திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 85 முதல் 86 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாம் செய்த பாவத்தை நினைத்து மனத்துயருறுகிறார் அரசர் தாவீது. ஓவியர்: யோகான் யாக்கோப்.ஆன்றோன் ஃபோன் லென்ஸ். ஆண்டு: 1734/1735. காப்பிடம்: ஹைலிகன்பெர்க் கோவில் ஒப்புரவுக் கூண்டு, செருமனி.

திருப்பாடல்கள்[தொகு]

மூன்றாம் பகுதி (73-89)
திருப்பாடல்கள் 85 முதல் 86 வரை

திருப்பாடல் 85[தொகு]

நாட்டின் நலனுக்காக மன்றாடல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
கோராகியரின் புகழ்ப்பா


1 ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்;
யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.


2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;
அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா)


3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்;
கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர்.


4 எம் மீட்பராம் கடவுளே!
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;
எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.


5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்?
தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்?


6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,
எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?


7 ஆண்டவரே,
உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.


8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்;
தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு
நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது.


9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு
அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி;
நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.


10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்;
நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.


11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;
விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.


12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்;
நல்விளைவை நம்நாடு நல்கும்.


13 நீதி அவர்முன் செல்லும்;
அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.


திருப்பாடல் 86[தொகு]

உதவிக்காக வேண்டல்[தொகு]

(தாவீதின் மன்றாட்டு)



1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்;
ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.


2 என் உயிரைக் காத்தருளும்;
ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;
உம் ஊழியனைக் காத்தருளும்;
நீரே என் கடவுள்!
நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.


3 என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;
ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.


4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;
என் தலைவரே!
உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.


5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்;
உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.


6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்;
உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்.


7 என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;
நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.


8 என் தலைவரே!
தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை.
உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை.


9 என் தலைவரே!
நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும்
உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;
உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். [*}


10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;
வியத்தகு செயல்கள் புரிபவர்;
நீர் ஒருவரே கடவுள்!


11 ஆண்டவரே,
உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு
உமது வழியை எனக்குக் கற்பியும்;
உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.


12 என் தலைவரே! என் கடவுளே!
என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்;
என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்.


13 ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது!
ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்!


14 கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;
கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;
அவர்களுக்கு உம்மைப் பற்றிய நினைவே இல்லை.


15 என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்;
அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்;
பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.


16 என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்;
உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;
உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.


17 நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்;
என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;
ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே
எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.


குறிப்பு

[*] 86:9 = திவெ 15:4.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 87 முதல் 88 வரை