திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து


"பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் யூதா பணம் திரட்டி ஆறு கிலோ வெள்ளி சேகரித்து, பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்; இச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு நன்முறையில், மேன்மையாக நடந்து கொண்டார். ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்." - 2 மக்கபேயர் 12:43-44


2 மக்கபேயர் (The Second Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

லீசியாவின் வீழ்ச்சி[தொகு]


1 சிறிது காலத்திற்குப்பின் மன்னனுடைய பாதுகாவலனும் உறவினனும்
ஆட்சிப் பொறுப்பாளனுமான லீசியா
நடந்தவற்றைக் கண்டு பெரிதும் எரிச்சல் அடைந்தான்.
2 ஏறத்தாழ எண்பதாயிரம் காலாட்படையினரையும்
குதிரைப்படையினர் அனைவரையும் திரட்டிக்கொண்டு
யூதர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்;
எருசலேம் நகரைக் கிரேக்கர்களின் குடியிருப்பாக மாற்றத் திட்டமிட்டான்;
3 பிறஇனத்தாரின் கோவில்கள் மீது வரி விதித்ததுபோல்
எருசலேம் கோவில் மீதும் வரி விதிக்கவும்
ஆண்டுதோறும் தலைமைக் குருபீடத்தை விலை பேசவும் எண்ணினான்.
4 கடவுளின் ஆற்றல் பற்றி அவன் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை;
மாறாக, பெருந்திரளான தன் காலாட்படையினரையும்
ஆயிரக்கணக்கான குதிரைப்படையினரையும்
எண்பது யானைகளையும் நம்பி இறுமாப்புக் கொண்டான்.
5 யூதேயா நாட்டின்மீது லீசியா படையெடுத்துச் சென்று,
எருசலேமிலிருந்து ஏறத்தாழ முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த
அரண்சூழ் நகரான பெத்சூரை நெருங்கி அதை வன்மையாகத் தாக்கினான்.


6 கோட்டைகளை லீசியா முற்றுகையிட்டதுபற்றி மக்கபேயும்
அவருடைய ஆள்களும் அறிய நேர்ந்தது.
அப்பொழுது இஸ்ரயேலை மீட்க ஒரு நல்ல வானதூதரை அனுப்புமாறு
அவர்களும் எல்லா மக்களும் அழுது புலம்பி மன்றாடினார்கள்.
7 மக்கபே தாமே முதலில் படைக்கலம் எடுத்துக்கொண்டார்;
தங்கள் உறவின் முறையினருக்கு உதவி புரியும்படி
மற்றவர்களும் தம்மோடு சேர்ந்து
தங்கள் உயிரைப் பணயம் வைக்குமாறு தூண்டினார்.
அவர்களும் விருப்புடன் ஒன்றாகச் சேர்ந்து முன்னேறிச் சென்றார்கள்.
8 அவர்கள் எருசலேமுக்கு அருகில் இருந்தபோதே,
வெண்ணாடை அணிந்து
பொன் படைக்கலங்களைச் சுழற்றிக்கொண்டிருந்த குதிரைவீரர் ஒருவர்
அவர்களது தலைக்குமேல் தோன்றினார்.
9 அப்போது அவர்கள் அனைவரும் இணைந்து
இரக்கமுள்ள கடவுளைப் போற்றினார்கள்;
அவர்கள் எத்துணை ஊக்கம் அடைந்திருந்தார்கள் என்றால்,
மனிதரை மட்டுமல்ல, கொடிய காட்டு விலங்குகளையும்
இரும்பு மதில்களையுமே தாக்கும் அளவுக்குத் துணிந்திருந்தார்கள்.
10 விண்ணக இறைவனாகிய ஆண்டவர் அவர்கள்மீது இரக்கங்கொண்டு,
அவர்களுக்குத் துணைசெய்யவே, அவர்கள் போரில் முன்னேறிச் சென்றார்கள்.
11 அவர்கள் சிங்கங்களைப்போலத் தங்கள் எதிரிகள்மீது சீறிப் பாய்ந்து
அவர்களுள் பதினோராயிரம் காலாட்படையினரையும்
ஆயிரத்து அறுநூறு குதிரைப் படையினரையும் கொன்றார்கள்;
எஞ்சியிருந்த அனைவரையும் புறமுதுகு காட்டி ஓடச் செய்தார்கள்.
12 அவர்களுள் பலர் காயமடைந்து படைக்கலங்களை இழந்து
தப்பிச் சென்றார்கள்.
லீசியாவும் இழிவுற்றுத் தப்பியோடினான். [1]

லீசியா யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ளல்[தொகு]


13 அறிவாளியான லீசியா தனக்கு நேரிட்ட
தோல்வியைப்பற்றிச் சிந்திக்கலானான்;
ஆற்றல் படைத்த கடவுள் யூதர்கள் சார்பாகப் போரிட்டதால்தான்
அவர்களை வெல்ல முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.
14 ஆகவே அவர்களிடம் ஆள் அனுப்பி
முறையாக உடன்பாட்டுக்கு இசையுமாறு அவர்களைத் தூண்டினான்;
மன்னனை வற்புறுத்தி அவர்களின் நண்பனாக்க முயல்வதாக
உறுதி மொழிந்தான்.
15 பொது நன்மையைக் கருதி
லீசியாவின் பரிந்துரைகள் அனைத்துக்கும் மக்கபே இசைந்தார்;
அவர் யூதர்கள் சார்பாக அவனிடம் எழுத்துமூலம் விடுத்திருந்த
வேண்டுகோள்கள் அனைத்தையும் மன்னன் ஏற்றுக்கொண்டான். [2]


16 லீசியா யூதர்களுக்கு எழுதிய மடல் பின்வருமாறு:

"யூத மக்களுக்கு லீசியா வாழ்த்துக் கூறி எழுதுவது:


17 நீங்கள் அனுப்பி வைத்த யோவானும் அப்சலோமும்
உங்களது மனுவை என்னிடம் கொடுத்து
அதில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்கள்.
18 மன்னருக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அனைத்தையும்
நான் ஏற்கெனவே அறிவித்து விட்டேன்;
அவரும் தம்மால் கூடுமானவற்றைச் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
19 அரசிடம் நீங்கள் நல்லெண்ணம் காட்டினால்
எதிர்காலத்தில் உங்கள் நலனுக்காப் பாடுபட முயல்வேன்.
20 இவற்றைப் பற்றி விளக்கமாக உங்களோடு கலந்து பேசுமாறு
உங்களுடைய தூதர்களுக்கும் என்னுடைய பிரதிநிதிகளுக்கும் பணித்திருக்கிறேன்.
21 வணக்கம்.
நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு [3]
தியோகொரிந்து மாதம் இருபத்து நான்காம் நாள்


இம்மடல் விடுவிக்கப்பட்டது."


22 லீசியாவுக்கு மன்னன் விடுத்த மடல் வருமாறு:

"தம் சகோதரர் லீசியாவுக்கு


அந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:
23 எம் தந்தை இறையடி சேர்ந்துவிட்டதால்
நம் ஆட்சிக்கு உட்பட்ட குடிமக்கள் கலக்கமின்றித்
தங்கள் அலுவல்களில் ஈடுபடவேண்டும் என விரும்புகிறோம்.
24 கிரேக்கர்களுடைய பழக்கவழக்கங்களை
யூதர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று
எம் தந்தை கொண்டுவந்திருந்த திட்டத்திற்கு
அவர்கள் இணங்கவில்லை என்றும்,
தங்கள் வாழ்க்கை முறையையே
அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறார்கள் என்றும்,
தங்கள் பழக்கவழக்கங்களையே கடைப்பிடிக்க
நம்மிடம் இசைவு கேட்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டோம்.
25 இம்மக்களும் தொல்லையின்றி வாழவேண்டும் என
நாம் விரும்புவதால்,
அவர்களுடைய கோவில் அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்றும்,
அவர்கள் தங்கள் மூதாதையருடைய பழக்க வழக்கப்படியே வாழலாம் என்றும்
நாம் முடிவு செய்கிறோம்.
26 ஆகையால் நீர் அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பி,
நமது நட்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதனால் அவர்கள் நம் முடிவுகளை அறிந்து


கவலையின்றித் தங்கள் அலுவல்களில் மகிழ்ச்சியோடு ஈடுபடுவார்கள்."


27 யூத மக்களுக்கு மன்னர் விடுத்த மடல் வருமாறு:

"யூதர்களின் ஆட்சிக்குழுவினருக்கும் மற்ற யூதர்களுக்கும்


அந்தியோக்கு மன்னர் வாழ்த்துக் கூறி எழுதுவது:
28 நலம். நலம் அறிய நாட்டம்.
29 நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்று,
உங்கள் சொந்த அலுவல்களைக் கவனிக்க விரும்புவதாக
மெனலா எம்மிடம் தெரிவித்துள்ளார்.
30 ஆதலால் சாந்திக்கு மாதம்
முப்பதாம் நாளுக்குள் வீடு திரும்பகிறவர்கள் எல்லாருக்கும்
நமது ஆதரவு எப்போதும் உண்டு.
31 முன்புபோல யூதர்கள் தங்கள் உணவுமுறைகளையும்
சட்டங்களையும் கடைப்பிடிக்க முழு இசைவு அளிக்கிறோம்.
அறியாமையால் செய்திருக்கக்கூடிய
குற்றங்களில் யாதொன்றுக்காகவும்
எவ்வகையிலும் அவர்களுள் எவனும் தொல்லைக்கு உள்ளாகமாட்டான்.
32 உங்களுக்கு ஊக்கமூட்ட மெனலாவை அனுப்பியுள்ளோம்.
33 வணக்கம்.
நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு [4]


சாந்திக்கு மாதம் பதினைந்தாம் நாள் இம்மடல் விடுக்கப்பட்டது."


34 உரோமையர்களும் யூதர்களுக்கு ஒரு மடல் விடுத்தார்கள்.
அம்மடல் பின்வருமாறு:

"யூத மக்களுக்கு உரோமையர்களுடைய தூதர்களாகிய


குயிந்து மெம்மியும் தீத்து மானியும் வாழ்த்துக்கூறி எழுதுவது:
35 மன்னரின் உறவினரான லீசியா
உங்களுக்கு வழங்கியுள்ள சலுகைகளுக்கு
நாங்களும் இசைவு தெரிவிக்கிறோம்.
36 ஆனால் மன்னரிடம் தெரிவிக்க வேண்டும் என்று
அவர் முடிவு செய்தவற்றை நீங்கள் ஆராய்ந்தவுடன்
உங்களுள் ஒருவரை எங்களிடம் அனுப்பிவையுங்கள்.
அப்போது உங்களுக்கு ஏற்ற கோரிக்கைகளை
மன்னர்முன் வைக்க முடியும்;
ஏனெனில் நாங்கள் அந்தியோக்கி நகருக்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
37 எனவே உங்களது கருத்தை நாங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டுக்
காலம் தாழ்த்தாது ஆளனுப்புங்கள்.
38 வணக்கம்.
நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு [5] சாந்திக்கு மாதம்


பதினைந்தாம் நாள் இம்மடல் விடுவிக்கப்பட்டது."


குறிப்புகள்

[1] 11:1-12 = 1 மக் 4:26-35.
[2] 11:13-15 = 1 மக் 6:56-61.
[3] 11:21 = கி.மு. 164.
[4] 11:33 = கி.மு. 164.
[5] 11:38 = கி.மு. 164.

அதிகாரம் 12[தொகு]

யாப்பாவில் யூதர்களின் அழிவு[தொகு]


1 இந்த ஒப்பந்தங்களைச் செய்து கொண்டபின்,
மன்னனிடம் லீசியா திரும்பிச் சென்றான்.
யூதர்கள் தங்கள் பயிர்த்தொழிலில் ஈடுபட்டார்கள்.
2 ஆனால் அந்தந்த இடத்துக்கு ஆளுநர்களாகத் திமொத்தெயு,
கென்னாயின் மகனான அப்பொல்லோன்,
மற்றும் ஏரோனிம், தெமோபோன் ஆகியோருடன் சேர்ந்து
சைப்பிரசு நாட்டு ஆளுநனான நிக்கானோரும்
யூதர்களைத் தொல்லையின்றி அமைதியாக வாழவிடவில்லை.


3 இதே காலத்தில், யாப்பா நகரத்தார் மாபெரும் துரோகம் புரிந்தார்கள்;
தங்களோடு வாழ்ந்துவந்த யூதர்களிடம்
பகைமை அற்றவர்போல் காட்டிக் கொண்டு,
அவர்களை மனைவி மக்களோடு,
தாங்கள் ஏற்பாடு செய்திருந்த படகுகளில் ஏறும்படி கேட்டுக்கொண்டார்கள்.
4 இது நகரத்தாரின் பொது இசைவுடன் செய்யப்பட்டதால்,
அமைதியில் வாழ விரும்பிய யூதர்கள்
யாதொரு ஐயப்பாட்டுக்கும் இடம் கொடாது அதற்கு இசைந்தார்கள்.
யாப்பா நகரத்தார் அவர்களைக் கடலுக்குள் கொண்டுபோய் மூழ்கடித்தார்கள்.
இவ்வாறு மூழ்கடிக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய இருநூறு பேர்.


5 தம் இனத்தாருக்குச் செய்யப்பட்ட இக்கொடுமைபற்றி
யூதா கேள்விப்பட்டு அதை அவர் தம் வீரர்களுக்குத் தெரிவித்தார்;
6 நேர்மையான நடுவராகிய கடவுளை மன்றாடிவிட்டுத்
தம் சகோதரர்களைக் கொன்றவர்களை எதிர்த்துச் சென்றார்;
இரவில் துறைமுகத்துக்குத் தீவைத்துப் படகுகளைக் கொளுத்தினார்;
அங்கு அடைக்கலம் புகுந்திருந்தவர்களை வாளுக்கு இரையாக்கினார்;
7 நகர வாயில்கள் அடைபட்டிருந்ததால் அவர் திரும்பிச் சென்றார்;
மீண்டும் வந்து யாப்பா நகரத்தார் அனைவரையும் அறவே அழிக்கத் திட்டமிட்டார்.


8 யாம்னியா மக்களும் தங்களிடையே வாழ்ந்துவந்த யூதர்களை
இவ்வாறே கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள் என்று அவர் அறிய வந்தார்;
9 இரவில் யாம்னியா மக்களைத் தாக்கினார்;
கப்பற்படையோடு சேர்த்துத் துறைமுகத்துக்குத் தீவைத்தார்.
இத்தீப்பிழம்பின் செந்தழல் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த
எருசலேம் வரை தெரிந்தது.

கிலயாதுமீது படையெடுப்பு[தொகு]


10 யூதர்கள் யாம்னியாவிலிருந்து திமொத்தேயுவை எதிர்த்து
ஏறத்தாழ இரண்டு கிலோ மீட்டர் சென்ற போது
ஐந்நூறு குதிரைவீரர்களுடன் குறைந்தது ஐயாயிரம் அரேபியர்கள்
அவர்களை எதிர்த்தார்கள்.
11 கடுஞ் சண்டைக்குப்பின் கடவுளின் உதவியால்
யூதாவும் அவருடைய ஆள்களும் வெற்றி பெற்றார்கள்.
தோல்வியுற்ற அந்த நாடோடிகள் தங்களோடு சமாதானம் செய்துகொள்ளுமாறு
யூதாவைக் கேட்டுக்கொண்டார்கள்;
அவருக்குக் கால்நடைகளைக் கொடுப்பதாகவும்
அவருடைய ஆள்களுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதாகவும்
உறுதி மொழிந்தார்கள்.
12 அவர்கள் பலவகையிலும் உண்மையிலேயே
தமக்குப் பயன்படுவார்கள் என்று உணர்ந்த யூதா
அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள உடன்பட்டார்.
அவரிடமிருந்து உறுதி பெற்றபின் அவர்கள் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.


13 பல்வேறு இனத்தவர் வாழ்ந்த, மதில்களோடு நன்கு அரண்செய்யப்பட்ட
ஒரு நகரையும் யூதா தாக்கினார். அதன் பெயர் காஸ்பின்.
14 அதன் உள்ளே இருந்தவர்கள்
மதில்களின் வலிமையையும் சேகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களையும் நம்பி
யூதாவிடமும் அவருடைய ஆள்களிடமும் சற்றும் மரியாதையின்றி
நடந்து கொண்டார்கள்.
இழிசொற்களால் அவர்களைத் திட்டியதோடு இறைவனையும் பழித்தார்கள்.
15 ஆனால் இடிக்கும் கருவிகளும் படைப்பொறிகளுமின்றி
யோசுவா காலத்தில் எரிகோவைத் தரைமட்டமாக்கிய
உலகின் பெரும் தலைவரை யூதாவும் அவருடைய ஆள்களும் துணைக்கு அழைத்து
மதில்களை நோக்கிச் சீற்றத்துடன் பாய்ந்து சென்றார்கள்.
16 கடவுளின் திருவுளத்தால் நகரைக் கைப்பற்றினார்கள்;
எண்ணற்ற பேரைக் கொன்றார்கள்.
இதனால் அருகே இருந்த ஏறக்குறைய அரை கிலோ மீட்டர் அகலமான ஏரி
குருதியால் நிரம்பி வழிந்தது போலத் தோன்றியது. [1]

கர்னாயிம் மீது தாக்குதல்[தொகு]


17 அவர்கள் அங்கிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது கிலோமீட்டர் கடந்து சென்றபின்
"தோபியர்" [2] என்று அழைக்கப்பெற்ற யூதர்கள் வாழ்ந்து வந்த
காராகா என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
18 அவர்கள் அங்கே திமொத்தேயுவைக் காணவில்லை;
ஏனெனில் ஓர் இடத்தில் வலிமை வாய்ந்த
ஒரு காவற்படையை நிறுத்தி வைத்ததைத் தவிர
வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில்
அவன் அங்கிருந்து ஏற்கெனவே புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
19 மக்கபேயிடம் படைத்தலைவர்களாய் இருந்த தொசித்தும் சோசிபத்தரும்
அணிவகுத்துச் சென்று
ஒரு கோட்டையில் திமொத்தேயு விட்டுவைத்திருந்த
பத்தாயிரத்துக்கும் மிகுதியானவர்களை அழித்தார்கள்.
20 மக்கபே தம் படைகளை அணி அணியாய்ப் பிரித்து
ஒவ்வோர் அணிக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தியபின்,
திமொத்தேயுவைத் துரத்திச் சென்றார்.
அவனிடம் இலட்சத்து இருபதாயிரம் காலாட்படையினரும்
இரண்டாயிரத்து ஐந்நூறு குதிரைப்படையினரும் இருந்தனர்.
21 யூதா தன்னை நெருங்கி வருவதை அறிந்த போது திமொத்தேயு
பெண்களையும் பிள்ளைகளையும் பொருள்களையும்
கர்னாயிம் நகருக்கு அனுப்பினான்;
அங்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் ஒடுக்கமானவையாய் இருந்தமையால்
அந்த இடம் முற்றுகையிடுவதற்குக் கடினமாயும் நெருங்குவதற்கு அரிதாயும் இருந்தது.
22 ஆனால் யூதாவின் முதல் அணியைக் கண்டவுடனேயே
அச்சமும் கலக்கமும் பகைவர்களை ஆட்கொண்டன;
ஏனெனில் அனைத்தையும் காண்பவர் அவர்களுக்குத் தோன்றினார்.
எனவே அவர்கள் மிரண்டு தலைதெறிக்க ஓடி
எல்லாப் பக்கத்திலும் சிதறுண்டு போனார்கள்;
தங்களுடைய ஆள்களின் வாள் முனைகளாலேயே குத்தப்பட்டு
அடிக்கடி ஒருவர் மற்றவரைக் காயப்படுத்திக் கொண்டார்கள்.
23 யூதா மிகுந்த வலிமையோடு அவர்களைப் பின்தொடர்ந்து
அந்தக் கொடியவர்களை வாளுக்கு இரையாக்கினார்;
அவர்களுள் முப்பதாயிரம் பேரை அழித்தார்.
24 தொசித்து, சோசிபத்தர், அவர்களுடைய ஆள்கள்
ஆகியோருடைய கையில் திமொத்தேயுவே அகப்பட்டுக் கொண்டான்.
தன்னை உயிரோடு போகவிடவேண்டும் என்று நயவஞ்சமாக
அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்;
அவர்களுள் பெரும்பாலோருடைய பெற்றோரும் சகோதரரும்
தன்னுடைய பிடியில் இருந்ததால்,
எச்சலுகையும் அவர்களுக்குக் காட்டப்படமாட்டாது என்று கூறியிருந்தான்.
25 எத்தீங்கும் செய்யாமல் அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுவதாகக் கொடுத்திருந்த
தனது வாக்கை அவன் மீண்டும் உறுதிப்படுத்தியதால்,
தங்கள் சகோதரர்களைக் காப்பாற்றும்பொருட்டு
அவனை அவர்கள் விட்டுவிட்டார்கள். [3]


26 யூதா அதன்பின் கர்னாயிமையும் அத்தர்காத்துக் கோவிலையும்
எதிர்த்துச் சென்று
இருபத்தையாயிரம் பேரைக் கொன்றார்;
27 அவர்களை முறியடித்துக் கொன்றபின் எபிரோனை எதிர்த்துச் சென்றார்.
அரண்சூழ்ந்த அந்நகரில்தான் பன்னாட்டு மக்கள் கூட்டத்தோடு
லீசியா வாழ்ந்துவந்தான்.
வலிமைமிக்க இளைஞர்கள் மதில்களுக்கு முன்பாக நின்றுகொண்டு
அவற்றைத் துணிவுடன் பாதுகாத்தார்கள்.
அங்குப் படைப்பொறிகளும் எறிபடைகளும் மிகுதியாக இருந்தன.
28 தமது ஆற்றலால் பகைவர்களின் வலிமையைச் சிதறடிக்க வல்லவரான இறைவனிடம்
யூதர்கள் மன்றாடியபின், நகரைக் கைப்பற்றினார்கள்;
அதில் இருந்தவர்களுள் இருபத்தையாயிரம் பேரைக் கொன்றார்கள்.
29 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு
எருசலேமிலிருந்து நூற்று இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்த
சித்தோப்பொலிக்கு விரைந்தார்கள்.
30 ஆனால் அங்கு வாழ்ந்த யூதர்கள்,
சித்தோப்பொலி மக்கள் தங்களை நன்கு நடத்தியதற்கும்
துன்ப காலத்திலும் தங்களுக்கு அன்பு காட்டியதற்கும்
சான்று பகர்ந்தார்கள்.
31 அதனால் யூதாவும் அவருடைய ஆள்களும்
சித்தோப்பொலி மக்களுக்கு நன்றி கூறி
எதிர்காலத்திலும் தங்கள் இனத்தாருடன் அன்புறவோடு வாழும்படி
கேட்டுக் கொண்டார்கள்.
பின் பெந்தேகோஸ்து திருவிழா [4] நெருங்கி வந்தமையால்
எருசலேமுக்குச் சென்றார்கள். [5]

கோர்கியர் மீது வெற்றி[தொகு]


32 யூதர்கள் பெந்தேகோஸ்து திருவிழாவுக்குப்பின்
இதுமெயா நாட்டு ஆளநனான கோர்கியாவை எதிர்க்க விரைந்தார்கள்.
33 அவன் மூவாயிரம் காலாட்படையினரோடும்
நானூறு குதிரைப்படையினரோடும் அவர்களை எதிர்த்துச் சென்றான்.
34 அவர்கள் போர் தொடுத்தபோது யூதர்களுள் சிலர் கொலை செய்யப்பட்டார்கள்.
35 ஆனால் பக்கேனோருடைய ஆள்களுள் வலிமைமிக்க ஒருவரான தொசித்து
குதிரைமேல் இருந்தபடியே கோர்கியாவைப் பிடித்துக்கொண்டார்.
அந்தக் கயவனுடைய மேலாடையைப் பற்றிக்கொண்டு
அவனை மிக்க வலிமையோடு இழுத்த வண்ணம்
உயிரோடு பிடித்துச் செல்ல எண்ணியிருந்தபோது,
திராக்கோன் குதிரைவீரர்களுள் ஒருவன் தொசித்துமீது பாய்ந்து
அவருடைய தோளைத் துண்டித்தான்.
ஆகவே கோர்கியா மாரிசாவுக்குத் தப்பியோடினான்.
36 எஸ்தரியும் அவருடைய ஆள்களும்
நீண்ட நேரம் போர்செய்து களைப்புற்றிருந்ததால்,
தங்கள் சார்பாக இருந்து போரிடுவதோடு
தலைமையேற்று நடத்துமாறு ஆண்டவரை யூதா வேண்டினார்;
37 தம் தாய் மொழியில் போர்க்குரல் எழுப்பிப் புகழ்பாக்கள் இசைத்தார்.
எதிர்பாராத நேரத்தில் கோர்கியாவின் படையின்மீது பாய்ந்து
அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்தார்.

இறந்தோருக்காக வேண்டுதல்[தொகு]


38 பின் யூதா தம் படையைத் திரட்டிக் கொண்டு
அதுல்லாம் நகரை அடைந்தார்.
ஏழாம் நாள் வந்தபோது அவர்கள் தங்கள் வழக்கப்படி
தங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு
அவ்விடத்தில் ஓய்வு நாளைக் கடைப்பிடித்தார்கள்.
39 போரில் மடிந்தவர்களின் சடலங்களை எடுத்து
அவர்களுடைய மூதாதையரின் கல்லறைகளில்
உறவினர்களோடு அடக்கம் செய்ய வேண்டியிருந்ததால்,
அவற்றைக் கொண்டுவரும்படி மறுநாள்
யூதாவும் அவருடைய ஆள்களும் புறப்பட்டார்கள்.
40 ஆனால் யூதர்கள் அணியலாகாது என்று திருச்சட்டம் தடைசெய்திருந்த,
யாம்னியாவில் இருந்த சிலைகளின் அடையாளங்கள்
கொலையுண்ட ஒவ்வொருவரின் ஆடைக்குள்ளும் தென்பட்டன.
இதனால்தான் அவர்கள் மடிந்தார்கள் என்பது
அப்போது எல்லாருக்கும் தெளிவாயிற்று. [6]
41 ஆகவே மறைவானவற்றை வெளிப்படுத்துகிற,
நீதியுள்ள நடுவராகிய ஆண்டவரின் செயல்களை
எல்லாரும் போற்றினார்கள்;
42 அந்தப் பாவத்தை முற்றிலும் துடைத்தழிக்குமாறு வேண்டியவண்ணம்
மன்றாட்டில் ஈடுபட்டார்கள்.
பாவத்தினின்று அகலும்படி பெருமகனார் யூதா
மக்களுக்கு அறிவுரை கூறினார்;
ஏனெனில் பாவத்தின் விளைவாக மடிந்தவர்களுக்கு நேர்ந்ததை
அவர்கள் தங்கள் கண்ணாலேயே பார்த்தார்கள்.
43 பின்பு அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் பணம் திரட்டி
ஆறு கிலோ [7] வெள்ளி சேகரித்து,
பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுக்கும்படி
எருசலேமுக்கு அனுப்பிவைத்தார்;
இச்செயல்மூலம் உயிர்த்தெழுதலை மனத்தில் கொண்டு நன்முறையில்,
மேன்மையாக நடந்து கொண்டார்.
44 ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால்,
அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும்.
45 ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று
அவர் எதிர்பார்த்திருப்பாரெனில்,
அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும்.
ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி
அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.


குறிப்புகள்

[1] 12:10-16 = 1 மக் 5:9-54; 12:15; யோசு 6:1-21.
[2] 12:17 - தோபி நாட்டில் வாழ்ந்ததால் தோபியர்
என்று பெயர் பெற்றனர். (காண் 1மக் 5:13).
[3] 12:17-25 = 1 மக் 5:37-44.
[4] 12:31 - 'வாரங்களின் விழா' என்பது மூல பாடம்
(காண் விப 34:22; இச 16:10).
[5] 12:26-31 = 1 மக் 5:45-54.
[6] 12:40 - இச.7:25.
[7] 12:43 - 'இரண்டாயிரம் திராக்மா' என்பது கிரேக்க பாடம்.


(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 13 முதல் 15 வரை