திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
இறைவாக்கினர் நாத்தான் தாவீது அரசரைக் கண்டிக்கிறார் (2 சாமு 12). விவிலிய நூல் (திருப்பாடல்கள்) ஓவியம். காப்பகம்: பாரிசு.

2 சாமுவேல் (The Second Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]

அம்னோன்-தாமார்[தொகு]


1 பின்னர் நிகழ்ந்தது: தாவீதின் மகன் அப்சலோமிற்குத் தாமார் என்ற சகோதரி இருந்தாள். அவள் பேரழகி. தாவீதின் இன்னொரு மகன் அம்னோன் அவள்மீது மோகம் கொண்டிருந்தான்.
2 அம்னோன் தன் சகோதரி தாமாருக்காக மிகவும் ஏங்கி நோயுற்றான். அவள் கன்னியாக இருந்ததால், அவளிடம் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.


3 அம்மோனுக்கு யோனதாபு என்ற ஒரு நண்பன் இருந்தான். அவன் தாவீதின் சகோதரனான சிமயியின் மகன். யோனதாபு சூழ்ச்சி மிக்கவன்.
4 "இளவரசே!நீர் நாளுக்கு நாள் சோர்ந்து போவதேன்? என்னிடம் சொல்லமாட்டீரோ?" என்று கேட்க, அதற்கு அம்னோன், "என் சகோதரன் அப்சலோமின் சகோதரி மீது நான் மையல் கொண்டுள்ளேன்" என்று அவனிடம் கூறினான்.


5 யோனத்தாபு அவனிடம், "உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நோயுற்றவர்போல் பாசாங்கு செய்யும். உம் தந்தை உம்மைக் காணவருவார். அவரிடம் 'என் சகோதரி தாமாரைத் தயைகூர்ந்து அனுப்பி வையுங்கள். அவள் எனக்கு உணவு தரட்டும்; என் கண்முன்னே அவள் உணவு தயாரிக்கட்டும். நான் அதைக் கண்டு அவள் கையிலிருந்து உண்பேன்' எனச் சொல்லும்" என்று யோனதாபு அவனுக்கு ஆலோசனை கூறினான்.


6 அவ்வாறே அம்னோன் படுத்துக்கொண்டு நோயுற்றவன்போல் பாசாங்கு செய்தான். அரசர் அவனைக் காண வந்தபோது, அம்னோன் அவரிடம், "தயைகூர்ந்து என் சகோதரி தாமாரை அனுப்பி வையுங்கள். அவள் என் கண்முன்னே இரண்டொரு பணியாரங்கள் செய்தால், நான் அவள் கையிலிருந்து உண்பேன்" எனக் கூறினான்.


7 தாவீது வீட்டுக்கு ஆளனுப்பி தாமாரை வரச்சொல்லி, "உடனே உன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்று அவனுக்கு உணவு தயார் செய்" என்றார்.
8 தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குச் சென்றாள். அவனோ படுத்திருந்தான். அவள் மாவு எடுத்துப் பிசைந்து அவன் கண்முன்னே பணியாரங்கள் சுட்டாள்.
9 பிறகு அவள் பாத்திரத்தைக் கொண்டுவந்து அவனுக்குப் பரிமாறினாள். அவன் உண்ண மறுத்தான். எல்லாரையும் என்னிடமிருந்து போகச் சொல்" என்று அம்னோன் கேட்க, எல்லாரும் அவனை விட்டுச் சென்றனர்.
10 "உணவை உள்ளறைக்குக் கொண்டுவா. நான் உன் கையிலிருந்து உண்பேன்" என்று அம்னோன் தாமாரிடம் கூறினான். தாமார் சுட்ட பணியாரங்களை எடுத்துக் கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் படுக்கையறைக்குள் சென்றாள்.


11 அவன் உண்பதற்காக அவற்றை அவள் எடுத்துக் கொண்டு அவனருகே சென்ற போது அவன் அவளை பிடித்து இழுத்து, "என் சகோதரியே! வா என்னோடு படு" என்றான்.
12 "வேண்டாம் சகோதரனே! என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம். ஏனெனில் இஸ்ரயேலில் இவ்வாறு நடப்பதில்லை. இந்த மடமையைச் செய்யாதே.
13 எனது அவமானத்தை நான் எப்படிப் போக்குவேன்? நீயும் இஸ்ரயேலில் மதிகெட்ட ஒருவனாக இருப்பாய். தயைகூர்ந்து அரசரிடமே கேள். அவர் என்னை உனக்குக் கொடுக்க மறுக்க மாட்டார்" என்று அவள் அவனிடம் கெஞ்சினாள்.
14 அவனோ அவளது குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. அவளைவிட வலிமைமிக்கவனாக இருந்ததால், அவன் அவளைக் கற்பழித்தான்.


15 அதன் பிறகு அம்னோன் அவளை மிகவும் அதிகமாக வெறுத்தான். அவன் எந்த அளவுக்கு அவள் மீது மோகம் கொண்டிருந்தானோ அந்த அளவுக்கு மிகுதியாக அவளை வெறுத்து, "எழுந்து சென்று விடு" என்று அவளிடம் கூறினான்.
16 அவளோ, "வேண்டாம், என்னை அனுப்பிவிடும் கொடுமை, நீ எனக்குச் செய்த முன்னைய கொடுமையை விடவும் மோசமானது" என்று கதறினாள். ஆனால் அவன் அவளுக்குச் செவிகொடுக்க விரும்பவில்லை.
17 தனக்குப் பணிவிடை செய்து வந்த இளைஞனை அவன் அழைத்து, "இந்தப் பெண்ணை என்னிடமிருந்து வெளியேற்று; அவள் சென்றதும் கதவைத் தாழிடு" என்று கூறினான்.
18 பணியாளன் அவளை வெளியேற்றி, அவள் சென்றதும் கதவைத் தாழிட்டான். கன்னியராக இருந்த அரச மகளிரின் வழக்கப்படி அவள் பல்வண்ண, நீண்ட ஆடை அணிந்திருந்தாள்.


19 தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினாள்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலை மீது கைவைத்து அழுதுகொண்டே சென்றாள்.
20 அப்பொழுது அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம், "இதை உனக்குச் செய்தது அம்னோனா? என் சகோதரி! இப்போது நீ அமைதியாய் இரு. அவன் உன் சகோதரன்! இதை மனதில் வைக்காதே" என்று கூறினான். தாமார் தன் சகோதரன் அப்சலோமின் வீட்டில் ஆறுதலின்றி வாழ்ந்தாள்.


21 நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.
22 அப்சலோம் அம்னோனுடன் நல்லதோ தீயதோ ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் தன் சகோதரி தாமாரைக் கற்பழித்ததற்காக அப்சலோம் அம்னோனை வெறுத்தாள்.

அப்சலோம் பழி தீர்த்தல்[தொகு]


23 ஈராண்டுகள் கழிந்த பிறகு அப்சலோம் எப்ராயின் அருகே பாகால் ஆட்சோரில் ஆடுகளுக்கு முடிகத்தரித்தான். அப்போது அப்சலோம் இளவரசர் அனைவரையும் அழைத்திருந்தான்.
24 அப்சலோம் அரசரிடம் வந்து, "இதோ! அடியேன் ஆடுகளுக்கு முடிகத்தரிக்கிறேன். அரசரும் அவருடைய பணியாளரும் தயைகூர்ந்து அடியேனோடு வாருங்கள்" என்றான்.
25 அரசர் அப்சலோமிடம், "என் மகன் அப்சலோம! வேண்டாம், நாம் அனைவரும் செல்ல வேண்டாம். உனக்கு நாங்கள் சுமையாக இருக்க வேண்டாம்" என்று கூறினார். அவன் அவரை வலியுறுத்தியும் அவர் செல்ல விரும்பாமல், அவனுக்கு ஆசியளித்தார்.
26 பின் அப்சலோம், "இல்லாவிடில் என் சகோதரன் அம்னோன் எங்களோடு செல்லட்டும்" என்று கேட்க, அரசர், "அவன் உன்னோடு ஏன் செல்ல வேண்டும்?" என்று அவனிடம் வினவினார்.
27 அவன் அவரை வற்புறுத்தியதால் அம்னோனையும் இளவரசர் அனைவரையும் அவனோடு அரசர் அனுப்பி வைத்தார்.
28 அப்சலோம் தம் பணியாளரிடம், "அம்னோனின் மனம் மதுவால் மயங்கும் நேரம் பாருங்கள்; 'அம்னோனைத் தாக்குங்கள்' என்று நான் உங்களிடம் கூறும் போது, அவனைக் கொன்றுவிடுங்கள். அஞ்சவேண்டாம். உங்களுக்குக் கட்டளையிடுபவன் நான் அல்லவா? உறுதிபூண்டு வீரர் புதல்வர்களாகச் செயல்படுங்கள்" என்று கூறினான்.
29 அப்சலோமின் பணியாளர் அவன் கட்டளையிட்டவாறே அம்னோனுக்குச் செய்தார்கள். இளவரசர் அனைவரும் அவரவர் தம் கழுதைகளில் ஏறித் தப்பி ஓடினர்.


30 அவர்கள் திரும்பிச் செல்கையில் அப்சலோம் இளவரசர் அனைவரையும் கொன்றதாகவும் அவருகளுள் ஒருவரும் தப்பவில்லை என்றும் தாவீதுக்குச் செய்து கிடைத்தது.
31 அரசர் எழுந்து தம் ஆடைகளை கிழித்து கொண்டு தரையில் படுத்தார். அங்கே நின்று கொண்டிருந்த பணியாளர் அனைவரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர்.
32 தாவீதின் சகோதரன் சிமயாவின் மகன் யோனதாபு, "உம் புதல்வர்களாகிய இளவரசர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்கள் என்று என் தலைவர் நினைக்க வேண்டாம். ஏனெனில் அம்னோன் மட்டுமே இறந்துள்ளான். தன் சகோதரி தாமார் கற்பழிக்கப்பட்ட நாளிலிருந்து அப்சலோம் தன் எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தான்.
33 ஆகவே, என் தலைவராம் அரசர், இளவரசர் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்துக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில் அம்னோன் மட்டுமே இறந்துள்ளான்" என்று கூறினான்.


34 இதற்கிடையில் அப்சலோம் ஓட்டம் பிடித்தான். அப்போது அரண்மனைக் காவலன் தன் கண்களை உயர்த்திப் பார்த்தபொழுது, இதோ, திரளான மக்கள் மலையோரமாகப் பின்னால் இருந்த சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.
35 அப்போது யோனதாபு அரசரிடம், "பாருங்கள், இளவரசர் வந்துவிட்டனர்; நான் சொன்னது போலவே நிகழ்ந்து விட்டது" என்றான்.
36 அவன் பேசி முடிக்கும்போது இளவரசரும் வந்து, ஓலமிட்டு அழுதனர். அரசரும் பணியாளர் அனைவரும் வெகுவாய்ப் புலம்பி அழுதனர்.


37 தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார். [*]
38 கெசூருக்குத் தப்பியோடிய அப்சலோம் அங்கே மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தான்.
39 அம்மோனின் மறைவு பற்றிய கவலை நீங்கியபின், அரசர் தாவீது அப்சலோமைக் காணும் ஏக்கத்தில் இருந்தார்.

குறிப்பு

[*] 13:37 = 2 சாமு 3:3.

அதிகாரம் 14[தொகு]

அப்சலோம் எருசலேமுக்கு அழைத்து வரப்படல்[தொகு]


1 அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தார்.
2 தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கிருந்து கூர்ந்த அறிவுடைய ஒரு பெண்ணை யோவாபு தன்னிடம் கூட்டிவரச்சொல்லி, அவளிடம், "நீ துக்கம் கொண்டாடுபவளைப் போல் நடி; இழவு ஆடைகளை அணிந்து கொள்; நறுநெய் பூசிக் கொள்ளாதே; இறந்தவனுக்காகப் பல நாள்கள் இழவு கொண்டாகிறவளைப்போல் நீ இருக்க வேண்டும்.
3 பின் அரசரிடம் சென்று அவரிடம் நீ இவ்வாறு பேச வேண்டும்" என்று கூறி, அவள் என்ன பேச வேண்டும் என்றும் யோவாபு சொல்லிக் கொடுத்தார்.


4 தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசனிடம் சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கி, "அரசே காப்பாற்றும்" என்று கதறினாள்.
5 "உனக்கு என்ன வேண்டும்?" என்று அரசர் அவளிடம் கேட்டார்.


6 "நான் ஒரு கைம்பெண். என் கணவர் இறந்துவிட்டார். உம் அடியவளுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். இருவரும் திறந்த வெளியில் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லாததால் ஒருவன் மற்றவனைத் தாக்கிக் கொன்று விட்டான்.
7 இதோ! உம் அடியவளுக்கு எதிராக என் குடும்பத்தார் அனைவரும் எழும்பி, 'தன் சகோதரனைக் கொன்றவனைக் கொடுத்து விடு. அவன் சகோதரனின் உயிருக்காக நாங்கள் அவனைக் கொல்ல வேண்டும்', என்று கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் எனக்கு இருக்கும் ஒரு வாரிசையும் அவர்கள் அழித்து எனக்கு எஞ்சியுள்ள ஒளியையும் அணைத்து, இவ்வுலகில் என் கணவனுக்குப் பெயரும் வழிமரபும் இல்லாமல் செய்து விடுவார்கள்" என்று அவள் சொன்னாள்.


8 "நீ உன் வீட்டுக்குச் செல். உனக்காக நான் கட்டளை பிறப்பிப்பேன்" என்று அரசர் அப்பெண்ணிடம் கூறினார்.
9 பின் தெக்கோவாவைச் சார்ந்த பெண் அரசரிடம், "என் தலைவராம் அரசே! என் குற்றம் என் மீதும் என் தந்தையின் வீட்டின் மீதும் இருக்கட்டும். அரசரும் அவரது அரியணையும் குற்றமற்று இருக்கட்டும்" என்று கூறினாள்.
10 "உன்னிடம் யார் எதைச் சொன்னாலும் அவனை என்னிடம் கொண்டு வா, அவன் உன்னை இனித் தொடவே மாட்டான்" என்று அரசர் கூறினார்.
11 "இரத்தப் பழி வாங்க விழைவோர் இனிக் கொல்லாமல் இருக்கவும் என் மகன் சாகாமல் இருக்கவும் அரசராகிய நீர் ஆண்டவராகிய கடவுளிடம் மன்றாடுவீர்" என்று அவள் சொன்னாள். "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! உன் மகனின் ஒரு முடி கூடத் தரையில் விழாது" என்று அவர் பதிலளித்தார்.


12 பிறகு அப்பெண், "உம் அடியவள் என் தலைவராம் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்ல அனுமதி தாரும்" என்ற கேட்க, அவரும் "சொல்" என்று பதிலளித்தார்.
13 அவள் சொன்னது: "கடவுளின் மக்களுக்கு எதிராக இத்தகைய எண்ணத்தை நீர் கொண்டிருப்பது ஏன்? தம்மால் துரத்தப்பட்டவனை அரசர் திரும்ப அழைக்காமல் இருப்பதனால் இந்தத் தீர்ப்பு அவரையே குற்றவாளி ஆக்குகிறது!
14 நாம் இறப்பது உறுதி. தரையில் சிந்தப்பட்டு மீண்டும் சேகரிக்க முடியாத நீரைப் போன்றவர்கள் நாம். ஆனால் துரத்தப்பட்டவனைப் பொறுத்த மட்டில், அவன் தம்மிடமிருந்து விலகிவிடாதபடி கடவுள் திட்டமிடுகிறார்; அவன் உயிரை எடுக்க மாட்டார்.
15 இதை என் தலைவராம் அரசரிடம் நான் கூறவந்தபோது, மக்கள் என்னை அச்சுறுத்தினர்; உமது அடியவளோ, 'நான் அரசரிடம் போவேன். ஒரு வேளை அரசர் தம் அடியவளின் வார்த்தைக்குச் செவிகொடுப்பார்.
16 அரசர் செவிகொடுத்து, என்னையும் என் மகனையும் கடவுளின் உரிமைச்சொத்தினின்று அழிக்க வருபவனின் கையினின்று தம் அடியவளைக் காப்பாற்றுவார்' என்று எண்ணினேன்.
17 ஏனெனில், உம் அடியவள் எண்ணப்படி, என் தலைவராம் அரசரின் வார்த்தை எனக்கு அமைதி தரும்; கடவுளின் தூதரைப் போல் என் தலைவராம் அரசர் நன்மையும் தீமையும் புரிந்துகொள்வார். ஆண்டவராம் கடவுள் உம்மோடு இருப்பார்" என்று கூறினாள். [1]


18 அதன்பின் தாவீது அப்பெண்ணிடம் மறுமொழியாக, "நான் உன்னிடம் கேட்பது எதற்கும் மறைக்காமல் பதில் சொல்!" என்றார். அதற்கு அவள், "தயைகூர்ந்து என் தலைவராம் அரசர் கேட்கட்டும்" என்றாள்.


19 "இதிலெல்லாம் உன்னோடு யோவாபுக்குப் பங்கு உண்டு அல்லவா?" என்று அரசர் தாவீது கேட்டார். "என் தலைவராம் அரசே! உம் உயிர் மேல் ஆணை! என் தலைவராம் அரசரின் வார்த்தையிலிருந்து யாரும் வலமோ இடமோ திரும்ப முடியாது. உம் அடியான் யோவாபுதான் என்னைப் பணித்தவர். அவரே இச்சொற்கள் அனைத்தையும் உம் அடியவளுக்குச் சொல்லித் தந்தவர்.
20 உம் அடியான் யோவாபு தற்போதைய நிலை மாற வேண்டுமென இதைச் செய்தார். ஆனால் கடவுளின் தூதருக்கு நிகரான பேரறிவுகொண்ட என் தலைவர் உலகில் நடக்கும் அனைத்தையும் அறிவார்" என்று அப்பெண் கூறினாள்.


21 அப்போது அரசர் யோவாபை அழைத்து, "இதைச் செய்தவன் நீயே. போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா "என்றார்.


22 யோவாபு முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து, வணங்கி, அரசரை வாழ்த்தி, "என் தலைவராம் அரசே! உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உம் கண்முன் கருணை பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான்" என்று கூறினார்.
23 யோவாபு எழுந்து கெசூருக்குச் சென்று அப்சலோமை எருசலேமுக்குக் கூட்டி வந்தார்.
24 "அவன் தன் வீட்டுக்கே திரும்பட்டும். என் முகத்தில் அவன் விழிக்கக்கூடாது" என்று அரசர் கூற, அப்சலோம் தன் வீட்டுக்குத் திரும்பினான். அரசரின் முகத்தில் அவன் விழிக்கவில்லை.

அப்சலோம் தாவீதுடன் ஒப்புரவாதல்[தொகு]


25 இஸ்ரயேல் அனைத்திலும் அப்சலோமைப் போல் புகழ்பெற்ற அழகன் வேறு எவனும் இல்லை. உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனில் எந்தக் குறையும் இல்லை.
26 அவன் முடிவெட்டிக் கொள்ளும் போது - ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்ததால், அவன் முடி வெட்டிக் கொள்வான் - அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு [2] மேலாக இருக்கும்.
27 அப்சலோமுக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தன. தாமார் என்று பெயர் கொண்ட ஒரு மகளும் இருந்தாள். அவள் பேரழகியாக இருந்தாள்.


28 அப்சலோம் எருசலேமில் ஈராண்டுகள் வாழ்ந்தான்; ஆனால் அரசன் முகத்தில் விழிக்கவில்லை.
29 அப்சலோம் யோவாபை அரசரிடம் அனுப்புவதற்காக அவனைத் தன்னிடம் வரும்படி அழைத்தான். ஆனால் யோவாபு அவனிடம் செல்ல விரும்பவில்லை, இரண்டாம் முறை ஆளனுப்பியும் யோவாபு செல்ல விரும்பவில்லை.
30 அப்போது அவன் தன் பணியாளரிடம், "கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது, அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்குத் தீ வையுங்கள்" என்றான். அப்சலோமின் பணியாளர் அவ்வயலுக்குத் தீ வைத்தனர்.


31 பின் யோவாபு புறப்பட்டு அப்சலோம் வீட்டுக்குச் சென்று அவனிடம், "உன் பணியாளர் என் வயலுக்குத் தீ வைத்தது ஏன்?" என்று கேட்டார்.
32 அதற்கு அப்சலோம் யோவாபிடம் கூறியது: "'நான் கெசூரிலிருந்து இங்கு வந்தது ஏன்? நான் அங்கேயே இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்' என்று அரசரிடம் கேட்க விரும்புகிறேன். இதற்காக உம்மை அவரிடம் அனுப்ப, உமக்கு ஆளனுப்பினேன். நான் இப்போது அரசனின் முகத்தில் விழிக்க வழிசெய்யும். ஏனெனில் ஏதாவது குற்றம் இருப்பின் அவர் என்னைக் கொல்லட்டும்".


33 யோவாபு அரசரிடம் சென்று இதைத் தெரிவித்தார்; அவர் அப்சலோமை அழைத்து வரச்செய்தார். அவன் அரசரிடம் சென்று முகம் குப்புற அரசர்முன் தரையில் வீழ்ந்து வணங்கினான். அரசர் அப்சலோமை முத்தமிட்டார்.

குறிப்புகள்

[1] 14:17 = 2 சாமு 19:27.
[2] 14:26 'இருநூறு செக்கேல்' என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி):சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை