திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/எஸ்தர் (கிரேக்கம்)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து


"அம்மினதாபின் மகளாகிய எஸ்தர் அரசியும் யூதராகிய மொர்தெக்காயும் தாங்கள் செய்தவற்றை எழுத்தில் பொறித்து வைத்தார்கள்; 'பூரிம்' திருவிழா பற்றிய ஒழுங்குகள் கொண்ட மடலை உறுதிப்படுத்தினார்கள்." - எஸ்தர் (கி) 9:29.


எஸ்தர் (கிரேக்கம்) (The Book of Esther [Greek])[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

யூதர்களின் வெற்றி[தொகு]


1 பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதின்மூன்றாம் நாள்
மன்னரின் ஆணை செயல்படுத்தப்பட்டது.
2 அன்று யூதர்களின் பகைவர்கள் அழிந்தார்கள்;
யூதர்கள் மீது கொண்ட அச்சத்தால்
யாருமே அவர்களை எதிர்த்து நிற்கவில்லை.
3 மோர்தெக்காய்க்கு அஞ்சியதால் மாநில ஆளுநர்களும்
குறுநில மன்னர்களும் அரச எழுத்தர்களும்
யூதர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்;
4 ஏனெனில் பேரரசு முழுவதும்
மொர்தெக்காய் மதித்துப் போற்றப்படவேண்டும்
என்று மன்னர் ஆணையிட்டிருந்தார்.
5 [1].


6 சூசா நகரில் யூதர்கள் ஐந்நூறு பேரைக் கொன்றார்கள்.
7 இவர்களுள் பரிசனஸ்தாயின், தெல்போன், பாஸ்கா,
8 பரிதாத்தா, பாராயா, சர்பாக்கா,
9 மார்மசிமா, அருபேயு, அர்சேயு, சபுதேத்தான்
10 ஆகிய பத்துப் பேரும் அடங்குவர்.
இவர்கள் எல்லாரும் யூதரின் பகைவனும்
பூகையனாகிய அம்மதாத்தாவின் மகனுமாகிய
ஆமானின் மைந்தர்கள்.
மேலும் யூதர்கள் அவர்களின் உடைமைகளைச் சூறையாடினார்கள்.


11 சூசாவில் கொல்லப்பட்டபவர்களின் எண்ணிக்கை
மன்னருக்கு அன்றே அறிவிக்கப்பட்டது.
12 அப்போது மன்னர் எஸ்தரிடம்,
"சூசா நகரில் மட்டுமே யூதர்கள் ஐந்நூறு பேரைக் கொன்றிருக்கிறார்கள்.
அவ்வாறாயின், நாட்டின் மற்றப் பகுதிகளில்
என்ன செய்திருப்பார்கள் என நினைக்கின்றாய்?
உனக்காக நான் வேறு என்ன செய்ய வேண்டும்?
அதை நான் நிறைவேற்றுவேன்" என்று கேட்டார்.
13 எஸ்தர் மன்னரிடம்,
"இன்று போல நாளையும் செய்ய யூதர்களுக்கு அனுமதி வழங்கும்.
ஆமானின் மைந்தர்கள் பத்துப் பேருடைய பிணங்களையும்
தொங்கவிடச் செய்யும்" என்றார்.
14 மன்னர் அதற்கு இசைந்தார்;
ஆமானின் மைந்தர்களுடைய பிணங்களைத் தொங்கவிடுமாறு
நகர யூதர்களிடம் கையளித்தார்.


15 அதார் மாதம் பதினான்காம் நாளன்றும்
சூசா நகர யூதர்கள் ஒன்று கூடி
முந்நூறுபேரைக் கொன்றார்கள்;
ஆனால் எதையும் சூறையாடவில்லை.
16 பேரரசின் மற்றப் பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஒன்றுதிரண்டு
பகைவர்களிடமிருந்து தங்களையே தற்காத்துக் கொண்டு
விடுதலை பெற்றார்கள்.
அதார் மாதம் பதின்மூன்றாம் நாள்
பதினையாயிரம் பேரைக் கொன்றார்கள்.
ஆனால் எதையும் சூறையாடவில்லை.
17 அதே மாதம் பதினான்காம் நாளை
அவர்கள் ஓய்வு நாளாக மகிழ்ச்சியோடும்
அக்களிப்போடும் கொண்டாடினார்கள்.


18 சூசா நகர யூதர்கள் பதினான்காம் நாளன்றும் ஒன்று கூடினார்கள்;
ஆனால் ஓய்வு கொள்ளவில்லை;
மாறாக, பதினைந்தாம் நாளை மகிழ்ச்சியுடனும்
அக்களிப்புடனும் கொண்டாடினார்கள்.
19 இதனால்தான் தொலை நாடுகளில் சிதறி வாழும் யூதர்கள்
அதார் மாதம் பதினான்காம் நாளை நன்னாளாக
மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்;
ஒருவருக்கொருவர் உணவுப் பொருள்களைப்
பரிமாறிக் கொள்கிறார்கள்.
ஆனால் மாநகர்களில் வாழ்கிறவர்கள்
அதார் மாதம் பதினைந்தாம் நாளை
நன்னாளாகக் கொண்டாடி,
உணவுப் பொருள்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

பூரிம் திருவிழா[தொகு]


20 மொர்தெக்காய் இவற்றை ஒரு நூலில் எழுதி,
அருகிலும் தொலையிலுமாக
அர்த்தக்ஸ்தாவின் பேரரசில் வாழ்ந்த யூதர்களுக்கு அனுப்பினார்.
21 அதார் மாதம் பதினான்காம் நாளையும் பதினைந்தாம் நாளையும்
நன்னாள்களாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்;
22 ஏனெனில் இந்நாள்களில்தாம் யூதர்கள்
தங்கள் பகைவர்களிடமிருந்து விடுதலை பெற்றார்கள்.
இந்த அதார் மாதத்தில் தான் அவர்களின் துன்பம் இன்பமாக மாறியது;
துயர நாள் நன்னாளாக மாறியது.
இந்த மாதம் முழுவதும் விருந்தாடி,
மகிழ்ச்சியுடன் அந்த நன்னாள்களைக் கொண்டாடுமாறும்
உணவுப்பொருள்களை நண்பர்களுக்கும்
ஏழைகளுக்கும் அனுப்பி வைக்குமாறும் அவர் எழுதினார்.


23 மொர்தெக்காய் யூதர்களுக்கு எழுதியிருந்ததை
அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
24 மாசிடோனியனாகிய அம்மதாத்தாவின் மகன் ஆமான்
யூதர்களை எதிர்த்தெழுந்ததையும்,
அவர்களை அழிக்கும் நாளைக்
குலுக்கல் முறையில் தெரிவு செய்ததையும்,
25 தம்மைத் தூக்கிலிடுமாறு அவன் மன்னரை அணுகி
வேண்டிக் கொண்டதையும்,
யூதர்களுக்கு அவன் இழைக்கத் திட்டமிட்டிருந்த
தீமைகள் அனைத்தும் அவனுக்கே நேர்ந்ததையும்,
அவனும் அவனுடைய மைந்தர்களும் தூக்கிலிடப்பட்டதையும்
மொர்தெக்காய் அதில் விளக்கியிருந்தார்.
26 இதன்பொருட்டு இந்நாள்கள் 'பூரிம்' [2] என
யூதர்களால் அழைக்கப்படுகின்றன.
எபிரேய மொழியில் 'பூரிம்' என்னும் சொல்லுக்குத்
திருவுளச் சீட்டுகள் என்பது பொருள்.
தம் மடலில் எழுதப்பட்டிருந்தவை காரணமாகவும்,
யூதர்கள் துன்புற்றவை,
அவர்களுக்கு நேர்ந்தவை காரணமாகவும்
இவ்விழாவைக் கொண்டாடுமாறு மொர்தெக்காய் பணித்தார்.
27 அவ்வாறே யூதர்களும் இதைத் தவறாமல் கொண்டாடத்
தங்கள் சார்பாகவும் தங்கள் வழிமரபினர் சார்பாகவும்
யூத மதத்தைத் தழுவியவர்கள் சார்பாகவும்
பின்வருமாறு உறுதிபூண்டார்கள்:
அந்நாள்களை எல்லா நகர்களிலும் குடும்பங்களிலும்
மாநிலங்களிலும் நினைவுநாள்களாகத்
தலைமுறை தலைமுறையாகக் கொண்டாட வேண்டும்;
28 'பூரிம்' எனப்படும் அந்நாள்களை
என்றென்றும் கடைப்பிடிக்கவேண்டும்;
அந்நாள்களின் நினைவு அவர்களின் வழிமரபினரிடையே
ஒருபோதும் ஒழிந்து போகக் கூடாது.


29 அம்மினதாபின் மகளாகிய எஸ்தர் அரசியும்
யூதராகிய மொர்தெக்காயும்
தாங்கள் செய்தவற்றை எழுத்தில் பொறித்து வைத்தார்கள்;
'பூரிம்' திருவிழா பற்றிய ஒழுங்குகள் கொண்ட மடலை
உறுதிப்படுத்தினார்கள்.
30 [3].
31 மொர்தெக்காயும் எஸ்தர் அரசியும் இம்முடிவுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு,
அவ்விழாவைக் கண்டிப்பாகக் [4] கொண்டாட உறுதிபூண்டார்கள்.
32 அவ்விழா எப்போதும் கொண்டாடப்படவேண்டும் என்று
எஸ்தர் ஆணை பிறப்பித்தார்.
மக்களின் நினைவில் நிற்கும்பொருட்டு
அது ஓர் ஆவணத்தில் பொறிக்கப்பட்டது.


குறிப்புகள்

[1] 9:5 - "எனவே யூதர்கள் தங்கள் பகைவர்களை வாளால் கொன்றொழித்தார்கள்;
தங்களை வெறுத்தவர்களுக்குத்
தாங்கள் விரும்பியபடி செய்தார்கள்"
என்னும் பாடம் சில பிரதிகளில்
9:5 ஆக இடம் பெறுகிறது.
[2] 9:26 - "பூரிம்" என்பது எபிரேயம்; கிரேக்கத்த்தில் "ப்ரூராய்" என உள்ளது.
[3] 9:30 - கிரேக்கப் பாடத்தில் இவ்வசனம் விடப்பட்டுள்ளது.
எபிரேயத்தில் "அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அம்மடல் எழுதப்பட்டு,
அகஸ்வேரின் ஆட்சிக்குட்பட்ட நூற்று இருபத்தேழு மாநிலங்களிலும் வாழ்ந்த
யூதருக்கு அனுப்பப்பட்டது"
என்னும் பாடம் காணப்படுகிறது.
[4] 9:31 - "தங்களுடைய நலனுக்காக அல்லது நலனைப் பாராமல்"
என்பது கிரேக்க பாடம்.
"நோன்போடும் புலம்பலோடும்" என எபிரேய பாடத்தில் உள்ளது.


அதிகாரம் 10[தொகு]

முடிவுரை[தொகு]

மொர்தெக்காயின் கனவு நனவாதல்[தொகு]


1 நிலத்திலும் நீரிலும் பரவியிருந்த தம் பேரரசில்
மன்னர் வரி விதித்தார்.
2 அவருடைய ஆற்றல், வீரம், செல்வம்,
ஆட்சியின் மாட்சி ஆகியவற்றை மக்கள் நினைவு கூரும்படி
பாரசீகர், மேதியர் ஆகியோரின் குறிப்பேட்டில் அவை பொறிக்கப்பட்டன.
3 அர்த்தக்சஸ்தா மன்னரின் ஆணைப்பேராளராக விளங்கிய மொர்தெக்காய்
பேரரசில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார்;
யூதர்களால் போற்றப் பெற்றார்;
அன்புக்குரியவராக வாழ்ந்து தம் இனத்தார் அனைவருக்கும்
வாழ்க்கைமுறை பற்றி விளக்கி வந்தார்.


3a மொர்தெக்காய் பின்வருமாறு கூறினார்:
"இவையெல்லாம் கடவுளின் செயல்கள்.
3b இவை குறித்து நான் கண்ட கனவை நினைவுகூர்கிறேன்.
அதில் எதுவுமே நிறைவேறாமற் போகவில்லை. [1]
3c அதில் ஒரு சிறிய ஊற்று ஆறாக மாறியது.
ஒளி, கதிரவன் மிகுந்த தண்ணீர் ஆகியவையும் காணப் பெற்றன.
அந்த ஆறு எஸ்தரைக் குறிக்கும்.
மன்னர் அவரைத் திருமணம் செய்துகொண்டு அரசியாக்கினார்.
3d நானும் ஆமானுமே அந்த இரண்டு அரக்கப் பாம்புகள்.
3e ஒன்றாக இணைந்து யூதரின் பெயரையே ஒழிக்க முனைந்த நாடுகளே
கனவில் வந்த நாடுகள்.
3f எனது நாடு என்பது இஸ்ரயேலாகும்.
அது கடவுளிடம் கதறியழுததால் மீட்கப்பட்டது.
ஆண்டவர் தம் மக்களை மீட்டார்;
இத்தீமைகள் அனைத்திலுமிருந்தும் நம்மை விடுவித்தார்;
எந்நாட்டிலும் செய்யப்படாத அடையாளங்களையும்
அரும்பெரும் செயல்களையும் கடவுள் செய்தார். [2]
3g இதனால் தம் மக்களுக்கென ஒன்றும்,
பிற இனங்களுக்கென ஒன்றுமாக
இரண்டு நியமங்களை அவர் ஏற்படுத்தினார்.
3h கடவுள் திருமுன் எல்லா இனங்களுக்காகவும்
தீர்ப்புக்காக் குறிக்கப்பட்ட நேரமும் காலமும் நாளும் வந்தபோது
அவர் அந்த இரண்டு நியமங்களையும் சீர்தூக்கித்
3i தம் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் மக்களை நினைவுகூர்ந்து
அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கினார்.
3k ஆகவே இஸ்ரயேல் மக்கள் கடவுள் திருமுன் ஒன்றுகூடி,
அதார் மாதம் பதினான்காம் நாளையும்
பதினைந்தாம் நாளையும் [3] தலை முறை தலைமுறையாக
மகிழ்ச்சியுடனும் அக்களிப்புடனும்
என்றென்றும் கொண்டாடவேண்டும்."

பிற்சேர்க்கை[தொகு]


தாலமி, கிளியோபத்ரா ஆகியோருடைய ஆட்சியின் நான்காம் ஆண்டில்,
தாம் ஒரு குரு என்றும் லேவியர் என்றும் சொல்லிக்கொண்ட தொசித்து,
அவருடைய மகனாகிய தாலமி ஆகிய இருவரும்
'பூரிம்' பற்றிய மடலை எகிப்துக்குக் கொணர்ந்தார்கள்;
இம்மடல் உண்மையானது என்றும்,
எருசலேமைச் சேர்ந்த தாலமியின் மகன் லிசிமாக்கு
இதை மொழி பெயர்த்தார் என்றும் தெரிவித்தார்கள்.


குறிப்புகள்

[1] 10:3a-b = எஸ் (கி) 1:1d-k.
[2] 10:3e-f = எஸ் (கி) 1:1d-k.
[3] 10:3k - இவ்விழா பெப்ருவரி-மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும்.


எஸ்தர் (கி) நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை