு உறவினர் என்று எஸ்தர் விளக்கியிருந்ததால்,
மன்னர் அவரைத் தம்மிடம் அழைத்தார்;
2 ஆமானிடமிருந்து திரும்பப் பெற்றிருந்த கணையாழியை எடுத்து
மொர்தெக்காயிடம் வழங்கினார்.
ஆமானுடைய சொத்துக்களுக்கெல்லாம்
எஸ்தர் அவரைப் பொறுப்பாளர் ஆக்கினார்.


3 மீண்டும் மன்னரிடம் உரையாடிய எஸ்தர்
அவரது காலில் விழுந்து,
ஆமான் யூதர்களுக்கு எதிராகச் செய்திருந்த சூழ்ச்சிகள் அனைத்தையும்
முறியடிக்குமாறு மன்றாடினார்.
4 மன்னர் தம் பொற் செங்கோலை எஸ்தரிடம் நீட்டவே,
எஸ்தர் எழுந்து மன்னருக்கு முன்னால் வந்து நின்றார்.
5 அப்பொழுது எஸ்தர்,
"நீர் விரும்பி எனக்குப் பரிவு காட்டுவீராயின்,
உமது பேரரசில் வாழும் யூதர்களை அழிக்குமாறு ஆமான் விடுத்திருக்கும் மடல்களைத்
திரும்பப் பெறுமாறு ஆணை பிறப்பிப்பீராக.
6 என் மக்கள் படும் துன்பத்தை நான் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும்?
என் இனத்தார் அழிந்தபின் நான் எவ்வாறு உயிர்வாழ இயலும்?" என்றார்.
7 அதற்கு மன்னர் எஸ்தரிடம்,
"ஆமானுக்கு உரிய சொத்து அனைத்தையும்
நான் மனமுவந்து உனக்கு வழங்கியதோடு
யூதர்களை அழிக்க முனைந்ததற்காக அவனைத் தூக்கிலிட்டுவிட்டேன்.
இன்னும் உனக்கு என்ன வேண்டும்?
8 உங்களுக்கு விருப்பமானதை நீங்களே என் பெயரால் எழுதி,
எனது கணையாழியால் முத்திரையிட்டுக் கொள்ளுங்கள்;
மன்னரின் கட்டளையால் எழுதப்பட்டு
அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்ட ஆணையை
எவராலும் மாற்ற முடியாது" என்று கூறினார்.


9 அதே ஆண்டின் முதல் மாதமாகிய நீசான் மாதம்
இருபத்து மூன்றாம் நாள் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த
நூற்று இருபத்தேழு மாநிலங்களின் ஆட்சிப் பொறுப்பாளர்களுக்கும்
ஆளுநர்களுக்கும் அந்தந்த மாநில மொழியில் அனுப்பப்பட்ட அரசாணை
யூதர்களுக்கும் வரையப்பட்டது.
10 மன்னரின் பெயரால் அவ்வாணை எழுதப்பட்டு,
அவரது கணையாழியால் முத்திரையிடப்பட்டு,
தூதர் வழியாக அனுப்பிவைக்கப்பட்டது.
11 ஒவ்வொரு நகரிலும் இருந்த யூதர்கள்
தங்கள் சட்டங்களைக் கடைப்பிடிக்கவும்,
தங்களையே தற்காத்துக் கொள்ளவும்,
எதிரிகள், பகைவர்கள்மீது தங்கள் விருப்பப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும்
அந்த ஆணை அவர்களுக்கு உரிமை வழங்கியது.
12 அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் ஒரே நாளில்,
அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம்
பதின்மூன்றாம் நாள் அவ்வாணை நடைமுறைக்கு வரவேண்டும்
என்று விதிக்கப்பட்டது.

யூதர்களுக்குச் சலுகைகள் வழங்கும் அரசாணை[தொகு]


12a மன்னர் விடுத்த மடலின் நகல் பின்வருமாறு:


12b "இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை உள்ள
நூற்று இருபத்தேழு மாநில ஆளுநர்களுக்கும்
அரசப்பற்றுடைய குடிமக்களுக்கும்
அர்த்தக்சஸ்தா மாமன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:
12c தங்கள் கொடையாளர்களின் தாராளமான வள்ளன்மையால்
பெருமைப்படுத்தப்படும் பலர் செருக்குக் கொள்கிறார்கள்;
நம் குடிமக்களுக்குத் தீங்கு விளைவிக்க முனைவது மட்டுமன்று,
செல்வத்தால் இறுமாப்புக் கொண்டவர்களாய்
அதை வழங்கிய கொடையாளர்களுக்கு எதிராகவே
சூழ்ச்சி செய்யவும் துணிகிறார்கள்.
12d மனிதரிடையே நன்றியுணர்வைக் கொன்றுவிடுவதோடு,
நன்மைபற்றி ஒன்றுமே அறியாதோரின் தற்பெருமையால் உந்தப்பட்டு,
எல்லாவற்றையும் எப்போதும் காண்பவரும்
தீமையை வெறுப்பவருமான கடவுளின் தண்டனைத் தீர்ப்பிலிருந்து
தப்பிவிடலாம் என எண்ணுகிறார்கள்.
12e பொறுப்பான பதவியில் நியமிக்கப்பெற்ற பலர்
மாசற்றவர்களின் குருதியை அடிக்கடி சிந்துவதற்கு
ஒருவகையில் காரணமாய் இருந்திருக்கிறார்கள்;
மேலும், ஈடுசெய்ய இயலாப் பேரிடர்களுக்கும்
பொறுப்பாய் இருந்திருக்கிறார்கள்;
பொதுப்பணி நிர்வாகத்துக்குப் பொறுப்பு ஏற்றுள்ள நண்பர்களின் தூண்டுதலால்
இவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள்.
12f இந்நண்பர்கள் தங்கள் தீய இயல்பின் வஞ்சனையால்
ஆட்சியாளர்களின் நேர்மையான நல்லெண்ணத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி
அவர்களை ஏமாற்றுகிறார்கள்.
12g தகுதியற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவோரின்
அழிவுதரும் நடத்தையால்
வஞ்சகமான முறையில் செய்யப்பட்டவை பற்றி
நமக்குக் கிடைத்துள்ள மிகத் தொன்மையான ஆவணங்களிலிருந்து அறிவதை விட
அண்மைக் காலத்தில் நிகழ்ந்தவற்றை ஆராய்வதால்
மிகுதியாக அறிந்து கொள்ள முடியும்.
12h எதிர்காலத்தில் நம் பேரரசில் எல்லா மனிதரும்
குழப்பமின்றி அமைதியில் வாழ்ந்திட நாம் வழி வகுப்போம்.
12i மாற்றங்களைப் புகுத்துவதாலும்,
நம் கவனத்துக்குக் கொண்டுவரப்படுவனபற்றி
எப்போதும் நேர்மையாக முடிவுசெய்வதாலும் இதைச் செயல்படுத்துவோம்.


12k "இதற்கு அம்மதாத்தாவின் மகன் ஆமான் ஓர் எடுத்துக்காட்டு.
மாசிடோனியனாகிய அவன் ஓர் அன்னியன்;
பாரசீக இரத்தமே அவனிடம் இல்லை;
எமக்குரிய இரக்கச் சிந்தை அவனிடம் சிறிதளவும் இல்லை;
இருப்பினும் அவனை எம் விருந்தினனாக ஏற்றுக்கொண்டோம்.


12l எல்லா நாட்டினர்மீதும் நாம் காட்டும் பரிவை
அவன் எவ்வளவு துய்த்துவந்தாதெனில்,
எல்லா மக்களும் அவனை 'எங்கள் தந்தை' என்று அழைத்ததோடு,
எப்போதும் மன்னருக்கு அடுத்த நிலையில் வைத்து வணங்கிவந்தார்கள்.
12m அவனோ அடக்கமுடியாத செருக்குக் காரணமாக
எம் ஆட்சியையும் உயிரையும் பறிக்கச் சூழ்ச்சி செய்தான்.
12n எம் உயிரைக் காத்தவரும்,
எமக்கு எப்போதும் நன்மை புரிபவருமாகிய மொர்தெக்காயையும்
குறையற்ற எம் துணைவியாராகிய எஸ்தர் அரசியையும்
அவர்களின் இனத்தார் அனைவரோடும் சேர்த்து அழிக்க
நுணுக்கமான முறையில் வஞ்சமாக முயன்றான்.
12o இவ்வாறு எம்மை ஆதரவற்றவர் ஆக்கிவிட்டுப்
பாரசீகரின் பேரரசை மாசிடோனியரிடம் ஒப்புவிக்க அவன் எண்ணினான்.
12p ஆனால் அரக்க குணம் படைத்த இம்மனிதனால்
அழிவுக்குக் கையளிக்கப்பட்ட யூதர்கள்
தீயவர்கள் அல்லர் என நாம் காண்கிறோம்.
அவர்கள் நீதியான சட்டங்களைக் கடைப்பிடித்துவருபவர்கள்;
12q நம் மூதாதையர் காலந்தொட்டு இன்றுவரை
நம் பேரரசை மிகச் சிறந்த முறையில் நெறிப்படுத்திவரும் உன்னதரும்
ஆற்றல்மிக்கவரும் என்றுமுள்ளவருமான கடவுளின் மக்கள்.


12r "எனவே, அம்மதாத்தாவின் மகன் ஆமான்
உங்களுக்கு அனுப்பியுள்ள மடல்களைப் புறக்கணித்து விடுங்கள்;
ஏனெனில் இச்சூழ்ச்சிகளுக்குக் காரணமாய் இருந்த ஆமானும்
அவன் வீட்டாரும் சூசா நகரின் வாயிலில் தூக்கிலிடப்பட்டு விட்டார்கள்.
அனைத்தையும் ஆளும் கடவுள் அவனுக்குத்
தகுந்த தண்டனையை மிக விரைவில் வழங்கிவிட்டார்.
12s இவ்வாணையின் நகல்களை எல்லாப் பொது இடங்களிலும் வைத்து,
தங்கள் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்க யூதர்களை அனுமதியுங்கள்.
அதே நாளில், அதாவது பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம்
பதின்மூன்றாம் நாளில்,
துன்ப நேரத்தில் தங்களைத் தாக்குவோரிடமிருந்து தற்காத்துக்கொள்ளும்படி
அவர்களுக்கு எல்லா உதவியும் வழங்குங்கள்.
12t ஏனெனில் அனைத்தையும் ஆளும் கடவுள்
தாம் தெரிந்தெடுத்துள்ள இனம் அழிவதற்குக் குறிக்கப்பட்ட நாளை
மகிழ்ச்சியின் நாளாக மாற்றிவிட்டார்.


12u "எனவே உங்கள் திருவிழாக்களுள் முக்கியமான ஒன்றாக
இந்நாளைச் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுங்கள்.
இன்றும் இனியும் இந்நாள் நமக்கும்
நம்மீது பற்றுக்கொண்ட பாரசீகருக்கும்
மீட்பின் நினைவு நாளாகவும்,
நமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தோருக்கு
அழிவின் நினைவு நாளாகவும் இருக்கட்டும்.
12x இந்த ஆணையை ஏற்றுச் செயல்படாத எல்லா நகரும் நாடும்
எம் சினத்துக்கு ஆளாகி, ஈட்டியாலும் நெருப்பாலும் அழிக்கப்படும்;
அவை எக்காலத்துக்கும் மனித நடமாட்டம் அற்றவையாக மட்டுமல்ல
காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்குங்கூட
வெறுப்புக்குரியவையாகவும் மாற்றப்படும்.
13 பேரரசின் எல்லா இடங்களிலும் எல்லாரும் காணும்படி
இவ்வாணையின் நகல்கள் வைக்கப்படட்டும்.
குறிப்பிட்ட நாளில் தங்கள் பகைவருக்கு எதிராகப் போராடுவதற்கு
யூதர்கள் அனைவரும் முன்னேற்பாடாய் இருக்கட்டும்."


14 இதன்படி மன்னரின் ஆணையை நிறைவேற்றக்
குதிரை வீரர்கள் விரைந்தார்கள்.
இவ்வாணை சூசா நகரிலும் வெளியிடப்பட்டது.
15 அரச ஆடைகளையும் விலையுயர்ந்த மெல்லிய
கருஞ்சிவப்புத் துணியாலான தலைப்பாகையையும்
பொன்முடியையும் அணிந்தவராய் மொர்தெக்காய்
அரண்மனையிலிருந்து வெளியே வந்தார்.
சூசா நகர மக்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
16 யூதர்களுக்கு அது ஒளியின் நாள்! மகிழ்வின் நாள்!
17 ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு மாநிலத்திலும்,
எங்கெல்லாம் இது அறிவிக்கப்பட்டதோ
அங்கெல்லாம் வாழ்ந்த யூதர்கள் மகிழ்ந்து களிகூர்ந்தார்கள்;
விருந்து நடத்தி விழாக்கொண்டாடினார்கள்.
யூதர்களுக்கு அஞ்சிய வேற்றினத்தார் பலர்
விருத்தசேதனம் செய்துகொண்டு யூதராயினர்.


(தொடர்ச்சி): எஸ்தர் (கிரேக்கம்): அதிகாரங்கள் 9 முதல் 10 வரை