திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


"நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன...பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்." - சாலமோனின் ஞானம் 3:1,6-7

சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

நல்லார், பொல்லாரின் முடிவு[தொகு]


1 நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன.
கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.


2 அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல்
அவர்கள் தோன்றினார்கள்.
நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.


3 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது
பேரழிவாகக் கருதப்பட்டது.
அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். [1]


4 மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும்,
இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.


5 சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின்,
பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.
கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின்,
அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.


6 பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல்
அவர் அவர்களைப் புடமிட்டார்;
எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். [2]


7 கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது
அவர்கள் ஒளி வீசுவார்கள்;
அரிதாள் நடுவே தீப்பொறிபோலப்
பரந்து சுடர்விடுவார்கள்;


8 நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்;
மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள்.
ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். [3]


9 அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்;
அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். [4]
அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும். [5]


10 ஆனால் இறைப்பற்றில்லாதவர்கள்
தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்;
ஏனெனில் அவர்கள் நீதிமான்களைப் புறக்கணித்து,
ஆண்டவரை எதிர்த்தார்கள்.


11 ஞானத்தையும் நற்பயிற்சியையும் இகழ்பவர்கள் இரங்கத்தக்கவர்கள்.
அவர்களது நம்பிக்கை வீணானது;
அவர்கள் உழைப்பு வெறுமையானது;
அவர்களின் செயல்கள் பயனற்றவை.


12 அவர்களுடைய மனைவியர் அறிவற்றவர்கள்;
அவர்களின் பிள்ளைகள் தீயவர்கள்;
அவர்களுடைய வழிமரபினர் சபிக்கப்பட்டவர்கள்.


13 தூய்மை இழக்காத,
தவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்;
மனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார்.


14 நெறிகெட்ட செயல்களைச் செய்யாத,
ஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத
அண்ணகர்களும் பேறுபெற்றோர்.
அவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்;
ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.


15 நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது.
அறிவுத்திறனின் ஆணிவேர் அசைவுறாதது.


16 விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்;
தவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள்.


17 அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும்
அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்;
முதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.


18 அவர்கள் இளமையில் இறந்தால்
அவர்களுக்கு நம்பிக்கை இராது;
தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது.


19 நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது.


குறிப்புகள்

[1] 3:3 = எசா 57:1-2.
[2] 3:5-6 = 2 கொரி 4:17; உரோ 8:18.
[3] 3:8 = சீஞா 4:15.
[4] 3:9 - "அவர் மீது நம்பிக்கைக் கொள்வோர் அவரோடு அன்பில் நிலைத்திருப்பர்"
என்றும் மொழிபெயர்க்கலாம்.
[5] 3:9 - "தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார்"
என்னும் பாடம் சில சுவடிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. (காண் 4:15).


அதிகாரம் 4[தொகு]


1 ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும்,
நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது;
நற்பண்பின் நினைவு என்றும் அழியாதது;
அது கடவுளாலும் மனிதராலும் கண்டுணரப்படும்.


2 அந்நினைவு பசுமையாய் இருக்கும்பொழுது
மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்;
அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர்.
மாசற்ற பரிசுகளுக்காக நற்பண்பு போராடி,
வெற்றி வாகை சூடி, காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.


3 இறைப்பற்றில்லாதவர்கள் எண்ணற்ற பிள்ளைகளை ஈன்றபோதிலும்
அவர்கள் தளிர்ப்பதில்லை;
மணவாழ்கைக்கு புறம்பே பிறந்த வழிமரபு
ஆழமாய் வேரூன்றுவதில்லை; உறுதியாய் நிற்பதுமில்லை. [1]


4 சிறிது காலம் அவர்கள் கிளைவிட்டுச் செழித்தாலும்,
உறுதியற்றவர்களாய்க் காற்றினால் அலைக்கழிக்கப்படுவார்கள்;
காற்றின் சீற்றத்தால் வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.


5 அவர்களுடைய கிளைகள் வளர்ச்சி அடையுமுன்பே முறிக்கப்படும்.
அவர்களுடைய கனிகள் பயனற்றவை;
உண்பதற்கு ஏற்ற அளவு பழுக்காமையால்
அவை பாழாய்ப் போகும்.


6 முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே
தீர்ப்பு நாளில் தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச்
சாட்சிகளாய் இருப்பார்கள்.

நீதிமான்களின் எதிர்பாராத முடிவு[தொகு]


7 நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும்,
இளைப்பாற்றி அடைவார்கள்.


8 முதுமையின் மதிப்பு நீடிய வாழ்வினால் வருவதன்று;
ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.


9 ஞானமே மனிதர்க்கு உண்மையான நரைதிரை;
குற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.


10 நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி,
அவருடைய அன்பைப் பெற்றார்;
பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே
அவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார். [2]


11 தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும்,
வஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே
அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.


12 தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்துவிடுகிறது;
அலைக்கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்துவிடுகிறது.


13 அந்த நீதிமான் குறுகிய காலத்தில் நிறைவு எய்தினார்;
நீண்டவாழ்வின் பயனை அடைந்தார்.


14 அவரது ஆன்மா ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருந்தது.
தீமை நடுவினின்று ஆண்டவர் அவரை விரைவில் எடுத்துக்கொண்டார்.


15 மக்கள் இதைப் பார்த்தார்கள்; ஆனால் புரிந்துகொள்ளவில்லை.
ஆண்டவர் தாம் தேர்ந்துகொண்டோர்மீது
அருளும் இரக்கமும் காட்டுகின்றார்;
தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார் என்பதை
அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.


16 இறந்துபோன நீதிமான்கள் உயிர் வாழ்கின்ற இறைப்பற்றில்லாதவர்களைக்
கண்டனம் செய்வார்கள்;
விரைவில் பக்குவம் அடைந்த இளைஞர்கள்
நீண்ட நாள் வாழும் தீய முதியவர்களைக்
கண்டனம் செய்வார்கள்.


17 இறைப்பற்றில்லாதவர்கள்
ஞானிகளின் முடிவைக் காண்பார்கள்;
ஆனால் ஆண்டவர் அவர்களுக்காக எத்தகைய திட்டம் வகுத்துள்ளார் என்றும்,
எந்த நோக்கத்திற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார்கள் என்றும்
அறிந்துகொள்ளமாட்டார்கள்.


18 அவர்கள் ஞானிகளை கண்டு ஏளனம் செய்வார்கள்.
ஆண்டவரோ அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவார்.


19 ஏனெனில் இனி அவர்கள் இழிந்த பிணம் ஆவார்கள்;
இறந்தோர் நடுவில் என்றென்றும் அருவருப்புக்குரியோர் ஆவார்கள்.
ஆண்டவர் அவர்களைப் பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்;
அடியோடு கலங்கவைப்பார்.
அவர்கள் முழுவதும் அழித்தொழிக்கப்படுவார்கள்;
ஆழ்துயரில் மூழ்கடிக்கப்படுவார்கள்.
அவர்களின் நினைவுகூட மறைந்துவிடும்.

தீர்ப்புநாளில் நல்லாரும் பொல்லாரும்[தொகு]


20 இறைப்பற்றில்லாதவர்களின் பாவங்களைக் கணக்கிடும்போது,
அவர்கள் நடுங்கிக்கொண்டு வருவார்கள்;
அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள்
அவர்களுக்கு எதிராக நின்று குற்றம்சாட்டும்.


குறிப்புகள்

[1] 4:3 = சீஞா 23:25.
[2] 4:10 = தொநூ 5:21-24; சீஞா 44:16; 49:14; எபி 11:5.


(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை