திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
" பறவைகள் தம்முடைய இனத்தோடு தங்குகின்றன; உண்மை அதனைக் கடைப்பிடிப்போரிடம் குடிகொள்ளும்." - சீராக்கின் ஞானம் 27:9

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]


1 வருவாயைப் பெருக்குவதற்காகப் பலர் பாவம் புரிகின்றனர்;
செல்வத்திற்காக அலைவோர் தங்கள் கண்களைத் திருப்பிக் கொள்கின்றனர்.


2 கற்களுக்கு இடையே உள்ள துளையில் முளை அடிக்கப்படுகிறது;
விற்றல் வாங்கலுக்கு இடையே பாவம் நுழைந்துகொள்கிறது.


3 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில் ஒருவன் உறுதியாய் நிலைத்திராவிட்டால்
அவனது வீடு விரைவில் நிலைகுலைந்துவிடும்.

பேச்சு[தொகு]


4 சலிக்கின்றபோது சல்லடையில் உமி தங்கிவிடுகின்றது;
அவ்வாறே, மனிதரின் பேச்சில் மாசுபடிந்துவிடுகின்றது.


5 குயவரின் கலன்களை, சூளை பரிசோதிக்கின்றது;
மனிதரை, உரையாடல் பரிசோதிக்கின்றது.


6 கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது;
சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது. [1]


7 ஒருவர் பேசுவதற்குமுன்பே அவரைப் புகழாதே;
பேச்சைக் கொண்டே அவரை அறிந்து கொள்ளலாம்.


8 நீதிநெறியைப் பின்பற்றி நடந்தால் அதனை அடைந்து கொள்வாய்;
மாட்சிமிகு நீண்ட ஆடையாக அதனை அணிந்துகொள்வாய்.


9 பறவைகள் தம்முடைய இனத்தோடு தங்குகின்றன;
உண்மை அதனைக் கடைப்பிடிப்போரிடம் குடிகொள்ளும்.


10 இரைக்காகப் பதுங்கிச் சிங்கம் காத்திருக்கின்றது;
தீமை செய்கிறவர்களுக்காகப் பாவம் காத்திருக்கின்றது.


11 இறைப்பற்றுள்ளோரின் பேச்சு எப்போதும் ஞானமுள்ளது;
அறிவிலிகள் நிலவுபோல மாறுபடுவர்.


12 அறிவிலிகள் நடுவில் காலத்தை வீணாக்காதே;
அறிவாளிகள் நடுவில் நிலைத்து நில்.


13 மூடரின் உரை வெறுக்கத்தக்கது;
அவர்களின் சிரிப்பு பாவத்தைத் தூண்டவல்லது. [2]


14 அடிக்கடி ஆணையிடுவோரின் பேச்சு மெய்சிலிர்க்கச் செய்கின்றது;
அவர்களின் வாய்ச் சண்டை நம் காதுகளை மூடச் செய்கின்றது.


15 செருக்குற்றோரின் வாய்ச் சண்டை கொலைக்கு இட்டுச் செல்லும்;
அவர்களின் வசைமொழி கேட்பது வருத்தத்திற்கு உரியது.

இரகசியங்களை வெளிப்படுத்துதல்[தொகு]


16 இரகசியங்களை வெளிப்படுத்துவோர் பிறருடைய நம்பிக்கையை இழக்கின்றனர்;
ஆருயிர் நண்பர்களை அவர்கள் அடையமாட்டார்கள்.


17 நண்பருக்கு அன்புகாட்டு; அவர்கள்மீது நம்பிக்கை வை;
அவர்களுடைய இரகசியங்களை நீ வெளிப்படுத்திவிட்டால் அவர்கள்பின் செல்லாதே.


18 ஏனெனில் ஒருவர் இன்னொருவரைக் கொலை செய்வதைப்போன்று
நீ அடுத்திருப்பவரின் நட்பைக் கொன்றுவிட்டாய்.


19 உன் கையில் இருந்த பறவையை நழுவவிட்டதுபோல்
அடுத்திருப்பவரைப் போகவிட்டு விட்டாய்;
இனி நீ அவரைப் பிடிக்கமாட்டாய்.


20 அவரைத் தொடர்ந்து செல்லாதே;
ஏனெனில் அவர் தொலைவில் சென்றுவிட்டார்;
கண்ணியினின்று தப்பியோடும் மான்போல் ஓடிவிட்டார்.


21 காயத்துக்குக் கட்டுப்போடலாம்; வசைமொழியை மன்னிக்கலாம்;
ஆனால் இரகசியங்களை வெளிப்படுத்துவோர் பிறருடைய நம்பிக்கையை இழக்கின்றனர். [3]

வெளிவேடம்[தொகு]


22 கண்ணால் சாடை காட்டுபவர்கள் தீச்செயலுக்குச் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
அதிலிருந்து யாரும் அவர்களைத் தடுக்கமுடியாது. [4]


23 உன் கண்முன் அவர்கள் தேன் ஒழுகப் பேசுவார்கள்;
உன் பேச்சைக் கேட்டு வியப்படைவார்கள்;
பின்னால் அவர்களது பேச்சு மாறிவிடும்;
உன் சொல்லைக் கொண்டே உன்னை இடறிவிழச் செய்வார்கள்.


24 பலவற்றை நான் வெறுத்திருக்கிறேன்;
ஆனால் இவர்களை வெறுத்ததுபோல் வேறு எதனையும் வெறுத்ததில்லை.
ஆண்டவரும் இவர்களை வெறுக்கின்றார்.


25 கல்லை மேலே எறிவோர் அதைத் தம் தலைமேலேயே எறிந்து கொள்கின்றனர்;
நம்பிக்கைக் கேடு எனும் அடி
காயங்களைப் புதுப்பிக்கும்.


26 குழி தோண்டுவோர் அதிலேயே விழுவர்;
கண்ணி வைப்போர் அதிலேயே பிடிபடுவர்.


27 தீமை செய்வோரைத் தீமை திருப்பித் தாக்கும்;
அது எங்கிருந்து வருகிறது என அவர்களுக்கே தெரியாது.


28 ஏளனமும் பழிச்சொல்லும் செருக்குற்றோருக்கு உரியவை;
பழிக்குப்பழி அவர்களுக்காகச் சிங்கத்தைப்போல் பதுங்கிக் காத்திருக்கிறது.


29 இறைப்பற்றுள்ளோரின் வீழ்ச்சியில் மகிழ்வோர் கண்ணியின் பிடியில் சிக்குவர்;
அவர்கள் இறக்குமுன் துயரமே அவர்களைக் கொன்றுவிடும்.

சீற்றம்[தொகு]


30 வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை;
பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள்.


குறிப்புகள்

[1] 27:6 = மத் 7:17; லூக் 6:44.
[2] 27:13 = சஉ 7:5-6.
[3] 27:16-21 = நீமொ 20:19; 25:9.
[4] 27:22 = நீமொ 6:13.


அதிகாரம் 28[தொகு]


1 பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர்.
ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார்.


2 உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு;
அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். [1]


3 மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்;
அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என
எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?


4 மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை;
அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்?


5 அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர்.
அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்?


6 உன் முடிவை நினைத்துப்பார்; பகைமையை அகற்று;
அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்; கட்டளைகளில் நிலைத்திரு.


7 கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே;
உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.

பூசல்[தொகு]


8 பூசலைத் தவிர்த்திடு; உன் பாவங்கள் குறையும்.
சீற்றங்கொள்வோர் சண்டையை மூட்டிவிடுகின்றனர்.


9 பாவிகள் நட்பைக் கலைக்கிறார்கள்;
அமைதியாய் இருப்போரிடையே பிணக்கை விதைக்கிறார்கள். [2]


10 விறகின் தன்மைக்கு ஏற்ப நெருப்பு பற்றியெரியும்;
பூசலின் கடுமைக்கு ஏற்ப அது பற்றியெரியும்.
மனிதரின் வலிமையைப் பொறுத்து அவர்களின் சீற்றம் அமையும்;
அவர்களின் செல்வத்தைப் பொறுத்து அவர்களது சினம் பெருகும்.


11 திடீர் வாக்குவாதம் நெருப்பை மூட்டுகிறது;
திடீர்ப் பூசல் கொலைக்கு இட்டுச் செல்கிறது.


12 ஊதும்போது தீப்பொறி கொழுந்துவிட்டு எரிகிறது;
அதன்மீது துப்பும்போது அது அணைந்துபோகிறது;
இந்த இரு விளைவுகளும் உன் வாயினின்றே புறப்படுகின்றன. [3]

புறங்கூறுதல்[தொகு]


13 புறங்கூறுவோரையும் இரட்டை நாக்குக் கொண்டோரையும் சபி.
அமைதியில் வாழ்ந்த பலரை அவர்கள் அழித்துவிட்டார்கள்.


14 மூன்றாவது நாக்கு [4] பலரை நிலைகுலையச் செய்தது;
அவர்களை நாடுவிட்டு நாடு துரத்தியடித்தது;
அரண் கொண்ட நகர்களைத் தகர்த்தெறிந்தது;
பெரியோர்களின் வீடுகளைத் தரைமட்டமாக்கியது.


15 மூன்றாவது நாக்கு பற்றுள்ள மனைவியரையும் வெளியில் துரத்தியது;
அவர்களுடைய உழைப்பின் பயனை இழக்கச் செய்தது.


16 அதற்குச் செவிசாய்ப்பவர்கள் ஓய்வு கொள்ளமாட்டார்கள்;
அமைதியிலும் வாழமாட்டார்கள்.


17 சவுக்கடி தழும்பை உண்டாக்கும்;
வாயடியோ எலும்பை முறிக்கும்.


18 பலர் வாள்முனையில் மடிந்திருக்கின்றனர்;
நாவால் மடிந்தோரே அவர்களை விட மிகுதியானோர்.


19 மூன்றாவது நாக்கினின்று பாதுகாக்கப்பட்டோர் பேறுபெற்றோர்;
அதன் சீற்றத்துக்கு ஆளாகாதோரும் அதன் நுகத்தைச் சுமக்காதோரும்
அதன் சங்கிலிகளால் கட்டப்படாதோரும் பேறுபெற்றோர்.


20 அதன் நுகம் இரும்பு நுகம்;
அதன் சங்கிலிகள் வெண்கலச் சங்கிலிகள்.


21 அதனால் விளையும் சாவு இழிந்த சாவு;
அதனைவிடப் பாதாளம் மேலானது.


22 இறைப்பற்றுள்ளோர்மீது அதற்கு ஆற்றலில்லை;
அதன் தீப்பிழம்புகள் அவர்களை எரிப்பதில்லை.


23 ஆண்டவரைவிட்டு விலகுவோர் அதற்குள் விழுகின்றனர்;
அவர்களுக்குள் அது கொழுந்துவிட்டு எரியும்;
அதை அணைக்க முடியாது.
அது சிங்கத்தைப்போன்று அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும்;
வேங்கையைப்போன்று அவர்களைப் பீறிட்டுக் கிழிக்கும்.


24 உன் உடைமைகளைச்சுற்றி முள் வேலியிடு;
உன் வெள்ளியையும் பொன்னையையும் பூட்டிவை.


25 உன் சொற்களை நிறுத்துப் பார்க்கத்
துலாக் கோலையும் எடைக்கற்களையும் செய்துகொள்;
உன் வாய்க்குக் கதவு ஒன்று செய்து அதைத் தாழிடு.


26 நாவால் தவறாதபடி எச்சரிக்கையாய் இரு;
இல்லையேல், உனக்காய்ப் பதுங்கியிருப்போர்முன் நீ வீழ்ச்சியுறுவாய். [5]


குறிப்புகள்

[1] 28:2 = மத் 6:14; மாற் 11:25.
[2] 28:9 = நீமொ 6:12, 14, 19.
[3] 28:12 = 1 யாக் 3:10.
[4] 28:14 - மூன்றாவது நாக்கு என்றால் புறங்கூறுதல் ஆகும்.
[5] 28:13-26 = யாக் 3:5-12.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 29 முதல் 30 வரை