திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே; இல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய்." - சீராக்கின் ஞானம் 6:2.

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

செல்வச் செருக்கு[தொகு]


1 உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே;
'எனக்கு அவை போதும்' எனச் சொல்லாதே. [1]


2 உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே;
உன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே.


3 எனக்கு எதிராய்ச் செயல்படக்கூடியவர் யார்? எனச் சொல்லாதே;
ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார்.


4 'நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?' எனக்கூறாதே;
ஆண்டவர் பொறுமை உள்ளவர். [2]


5 பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப்
பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே.
'ஆண்டவரின் பரிவு எல்லையற்றது;


6 எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்துவிடுவார்' என உரைக்காதே.
அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன;
அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.


7 ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே.
நாள்களைத் தள்ளிப்போடாதே.
ஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கியெழும்;
அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்துபோவாய்.


8 முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே;
பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது. [3]

வாய்மையும் தன்னடக்கமும்[தொகு]


9 எல்லா வகைக் காற்றிலும் தூற்றிக் கொள்ளாதே;
எல்லா வழிகளிலும் போகாதே;
இரட்டை நாக்குக் [4] கொண்ட பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.


10 உன் மனச்சான்றை உறுதியோடு பின்பற்று;
முன் பின் முரண்படாமல் பேசு.


11 விரைந்து செவிசாய்;
பொறுத்திருந்து விடை கூறு. [5]


12 உனக்குத் தெரிந்தால், மறுமொழி கூறு;
இல்லையேல் வாயை மூடிக்கொள்.


13 பெருமையும் சிறுமையும் பேச்சினால் வரும்;
நாக்கே ஒருவருக்கு வீழ்ச்சியைத் தரும். [6]


14 புறங்கூறுபவன் எனப் பெயர் வாங்காதே;
உன் நாவால் மற்றவர்களுக்குக் கண்ணி வைக்காதே.
திருடர்களுக்கு உரியது இகழ்ச்சி;
இரட்டை நாக்கினருக்கு உரியது கடும் கண்டனம்.


15 பெரிதோ சிறிதோ எதிலும் குற்றம் செய்யாதே;
நண்பனாவதற்கு மாறாகப் பகைவனாகாதே.
கெட்ட பெயர் இழுக்கையும் பழிச்சொல்லையும் வருவிக்கும்;
இரட்டை நாக்குக்கொண்ட பாவிகளுக்கு இவை நேரும்.


குறிப்புகள்

[1] 5:1 = திபா 62:10.
[2] 5:4 = சஉ 8:11.
[3] 5:8 = எசே 7:19.
[4] 5:9 - "இரட்டை நாக்கு" என்றால் புரட்டிப் பேசுதல் (காண் 5:15; 28:13).
[5] 5:11 = யாக் 1:19.
[6] 5:13 = நீமொ 18:21.


அதிகாரம் 6[தொகு]


1 [1]


2 தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே;
இல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய்.


3 உன் இலைகள் விழுங்கப்படும்;
கனிகள் அழிக்கப்படும்;
பட்ட மரம்போல நீ விடப்படுவாய்.


4 தீய நாட்டங்களுக்கு ஒருவர் இடம் கொடுத்தால்
அவையே அவரை அழித்துவிடும்;
அவர் பகைவரின் நகைப்புக்கும் ஆளாவார்.

நட்பு[தொகு]


5 இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்;
பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.


6 அனைவரோடும் நட்புடன் பழகு;
ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும். [2]


7 ஆய்ந்து நட்புக்கொள்;
நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே.


8 தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு;
அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.


9 பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு;
அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி,
உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்.


10 உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு;
அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.


11 நீ நல்ல நிலையில் இருக்கும்போது,
அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்;
உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்;


12 நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்;
உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.


13 உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்;
உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு.


14 நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்;
இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள்
புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள்.


15 நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை;
அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை.


16 நம்பிக்கைக்குரிய நண்பர்கள்
நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்;
ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.


17 ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர்.
அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப் போலவே இருப்பார்கள்.

ஞானத்தை அடையப் பயிற்சி[தொகு]


18 குழந்தாய்,
இளமைமுதல் நற்பயிற்சியைத் தேர்ந்துகொள்;
முதுமையிலும் ஞானம் பெறுவாய்.


19 உழுது, விதைத்து,
பின் நல்ல விளைச்சலுக்காகக் காத்திருக்கும் உழவர்போன்று
ஞானத்தை அணுகு.
ஞானத்துக்காக உழைப்போர் சிறிதளவே களைப்படைவர்;
விரைவிலேயே அதன் கனிகளை உண்பர்.


20 நற்பயிற்சி இல்லாதவர்களிடம்
ஞானம் மிகக் கடுமையாக நடந்துகொள்ளும்;
அறிவிலிகள் அதனோடு நிலைத்திருக்கமுடியாது.


21 அது அவர்களைச் சோதிக்கும் பாறாங்கல்லாய் இருக்கும்;
அவர்கள் அதைத் தள்ளிவிடக் காலம் தாழ்த்தமாட்டார்கள்.


22 ஞானம் பெயர்ப் பொருத்தம் உடையது;
பலருக்கு அது புலப்படுவதில்லை.


23 குழந்தாய், உற்றுக்கேள்;
என் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்;
என் அறிவுரைகளைப் புறக்கணியாதே.


24 ஞானத்தின் விலங்குகளில் உன் கால்களைப் பிணைத்துக்கொள்;
அதன் சங்கிலியில் உன் கழுத்தைப் புகுத்திக்கொள். [3]


25 குனிந்து அதனைத் தோளில் தூக்கிச் சுமந்து செல்;
அதன் தளைகளைக் கண்டு எரிந்து விழாதே.


26 உன் முழு உள்ளத்தோடும் அதனை அணுகு;
உன் முழு வலிமையோடும் அதன் வழியில் நடந்து செல்.


27 அதனை நீ நாடித் தேடு;
அது உனக்குப் புலப்படும்.
அதனைச் சிக்கெனப் பிடி; நழுவவிடாதே. [4]


28 முடிவில் அது அளிக்கும் ஓய்வைப் பெறுவாய்;
அதுவே உனக்கு மகிழ்ச்சியாய் மாறும்.


29 அதன் விலங்குகள் உனக்கு வலிமையான பாதுகாப்பு ஆகும்;
அதன் தளைகள் மாட்சிமிகு ஆடையாக மாறும்.


30 அதன் மீது பொன் அணிகலன் உள்ளது;
அதன் தளைகள் நீல மணிவடமாகும்.


31 ஞானத்தை மாட்சிமிகு ஆடையாக அணிந்துகொள்;
மகிழ்ச்சிதரும் மணிமுடியாகச் சூடிக்கொள்.


32 குழந்தாய்,
நீ விரும்பினால் நற்பயிற்சி பெற முடியம்;
உன் கருத்தைச் செலுத்தினால் திறமையுடன் திகழ முடியும்.


33 கேட்டறிய ஆர்வம் கொண்டால் அறிவு பெறுவாய்;
பிறருக்குச் செவிசாய்த்தால் ஞானியாவாய்;


34 மூப்பர்களின் தோழமையை நாடு;
ஞானிகள் யார் எனக் கண்டு அவர்களைச் சார்ந்து நில்.


35 கடவுளைப் பற்றிய எல்லா உரைகளுக்கும்
செவிசாய்ப்பதில் ஆர்வம் காட்டு;
அறிவுக்கூர்மை கொண்ட பழமொழிகளைக் கேட்காமல் விட்டுவிடாதே.


36 அறிவுக்கூர்மை படைத்தோரை நீ கண்டுவிட்டால்,
விரைந்து அவர்களிடம் செல்;
உன் காலடி பட்டு அவர்களின் வீட்டு வாயிற்படிகள் தேயட்டும். [5]


37 ஆண்டவரின் நெறிமுறைகளை எண்ணிப்பார்;
அவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து.
அவரே உன் உள்ளத்திற்குத் தெளிவூட்டுவார்;
நீ விரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார். [6]


குறிப்புகள்

[1] 6:1 - 5:15இ-ஈ, 6:1ஆகக் கொள்ளப்படுகிறது.
[2] 6:6 = சஉ 7:28.
[3] 6:24 = நீமொ 1:9.
[4] 6:27 = நீமொ 4:13.
[5] 6:36 = நீமொ 8:34.
[6] 6:37 = திபா 1:2; யோசு 1:8.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை